jaibhim surya 353தன்மானமுள்ள எந்த மனிதனும் தன்னைப் பற்றி அடுத்தவர்கள் இழிவாகப் பேசுவதை விரும்ப மாட்டார்கள். ஆனால் இழிவான சிந்தனை கொண்ட மனிதர்களும், தன் வாழ்க்கையில் தன்மானம், சுயமரியாதை என்பதற்கு என்ன அர்த்தம் என்று ஒரு போதும் புரிந்து கொள்ளத் திராணியற்றவர்களும் இன இழிவைப் பற்றி ஒருபோதும் கவலைப்படுவது கிடையாது. அவர்கள் சூத்திரர்கள், சத்ரியர்கள் என்பதைப் பெருமையாக நினைப்பதோடு அடுத்தவர்களும் தங்களை அப்படியே நினைக்க வேண்டும், அழைக்க வேண்டும் என பெருவிருப்பம் கொள்கின்றார்கள்.

நீங்கள் நினைக்கலாம், அது போன்ற சுரணையற்ற ஜென்மங்கள் எல்லாம் இந்த உலகில் இருக்கின்றார்களா என. ஆனால் கசப்பான உண்மை இந்த உலகில் சில அப்பாவி மனிதர்கள் அப்படிப்பட்ட மலத்தில் ஊறும் புழுக்களை நம்புகின்றார்கள் என்பதுதான்.

அப்படி எளிய மனிதர்களின் சாதி உணர்வைத் தூண்டிவிட்டு தன்வயப்படுத்திக் கொண்டு கொழுத்தவர்கள் மீண்டும் மீண்டும் தன் சொகுசு வாழ்கையை உத்திரவாதப் படுத்திக் கொள்ள சாதி உணர்வைத் தூண்டுவிடும் எல்லா கேடுகெட்ட அயோக்கியத்தனங்களையும் தொடர்ச்சியாக செய்து வருகின்றனர்.

சமீபத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்திற்கு எதிரான பாமக சாதிவெறியர்களின் நடவடிக்கை ஏறக்குறைய அதே போலத்தான் உள்ளது.

இந்தப் படத்தின் கதை, கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே உள்ள கம்மாபுரத்தில் வசித்த இருளர் இனத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு என்பவர் 1993 ஆம் ஆண்டு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் வைத்து குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி அடித்தே கொல்லப்பட்டார்.

ஆனால் காவல்துறை கிரிமினல்கள் அவர் காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடும்போது விபத்தில் அடிபட்டு இறந்ததாக நாடகம் ஆடினார்கள்.

ஆனால் ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி அதே பகுதியைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் (இந்திய கம்யூனிஸ்ட்- மார்க்சிஸ்ட்) தோழர் கோவிந்தன் உதவியுடனும் வழக்கறிஞர் சந்துருவின் உதவியுடனும் சட்டப் போராட்டம் நடத்தி தன் கணவனை பொய்க் குற்றச்சாட்டு சுமத்தி அடித்துக் கொன்ற காவலர்களுக்கு தண்டனை பெற்றுத் தருகின்றார் என்பதுதான் கதை.

படத்தின் கதை மிக எளிமையாக இருந்தாலும் இதுவரை தமிழ் சினிமா பயணப்படாத காவல்துறையின் சாதிவெறி பிடித்த வன்முறை வெறியாட்டங்களை அம்பலப்படுத்துவதாக அமைந்துள்ளது.

இந்தப் படத்தை மார்க்சியக் கண்ணோட்டத்தில் அணுகினால் இது ஒரு சட்டவாத நம்பிக்கையை ஏற்படுத்தும் படம்.

படத்தில் வரும் வழக்கறிஞர் சந்துருவோ, காவல்துறையைச் சேர்ந்த பெருமாள் சாமியோ சாதிவெறி பிடித்த நபர்களால் இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக நீதி பெற்றுத் தந்து விடுவார்கள் என்று நம்மை நம்ப வைக்கின்றது.

ஆனால் உண்மை நிலவரமோ இதற்கு நேர் எதிராக இருக்கின்றது.

“ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) விதிகள் 1995-ம் ஆண்டில் அமலுக்குக் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தின் படி கொலை, மரணம், பாலியல் பலாத்காரம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு 3 மாதத்தில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும், மாதம் ஒன்றுக்கு 4500 ரூபாய் நிவாரணத் தொகை, குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை, வீட்டடி மனை, பாதிக்கப்பட்டோரின் குழந்தைகளுக்கு கல்வி, மூன்று மாதங்களுக்கு வீட்டுக்கு தேவையான அரிசி, கோதுமை, பருப்பு ஆகியவற்றை வழங்க வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.

ஆனால் இந்தச் சட்டப்படி பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் குடும்பத்தினருக்கு நிவாரணம் இதுவரை முறையாக வழங்கப்படவில்லை..

தமிழகத்தில் 2001 முதல் 2015 வரை தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த 471 பேர் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். 363 பேர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலோனோருக்கு சட்டத்தில் கூறப்பட்டுள்ள எந்த நிவாரண உதவிகளும் வழங்கப்படவில்லை.

ஆனால் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புனைவாக உருவாக்கப்பட்டுள்ள ஜெய்பீம் திரைப்படத்தில் கதையின் விறுவிறுப்புக்காக 13 ஆண்டுகள் சவ்வாக இழுத்த வழக்கை மிக பரபரப்பாக முடித்திருக்கின்றார்கள்.

இதுதான் திரைப்பட உத்தி. அதை நாம் குற்றம் சொல்லவில்லை. ஆனால் குற்றத்தை மக்கள் மன்றத்தில் வைத்து உறுதியாகப் போராடிய கம்யூனிஸ்ட் இயக்க தோழர்களின் பணி மட்டுப்படுத்திக் காட்டப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான வழக்குகளில் ஒரு சில வழக்குகளுக்காக பல ஆண்டுகள் நீதிமன்றத்திற்கு பாதிக்கப்பட்ட நபர்களை அலையவிடும் சந்துரு கதாநாயகன் என்றால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்காக கடைசிவரை சாதிவெறியர்களுக்கு எதிராகவும் அதிகார வர்க்கத்திற்கு எதிராகவும் களத்தில் நிற்கும் கோவிந்தன் யார்?

ஆனால் முதலாளித்துவ சமூக அமைப்பில் இது போன்ற படங்களே பொதுச்சமூகத்தை திருப்திபடுத்த போதுமானதாக இருக்கின்றது.

இருப்பினும் இன்னும் நிலப்பிரபுத்துவ சமூகக் கட்டமைப்பை கட்டிக் காப்பாற்றி அதன் மூலம் ஆதாயம் அடையத் துடிக்கும் பிற்போக்கு சனாதனக் கும்பல்களுக்கு அதுவே பேதியை ஏற்படுத்துகின்றது.

சாதிய மலத்தின் மீது கட்டமைக்கப்பட்டிருக்கும் தங்களின் மாளிகை உடைவதை அந்த சனாதனவாதிகளால் பொறுக்க முடியவில்லை. அதனால் காட்டுக்கூச்சல் போடுகின்றார்கள்.

தேர்தலில் பொறுக்கித் தின்பதற்காக காதலர்களைப் பிரிப்பது போன்ற இழிவான வேலைகளைப் பார்க்கும் தரகர்கள் இன்று கொஞ்சம் கூட கூச்சமோ, குற்ற உணர்வோ இல்லாமல் தான் சார்ந்த சமூகத்தை இழிவுபடுத்தும் ஆபாசக் குப்பைகளை காரணம் காட்டி, குறைந்த பட்சம் சாதிவெறியை அம்பலப்படுத்தும் திரைப்படத்தைக் கூட எதிர்க்கின்றார்கள்.

