இன்று நாம் விவாத்திருக்க வேண்டிய களம் வேறு. ஆனால் வேறொன்றைப் பற்றி ஆழமாகவும் தீவிரமாகவும் விவாதித்துக் கொண்டிருக்கிறோம்.. புதிய தலைமுறை தொலைக்காட்சி மதுரையில் 463 இடங்களில் "இரட்டைக் குவளை" நடைமுறையில் இருப்பதாக செய்தி வெளியிட்டது..

periyar 391பார்ப்பனர்களையும் பார்ப்பனியத்தையும் எதிர்த்து இங்கே தான் முதலில் பார்ப்பனரல்லாதோர் இயக்கம் தொடங்கப்பட்டது. பின்பு இது நீதிக்கட்சியாக பரிணமித்து பிறகு அய்யா பெரியார் தலைமையில் திராவிடர் இயக்கமாக வீறுகொண்டெழுந்தது. மற்ற மாநிலத்தவர்கள் இப்படி எல்லாம் யோசிப்பதற்கு முன்பே சாதிஒழிப்பில் நாம் வெகுதூரம் பயணித்திருந்தோம்.

நாமெல்லாம் இது பெரியார் மண்ணென்று மார்தட்டிக் கொள்ளும் இதே மண்ணில்தான் இன்று சாதி ஆணவப்படுகொலைகளும் தீண்டாமைகளும் கடைபிடிக்கப்படுகிறது என்பது வேதனையின் உச்சம்.

நமக்கே கூட சாதி ஒழிப்பையோ அல்லது தீண்டாமையைப் பற்றியோ பேசுவதற்கு இன்று சலிப்பு தட்டிவிட்டதாகத் தோன்றுகிறது. அதன் வெளிப்பாடுதான் நாம் இரட்டைக்குவளையைப் பற்றி பேசாமல் எஸ்.வி.சேகரின் கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கிறோம். எழுத்தாளர்கள் கூட இரட்டை குவளையைப் பற்றி பேசாமல் எஸ்.வி.சேகரைப் பற்றி தீவிரமாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள்..

ஏனென்றால் இங்கு யாரும் திராவிட இயக்கங்களின் சரிவைப் பற்றியோ திராவிடக் கட்சிகள் மறந்த குறிப்பிட்ட பிரச்சனைகளை பற்றியோ யாரும் பேச முன்வருவது இல்லை. மாறாக எல்லோரும் திராவிடக் கட்சிகளின் வளர்ச்சியை மட்டுமே பேசவிரும்புகிறார்கள்..

ஏனென்றால் திராவிடக் கட்சிகளைப் பற்றி பேசத் தொடங்கினால், எம்ஜிஆர், கலைஞரைப் பற்றி பேச வேண்டும். பிறகு ஜெயலலிதா ஸ்டாலினைப் பற்றி விவாதிக்க வேண்டும். 50 ஆண்டுகால திராவிட ஆட்சியின் லாப -நஷ்டங்களைப் பற்றி விவாதிக்க வேண்டி இருக்கும். இங்கு கட்டி எழுப்பப்பட்டிருக்கும் சிலரின் புனித பிம்பங்கள் நொறுங்குவதை நம்முடைய கண்களாலே காணவேண்டிய சூழல் ஏற்படும். அதை யாரும் விரும்புவதில்லை. அதிலிருந்து லாவகமாகத் தப்பித்து கொள்வதையே நாம் விரும்புகிறோம்.

அதையும் மீறி விவாதித்தால் சிலர் "மற்ற மாநிலத்தவர்கள் இன்னும் பெயருக்குப் பின்னால் சாதிப்பெயரை போட்டுக் கொண்டு திரிகிறார்கள். ஆனால் நாம் அப்படி இல்லையே.. எப்போதே அதிலிருந்து விடுபட்டுவிட்டோம்" என்பார்கள். அவர்களின் கூற்று உண்மைதான்..

ஆனால் பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரை போட்டுக்கொள்ளாமல் இருப்பதைவிட சகமனிதனை தீண்டாமையின் பெயரால் ஒதுக்கி வைக்காமல் இருப்பதே உண்மையான சமூக விடுதலை என்பதை சொல்லி புரிய வைப்பதற்கு இன்னொரு பெரியார் இந்த மண்ணில் பிறக்க வேண்டும் போல..

- மணிகண்டன் ராஜேந்திரன்