பின்னணி

இந்தியாவில் அரச அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் பிஜேபி, உலகின் மிக நீண்ட ஆண்டுகள் நீடித்திருக்கும், மிகப்பெரிய பாசிச அமைப்பான ஆர்எஸ்எஸ்ஸின் அரசியல் கருவியாகும். ஐரோப்பாவில் பாசிசம் தோன்றிய அதே காலத்தில் 1925 - ஆம் ஆண்டு மனுஸ்மிருதியைக் தத்துவார்த்த அடிப்படையாக கொண்ட ஆர்எஸ்எஸ் அமைப்பின் முதல் சர்சங்சல்கா ஹெட்கேவாரைக் கொண்டு நிறுவப்பட்டது.

இந்தியாவைப் பொறுத்தவரை, ஆர்எஸ்எஸ் தோன்றிய 1920களின் பத்தாண்டுகளின் காலங்கள் காலனித்துவ ஆட்சிக்கு மட்டுமல்ல,நிலப்பிரபுத்துவ அமைப்புக்கும் பார்ப்பன சாதி அமைப்புக்கும் சவால் விடும் கொந்தளிப்பான ஒன்றாக இருந்தது. தலித்துகள் அதாவது தீண்டத்தகாதவர்கள் பூலேவால் ஈர்க்கப்பட்டு பின்னர் டாக்டர் அம்பேத்கரின் தலைமையில் இதுவரை அணுக முடியாதநிலையில் இருந்த சமூகப் புறங்களில் இருந்து அரசியல் மைய நீரோட்டத்தில் நுழையத் தொடங்கினர். இது உயர்சாதி மேல்தட்டு சாதிய ஆதிக்கத்திற்கு விடப்பட்ட சவாலாக இருந்தது. ஆர்எஸ்எஸ் - ஐ கட்டி அமைப்பதன் மூலம் மீண்டும் தனது சாதிமேலாதிக்கத்தை நிலைநாட்ட பார்ப்பனத் தலைமையைத் தூண்டியது.

hindutva force 600ஆர்எஸ்எஸ் உருவாவதற்கு முன்பு, சாவர்க்கர் இந்துத்துவா அல்லது ‘அரசியல் இந்துத்துவம்’ என்பதை (இது இந்து மதத்திலிருந்து வேறுபட்டது) ஆர்எஸ்எஸ் கருத்தியல் பின்னணியாக வகுத்து கொடுத்திருந்தார். சாவர்க்கர் தனது கையெழுத்துப் பிரதியான ‘இந்துத்துவா: யார் இந்து?’ என்பதில், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், இந்தியாவில் உள்ள அனைத்து சிறுபான்மையினர்களைத் தவிர்த்து, இந்துக்கள் தங்களுக்கு தாங்களே ஒரு தேசமாக இருக்கிறார்கள் என்று வாதிட்டார். 1940 - இல் ஹெட்கேவார் இறந்த பிறகு, ஆர்எஸ்எஸ்ஸின் இரண்டாவது சர்சங்சல்காவாக மாறிய கோல்வால்கர், தீண்டத்தகாதவர்களை அடிபணியச் செய்வதிலும், மத சிறுபான்மையினர்களை குறிப்பாக முஸ்லிம்களை களங்கப்படுத்துவதிலும், ஒழிப்பதிலும் குறியாகக் கொண்ட ஒரு வன்முறை கொண்ட இந்துத்துவா அமைப்பாக ஆர்எஸ்எஸ் – ஐ விரிவுபடுத்தினார்.

பல வரலாற்றாசிரியர்களும், அறிஞர்களும் சுட்டிக்காட்டியுள்ளபடி, ஆரம்பத்திலிருந்தே ஆர்எஸ்எஸ் ஐரோப்பிய பாசிசத்துடன் (பாரம்பரிய பாசிசம்) நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தது. இது ஐரோப்பாவில், குறிப்பாக இத்தாலி, ஜெர்மனியில் ஐரோப்பா நாடுகளுக்குள் மூண்ட போர்களின் காலத்தில், மாபெரும் ஏகாதிபத்திய அரசியல்-பொருளாதார நெருக்கடியின் பொழுது உருவானது. ஆர்.எஸ்.எஸ் -இன் அக்காலத்திய தலைவர்கள் முசோலினி, ஹிட்லர் போன்ற பாசிச தலைவர்களுடன் நேரடி தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டனர். உதாரணமாக, ஹெட்கேவாரின் வழிகாட்டியும், அரசியல் குருவுமான மூன்ஜே, 1931 - இல் இத்தாலிய பாசிச சர்வாதிகாரி முசோலினியைச் சந்தித்தார். கறுப்புச் சட்டையர்கள் போன்ற துணை இராணுவ போக்கிரி குண்டர்களுக்கு பயிற்சி அளித்த முசோலினியின் பாசிச உடற்கல்வி அகாடமியால் இவர் ஈர்க்கப்பட்டார். அதன் படி 1937 - இல் நாசிக்கில் போன்சாலா இராணுவப் பள்ளியைத் தொடங்கினார். மத்திய இந்து இராணுவக் கல்விச் சங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கும் இந்துத்துவா குண்டர்களுக்கும் துணை ராணுவப் பயிற்சி அளித்தார். 2008 – இல் நிகழ்ந்த மாலேகான் குண்டுவெடிப்பு உட்பட இந்துத்துவா தீவிரவாத குழுக்களின் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் போன்சாலா பள்ளியின் தொடர்புகள் அதிகமாக உள்ளது விவாதிக்கப்படுகின்றன. ஹிட்லரைப் போற்றிய கோல்வால்கர், ஹிட்லர் இனத் தூய்மைக் கோட்பாட்டை நிலைநாட்டுவதை உயர்த்தி பிடித்தார். செமிடிக் இனங்களை, யூதர்களை சுத்திகரிக்கும் ஹிட்லரின் நாஜி முறையை அவர் பாராட்டினார், மேலும் முஸ்லீம் பிரச்சினையைத் தீர்க்க இந்தியாவுக்கு இது ஒரு நல்ல பாடம் என்று பரிந்துரைத்தார். ஆர்.எஸ்.எஸ் - இன் அடிப்படை சித்தாந்தம் அல்லது இந்து ராஷ்டிரத்தின் கோட்பாட்டின்படி, ‘இந்துக்கள் , இந்துக்கள் மட்டுமே, இந்திய தேசத்தை உருவாக்குகிறார்கள்’. அதேசமயம் சாதியவாதம் என்பது ‘இந்து தேசம்’ என்பதற்கு ஒத்ததாக கோல்வால்கருக்கு இருந்தது.

வரலாற்றுரீதியாக இந்தியா என்பது பல மதங்கள், பல மொழிகள், பல மரபினங்கள், பன்முக பண்பாடுகள், பல தேசிய இனங்களை உள்ளடக்கியதாக இருந்து வருகிறது. மனிதாபிமானமற்ற சாதி அமைப்பு இந்த அனைத்து அடையாளங்களையும் சிதைக்கிறது. எனினும், ஒரு பாசிச அமைப்பாக, ஆர்.எஸ்.எஸ் அதன் தொடக்கத்திலிருந்தே இஸ்லாமிய வெறுப்பு, கிறிஸ்தவ எதிர்ப்பு, கம்யூனிச எதிர்ப்பு, தலித் எதிர்ப்பு, பெண்ணுரிமை எதிர்ப்பு உடையதாக இருக்கிறது. தனது நோக்கங்களை அடைய வன்முறையைப் பயன்படுத்தும் பழக்கம் அதற்கு இருந்தது.