ஜெய்பீம் திரைப்படத்தில் இருளர், குறவர் போன்ற பழங்குடியின மக்களுக்கு எதிராக எப்படி இந்த அரசு இயந்திரம் சாதிய வன்மத்தோடு நடந்து கொள்கின்றது என்பது காட்சிப்படுத்தப் பட்டிருந்தாலும் அதைப் பற்றி மயிரளவுக்குக் கூட கவலைப்படாத சாதிவெறி பிடித்த சுயநலக் கும்பல், குரு என்ற போலீஸ் கதாபாத்திரம் தொலைபேசியில் பேசும்போது, பின்னே உள்ள 1995 ஆம் ஆண்டின் காலண்டரில் அக்னி சட்டி உள்ளதைக் காரணம் காட்டி ஆட்டமாக ஆடிக் கொண்டு இருக்கின்றது. அப்படிப்பட்ட கூட்டத்திற்கு சீமான் போன்ற கழிசடை தமிழ்த் தேசியக் கும்பலும், மதிமாறன் போன்ற பிழைப்புவாத முற்போக்கு வியாபாரிகளும் மறைமுகமாக சாமரம் வீசிக் கொண்டு இருக்கின்றார்கள்..

உண்மையில் நடந்த சம்பவத்தில் ராஜாகண்ணு மீது திருட்டுக் குற்றம் சாட்டி அவரை காவல்துறை கொலை செய்யக் காரணமானவர்கள் வன்னிய சாதியைச் சேர்ந்த நபர்கள் என்பது உண்மையாக இருந்த போதும் அதை திரையில் நேரடியாகக் காட்டவில்லை. உண்மையை அப்படியே காட்டியிருந்தால் இன்று சாதிவெறியோடு ஓட்டுப் பொறுக்கும் திட்டத்தோடு நாடகம் நடத்தும் கும்பலின் யோக்கியதை அம்பலப்பட்டிருக்கும்.

ஏனோ இயக்குநர் தேவையில்லாமல் கண்ட பிழைப்புவாதிகளின் எதிர்ப்பை சம்பாதித்துக் கொள்ள விருப்பமற்று அதை மறைத்து விட்டார்.

இருப்பினும் ஒரு அக்கினிச் சட்டி அதுவும் ஒரு நொடி வந்துபோகும் காட்சி ஓட்டுப்பொறுக்கி கும்பலின் சதித் திட்டத்திற்குப் போதுமானதாக அமைந்து விட்டது.

அப்படி என்ன அக்கினிச் சட்டியில் மகத்துவம் உள்ளது என இந்த பார்ப்பன அடிமைக் கும்பல் குதிக்கின்றது?

Once upon a time தூர்வாசர் முனிவருக்கும், கஜமோகினிக்கும் இரண்டு அசுரக் குழந்தைகள் பிறந்தனர். அவர்களின் பெயர் "வில்வலன்" மற்றும் "வாதாபி" இவர்களின் தாயாரான கஜமோகினி என்பவள் முருகப் பெருமானால் வதம் செய்யப்பட்ட சூரபத்மனின் இளைய தங்கை ஆவாள். வில்வலனும், வாதாபியும் அகத்திய முனிவரைத் துன்புறுத்த ஆரம்பித்தார்கள். இதனால் கோபம் அடைந்த அகத்திய மாமுனி வில்வலனை விழுங்கி விட்டார். உடனே வாதாபி சிவபெருமானை நோக்கி தவம் செய்து பல சக்திகளையும் பெற்றான். அந்த வலிமையின் மூலம் தெற்கு கடற்கரையின் மைய பகுதியில் அமைந்திருந்த ரத்னாபுரியை அரசாள ஆரம்பித்தான்.

பின்னர் மாயனின் மகளான சொக்கன்னியை மணந்தான். இவன் செய்யும் அனைத்து காரியங்களுக்கும் அசுர குருவான சுக்ராசாரியார் துணை இருந்தார். பின்னர் வாதாபி தேவர்களை (பார்ப்பனர்களை) அதிகம் துன்புறுத்த ஆரம்பித்தான். இதைக் கண்ட நாரதமுனி, சிவபெருமானிடம் தேவர்களின் (பார்ப்பனர்களின்) இன்னல்களைக் கூறினார். அதே சமயம் சம்பு மகரிஷி சிவபெருமானை நோக்கி யாகம் ஒன்றை நடத்தினார். அப்போது சம்பு மகரிஷிக்கு சிவபெருமான் அருள்பாவித்து, தன் நெற்றிக் கண்ணில் இருந்து, வியர்வைத் துளியை (நீர்) அந்த யாகத்தில் விழச் செய்தார். யாகத்தில் விழுந்த அந்த நெருப்பில் இருந்து, வெள்ளைக் குதிரையில், கையில் வீரவாளுடன் தலையில் கிரீடத்துடன் ஸ்ரீவீர ருத்ர வன்னியர் தோன்றினார். சிவபெருமானும், பார்வதியும் தேவேந்திரனின் மகளான மந்திரமாலையை திருமணம் செய்து வைத்தனர்.

