குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி, டி.ஜி.பி. சிறீகுமாரை 7 மே, 2002 அன்று தனது அலுவலகத்திற்கு வருமாறு அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்தார். அகமதாபாத்தில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் கலவரம் குறித்து அவருடைய மதிப்பீடு என்ன என்று கேட்பதற்காக அழைப்பதாக சொல்லப்பட்டாலும், ஏப்ரல் 24 அன்று உளவுத்துறை தலைவர் எழுதிய குறிப்பை விமர்சித்தே உரையாடினார் மோடி. "ஒருதலைப்பட்சமான புள்ளிவிவரங்களாலும், பிழையான அனுமானங்களாலும்'' உளவுத் துறை குறிப்பு தவறான முடிவுகளுக்கு இட்டுச் சென்றிருப்பதாகக் கூறினார். பிப்ரவரி 27 அன்று நடைபெற்ற கோத்ரா நிகழ்வுக்குப் பிறகு, இந்து கும்பல் கட்டவிழ்த்து விட்ட வன்முறை இயல்பான எதிர்வினையே என்பதால்தான் காவல் துறையால் கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டது என்று மோடி, சிறீகுமாரிடம் கூறினார்.

Muslimsஆனால், அரசு அதிகாரிகள் அதிலும் குறிப்பாக காவல் துறை அதிகாரிகள் இத்தகைய அணுகுமுறையைக் கொண்டவர்களாக இருக்கக்கூடாது. காவல் துறையின் அடிப்படைப் பணியே சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதுதான் என்று முதலமைச்சருடன் சிறீகுமார் வாதிட்டார். அதன்பிறகு மோடி, அகமதாபாத் டி.ஜி.பி. மற்றும் காவல் ஆணையர் மீது பழியை சுமத்தியிருக்கிறார். அவர்களுக்கு அதிகாரமிருந்தும் அவர்கள் கலவரத்தைக் கட்டுப்படுத்தத் தவறி விட்டதாக குற்றம் சாட்டினார். அதன்பிறகு சிறீகுமாரை நோக்கி, முஸ்லிம் தீவிரவாதிகளை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள் என்று கூறியிருக்கிறார்.

சிறீகுமாரும் தான் உளவுத் துறை குறிப் பில் சுட்டிக்காட்டியுள்ளபடி, சிறுபான்மை சமூகத்தினரின் நம்பிக்கையை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மோடியிடம் வலியுறுத்தி இருக்கிறார். உடனடியாகவும் உறுதியாகவும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு, குற்றவியல் நீதிமுறை திசை மாறிப் போவதைத் தடுத்து நிறுத்தி, குற்றவாளிகளை உடனே கைது செய்து – இரு சமூகங்களிடையே நம்பிக்கையை உருவாக்க சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார். ஆனால், இதைச் செய்வதற்கு மாறாக, வி.எச்.பி. மற்றும் பஜ்ரங் தள் தொண்டர்கள் வெளிப்படையாக அரங்கேற்றிய கிரிமினல் நடவடிக்கைகள் மற்றும் முஸ்லிம் சமூகத்தினரின் விற்பனைப் பண்டங்களைப் புறக்கணித்து, அவர்கள் மீது பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்தி இருப்பதைத் தடுத்து நிறுத்தாமல் காவல் துறை வேடிக்கைப் பார்த்தது.

சிறீகுமார் முன்வைத்த ஆலோசனைகளால் எரிச்சலடைந்த மோடி, முஸ்லிம்கள்தான் எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக வாதாடினார். கலவரத்தின்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் முஸ்லிம்கள்தான் அதிகளவில் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்ற புள்ளிவிவரத்தை மேற்கோள் காட்டிய சிறீகுமார், இந்துக்கள்தான் எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக மீண்டும் சுட்டிக்காட்டினார். உடனே முதலமைச்சர், சங்பரிவார் மீது கவனத்தை செலுத்தாதீர்கள்; அவர்கள் சட்டத்திற்குப் புறம்பாக எதையும் செய்யவில்லை என்று கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த சிறீகுமார், எந்தவொரு நிகழ்வையும், சூழலையும் துல்லியமாக முன்கூட்டியே அரசுக்குத் தெரிவித்து – சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்தவும்; இந்தியாவின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் காப்பாற்றுவதே தன்னுடைய கடமை என்று தெரிவித்திருக்கிறார். சிறீகுமார் பேச்சின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்ட மோடி, இறுதி யாக மீண்டும் ஒரு முறை தன் கருத்தை வலி யுறுத்த முனைந்தார். சங்பரிவாரை கண் காணிப்பதைப் பொருத்தவரை, தான் மட்டுமே உளவுத்துறை தலைவரின் "ஆதாரமாக' இருக்க வேண்டுமே தவிர,வேறு ஆதாரங்களை நீங்கள் தேடி அலைய வேண்டியதில்லை என்றார் ( சங்பரிவார் மீதான விவரங்களை சேகரிக்க சிறீகுமார் மெனக்கெடத் தேவையில்லை என்பதை ஆணித்தரமாக உணர்த்தும் பேச்சு இது).