காலனித்துவ ஒடுக்குமுறையின் கீழ், ஒடுக்கப்பட்ட நாடுகளுக்கான தேசியவாதம், தேசபக்தி ஆகியவை சாராம்சத்தில் காலனித்துவத்திற்கு எதிரானதாகவே இருந்தன. ஆனால் ஆர்எஸ்எஸ்ஸின் ‘கலாச்சார தேசியம்’ ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களைக் காட்டிக் கொடுத்ததற்கான மறைப்பாக இருந்தது. முஸ்லீம்கள் மீதான இனப்படுகொலை வெறுப்புடன், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் தீவிர அடிமைத்தனமும் ஆரம்பத்திலிருந்தே ஆர்எஸ்எஸ் அமைப்பின் இயல்பாகவே இருந்து வருகிறது. இதன் காரணமாக, அது பிரிட்டிஷ் காலனிய காலத்தில் நாட்டில் நடந்த சுதந்திர இயக்கத்துடன் முற்றிலும் விலகி இருந்தது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உயர்மட்டத் தலைமை, ‘

ஆங்கிலேயர்களுடன் போரிட்டு தங்கள் ஆற்றலை வீணாக்க வேண்டாம் என்றும், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், கம்யூனிஸ்டுகள் போன்ற ‘உள் எதிரிகளை’ எதிர்த்துப் போராடுவதற்காக அதைச் சேமித்துக்கொள்ளுங்கள்’ என்றும் அறிவுறுத்தியது. அவ்வாறே இந்த அமைப்பு இந்திய சுதந்திர போராட்ட அரசியலின் வெளி எல்லையில் தொடர்ந்து நீடித்தது. ஆனால் அரசியலமைப்பு சபை இந்திய அரசியலமைப்பை உருவாக்கும்போது, ஆர்எஸ்எஸ் அந்த அரசியலமைப்பை ஏற்றுக் கொள்வதை கடுமையாக எதிர்த்தது. அதற்கு பதிலாக 'மனுஸ்மிருதி'யை (பெண்களையும் தலித்துகளையும் மனித பிறவிகளுக்கு கீழானவர்கள் என்று அடையாளம் காட்டும் நால்வர்ண அல்லது வர்ண அமைப்பின் புனித நூல்) அரசிலமைப்பு சட்டமாக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. உயர்சாதியினரின் நலனுக்கு எதிராக அனைத்து சாதியினருக்கும் சம உரிமை வழங்கும் 1950 - ஆம் ஆண்டு குடியரசு அரசியலமைப்பை எதிர்த்தது. உண்மையில், இதற்கு முன்பே 1947 ஆகஸ்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊதுகுழலான ‘ஆர்கனைசர்’ இதழ் அம்பேத்கரின் தலைமையில் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்பதற்கு ஆட்சேபம் தெரிவி்த்ததுடன், மூவர்ண தேசியக் கொடியையும் எதிர்த்தது.

1948 - இல் தேசத் தந்தை காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஆர்எஸ்எஸ் சில மாதங்களுக்கு தடை செய்யப்பட்டது. இந்த தடைக்குப் பின்பு ஜூலை 11, 1949 - இல் ஆர்எஸ்எஸ் மீதான தடையை நீக்குவதற்கு சர்தார் வல்லபாய் படேல் முன்வைத்த நிபந்தனைகளில் ஒன்று ‘இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கும் தேசியக் கொடிக்கும் விசுவாசமாக இருக்க உறுதிமொழி எடுக்க வேண்டும்’ என்பது முக்கியமானதாகும். இருப்பினும், அரை நூற்றாண்டுக்கும் மேலாக இந்த உறுதிமொழியைப் பின்பற்றத் தயாராக இல்லாத ஆர்எஸ்எஸ், 2003 - இல் நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் சாவர்க்கரின் உருவப்படத்தையும் திறந்து வைத்த வாஜ்பாய் அரசாங்கத்தின் காலத்தில்தான் தேசியக் கொடியை ஏற்றத் தொடங்கியது.

வெளிப்படையாக, ஏகாதிபத்திய சகாப்தத்தின் உள்நாட்டு யுத்தங்கள் காலத்தில் உருவான ஐரோப்பிய பாசிசத்தைப் போலவே, ஆளும் வர்க்க முறைமையின் உள்ளார்ந்த முரண்பாடுகளின் கூர்மையடைந்ததால், நிதி மூலதன முதலாளிகளினுள் மிகவும் பிற்போக்குத்தனமான பிரிவுகளான பாசிஸ்டுகளின் எழுச்சிக்கான சரியான தருணம் உருவாக்கப்பட்டது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நெருக்கடியை சாதாரண கொள்ளை, சுரண்டல் முறைகள் மூலம் தீர்க்க முடியாதபோது, மக்கள் போராட்டங்கள் கட்டுப்படுத்த முடியாததாக மாறும் போது, அரசியல்-பொருளாதார சூழ்நிலை, சமூகப் பதற்றங்கள் போன்றவை பாசிச சக்திகள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு சாதகமாக மாறும்.

இந்தியாவைப் பொறுத்த வரையில், 1970களின் நெருக்கடியும், இந்திரா காந்தி ஆட்சியின் அவசரநிலைப் பிரகடனமே அதுவரை பிரதான நீரோட்டத்திற்கு வெளியே இருந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பை அரசியல் வெளிச்சத்திற்கு கொண்டு வரச் செய்தது. முற்போக்கான-ஜனநாயக மாற்று சக்திகள் இல்லாத நிலையில், ஆர்.எஸ்.எஸ் அவசர நிலைக்கு எதிரான இயக்கத்தின் முன்னணிக்கு வருவதற்கான நிலைமையை திறம்பட பயன்படுத்திக் கொண்டது.

சிறிது காலத்திலேயே, ஜனசங்கத்திற்குப் பதிலாக, ஆர்எஸ்எஸ் தனது அரசியல் கருவியாக பாஜகவை கட்டி அமைத்தது, மீதமுள்ள நிகழ்வுகள் சமகால வரலாற்றின் ஒரு பகுதியாகும். நூற்றுக்கணக்கான இரகசிய - வெளிப்படையான, வன்முறைகள்-கலவரங்களைக் கொண்ட, பயங்கரவாத அமைப்புகளை வழிநடத்தி, சந்தர்ப்ப சூழ்நிலை, காலங்களைப் பயன்படுத்தி முழுவதும் தனது செல்வாக்கை விரிவுபடுத்தி, ஆழப்படுத்தி, அதன் தீவிர வலதுசாரி பொருளாதார தத்துவம், அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்திய முகாமின் மீது அசைக்க முடியாத விசுவாசத்துடன், கணக்கற்ற வெளிநாட்டு காவி பயங்கரவாத துணை அமைப்புகளின் தொடர்ச்சியாகவும் அபரிமிதமான கார்ப்பரேட் நிதியுதவியின் துணையுடன் ஆர்எஸ்எஸ் உலகிலேயே மிகப்பெரிய பாசிச அமைப்பாக, இன்றும்கூட தன்னை ஒரு கலாச்சார அமைப்பாகக் கூறிக் கொள்கின்ற பொழுதும் வளர்ந்துள்ளது.

