farmers against high voltage towerஇந்தியாவில் 3,44,684 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் மத்திய அரசு மூலம் 1,02,926 மெ.வா., மாநில அரசின் மூலம் 84,627 மெ.வா, தனியார் மூலம் 1,57,136 மெ.வா உற்பத்தி செய்யப்படுகிறது. மத்திய – மாநில அரசுகளை விட மின்உற்பத்தியில் தனியார் கோலோச்சுகின்றனர். 2002ம் ஆண்டு தனியாரின் மின்உற்பத்தி வெறும் 9622 மெகாவாட் மட்டுமே. மின்சாரச் சட்டம் 2003 அமலாக்கத்திற்குப் பிறகு பாய்ச்சல் வேகத்தில் மின்உற்பத்தியில் தனியார் ஈடுபட்டுள்ளனர்.

மின்சாரத் துறையில் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் தனியார் ஆதிக்கம் அதிகரித்தால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், வீடுகளுக்கு சலுகை விலையில் மின்சாரம் என்பதெல்லாம் ஏட்டளவில் அறிவிப்புகளாகவே போய்விடும் ஆபத்துள்ளதை மறுக்க முடியாது. இதே வேகத்தில் தனியார்மயமானால் அடுத்த சில ஆண்டுகளில் மின்சாரத் துறை முழுக்கவே தனியார் வசம் ஆகிவிடும் போல் தெரிகிறது.

இத்தகைய நிலையில் தமிழ்நாட்டில் பவர்கிரீட் நிறுவனமும், தமிழ்நாடு மின்தொடரமைப்புக் கழகமும் இணைந்து உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 800 கே.வி, 765 கே.வி, 400 கே.வி, 230 கே.வி, 110 கே.வி மின்திட்டங்களை விவசாய நிலங்களில் அமைக்க முயற்சித்து வருகின்றனர். 30 உயர் அழுத்த மின் திட்டங்களுக்கு மத்திய – மாநில அரசுகள் அனுமதி கொடுத்து, சில திட்டங்கள் தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன.

மின்சாரச் சட்டம் 2003 மற்றும் இந்திய தந்திச் சட்டம் 1885ஐப் பயன்படுத்தி விவசாயிகளின் ஒப்புதல் பெறாமலேயே விவசாயிகளுக்கு சொந்தமான நிலங்களுக்குள் புகுந்து உயர்மின் கோபுரம் அமைக்கும் பணியை பவர்கிரிட் அதிகாரிகள் மேற்கொள்கின்றனர். எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளை காவல்துறை மற்றும் வருவாய் துறையைப் பயன்படுத்தி அச்சுறுத்தியும், அப்புறப்படுத்தியும், அடாவடித்தனமான முறையில் மின்கோபுரம் அமைக்கும் பணியை நிறைவேற்றுகின்றனர்.

நிலத்தைப் பறிக்கும் வெள்ளையர் காலச் சட்டம்

வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட தந்திச் சட்டம், 1894ம் ஆண்டைய நிலம் கையகப்படுத்துதல் போன்றவைகள் விவசாயிகளுக்கு நிலத்தின் மீதான உரிமைகளைப் பற்றி கவலைப்படாமல் அரசுக்குத் தேவையென்றால் எவருடைய நிலத்தையும், கையகப்படுத்த அல்லது பயன்படுத்திக் கொள்ள மேற்படி சட்டங்கள் அதிகாரம் வழங்கியுள்ளன. 2013ம் ஆண்டுக்கு முன்பு வரை 1894ம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் சட்டம்தான் நிலத்தை எடுக்க அரசால் பயன்படுத்தப்பட்டு வந்தது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பற்றி கவலைப்படாமல், கையகப்படுத்திய நிலத்திற்கும் உரிய காலத்தில் இழப்பீடும் வழங்காமல், ஏமாற்றப்பட்ட விவசாயிகள் இந்த சட்டத்தை எதிர்த்து நாடு தழுவிய அளவில் நடத்திய போராட்டத்தின் விளைவு தான் “நிலம் கையகப்படுத்துதல் மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்த்துதல் சட்டம் 2013” என்பது
கொண்டு வரப்பட்டது.

இச்சட்டத்தில் விவசாயிகளின் நில உரிமையைப் பாதுகாக்கும் பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. நிலத்தைச் சார்ந்துள்ள அனைவருக்கும் மறுவாழ்வு, பெரும்பான்மை விவசாயிகளின் எழுத்துப்பூர்வமான ஒப்புதல், இழப்பீடு, மறுகுடியேற்றம் ஆகியவற்றை நிறைவேற்றிய பிறகே நிலத்தை கையகப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல நல்ல அம்சங்கள் இந்த சட்டத்தில் உள்ளன.