சூன் 15, 2002 : குஜராத் அரசின் உளவுத்துறை, விரிவான விமர்சனங்களோடு கூடிய அறிக்கை ஒன்றை அரசின் உள்துறைக்கு அனுப்பியது. அதில், ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் ஜெகன்நாதன் ரத யாத்திரையை இந்த ஆண்டும் அனுமதிப்பது – ஏற்கனவே பல இடங்களில் பற்றிப் பரவியுள்ள கலவரங்கள் மீண்டும் அதிகளவில் பரவ ஏதுவாக அமைந்துவிடும் என்று குறிப்பிட்டிருந்தது. மேலும், சிறுபான்மை சமூகத்தினர் கலவரத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில், ரத யாத்திரைக்கு எதிராக அவர்கள் திரளும் வாய்ப்புகள் அதிகமிருக்கின்றன என்று எச்சரித்தும் இருந்தது.

சூன் 25, 2002 : மாநிலம் முழுவதும் உள்ள எஸ்.பி. நிலைக்கு மேல் நிலையிலுள்ள அதிகாரிகள் அனைவரையும் அழைத்து, முதலமைச்சர் ஒரு மாநாட்டை நடத்தினார். அக்கூட்டத்தில் உரை நிகழத்திய மோடி, தற்பொழுதுள்ள சூழலை தான் கணித்துள்ள வகையில் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரினார். இது குறித்து தன்னுடைய தனி கையேட்டில் சிறீகுமார் பின்வருமாறு பதிவு செய்திருக்கிறார் : "இது சட்டத்திற்குப் புறம்பான, அறத்திற்கு எதிரான ஓர் ஆலோசனை. ஏனெனில், காவல் துறை சட்டப்படி நடக்க வேண்டுமே தவிர, மாநிலத்தில் நிலவும் அரசியல் சூழலுக்கேற்ப நடக்கக்கூடாது.'' மேலும், "காவல் அதிகாரிகள் தில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம் கொண்டிருக்கும் "மதச்சார்பின்மை மாதிரி' தங்களை ஆக்கிரமித்துக் கொள்ளும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது'' என்று முதலமைச்சர் பேசியிருக்கிறார். முதலமைச்சரின் உள்ளார்ந்த செய்தி இதுதான் : காவல் துறை அதிகாரிகள் ஆளும் கட்சியின் கொள்கையை கண்ணை மூடிக்கொண்டு செயல்படுத்துகின்றவர்களாக இருக்க வேண்டுமே தவிர, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் காவலர்களாக அவர்கள் இருக்கக் கூடாது.

ஆகஸ்ட் 20, 2002 : சட்டம் ஒழுங்கு கூடுதல் செயலாளர் பி.எஸ்.ஷா, 20.8.02 அன்று தொலைபேசியில் கேட்டுக் கொண்டதை அடுத்து, சிறப்புப் புலனாய்வுக் குழு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்த தனது தன்னிச்சையான மதிப்பீட்டு அறிக்கையை அளித்தது. மாநில அரசு 19 சூலை, 2002 அன்று எடுத்த முடிவின்படி, சட்டப்பேரவையை கலைத்துவிட்டு உடனடியாக தேர்தலை அறிவிக்க வேண்டும் என்ற தன்னுடைய முடிவுக்கேற்ப, உளவுத்துறையின் அறிக்கை இருக்க வேண்டும் என அது எதிர்பார்த்தது.