எழுபதுகளின் போருக்குப் பிந்தைய புதிய காலனித்துவ ஒழுங்கின் ஒரு திருப்புமுனையாக முதல் பெரும் உலகளாவிய நெருக்கடியான தேக்கநிலை என்று அழைக்கப்பட்டது உருவாகியது. இதன் விளைவாக, இடதுசாரிகளின் கருத்தியல் - அரசியல் பின்னடைவைப் பயன்படுத்தி, ஏகாதிபத்தியம் அதன் சமூகநல முகமூடியைக் கைவிட்டு, புதிய தாராளமயம் என்று அழைக்கப்படும் மூலதனக் குவிப்பு செயல்முறைக்கு மாற்றியது. மேலே குறிப்பிட்டுள்ளபடி, 1970 களில் இந்தியாவை எதிர்கொண்ட அரசியல்-பொருளாதார நெருக்கடி 1975 - இல் இந்திரா ஆட்சியில் அவசரநிலை பிரகடனத்திற்கு வழிவகுத்தது. மேற்சொன்ன ஏகாதிபத்திய நெருக்கடியுடன் ஒருங்கிணைந்ததாக இது நெருக்கமாக இணைந்தது. 1977 - இல் எமர்ஜென்சி நீக்கப்பட்டாலும், எமர்ஜென்சிக்குப் பிந்தைய காலகட்டத்தில் இந்திய அரசு புதிய தாராளவாத கட்டளைகளுக்கு சரணடைந்தது. ஏகாதிபத்திய-கார்ப்பரேட் மூலதனத்தால் புதிய காலனித்துவ பெரும் கொள்ளையை தீவிரப்படுத்தியது.

இந்தியாவின் இந்த மிக நெருக்கடியான காலகட்டத்தில், உலகளாவிய கார்ப்பரேட் மூலதனத்துடன் மேலும் ஒருங்கிணைக்கப்பட்டதன் விளைவாக, நேருவின் அரசு தலைமையிலான 'வளர்ச்சி' மாதிரியைக் கைவிட்டு, புதிய தாராளவாதக் கொள்கைகளைத் தழுவியதன் விளைவாக, ஆர்எஸ்எஸ் அதன் நன்கு சிந்திக்கப்பட்ட மூலோபாயத்தை வடிவமைத்தது. இறுதியில் பிஜேபியை அதன் அரசியல் கட்சியாக முன்நிலைபடுத்தியதன் மூலம் இந்தியாவை இந்து ராஷ்டிரமாக, அதாவது இந்துத்துவ பாசிச அரசாக மாற்றுவதற்கான மூலதந்திரம் திட்டமிடப்பட்டது. மேலும், காங்கிரஸால் பின்பற்றப்படும் மென்மையான இந்துத்துவாவின் பங்களிப்பை திறம்படப் பயன்படுத்தி, பெரும் கார்ப்பரேட் முதலாளிய நிறுவனங்களின் ஆதரவுடன், ஒப்பீட்டளவில் குறுகிய காலத்திற்குள் பாஜகவை இந்தியாவின் மிகப் பெரிய ஆளும் வர்க்கக் கட்சியாக பாசிச ஆர்எஸ்எஸ்ஸுக்கு மாற்றுவது எளிதானது. உலக அளவில் புதிய பாசிசத்தின் எழுச்சியின் பின்னணியில் வேர்க் கால்கள் மட்டங்களிலிருந்து ( மைக்ரோ)உயர்மட்ட பெரும் அளவு மேக்ரோ மட்டங்கள் வரை அதன் பல பரிமாண விளைவுகளைக் கொண்டு அரச அதிகாரத்தை பாசிசம் அபகரிப்பு செய்தது.

20 - ஆம் நூற்றாண்டின் கடைசி கால் நூற்றாண்டில் ஆர்எஸ்எஸ் தனது பாசிச நச்சு கொடுக்குகளை முழு அரசியல், பொருளாதார, பண்பாட்டுத் துறைகளிலும் நிலைநிறுத்த வழிவகுத்த செயல்முறைகளின் முழுப் பாதையையும் இங்கு வரைய விரும்பவில்லை. 1920 - களின் அரசியல்-பொருளாதார நெருக்கடியிலிருந்து திடீரென எழுந்த முசோலினி-ஹிட்லர் பாசிசங்களைப் போன்று இல்லாமல், ஆர்எஸ்எஸ் தலைமையிலான இந்திய பாசிசம் ஒரு திட்டமுறையிலான, நிலையான, நீண்டகால செயல்முறையில் வேரூன்றியதாகும். கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு வரை ஆழமாக வேரூன்றி, பல பரிமாண ஊடுருவல்களுடன். இந்திய அரசின் ஒட்டுமொத்த சிவில், இராணுவ அமைப்பு எந்திரங்களில் - மற்ற ஏகாதிபத்திய சக்திகளுடன் கடுமையான முரண்பாடுகளைக் கொண்டிருந்த பாரம்பரிய பாசிசத்தைப் போன்று இல்லாமல் - இந்துத்துவ பாசிஸ்டுகள் மிக ஆரம்பத்திலிருந்தே காலனித்துவ காலம், போருக்குப் பிந்தைய புதிய காலனித்துவ காலம் ஆகிய இரண்டிலுமே சர்வதேச நிதி மூலதனத்திற்கு அடிபணிந்தனர். எவ்வாறாயினும், 1980 - களில் புதிய தாராளவாத காலத்தில் இருந்து ராம ஜென்மபூமி இயக்கத்துடன் இந்த செயல்முறையானது தொடங்குகிறது. 1992 - இல் பாபர் மசூதி இடிப்பு, தீவிர வலதுசாரி புதிய தாராளவாத கொள்கைகளை இந்தியா தழுவிய சூழலில், வாஜ்பாய் அரசாங்கத்தின் கீழ் 'உலகமயமாக்கலின் இரண்டாம் தலைமுறை' 1990 களின் பிற்பகுதி - 21 - ஆம் நூற்றாண்டின் முற்பகுதி, 2002 - இல் குஜராத் படுகொலை, 2014 - இல் மோடி அரசு கட்டிலில் ஏறுதல் , 2019 - இல் மோடி மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர்தல் போன்ற நிகழ்வுகள் இந்த புதிய-பாசிச மாற்றத்திற்கான சில முக்கியமான மைல் கற்களாகும்.

