kuthoosi gurusamyஅரசியல் நிர்ணய சபைக்கு வேறு சில நிபுணர்களையும் தேர்ந்தெடுக்க வேண்டுமென்று ஆலோசனை கூறும் விதத்தில், காங்கிரஸ் பத்திரிகை யொன்றில் வந்துள்ள கடிதத்தில் பின்வருமாறு கூறப்பட்டிருக்கிறது:-

சென்னை சட்டசபை அரசியல் நிர்ணய சபைக்குத் தேர்ந்தெடுக்கப் போகும் 49 பெயர்களில் காங்கிரஸ் அல்லாத கீழ்க்கண்டவர்கள் பெயர்களைப் பற்றியும் கவனிக்க வேண்டும்:- டாக்டர் லட்சுமணசாமி முதலியார்; டாக்டர் சி.ஆர்.ரெட்டி; எம்.ரெத்தினசாமி; பி.ராமச்சந்திர ரெட்டி; ஸர்.ஆர்.கே. ஷண்முகஞ் செட்டி; ஸர். ஏ. இராமசாமி முதலியார். தகுதியைப் பொருத்தமட்டில் இவர்களும் சேர்க்கப்படுவது நல்லது."

இதை எழுதிய பேர்வழி சுத்தக் கர்நாடகம் போலிருக்கிறது! "தகுதி"யாமே, தகுதி... பசங்களைப் பள்ளிக் கூடத்தில் சேர்ப்பதில் "தகுதி" அவசியம் என்றால், பூணூல் பசங்களுக்கு "லக்" அடிக்கும்! அதற்காகச் சொன்ன ‘தகுதி’யை இதில் போட்டுக் குழப்புகிறாரே!

300 பேர்களுக்கு மேல் இருக்கும் அரசியல் நிர்ணய சபையில் இதுகளை யெல்லாம் விட்டால் தலைக்குத் தலை "நொச்" "நொச்" என்று ஏதாவது பேசிக் கொண்டேயிருக்குமே! இதுகள் உலகத்திலே பார்த்ததையும், கேட்டதையும், தினம் 10 புஸ்தகத்திலே படித்ததையும் அங்கே சொல்லித் தொலைக்குமே! 385 பேரில் 380 பேருக்கு ஒரு சனியனும் புரியாதே!

தொலைஞ்சாலும் தொலையட்டும்; ஒண்ணு ரெண்டைப் போட்டு வைக்கலாமென்றால், ஒண்ணுகூடப் பூணூல் போடலையே அது மட்டுமா? அரசியல் நிர்ணய சபையில் 385 பேர் உட்கார்ந்திருக்கும்போது, பண்டிட் நேரு எழுந்து பிரசங்க மாரி பொழிந்துவிட்டு உட்கார்ந்ததும் அவர் பேசியது சரியோ, தப்போ; எல்லோரும் கை தூக்க வேண்டுமே, ஒரே சமயத்தில் முன்னேயும் பின்னேயுமாகத் தூக்கினால் தவறு செய்தவர் காந்தியாரின் "ராம் துன்" பஜனைக்கு ஒரு மாதம் போய் ஒரே நேரத்தில் தாளம் போட்டுப் பழக வேண்டும். இந்த நிபந்தனைக்கு உட்பட்ட ஆசாமிகளாகப் பொறுக்கி யெடுத்தால் நல்லதா? அதைவிட்டு, அந்தராத்மாவின் பெருமையைப் பேச வேண்டியவர்கள் கூடிய இடத்தில் அரசியல் சிக்கல்களைப் பேசித் தொலைக்குங்கள், இதுகள்!

இந்த 5-6 பேர்களைப் போட்டு விடுவதாகவே வைத்துக் கொள்வோம். 385 இல் பாக்கி எத்தனை? ஒரு தொட்டி உப்புத் தண்ணீரில் 6 சொட்டுத் தேன் விட்டால் தண்ணீர் முழுதும் இனிக்கப் போகிறதா, என்ன?

(குறிப்பு: குருசாமி அவர்கள் விடுதலை ஏட்டில் தொடராக எழுதி அவற்றை தொகுத்து 1948இல் பலசரக்கு மூட்டை என்ற தலைப்பில் நூலாகத் தொகுத்து விடுதலை ஏட்டின் வெளியீடாக வெளியிட்டார் அதிலிருந்து ஒரு கட்டுரை இது.)

நன்றி: வாலசா வல்லவன்

Pin It