ஆனால், இந்த 2013ம் ஆண்டு சட்டத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக நெடுஞ்சாலைகளுக்கு 1956ம் ஆண்டு சட்டம், குழாய் பதிக்க 1962ம் ஆண்டு சட்டம், உயர்மின்கோபுரம் அமைக்க 1885ம் ஆண்டு தந்திச் சட்டம் மற்றும் மின்சாரச் சட்டம் 2013 என்று நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான புதிய சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகும் பழைய சட்டங்களை அரசே பயன்படுத்துவது, விவசாயிகளின் நிலத்தைப் பறிக்க அடாவடித்தனமாக அரசே செயல்படுகிறது என்பதற்கு உதாரணமாகும். எனவே, அரசின் இந்த சட்டவிரோத, ஜனநாயக விரோத அணுகுமுறையை அனைவரும் கண்டிக்க முன்வர வேண்டும்.

‘தந்தி’ என்ற தகவல் தொழில்நுட்ப வடிவமே இப்போது நாட்டில் ஒழிக்கப்பட்டு விட்டது. தந்திக் கம்பங்களும் அகற்றப்பட்டுவிட்டன. ஆனால் காலாவதியாகிப் போன இந்தச் சட்டம் மட்டும் இன்னமும் ஆட்சியாளர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகளின் நிலத்தை எடுத்துக் கொள்ள வெள்ளைக்காரன் போட்ட சட்டத்தை விடுதலை பெற்று 73 ஆண்டுகள் ஆன பிறகும் சுதந்திர இந்தியாவில் பயன்படுத்துவது வெட்கக்கேடான ஒன்று. இந்த சட்டத்தின் அடிப்படையில் தான் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் அவர்களின் நிலத்திற்குள் நுழையவும், கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளவும் அனுமதி அளிக்கின்றனர்.

உயரழுத்த மின்கோபுரம் அமைக்கும் இடத்திற்கும், கம்பி செல்லும் இடத்திற்கு இழப்பீடு அல்லது வாடகை தீர்மானிப்பதற்கான விதிமுறைகளை மாநில அரசு உருவாக்க வேண்டும் என்று மின்சார சட்டம் 2003 பகுதி VIIIல் பிரிவு இ குறிப்பிடுகிறது. இந்த சட்டப்படி தான் வாடகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் உயரழுத்த மின்கோபுரங்களுக்கு எதிரான கூட்டியக்கம் முன் வைத்து போராடி வருகிறது. ஆனால் 'இந்தியாவில் எந்த மாநிலத்திலும் வாடகை தரவில்லை. எனவே நாங்களும் கொடுக்க முடி யாது' என்று தமிழக மின்துறை அமைச்சர் கூறுகிறார்.

செல்போன் கோபுரங்களுக்கு மாத வாடகை வழங்கப்பட்டு வரும்போது ஏன் மின்கோபுரங்களுக்கு வழங்கக் கூடாது? பொது நலன் கருதி விவசாயிகள் விட்டுத் தர வேண்டுமென்கிறார்கள். தகவல் தொடர்பும் பொதுநலன் தானே. அதில் பல தனியார் கம்பெனிகள் நுழைந்து ஒவ்வொரு நொடி பேச்சுக்கும் லாபம் பார்ப்பது போலவே, மின்சாரத் துறையிலும் 46.4 சதவீதம் தனியாரின் ஆதிக்கத்தில் தான் உள்ளது. ஒவ்வொரு யூனிட் மின்சாரத்திற்கும் அவர்கள் லாபம் சம்பாதிக்கிறார்கள்.

தமிழகம் மிகைமின் மாநிலமா?

தமிழகத்தில் மின்தேவை 16000 மெகாவாட். இதில் தமிழக மின்வாரியம் நேரடியாக உற்பத்தி செய்வது 7150 மெகாவாட் ஆகும். மீதமுள்ள 8850 மெகாவாட் மின்சாரத்தை அநியாய விலை கொடுத்து தனியாரிடம் வாங்கிக் கொண்டுள்ளது தமிழக அரசு. இந்த லட்சணத்தில் மிகைமின் மாநிலம் என்று பெருமை பீற்றிக் கொள்கிறது. மாநிலங்களுக்குத் தேவையான மின்சாரத்தை அங்கேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்காமல் உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் விற்பனை செய் வதற்குத்தான் தொடரமைப்பு மின்கோபுரங்களை விவசாயிகளின் விளை நிலத்தில் அமைத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீரழிக்கின்றனர். பன்னாட்டு, இந்நாட்டு முதலாளிகளின் லாபவெறிக்கு உத்வேகம் அளிக்கக் கூடிய அரசாக அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது.