வெளிப்படையாகத் தெரியும்படி, மோடி.2- இன் கீழ், பொருளாதாரம் அனைத்தும் தனியார் கார்ப்பரேட் பெருநிறுவனமயமாக்கல், குடிமைக் கட்டமைப்பு – அரசியலமைப்புச் சட்டம், நிர்வாக, நிறுவனத் துறைகள் உட்பட- மற்றும் இராணுவக் கட்டமைப்புகள் (ஆர்எஸ்எஸ் முயற்சியில் இராணுவப் பள்ளிகள் தொடங்குவதிலிருந்து அக்னிபாத் திட்டம் வரை), ஆர்எஸ்எஸ் இப்போழுது இந்துராஷ்டிராவை நிறுவுவதற்கான அதன் இறுதி இலக்கை நோக்கி நகர்கிறது. இது ஒரு சகிப்புத்தன்மையற்ற தேவராஜ்ய (இறை அச்சம் கொண்டதான) அரசாகும். இது 1939 - இல் கோல்வால்கரால் 'நாம், நமது வரையறுக்கப்பட்ட தேசம்' மனுஸ்மிருதியின் கோட்பாடுகளுக்கு இணங்க வரையறுக்கப்பட்ட மாபெரும் மகத்தான பணியானகும். ‘முஸ்லீம் எதிர்ப்பு’ (உதாரணமாக, இன்று பூமியில் 'அதிக துன்புறுத்தப்படும்' சிறுபான்மையினராக ஐ.நா.வால் வகைப்படுத்தப்படும் ரோஹிங்கியாக்களை 'ஊடுருவுபவர்கள்' என்று சித்தரிப்பது போன்ற) இந்துத்துவாவின் அனைத்துத் தனித்தன்மைகளும், அகண்ட-இந்தியாவின் ஒரே மாதிரியான சீரழிவு சிதைவுக்குள் தள்ளுதல், ஒடுக்கப்பட்ட சாதி அமைப்புகளை கீழ்மைப்படுத்தி இந்துத்துவாவுடன் ஒருங்கிணைத்தல், நவீனத்துவத்தின் அனைத்து மதிப்பீடுகளையும் நிராகரித்தல், பகுத்தறிவு-அறிவியல் சிந்தனைகளை மறுத்து பாரம்பரியத்தை மூடத்தனத்தை வழிபடுவதை வளர்ப்பது, கருத்து வேறுபாடு, கருத்து மாறுபாடுகளை தேசத் துரோகமாகக் கருதுதல், வீர புருஷர்களை வழிபடுதல், மேட்டிமைத்தனம், கம்யூனிச எதிர்ப்பு ஆகியவற்றை சமரசமற்ற கார்ப்பரேட் நிதி மூலதனத்துடன் ஒருங்கிணைப்பது என்பன ஆர்எஸ்எஸ் புதிய பாசிசத்தின் பண்பு வெளிப்பாடுகளாகும்.

புதிய பாசிசத்தினை எப்படி அணுகுவது

இந்த நெருக்கடியான கட்டத்தில், புதிய பாசிசத்தின் பருண்மையான புரிதல் - அதாவது, பாசிசத்துடன் தொடர்புடைய பழைய விதிமுறைகளும், நடைமுறைகள் பொருத்தமற்றதாகிவிட்ட புதிய தாராளவாதத்தின் கீழ் பாசிசம் - பாசிச எதிர்ப்பு இயக்கத்தை கட்டி அமைப்பதற்கும் பாசிசத்தை தோற்கடிப்பதற்கும் இன்றியமையாதது. சந்தேகத்திற்கு இடமின்றி, மிக மிகப் பிற்போக்குத்தனமான கார்ப்பரேட் பெருநிறுவனங்கள்-நிதி மூலதனத்தின் மேலாதிக்கத்துடன் பாசிசத்தின் பிரிக்க முடியாத ஒருங்கிணைப்பு எனபது அதன் உலகளாவிய தன்மையாகும். எவ்வாறாயினும், பாசிசத்தின் தோற்றத்திற்கு அனைத்து சூழ்நிலைகளிலும் ஒரு நிலையான வடிவம் அல்லது வழிமுறை இருப்பதாகக் கருதுவது பிழையானது. மேலும் இது பாசிச எதிர்ப்பு போராட்டங்களை கட்டியெழுப்புவதற்கும் தடையாக இருக்கும். எடுத்துகாட்டாக, நிதி மூலதனத்தில் பாசிசத்தை அதன் உறுதியான அடித்தளங்கள் தொடர்பாக வரையறுத்த 7- ஆவது அகிலத்தின் பேராயம் (1935), காலனித்துவ, அரை-காலனித்துவ (அரை காலனி என்பதை பாதி காலனி எனப் புரிந்து கொள்ளக் கூடாது – மொழி பெயர்ப்பாளர்) நாடுகளில் பாசிசத்தின் வளர்ச்சியின் வெவ்வேறு போக்கை அடிக்கோடிட்டுக் காட்டியது, மேலும் இந்த நாடுகளில், சர்வதேச அகிலத்தின் படி, ‘ஜெர்மனி, இத்தாலி, பிற முதலாளித்துவ நாடுகளில் நாம் கண்டு பழகி கொண்டிருக்கின்ற பாசிசத்தின் வகை பற்றி எந்த கேள்வியும் இருக்க முடியாது’

அதாவது, நாடுகளின் குறிப்பிட்ட அரசியல், பொருளாதார, வரலாற்று நிலைமைகளைப் பொறுத்து, பாசிசம் வெவ்வேறு வடிவங்களை எடுக்கலாம்.

இன்று இந்த முக்கியமான கேள்விக்கு ஒரு பெரும் அரசியல் (macro) பரிமாணம் உள்ளது. நாட்டின் அனைத்து முற்போக்கு-ஜனநாயகப் பிரிவுகள், தொழிலாளர் வர்க்கம், விவசாயிகள், ஒடுக்கப்பட்ட மக்கள், அறிவுஜீவிகளுக்கு எதிராக கார்ப்பரேட்-நிதி மூலதனத்தின் மிகவும் பிற்போக்குத்தனமான, பயங்கரவாதக் கூறுகளைக் கொண்ட அரசாங்கம் பாசிசம் என்பதில் சந்தேகமில்லை. எவ்வாறாயினும், 20 - ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் போர்களுக்கு இடையிலான ஆண்டுகளில் பாரம்பரிய (Classical) பாசிசம் தோன்றியபோது, நிதி மூலதனம் அல்லது ஏகாதிபத்தியம் அதன் காலனித்துவ கட்டத்தில் இருந்தது. ஆனால், இன்று ஏகாதிபத்தியம் அதன் புதிய காலனித்துவ கட்டத்தில் உள்ளது, மேலும் மூலதன குவிப்பினுடைய நெருக்கடியின் காரணமாக, அதன் சமூக நல முகமூடியைக் கைவிட்டு, நிதி மூலதனம் புதிய தாராளவாதத்தை தழுவியுள்ளது, அதன் சாராம்சம், கார்ப்பரேட் மூலதனத்தின் உலகமயமாக்கல் அல்லது மூலதனத்தின் சர்வதேசமயமாக்கல் வரம்பற்ற, கட்டுப்படுத்த முடியாத நாடுகளின் எல்லைகளைத் தாண்டியதாக தன்னை வெளிப்படுத்தி கொண்டிருக்கின்றது. 21 - ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து ஏகாதிபத்திய நெருக்கடியின் தீவிரத்துடன், குறிப்பாக 2008 ‘துணை குற்ற நெருக்கடி’ முதல், டிஜிட்டல் மயமாக்கல் போன்ற எல்லைகளே இல்லாத தொழில்நுட்பங்களின் முன்னேற்றங்களைப் பயன்படுத்தி, ஏகாதிபத்தியம் தனது சுமையை மேலும் மேலும் மேலும் உலக மக்களின் தோள்களுக்கு மாற்றுவதில் ஈடுபட்டுள்ளது. மக்கள். இந்தச் சூழலில், பிற்போக்குத்தனம், இனவாதம், பேரினவாதம், பழமைமீள் உருவாக்கம்,தேசிய இனவெறி, மத அடிப்படைவாதம், வெறுப்பு, ஜோசியம்-மூடநம்பிக்கை போன்ற இருள் வாதம் போன்ற சித்தாந்தங்களை தனது அரசியல் அடிப்படையாக திறம்பட பயன்படுத்தி உலக அளவில் கார்ப்பரேட் பெருநிறுவன மூலதனத்தின் மிகக் கொடுங்கோன்மையை செயல்படுத்த புதிய பாசிசம் தீவிரப்படுத்தப்படுகிறது.

