தாய்த்தமிழக மண்ணில் முள்ளிவாய்க்கலில் பூண்டோடு அழிக்கப்பட்ட நம் தமிழ் மக்களுக்கு நினைவேந்தல் நிகழ்வை மே-17 இயக்கம் ஆண்டு தோறும் மே மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தமிழர்
கடலோரம் (மெரினா கடற்கரையில)் மிக எழுச்சியோடு நடத்தி வருகின்றனர்.

ஈரோட்டிலிருந்து ஒரு பத்துப் பேர் தவறாமல் அதில் சென்று பங்கேற்று வருகிறோம்.இதே போல் பல பகுதிகளிலிருந்தும் ஆண்டு தோறும் வருகின்றனர்.

நிகழ்ச்சியில் நாலாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கடற்கரை மணலில் அமைதியாக அமர்ந்து சுடர் ஏந்தி, பாலச்சந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் படமேந்தி வணக்கம் செய்வர்.

நினைவுச்சுடர் மிகச் சிறப்பாக அமைக்கப்பட்டு சுடரேற்றுதலும்,மலர் தூவுதலும் நடக்கும். ஒலி பெருக்கி அனுமதிமட்டும் கொடுக்க மாட்டார்கள் மெக்காபோன் மூலமாக ஓரிருவர் பேசுவர்.

பல்வேறு ஆளுமைகள் தவறாமல் வந்து பங்கேற்பர். பட்டியல் விரிவஞ்சி குறிக்கவில்லை.

இந்த நிகழ்வு புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் நடுவிலும், தமிழீழ மக்களிடத்திலும் மிகுந்த நம்பிக்கையைக் கொடுக்கும்.

தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பிற்கு தமிழக சட்டமன்றமே ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

அரசியல் சட்டப்படி நிறுவப்பட்டுள்ள தமிழக மக்களின் ஆளுகை அமைப்பு ஒப்புக் கொண்ட கோரிக்கை களைத்தான் இந்நிகழ்வின் மூலம பேசுகின்றனர். இந்த அமைப்பினர்
ஐ.நா. மன்றம் வரை சென்று கோரியும் வருகின்றனர்.

ஜெனிவாவில் நடைபெரும் ஐ.நா.அவையின் ஈழம் குறித்தான விவாதத்தில் தோழர்.திருமுருகன் 7 முறை பேசியுள்ளார்.

ஈழப் பிரச்சனைகளைக் கடந்து மே-17 இயக்கம் கவனம் செலுத்தும் பிரச்சனைகள்:

ஏகாதிபத்திய உலகமயம் இங்கு எவ்வாறு கட்டமைக்கப் படுகிறது என்பதை மிக விரிவாக கருத்தரங்குகள், வெளியீிடுகள்,காணொளிகள்,களப்போராட்டங்கள் என சிறப்பாக முன்னெடுக்கின்றனர்.

தொலைக்கட்சி விவாதங்களில் பங்கேற்று திருமுருகன் அவர்கள் பாஜகவின் கோர முகத்தை சமரசமின்றி அம்பலப்படுத்தி வருகிறார்.பாஜக வின் இராகவன் போன்றவர்களைக் கையும் களவுமாக
பிடித்து மக்கள் முன் அம்பலப்படுத்தி வருகிறார்.

தமிழ் மக்களைப் பாதிக்கும் அனைத்து நிகழ்வுகளுக்குப் பின்னுள்ள ஏகாதிபத்தியத்தினதும் அதன் கூட்டாளிகளான பார்ப்பனிய முதலாளிகளின் சந்தை நலன்களை மிகச் சரியாக அடையாளம் கட்டுகின்றனர்.

தமிழ் தேசிய விடுதலையை உயர்த்திப் பிடிக்கின்றனர்.

சாதி ஒழிப்பை உயர்த்திப் பிடிக்கின்றனர்.

மார்க்சியம்,பெரியாரியம், அம்பேத்காரியம் இவைகளை தமிழ் தேசிய விடுதலையுடன் இணைத்து புரிந்து கொள்ள இடைவிடாது வாசிக்கின்றனர்.

நாடாளுமன்ற அரசியலை எதிர்த்து மக்கள் அரசியலைப் பேசுகின்றனர்.

அனைத்து முற்போக்கு இயக்கங்களுடனும் இணைந்து இயங்கி வருகின்றனர்.

இவ்வாறு தமிழக இளைஞர்களை புதிய கோணத்தில் சிந்திக்க வைத்து ஒருமாற்று அரசியலுக்கான களத்தை மே-17 இயக்கம் தமிழகத்தில் நிறுவி வருகின்றது.இந்த வேலைகளைத் தனது சொந்த வேலையாக்கிக் கொண்டு தோழர் திருமுருகன் ஒருங்கிணைத்து வருகின்றார்.

தற்சார்பு விவசாயிகள் சங்கம் போல பல அமைப்புகள் தோழமையோடு இணைந்து இயங்கி வருகிறோம். இந்தக் காரணங்களை மனதில் வைத்துத்தான் பாஜக அரசு நிகழ்வை தடுத்துள்ளது.

அதே காரணங்களுக்காகத்தான் திமுக, சிபிஎம் ஏன் திருமாவளவன், பாமக போன்றவர்கள் கூட மெரினா நினைவேந்தல் மீது நடத்திய அடக்குமுறையைக் கண்டிக்கவில்லை.

அன்பானவர்களே, அன்னைத் தமிழகத்தை பாதுகாக்கப் போராடும் இயக்கங்களை நாம் ஆதரிப்போம்!

திருமுருகன் உள்ளிட்ட தோழர்கள் மீதான அடக்குமுறையைக் கண்டிப்போம்!

சிறையிலுள்ளவர்களை விடுதலை செய் என உரக்க முழங்குவோம்!

- கி.வே.பொன்னையன்