சாதி என்ற சொல்லை நாம் படிக்கும்போதும் கேட்கும்போதும் அதை ஒரு சொல்லாக வார்த்தையாக எளிதாக கடந்து விடுகிறோம்..சாதி என்பது ஒட்டுமொத்த சமூகம் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம் அல்லது கள்ள மௌனம் காக்கிறோம்..

புரட்சியாளர் அம்பேத்காரின் வார்த்தைகளில் சொல்லவேண்டுமானால் "சாதிதான் சமூகமென்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்" என்றார்..ஏனெனன்றால் இந்தியாவில் "சாதிதான் சமூகம்,சமூகம் தான் சாதி" என்பதை எவராலும் மறுதலித்துவிட முடியாது..

1997ம் ஆண்டு கடலூர் மாவட்டம் குமாரக்குடி கிராமத்திலிருந்து மூவர் பக்கத்துக்கு ஊருக்கு பஞ்சாயத்திற்கு சென்றனர்..கீழ்சாதிக்கார நாயிங்க எங்க முன்னால உட்கார்ந்து பஞ்சாயத்து பேசுற அளவிற்கு வந்துட்டீங்களா? எவனையும் விடாதீங்கடா வந்தவன் எல்லோரையும் வெட்டுங்கடானு கூட்டத்திலிந்து ஒருகுரல் கேட்டதும்,ஏற்கனவே மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வெட்ட தொடங்குகிறார்கள்.. அந்த மூவரும் வெட்டுக்காயங்களோடு அங்கிருந்து தப்பித்து ஊருக்கு வருகிறார்கள்..

குமாரக்குடி கிராமமே பதற்றமாகிறது..ஆண்களும் பெண்களும் நியாயம் கேட்டு சாலைமறியலில் ஈடுபட்டனர்..போலீஸ் தடியடி நடத்தியும் பெண்கள் சாலைமறியலை கைவிடவில்லை..போலீசுக்கும் மக்களுக்கும் தள்ளுமுள்ளும் அடிதடியும் ஏற்படுகிறது..பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு பேருந்துக்கு தீ வைக்கப்படுகிறது..அடுத்த சில மணிநேரங்களில் துணைராணுவம் அந்த கிராமத்துக்குள் நுழைகிறது..

தலித்துகளின் தெருக்களை மட்டும் போலீஸ் சோதனை செய்கிறது.. மற்ற சாதி இந்துக்களின் தெருவில் போலீஸ் காலடியைக்கூட எடுத்து வைக்கவில்லை.. வயதுவந்த தலித் ஆண்கள் எல்லோரும் காடுகளிலும் கரும்பு வயல்களிலும் தஞ்சம் அடைகிறார்கள்..போலீஸ் வேறுவழி இல்லாமல் 10-க்கும் மேற்பட்ட வயதானோர்களையும் நோய்வாய்பட்டவர்களையும் கைதுசெய்து பிணையில் வரமுடியாத ஓராண்டு சிறைத்தண்டனை விதித்தது..

ஆனால் கலவரத்திற்கு காரணமானவர்கள் மீது ஒரு சிறு வழக்குகூட பதிவு செய்யவில்லை அப்போது ஆட்சி செய்த அரசாங்கம்..இதை ஏன் இங்கே பதிவு செய்கிறேன் என்றால் இது நடந்து முடிந்து 20 ஆண்டுகள் கடந்து விட்டன..ஆனால் சாதிய வன்கொடுமைகளும் மோதல்களும் படுகொலைகளும் கொஞ்சம்கூட குறைவில்லை.. மாறாக முன்பைவிட உக்கிரமாகவும் அதிகமாகவும் தமிழகம் முழுவதும் தொடர்கின்றன..

சில நாட்களுக்கு முன்பு எவிடன்ஸ் அமைப்பு ஒரு ஆய்வை வெளியிட்டுள்ளது.. தமிழகத்தில் கடந்த ஓராண்டுகளில் மட்டும் அதாவது ஜூலை 2016 முதல் ஜூலை 2017 வரை 25 தலித் சமூக செயல்பாட்டாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்ற செய்தியை வெளியிட்டுள்ளது..அதாவது ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட(SEP 22) பிறகு இந்த படுகொலைகள் அதிகமாக்கிருக்கின்றன..

அதில் மதுரையை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்ற தலித் செயல்பாட்டாளர் சாதி மறுப்பு திருமணம் செய்ததால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்..வேலூரை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் நிலஉரிமையாக தன்னுடைய உயிரை பலிகொடுத்துள்ளார்..கடைசியாக சில நாட்களுக்கு முன்பு கொல்லப்பட்ட திருச்சி மாவட்டம் திருப்பஞ்செலியை சேர்ந்த கதிரேசனை கொலைசெய்யும் போது சாதி இந்துக்கள் சொன்ன வார்த்தைகள் உனக்கெல்லாம் கட்சி கேக்குதா?என்பதுதான்..இப்படி ஏதோ ஒரு காரணத்திற்காக தலித் செயல்பாட்டாளர்கள் தொடர்ந்து குறிவைக்கப்பட்டு படுகொலை செய்யப்படுகிறார்கள்..

நடவடிக்கை எடுக்க வேண்டிய மாநில அரசு உள்கட்சி பிரச்சனையில் மூழ்கி மூன்று அணிகளும் பாஜகவின் காலடியை எதிர்பார்த்து காத்திருப்பதிலே மொத்த நேரத்தையும் செலவிடுகிறார்கள்.. மாநிலத்தின் எதிர்க்கட்சிக்கு இப்படி படுகொலைகள் நடப்பது எதுவும் தெரியாதது போல மௌனம் காக்கிறார்கள்..

ஓன்று சேர வேண்டிய தலித் அமைப்புகள் ஆளுக்கொரு திசையாக சிதறுண்டு கிடக்கின்றன.. எப்போதும் போல பொதுசமூகம் தலித் மக்களின் பிணங்களின்மீது நடந்து சென்று தன்னுடைய கடமையை எந்தவித உறுத்தலும் இல்லாமல் செய்கிறார்கள்..

இங்கு ஆறுதல்படும் ஒரே விஷம் முன்பைவிட தலித் அரசிலும்,தலித் சமூக செயல்பாடுகளும் தமிழகத்தில் அதிகரித்திருக்கின்றன என்பது மட்டும்தான்..தலித் அரசியல் தன்னுடைய எல்லையை விரிவுபடுத்தி இருக்கிறது..ஒடுங்கிக்கிடந்த ஒருசமூகம் தன்னுடைய அரசியலையே இன்று பேச தொடங்கியிருக்கிறது... அறியாமையில் மூழ்கி கிடந்த சமூகம் தங்களுடைய உரிமைக்காக இன்று அணிதிரளுகிறது..இதனை சாதிய ஆதிக்க சக்திகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.. அதற்கு பரிசாக தலித் செயல்பாட்டாளர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள்..

எனவே தலித் அமைப்புகள் இப்போது செய்ய வேண்டியது ஜனநாயக சக்திகளோடு ஒன்றிணைந்து அவர்களின் செயல்பாடுகளை முன்பைவிட பலமடங்கு அதிகரிக்க வேண்டிய தேவையும் கடமையும் இருக்கிறது.. ஏனென்றால் அவர்களின் செயல்பாடுகள் சரியான திசையை நோக்கி பயணப்படுவதாகவே தோன்றுகிறது..

- மணிகண்டன் ராஜேந்திரன்