எனவே, இன்று கார்ப்பரேட் மூலதன குவியலின் பின்னுள்ள தர்க்கத்தின் அடிப்படையில் புதிய தாராளவாத பாசிசம் அல்லது புதிய பாசிசத்தைப் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டிய தேவை இருக்கிறது. ஒருபுறம், உலகமயமாக்கல் ஒரு புதிய சர்வதேச தொழிலாளர் பிரிவினையை மிகைப்படுத்தி திணிப்பதன் மூலம் முந்தைய தேசத்தை மையமாகக் கொண்ட உற்பத்தி செயல்முறையை மறுகட்டமைக்க ஏகாதிபத்தியத்திற்கு உதவியது. இதன் மூலம் உழைக்கும் மக்கள் மீது உலகளாவிய மிக மிக அதிகப்படியான சுரண்டலைக் கட்டவிழ்த்து விட்டு, அதன் மூலம் தனது மூலதன குவிப்பினால் வந்த நெருக்கடியை தற்காலிகமாக சமாளிக்கிறது. மறுபுறம், இடதுசாரிகளின் கோட்பாட்டு கருத்தியல் பின்னடைவைச் சாதகமாக்கிக் கொண்டு, பல்வேறு நாடுகளின் உழைக்கும் மக்கள், ஒடுக்கப்பட்ட மக்களிடையே நிலவுகின்ற பன்முகத்தன்மைகளைப் பயன்படுத்துவதன் மூலமும், ‘அடையாள அரசியல்’, ‘பன்முக பண்பாடு’ இன்ன பிற பின்நவீனத்துவ / மார்க்சிசத்திற்குப் பிந்தைய புதிய தாராளவாத சித்தாந்தங்களை திறம்பட பயன்படுத்துவதன் மூலமும், நிதி மூலதனம் ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளுக்கு இடையே பிளவை உருவாக்கி, கார்ப்பரேட் பெருநிறுவனக் கொள்ளையிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பி அதன் மூலமும் மூலதனத்திற்கு எதிரான எதிர்ப்பை ஒழுங்கமைத்து அமைப்பாக்கப்படுவதை தடுத்தும், அதைத் துண்டாடுவதிலும் வெற்றி பெற்றுள்ளது.

எனவே, கார்ப்பரேட்-நிதி மூலதனத்தின் பிற்போக்கு சாரமானது, புதிய தாராளவாதத்தின் கீழ் மிகவும் பரவலாகவும் பயங்கரமான அழிவாகவும் மாறியுள்ளது. அந்த நேரத்தில் முதலாளித்துவ-ஏகாதிபத்திய நாடுகளுக்கு குறிப்பிட்டதாக இருந்த 'பாரம்பரியமான பாசிசத்தின்' காலகட்டத்தைப் போலன்றி, புதிய பாசிசம், அதாவது புதிய தாராளவாதத்தின் கீழ் பாசிசம் தேசங்களின் எல்லைகளைத் தாண்டி நாடு கடந்த பன்னாட்டு குணாதிசயங்களைக் கொண்டாதாக விளங்குகிறது. இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு, ஐரோப்பாவின் நிதி மூலதன சுயநல கும்பலானது, தொழிலாளர்கள், புலம்பெயர்ந்தோர், அகதிகளுக்கு எதிராக ஓர் அகண்ட-ஐரோப்பிய புதிய பாசிச கூட்டணியை தொடங்கிய விதம் ஆகும்.

கார்ப்பரேட் சுரண்டல் கொள்ளையினால் எழும் வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு, வாழ்விடங்கள், சுற்றுச்சூழலின் இழப்பும், புதிய தாராளமயக் கொள்கைகளுக்கு மாற்றுக் கொள்கை இல்லாத 'சமூக ஜனநாயகவாதிகள்' உள்ளிட்ட பிரதான பாரம்பரியக் கட்சிகள் மீதான மக்களின் நம்பிக்கை இழப்பு ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட சமூக, பொருளாதார பாதுகாப்பின்மையின் வெகுஜன உளவியலைச் சாதகமாக்கிக் கொள்ள, இன்று எல்லா இடங்களிலும் புதிய பாசிஸ்டுகள் கூடுதலான நேரங்களை செலவழித்து வேலை செய்கின்றனர். நாடுகளின் குறிப்பான தன்மைகளைப் பயன்படுத்தி, பொதுவாக புதிய பாசிஸ்டுகள், மக்கள்தொகையில் 'ஒரே வகைப்பட்டவர்' பகுதி என்று அழைக்கப்படுவதை முட்டுக்கொடுத்து, பெரும்பாலும் மதம், பழங்குடி, மரபினம், தேசிய/இனம், மொழி சிறுபான்மையினரால் உருவாக்கப்பட்ட பன்முகத்தன்மை கொண்ட பிரிவுகளுக்கு எதிராகவும், புலம்பெயர்ந்தோர், அகதிகள், தலித்துகள், பழங்குடியினர், சமூகத்தின் பிற விளிம்புநிலை மக்கள், ஒடுக்கப்பட்ட பிரிவினர்களுக்கு எதிராக முட்டுக்கட்டை போடுவதன் மூலம் ஒரு பிரத்யேகமானதும், பெரும்பான்மையானதுமான கொள்கையை புதிய பாசிஸ்டுகள் பின்பற்றுகின்றனர்.

இந்த புதிய பாசிஸ்டுகளால் மேற்கொள்ளப்படும் இவை அனைத்தும் சுற்று அரசியலற்றமயமாக்கல், சமூக பொறியியல் ஆகியவை புதிய பாசிசத்தின் வளர்ச்சிக்கு ஒரு வளமான நிலத்தை வழங்குகின்றன. இதற்கு தனது சொந்த தனித்தன்மைகளுடன், இந்தியாவில் உருவாகி உள்ள ஆர்எஸ்எஸ் பாசிசம் (கார்ப்பரேட்-காவி பாசிசம்) இன்றைய புதிய பாசிசத்திற்கு குறிப்பிட்டதொரு எடுத்துக்காட்டாகும். கட்டுக்கடங்காத புதிய தாராளவாத - கார்ப்பரேட்மயமாக்கலினை தன்னை அடித்தளமாகக் கொண்ட இன்றைய இந்திய ஆட்சியானது, மூர்க்கத்தனமான ‘இந்து தேசியவாதம்’ அல்லது இந்துத்துவா என்ற ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தின்படி ஓர் இந்து புனிதராஜ்ய அரசை அல்லது இந்து கடும்கோன்மை அரசை நிறுவுவதில் ஈடுபட்டுள்ளது. இன்றைய சர்வதேச சூழ்நிலையின் பருண்மையான மதிப்பீடுகளின்படி, எல்லா இடங்களிலும் பெரும்பான்மை மதமானது நிதி மூலதனத்தால் புதிய பாசிசத்தின் (உதாரணமாக, அமெரிக்காவில் சுவிசேஷம், மேற்கு ஆசியாவில் அரசியல் இஸ்லாம், இந்தியாவில் இந்துத்துவம், இலங்கை – மியான்மரில் பௌத்தம்) கோட்பாட்டு அடிப்படையாகப் கமுக்கமாக பயன்படுத்துவதற்கு ஏற்றது என்பதைத் தெளிவாக்குகிறது.