இவர்களுக்கு நான்கு வீர ஆண் மகன்கள் பிறந்தனர். அவர்களின் பெயர் 1.கிருஷ்ண வன்னியர் 2.பிரம்ம வன்னியர் 3.சம்பு வன்னியர் 4.அக்னி வன்னியர் ஆவார்கள். இவர்களுக்கு காந்தா (சுசிலா) என்னும் துறவியின் நான்கு மகள்களையும் திருமணம் செய்து வைத்தனர். அவர்களின் பெயர் இந்திராணி, நாரணி, சுந்தரி, சுமங்கலி ஆகியோர்கள் ஆவர். வாதாபி அரக்கனை அழிக்கப் புறப்படும்போது அவருடைய மனைவி மந்திரமாலா போரின் விளைவு என்னவாகுமோ என கவலைப்படுகிறாள். அதற்கு வன்னியராசன் "என்னுடன் நாய் வருகிறது. நான் போரில் இறந்தால் நாய் திரும்பி வரும், வீட்டில் ஏற்றப்பட்ட காமாட்சி விளக்கு அணையும், மல்லிகைப் பூ வாடும்" என்று சொல்லிவிட்டு செல்கிறார். வன்னியராசன் செல்லும் வழியில் ஆறு குறுக்கிடுகிறது. அவர் ஆற்றைக் கடந்து சென்று விடுகிறார். ஆனால் நாய் கடக்க முடியாமல் திரும்பி விடுகிறது. நாயைப் பார்த்த மந்திரமாலா கணவர் இறந்து விட்டதாகக் கருதி தாலியை அறுத்து விடுகிறாள். வீட்டில் விளக்கு அணையாததையும், மலர் வாடாதைதையும் அவள் கவனிக்கவில்லை. போரில் வெற்றிபெற்று திரும்பும் வீரவன்னிய ராசன் தன் மனைவி விதவைக் கோலத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறான். நடந்ததை அறிந்து மீண்டும் தாலி கட்டுகிறான். இப்படி தாலியை அறுத்துக் கட்டக்கூடிய பழக்கம் வன்னியர்களிடையே இருக்கிறது. இன்றைக்கும் ஆடி 18 அன்று தாலியை அறுத்துக் கட்டும் சடங்கை பல வன்னியர்கள் செய்கின்றனர். இக்கதை வன்னியக்கூத்து என்ற பெயரில் இன்றும் வன்னியர்கள் வாழும் பகுதிகளில் கூத்தாகவும் நடத்தப்படுகிறது. ஸ்ரீ வீர ருத்ர வன்னிய மகாராசனின் வழித் தோன்றல்களே வன்னியர்கள் என வன்னியர் புராணம் கூறுகிறது (நன்றி:விக்கிப்பீடியா).

இந்தக் கதையை கேட்ட தன்மானமும் சுயமரியாதையும் உள்ள ஒரு உண்மைத் தமிழன் காறித் துப்புவான் என்பது நமக்குத் தெரியும். ஆனால் ஓட்டுப்பொறுக்கி புரோக்கர் கும்பலுக்கு இந்தக் கதையைக் கேட்டால் அவனது பிறப்புக் கதை நினைவுக்கு வரும் போலும்!

அதைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. சமூக மாற்றத்திற்காகப் போராடும் நபர்களுக்கு எதிராக நஞ்சை கக்கும் காலிப் பயல்களுக்கு எதிராக நாம் களமாட வேண்டி இருக்கின்றது.

சூர்யாவை வெட்டுவோம் குத்திவோம் என்று சொல்லும் ரவுடி கும்பலுக்கு நாம் சொல்வது, கத்தி யார் குத்தினாலும் குத்தும் என்பதைத்தான். ஏனென்றால் கத்திகளுக்கு ஒரு போதும் சாதியோ மதமோ தெரியாது.

போங்கடா போயி புள்ள குட்டிய படிக்க வையுங்க…

- செ.கார்கி