30 ஆண்டுகள் இருக்கும். அப்போது நான் இளைஞன். நானும் சிவாவும் அந்த மலையடிவாரத்து கிராமத்துக்குச் சென்றிருந்தோம். ஏதோ ஒரு ஜமீன்தார் கட்டி வைத்த பழைய கோவில் பற்றிய ஆய்வுக்காக சென்றிருந்தோம்.

brahmin 259கோவில் இடிந்து கிடந்தது. ஜமீன் ஒழிப்பிற்குப் பின்பு வருமானம் இல்லையாம். அந்தக் கோவிலின் அய்யர் இளைத்து சிறுத்துக் கிடந்தார்.

அவர் வாழும் வீடு அருகாமையில் இருந்தது. சுவர்கள் இற்று வீழ்ந்திருந்தன. அய்யர் எங்களை வீட்டுக்கு அழைத்தார். போனோம்.

அய்யருக்குத் திருமணம் ஆகியிருக்கவில்லை. அவருக்கு 30க்கு மேல் வயது இருந்திருக்க வேண்டும். எங்களுக்கு அய்யரின் அக்கா காப்பி கொடுத்தார். டபரா செட்டில் வந்த காப்பியை எச்சில் படாமல் சிவா குடிக்க, நானும் அவ்வாறே செய்தேன். ஆய்வுதான் முக்கியம் என்ற நிலையில் நானிருந்தேன்.

காப்பி டபராவைச் சுற்றி தண்ணீர் தெளித்த அந்தப் பெண்மணி சிவாவின் டபராவில் நீர் தெளிக்கவில்லை.

சிவா என்ற சிவராமன் ஒரு பார்ப்பனர் என்பதை அந்தப் பெண்மணி எப்படி கண்டுபிடித்தார் என்று எனக்குப் புரியவில்லை.

பேசிக் கொண்டிருந்தபோது, அந்தப் பெண்மணிக்கும் திருமணம் ஆகவில்லை என்று தெரிந்தது. நைவேத்தியத்தோடு வடை சுட்டு விற்று பசியாற்றுவதாக அந்த அய்யர் சொன்னார்.

கோவிலுக்கு நிறைய நிலம் இருப்பதாகவும், ஆனால் யாரும் குத்தகை கட்டுவதில்லை என்றும் வருத்தப்பட்டார்.

எனக்கே மிகவும் சோகம் வந்துவிட்டது.

அப்புறம், போன வருடம் அதே மலையடிவாரக் கோவிலுக்குப் போய்ப் பார்த்தேன். சிவா வர வாய்ப்பில்லை. பட்டதாரியான அவன் அமெரிக்கா கோவிலில் மணி அடிக்கச் சென்று, அங்கேயே வீடு வாங்கி வாழ்ந்து வருகிறான்.

அந்த சிதைந்த மலையடிவாரக் கோவில் புதுப்பிக்கப்பட்டிருந்தது. ஆறுகாலப் பூசை நடப்பதாகத் தவகவல் பலகை சொன்னது. அய்யரைத் தேடினேன்.

காணவில்லை.

அவர் வீடு இருந்த இடத்துக்குப் போய் பார்த்தேன். வீட்டைக் காணோம். ஒரு பங்களா இருந்தது. நான் நின்று கொண்டிருக்க, ஒரு அப்பாச்சி பைக் வந்து நின்றது. அப்போது பகல் 12 மணி இருக்கும்.

ஒரு முப்பது வயது இளைஞன் வந்து இறங்கி அந்த பங்களாவுக்குள் தடுமாற்றத்தோடு போனான். அவன் நடையில் இருந்த தடுமாற்றம் அவன் குடித்திருந்ததைக் காட்டியது.

பொத்தான் போடாத சட்டையின் வழியே தெரிந்த பூணூல் அவன் சாதியைக் காட்டியது.

அம்புட்டுதான்.

இதுக்கே வீடு கட்டி அடிப்பானுங்க. உண்மையப் பேசிக்கிட்டே போனா எப்படி அடிய சமாளிக்கிறதுன்னு தெரியல.

அதனால, 10% இட ஒதுக்கீடு வாழ்கன்னு சொல்லி கதைய முடிக்கிறேன்.

- சி.மதிவாணன்