பாசிச எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவது பற்றி

மேற்கூறிய சுருக்கமான வரையறுப்புக்களின் அடிப்படையில், பாசிச எதிர்ப்பு தாக்குதல் கடந்த கால அனுபவங்களில் இருந்து படிப்பினைகளை அடிப்படையாகக் கொண்டு மட்டுமல்லாமல், 21 - ஆம் நூற்றாண்டின் நிதி மூலதனத்தின் இயக்க சட்டங்களின் உறுதியான மதிப்பீட்டின் அடிப்படையிலும் ஒரு நாட்டின் குறிப்பானவற்றிலிருந்தும் தொடங்கப்பட வேண்டும். புதிய பாசிசம் என்பது புதிய தாராளவாதத்தின் கீழ் கார்ப்பரேட்-நிதி மூலதனத்தின் மிகவும் பிற்போக்குத்தனமான பிரிவுகளின் ஆட்சி என்பது வெளிப்படையாகும். எனவே, ஆளும் வர்க்க/முதலாளித்துவக் கட்சிகள் அடிப்படையில் புதிய தாராளவாத நோக்குநிலை கொண்டவை என்றாலும், அவை அனைத்தும் பாசிச சக்திகள் அல்ல. அதோடு கூட, சட்டத்தின் ஆட்சி, முதலாளித்துவ ஜனநாயக உரிமைகள், கருத்து சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம், சுதந்திரமான - நியாயமான தேர்தலுக்காக நிற்கும் பிரிவுகள் அவற்றில் உள்ளன. இருப்பினும், புதிய தாராளவாதத்தின் வேர்களுடனும் கார்ப்பரேட் மூலதனத்துடனான தொடர்புகள் மற்றும் தேர்தல் அரசியலுடன் ஈடுபடுவது மட்டுமே செயல்பாட்டின் ஒரே வழிமுறையான அவர்களின் வர்க்க குணாம்சங்கள், இந்த கட்சிகள் முழுமையும் சமூக வாழ்க்கையின் நுண் அரசியல், பெரும் அரசியல் வெளிகளை (macro) அபகரித்துள்ள பாசிஸ்டுகளுக்கு எதிரான போராட்டத்தில் முன்முயற்சி எடுக்க இயலாமல் செய்துள்ளது. ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்ட மூல யுத்தி சமூக வாழ்நிலைகளில் இருந்து பாசிச கூடாரங்கள் துடைத்தழிக்கப்படும் வரை, பாசிச மீண்டும் வருவதற்கான அச்சுறுத்தல் இருக்கும் என்பதால் தேர்தல் வெற்றி மட்டும் போதாது.

அரசின் உறுப்புகள் மீதான கட்டுப்பாட்டுடன், காவி பாசிஸ்டுகள் தங்கள் பரந்துட்ட, இணை இல்லாத பலவிதமான அமைப்புகளின் கட்டமைப்பின் மூலம் போக்கிரிகள், துணை ராணுவ பயிற்சி பெற்ற குண்டர் படைகள் மூலம் 'தெருக்கள் அதிகாரத்தின் (Street Power)' மீது மாய கண்கட்டுவித்தை போன்ற கட்டுப்பாட்டை நிறுவியுள்ளனர். பாரம்பரிய (Classical) பாசிசத்தின் நிலைமையைப் போல அல்லாமல், தேர்தல்கள் இருக்கும் வரை பாசிஸ்டுகளுக்கு சவால் விடுவதற்கான தேர்தல் கோட்பாட்டளவில் இன்று நடைமுறையில் இருந்தாலும், சுதந்திரமான, நியாயமான தேர்தல்கள் கடினமாகி வருகின்றன. அபரிமிதமான வெள்ளமென பாயும் கார்ப்பரேட் நிதியுதவியும், வலிமைமிக்க தெரு சக்தியும் (Street Power) முழுமையாக அரசு நிர்வாகத்தினை தங்களின் கட்டுபாட்டில் வைத்திருப்பதுடன் இரண்டற கலந்து இந்தியாவை மனுஸ்மிருதியின் கட்டளைகளின் அடிப்படையில் ஒரு முழுமையான பார்ப்பனீய இந்துசாமியார்களின் அரசாக (theocratic state) மாற்றுவதில் ஈடுபட்டுள்ளன. எனவே, நாடாளுமன்ற வேலைகளில் மட்டுமே ஈடுபாடு கொண்டு, நாடு தழுவிய பாசிச எதிர்ப்பு இயக்கம் இல்லாமல், பாசிஸ்டுகளை எதிர்கொள்ள முடியாது, இது பாசிச அல்லாத ஆளும் வர்க்கக் கட்சிகள் அடிக்கடி புறக்கணிக்கும் அம்சமாகும்.

'சமூக ஜனநாயகவாதிகள்' (எ.கா. CPM) முதல் சாகசக்காரர்கள் (எ.கா. மாவோயிஸ்டுகள்) வரை பரந்த 'இடது அலைவரிசைகள்' நிலவி வருகின்றன. பிந்தைய சாகசக்காரர்கள் பிரிவு, மதவெறியர்களுக்கான வெறும் ஆட்சி மாற்றமாக கருதுவதால் புதியபாசிசத்தின் மிகவும் பிற்போக்குத்தனமான - பயங்கரவாத வர்க்க சாரத்தை புறக்கணிக்கின்ற குறுங்குழுவாத அணுகுமுறையின் காரணமாக ஆளும் வர்க்கங்களின் பாசிச சார்புக்கும், பாசிச அல்லாத பிரிவுகளுக்கு இடையே வேறுபாட்டைக் அதனால் காண முடியவில்லை. மறுபுறம், CPM - ஐப் பொறுத்தவரை, இந்தியாவில் பாசிசம் இன்னும் வரவில்லை. அதன் சித்தாந்தங்களின்படி, மோடி ஆட்சி ‘பாசிசமாக மாறும் விளிம்பில் உள்ளது’

, ‘பாசிசத்தின் அறிகுறிகள்’மட்டுமே வரையறுக்கின்றது. இந்த மதிப்பீடு பாசிசத்திற்கான ஒரே வகை மாதிரியான அணுகுமுறையிலிருந்து எழுகிறது. இது புதிய பாசிசத்தை போர்களுக்கு இடையிலான காலத்தின் 'பாரம்பரிய பாசிசத்தின் (classical fascism பாடநூல் நகலாகப் பார்க்கின்ற ஒரு வழியாகும். புதிய பாசிசத்திற்கான இந்த இயந்திரகதியான அணுகுமுறை இயங்கியல்-பொருள்வாத பகுப்பாய்வுக்கு முரணானது, எந்தவொரு சமூக நிகழ்வும் ஒரு புதிய வரலாற்று சட்டகத்தில், வேறுபட்ட சமூக உருவாக்கத்தில் உருமாறி மேலும் வளர்ச்சியடையும் போது அந்த பருண்மையான சூழ்நிலைமையின் தனித்தன்மைகள், குறித்த தன்மைகளுக்கு தவிர்க்க முடியாமல் தன்னை மாற்றிக் கொள்ளும்.