சிறப்பு புலனாய்வுக் குழு தனது அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தது : (1) மொத்தம் 182 சட்டப்பேரவை தொகுதிகளில் 54 தொகுதிகளின் கீழ் வரும் 993 கிராமங்கள் மற்றும் 151 நகரங்களில் உள்ள 284 காவல் நிலையங்களில் (மொத்தம் 464 காவல் நிலையங்கள் உள்ளன) இருந்து பெறப்பட்ட அறிக்கையின்படி, தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

(2) முன்னெப்போதிலும் இல்லாத அளவுக்கு இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களுக்கிடையிலான மத வேறுபாடுகள் அதிகரித்துள்ளன. இவ்விரு சமூகத்தினரிடையே சமூக, பொருளாதார, நிதி மற்றும் பண்பாட்டுத் தளங்களில் ஒரு பகிர்ந்துணர்வை ஏற்படுத்துவது தேவையானது. அண்மையில் நடைபெற்ற கலவரங்களில் பெருமளவுக்கு சிறுபான்மை சமூகத்தினர் கடும் பாதிப்பிற்கு ஆளாகி இருப்பதால், அரசு நிர்வாகம், காவல் துறை மற்றும் குற்றவியல் நீதி அமைப்பின் மீது அவர்கள் போதுமான நம்பிக்கையை பெறுவது அவசியம். பெரும் கலவரங்களை நிகழ்த்தியவர்கள் இந்து அமைப்புகளில் முக்கியப் பதவிகளை வகிப்பதால், அவர்கள் கைது செய்யப்படவில்லை என்று தொடர்ந்து சிறுபான்மை சமூகத்தினர் புகார் செய்து வருகின்றனர்.

(3) தேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் தேசிய சிறுபான்மையினர் ஆணையம் அளித்த பெரும்பாலான பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதாலும் அவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். மேலும் கலவரங்கள் நடைபெற்றபோது, 302 தர்காக்களும், 209 மசூதிகளும் 30 மதராசாக்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. அதில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்கே பழுது பார்க்கப்பட்டன. இதில் அவர்கள் மேலும் மனமுடைந்து காணப்படுகின்றனர்.

(4) பல இடங்களில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட சிறுபான்மை சமூகத்தினர், தங்களுடைய வணிகத்தைத் தொடர்ந்து நடத்த முடியவில்லை. சில்லரை வியாபாரிகள் தொடர்ந்து அச்சுறுத்தப்படுவதால், தங்கள் கடைகளைத் திறக்க முடியவில்லை. வதோதரா மாவட்டத்தில் 4.7.02 அன்று முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரும், அவருடைய மகனும் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி வந்ததால் கொலை செய்யப்பட்டனர். இது, அவர்களிடையே பாதுகாப்பின்மையை ஏற்படுத்தியுள்ளது.

(5) 13 மாவட்டங்களில் உள்ள 75,500 பேர் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், அவர்கள் இன்னும் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப இயலவில்லை. இத்தகைய பாதுகாப்பற்ற நிலையில் தேர்தல் நடத்தப்படும் எனில், தங்கள் சொந்த ஊருக்கு வர இயலாத சூழலில் அவர்களால் வாக்களிக்க முடியாது. சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், சில அரசியல் கட்சிகள் மக்கள் திரளாகக் கூடும்போது, அவர்களை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டு, மோதல் உருவாகி சட்டம் ஒழுங்கு சீர்குலையலாம்.

(6) நடைபெற்றுள்ள மதக்கலவரத்தில் 10,472 வீடுகளும், 12,588 கடைகளும் சேதமடைந்திருக்கின்றன அல்லது அழிக்கப்பட்டிருக்கின்றன. தீ வைப்பு சம்பவங்களில் 1,333 கடைகள் சூறையாடப்பட்டுள்ளன. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் அடையாளத்திற்கான ஆவணங்களை எல்லாம் இழந்து விட்டனர். மிகவும் சீரான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால், அவர்களால் வாக்காளர்களாக மீண்டும் தங்களைப் பதிவு செய்து கொள்ள முடியாது; இதனால் அவர்கள் தங்களின் வாக்குரிமையை இழக்க வேண்டியிருக்கும்.

(7) பெரும்பாலான மக்கள் ஊரைவிட்டு வெளியேறியுள்ள சூழலில், தேர்தல்கள் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெறுவதற்கு சாத்தியமில்லை.

– அடுத்த இதழிலும்

Pin It