high voltage towers on farmமின்சாரம் அதிஅத்தியாவசியமான, தவிர்க்கவே முடியாத ஒன்று என்பதை விவசாயிகள் உணர்ந்தே இருக்கிறார்கள். எனவே, தான் மின்சாரத்தை புதைவடம் மூலமாக கொண்டு செல்லுங்கள், ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மின்கோபுரங்களுக்கு மின்சாரச் சட்டம் 2003ன் அடிப்படையில் வாடகை தீர்மானியுங்கள் என்ற கோரிக்கையை முன் வைத்திருக்கிறோம். 1100 கிலோவாட் அளவிற்கு மின்சாரத்தை புதைவடம் வழியாக கொண்டு செல்வதற்கான தொழில்நுட்பம் கண்டறியப்பட்டு இந்தியாவே தென்ஆப்பிரிக்கா மற்றும் சவூதி நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

புதைவடம் மூலம் என்றால் செலவு கூடுதலாகும் என்பதைத் தான் ஆட்சியாளர்கள் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டுள்ளனர். புதைவடக் கம்பிகள் தயாரிக்கும் நிறுவனங்கள் 1996 முதல் 2015 வரை உலகின் பல்வேறு நாடுகளில் 5000 கி.மீட்டருக்கு மேல் புதைவடக் கம்பிகளை பதித்துள்ளன. ஆனால் புதைவடத்தில் மின்திருட்டு இருக்காது. மின்இழப்பு பெருமளவு குறையும். இதன் மூலம் அந்தக் கூடுதல் செலவை ஈடுகட்டலாம். விவசாயிகளின் நிலத்தின் மீதான மதிப்பு குறைவதோடு ஒப்பிடும்போது கூடுதல் செலவு அதிகமில்லை என்பதையும் ஆட்சியாளர்கள் கணக்கில் கொள்ள மறுக்கிறார்கள்.

ஏன் சட்ட நகலெரிப்பு?

ஏறத்தாழ கடந்த மூன்று ஆண்டு காலமாக இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் தங்கள் நிலத்தை பாதுகாத்துக் கொள்ள தடியடி, சிறை ஆகியவற்றை ஏற்று போராடிக் கொண்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாகத் தான் விவசாயிகளின் ஒட்டு மொத்த கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக “தந்தி சட்டம் 1885”ஐ எரிப்பது என்ற வடிவத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தீர்மானித்திருக்கிறது. செப்டம்பர்-18ந் தேதி கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், கரூர் ஆகிய 10 மாவட்டங்களில் இந்த சட்ட நகலெரிப்புப் போராட்டம் நடைபெற உள்ளது. இந்தப் போராட்டத்தில் உயர்மின்கோபுரங்களுக்கு எதிரான கூட்டியக்கமும் பங்கேற்கிறது.

நம்மை பாதிக்கும் சட்டத்தை எரித்து எதிர்ப்பு தெரிவிப்பது என்பது இந்திய விடுதலைப் போராட்டக் காலத்திலிருந்து ஒரு போராட்ட வடிவமாக இருந்து வந்துள்ளது. விடுதலை பெற்ற இந்தியாவிலும் எத்தனையோ மக்கள் விரோத சட்டங்களை எரித்து நமது தலைவர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். எனவே, “சட்ட நகலெரிப்பு” என்பது புதிதான ஒன்றல்ல. நமது முன்னோர்கள் கையாண்ட வழக்கமான போராட்ட நடைமுறையே!

நடப்பது மின்சாரத்திற்கோ, மின்திட்டங்களுக்கோ எதிரான போராட்டம் அல்ல! நிலஉரிமையை, வாழ்வாதாரத்தை பாதுகாத்துக் கொள்வதற்கான விவசாயிகளின் போராட்டம் என்பதைப் புரிந்து கொண்டு மத்திய- மாநில அரசுகள் செயல்பட வேண்டும். அடக்குமுறையைப் பயன்படுத்தி பணிகளை செய்வதை நிறுத்திவிட்டு போராடும் விவசாயிகள் சங்கங்களை அழைத்துப் பேசி, கோரிக்கைகளை நிறைவேற்ற முனைவது தான் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான வழி என்பதை சுட்டிக் காட்டுகிறோம். அரசு என்ன செய்யப் போகிறது என்பது தான் விவசாயிகளின் முன்னால் உள்ள கேள்வி.

- பெ.சண்முகம், பொதுச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்