துல்லியமாகச் சொல்வதானால், பாசிசத்தின் பருண்மையான வெளிப்பாடுகள் இடத்திற்கு ஏற்பவும், காலத்தை பொறுத்தும் மாறுபடும். பாரம்பரிய (கிளாசிக்கல்) பாசிசம் தோன்றிய காலனித்துவ காலத்துடன் ஒப்பிடும் போது, இன்று பாராளுமன்ற அமைப்பு முறை ஏறக்குறைய ஒரு நூற்றாண்டைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது, மேலும் கார்ப்பரேட் பில்லியனர்கள் அரசு அதிகாரத்தின் கடிவாளத்தை தங்களிடம் வைத்திருப்பதிலும், கார்ப்பரேட்-நிர்வாக அறைகளில் (corporate-board rooms) கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டாலும் வெறும் கட்டிடமாகவே பாராளுமன்றத்தை வைத்து கொண்டு தொழிலாள வர்க்கத்தை, ஒடுக்கப்பட்ட மக்கள் மீதும் இடைவிடாத புதிய பாசிச தாக்குதல்களை நடத்துவதில் திறமையானவர்களாகி விட்டனர். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், முதலாளித்துவ ஜனநாயகத்தின் திரையின் கீழ், புதிய தொழில்நுட்பங்கள் மூலமூம், காலநிலையைப் பேரழிவுக்கு உள்ளாக்கும் இயற்கையைக் கொள்ளை அடித்தல், அனைத்து சமூக கட்டுமானங்களையும் இராணுவமயமாக்கலுக்கு வழிவகுத்தல் போன்றவற்றின் மூலம் புதிய பாசிசமானது, இன-பாரம்பரிய பண்பாட்டு இனச் சுத்திகரிப்பு, சிறுபான்மையினர், புலம்பெயர்ந்தோர், அகதிகள், பெண்களை ஒடுக்குதல்-அழித்தல், கடின உழைப்பாலும் - மக்கள்திரள் போராட்டங்களாலும் சம்பாதித்த ஜனநாயக உரிமைகளை ஒழித்தல், தொழிலாளர்கள் மீதான மிகை சுரண்டல் போன்ற பயங்கரவாத முறைகளைப் பயன்படுத்தக் கூடியதாகி விட்டது.

சந்தேகத்திற்கு இடமின்றி, சமூக ஜனநாயகவாதிகள் இனிமேல் வரவிருக்கும் பாசிசத்திற்காக தர்க்கரீதியாக காத்திருப்பது என்பது அவர்களும் தாங்கள் ஆட்சியில் வீற்று இருக்கும் போதெல்லாம் அதே தீவிர வலதுசாரி புதிய தாராளவாத கொள்கைகளை எங்கும் எப்போதும் செயல்படுத்துவர்களாக இருக்கிறார்கள் என்பதால் பாசிசத்திற்கான இயந்திரகதியான அணுகுமுறையுடனும், புதிய தாராளவாத-கார்ப்பரேட்மயமாக்கலின் மன்னிப்பாளர்களாகவும் (being apologists of neoliberal-corporatisation) சமூக சனநாயகவாதிகள் இருக்கிறார்கள்.

எவ்வாறாயினும், பாசிசத்தின் மீதான இத்தகைய மாறுபட்ட கருத்துகள், ஆர்எஸ்எஸ் புதிய வகைப்பட்ட பாசிசத்தை எதிர்ப்பதற்கும் தோற்கடிப்பதற்கும் பாசிச எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான உடனடியான, இன்றியமையாத பணியைத் தவிர்ப்பதற்கான ஒரு நியாயமாக இருக்கக் கூடாது. சித்தாந்தரீதியாகவும், அரசியல்ரீதியாகவும், அமைப்புரீதியாகவும் வலுவான கம்யூனிஸ்ட் இயக்கம் காலத்தின் தேவை என்பதில் சந்தேகமில்லை. அதே நேரத்தில், இருபதாம் நூற்றாண்டின் இருபதுகளில் ஐரோப்பாவில் பாசிஸ்டுகள் முன்னேறியபோது பல கம்யூனிஸ்ட் கட்சிகளைப் போலவே தற்கொலை செய்துகொள்ளும் வகையில் இருந்தது போன்று அத்தகைய அகில இந்திய இயக்கம் தயாராகும் வரை நாம் காத்திருக்க முடியாது.

1930களில் பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி உருவாக்கப்பட்டபோது, பாசிஸ்டுகளால் ஏற்கனவே அதிக சேதம் ஏற்பட்டு விட்டது. அதே நேரத்தில், பாசிச எதிர்ப்புப் போராட்டத்தின் போது பரந்த ஐக்கிய முன்னணியில் இணைந்த ஏகாதிபத்தியங்கள் உள்ளிட்ட பல்வேறு சக்திகளின் அடிப்படையில் வேறுபட்ட வர்க்க நலன்களைப் பகுப்பாய்வு செய்து புரிந்து கொள்ளத் தவறியதும், பாசிசத்தின் தோல்வியைத் தொடர்ந்த தவறான மதிப்பீடுகள் பல திருத்தல்வாத-சந்தர்ப்பவாத விலகல்களுக்கு உலகளாவிய அளவிலும், தேசிய அளவிலும் வழிவகுத்தன. அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் புதிய வகைப்பட்ட காலனித்துவ தாக்குதலைத் தொடங்கத் தயாராகிக் கொண்டிருந்த வேளையில் 1943 - இல் கம்யுனிஸ்ட் அகிலம் கலைக்கப்பட்டது, இந்த சர்வதேச விலகலுக்கு ஒரு சரியான எடுத்தக்காட்டு ஆகும். அதே காலத்தில் பாசிச எதிர்ப்புப் போராட்டத்தில் நிதிமூலதன முதலாளியத்தின் பிரிவுகளுடன் செயல்தந்திரரீதியிலான கூட்டணியை மாற்றுவதற்கு அழைப்பு விடுத்ததானது, தொழிலாள வர்க்கத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் இடையிலான நீண்டகால மூல உத்தியிலான கூட்டணியில் இந்த விலகலினால் அமெரிக்காவில் கம்யூனிஸ்ட் கட்சியில் திசைவிலகல் பிரவுடரிசம் (Browderism) உருவானதும் உள்நாட்டு எடுத்துக்காட்டாகும்.

இத்தகைய கடந்த கால அனுபவங்களின் பின்னணியில் பார்க்கும்போது, புதிய பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு வலுவான கம்யூனிஸ்ட் இயக்கம் இல்லாததை ஒப்புக் கொண்டாலும், குறுங்குழுவாத, சந்தர்ப்பவாத விலகல்களைத் தவிர்க்க கவனமாக இருக்க வேண்டும். மிகவும் பிற்போக்குத்தனமான கார்ப்பரேட்-முதலாளித்துவம், அவர்களால் முட்டுக் கொடுக்கப்பட்ட புதிய பாசிச அரசுக்கு எதிராக ஆளும் வர்க்கங்களின் பாசிச அல்லாத பிரிவுகளுடன் கூட்டுச் சேரும் அதே வேளையில், கம்யூனிஸ்டுகளும் முற்போக்கு சக்திகளும் இன்று முதலாளித்துவத்தின் பல்வேறு பிரிவுகளிடையான ஒன்றுடன் ஒன்றும், ஊடுருவியும், சிக்கலானதுமான வர்க்க நலன்களை நன்கு அறிந்திருக்க வேண்டும். சமூக ஜனநாயகவாதிகளுடன் ஐக்கிய முன்னணி என்ற கேள்வி வரும்போது, அயராத சித்தாந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சி (CPM) போன்ற சமூக ஜனநாயகவாதிகள் அதிகாரத்திலிருந்து கொண்டு கார்ப்பரேட் நலன்களுக்கு சேவை செய்யும் போது, இந்த பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. இப்பிரச்சினையில் கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களின் எந்த மெத்தனமும், ‘பாசிச எதிர்ப்பு ஒற்றுமை’

நலன்களுக்காக கம்யூனிஸ்டுகளின் சித்தாந்த-அரசியல் வழியை சரணடையச் செய்து, இறுதியில் பாட்டாளி வர்க்க தனித்துவத்தை-சுதந்திரத்தை தியாகம் செய்வதற்கும், வர்க்கப் போராட்டத்தை முற்றிலுமாக கைவிடுவதற்கும் வழிவகுக்கும்.

வர்க்கப் போராட்டம் என்பதை பாசிச-எதிர்ப்புப் போராட்டத்திற்கு எதிரானதாக நிறுத்துவது அல்லது இந்த இரண்டையும் தண்ணீர் புகாத பெட்டிகளில் இறுக்கமாக அடைத்து வைப்பது அல்லது ஒன்றுக்கு பின்பாக ஒன்றை வைப்பது என்பது இதன் பொருள் அல்ல; மாறாக இரண்டு போராட்டங்களும் பாசிச சூழலில் பிரிக்க முடியாதவையாகவும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளதாகவுமே இருக்கிறது. கார்ப்பரேட்-காவி பாசிச ஆட்சிக்கு எதிரான பல போராட்டங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்து கொண்டிருக்கின்றன அல்லது வளர்ந்துகொண்டு இருகின்றன. இவை இந்துத்துவ பாசிசத்திற்கும், தீவிர வலதுசாரி புதிய தாராளவாதக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்களை இணைக்கின்றன. அதாவது இவை பாசிச எதிர்ப்பு போராட்டத்தையும் வர்க்கப் போராட்டத்தின் கூறுகளை உள்ளடக்கியதாக இருக்கிறது.

முஸ்லீம்களுக்கு குடியுரிமை மறுப்புக்கு எதிரான மக்கள் இயக்கமான குடியுரிமை திருந்த சட்டம் (CAA ) எதிர்ப்பு இயக்கம், விவசாயத்தினை கார்ப்பரேட்மயமாக்கலுக்கு எதிரான வரலாற்று சிறப்புமிக்க விவசாயிகள் இயக்கம் ஆகிய இரண்டு எடுத்துக்காட்டுகளிலும் கிட்டத்தட்ட அனைத்து பாசிச எதிர்ப்பு சக்திகளும், பணக்கார விவசாயிகளின் அமைப்புகள் - கட்சிகள் முதல் ஒடுக்கப்பட்ட மக்கள்திரள் அமைப்புகள் - கட்சிகள் வரை தீவிரமாகப் பங்கேற்றன. இந்த அனுபவத்தின் அடிப்படையில், மதச்சார்பற்ற, ஜனநாயக, இடதுசாரி சக்திகளை உள்ளடக்கிய அனைத்து பாசிச எதிர்ப்புப் பிரிவுகளுடன் ஒன்றிணைந்து, கார்ப்பரேட் மயமாக்கல், காவி-பாசிச சக்திகளுக்கு எதிராக நீடித்த, சமரசமற்ற போராட்டங்களை வளர்ப்பதற்கான சாத்தியக்கூறுகள் நாடு முழுவதும் உருவாகி வருகின்றன. இப்போராட்டங்களில், தகுந்த அமைப்புரீதியான தலையீடுகள் செய்யப்பட்டால், தொழிலாளி வர்க்கம் குறிப்பாக அமைப்புசாரா பிரிவினர், விவசாயிகள், ஒடுக்கப்பட்ட மக்கள் குறிப்பாக பெண்கள், தலித்துகள், பழங்குடிமக்கள், சிறுபான்மையினர் உள்ளிட்ட துன்புறுத்தப்பட்ட முஸ்லிம்கள், இளைஞர்கள், மாணவர்கள், கார்ப்பரேட் தாக்குதல்களுக்கு எதிராகப் போராடியவர்கள், தங்கள் வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள், சுற்றுச்சூழல் அழிவு, சாதிக் கொடுமைகள், மதவெறி ஒடுக்குமுறைக்காக அகற்றப்பட்டவர்கள், சனநாயக உரிமை மீறல் இன்னும் பலவற்றிக்கு எதிராக மக்கள் இணைவார்கள் மக்களின் இத்தகைய எதிர்ப்புப் போராட்டங்களோடு, புதிய தாராளவாதக் கொள்கைகள், ஆர்.எஸ் எஸ் புதிய பாசிசத்திற்கு எதிராக மாற்று அரசியலை நோக்கிய வாதங்களையும் உரையாடல்களையும் தொடங்குவதற்கு உணர்வுபூர்வமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இத்தகைய முன்முயற்சிகள் புரட்சிகர இடது, ஜனநாயக, போராடும் சக்திகளுடன் இணைந்து மாநில அளவிலான ஒருங்கிணைப்புக்கு வழிவகுக்கும். இது கார்ப்பரேட்-இந்துத்துவா பாசிசத்திற்கு எதிராக ஒரு நாடுதழுவிய ஒருங்கிணைப்பை ஒரு பொதுவான வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தோற்றுவிக்கும் சூழலை உருவாக்கலாம். இது தேர்தல் போராட்டங்களில் புதிய பாசிஸ்டுகளை தனிமைப்படுத்தல், தோற்கடிப்பதற்காக நீட்டிக்கப்படலாம். புதிய மனுஸ்மிருதிவாதத்திற்கு எதிராக, ஆர்எஸ்எஸ் பாசிசத்தின் பேராதரவின் கீழ் தலித்துகளுக்கு எதிராக வளர்ந்து வரும் மனிதாபிமானமற்ற பார்ப்பன சாதிய பழக்கவழக்கங்களும் எதிராகவும் பயனுள்ள எதிர்ப்பைக் கட்டியெழுப்புவதும் இங்கு மிகவும் பொருத்தமானவையாக இருக்கும். எனவே இந்திய பாசிசத்தின் கருத்தியல் அடிப்படையான மனுஸ்மிருதி அடிப்படையிலான இந்துத்துவ வாதத்திற்கு எதிராக அனைத்து முற்போக்கு அறிவுஜீவிகள் , ஒத்த எண்ணம் கொண்டவர்களுடன் இணைந்து பொருத்தமான கோட்பாட்டுரீதியான, அரசியல்ரீதியான கூட்டான தலையீடுகள் பாசிச எதிர்ப்பு போராட்டங்களில் தவிர்க்க இயலாத கூறுகளாக இருக்கும். பாராளுமன்றத்தில் போராட்டங்கள், பாராளுமன்றம் அல்லாத போராட்டங்களை உள்ளடக்கிய அத்தகைய இயக்கம், முறையாக தொடங்கப்பட்டால், குறிப்பான நிலைமைகளில் தேர்தல் போராட்டங்களில் பாராளுமன்ற கட்சிகளின் பாசிசம் அல்லாத பிரிவுகளுடன் செயல் தந்திரோபாய கூட்டணிக்கான சாத்தியக்கூறுகளையும் விரிவாகக் கண்டறிய முடியும். இது பாசிச எதிர்ப்பு இயக்கத்தை ஆளும் வர்க்கங்களுக்குள் உள்ள முரண்பாடுகளை திறம்படப் பயன்படுத்தி பாசிஸ்டுகளுடன் கூட்டணி வைத்துள்ள பிற்போக்கு சக்திகளைத் தனிமைப்படுத்த உதவும்.

- பேராசிரியர் பி.ஜே.ஜேம்ஸ்

மொழியாக்கம் - கி.நடராசன்