அடுத்த பொங்கல் எப்போது என்று  என எவரைக் கேட்டாலும்  பதில் கிடைக்கும், தை முதல் நாள் என எல்லோரும் எளிதில் சொல்லி விடுவார்கள். பொங்கல் எப்போது என்று அறிய, புரோகிதரையோ பஞ்சாங்கத்தையோ தேடிச் செல்ல வேண்டிய தேவை இல்லை. மற்ற பண்டிகைகளுக்கு அந்த அவல நிலை உண்டு. 

அறிவுக்குப் பொருந்திய விழா பொங்கல் விழா என்பதற்கு இந்த ஓர் அடையாளமே போதும்! 

pongal festivalபழமைச் சுமைகளையும் வேண்டாத அழுக்குக் குவியலையும் - உதறி எறியாத எந்தச் சமுதாயமும் புதுமை வெளிச்சத்தில் முன்னேற்றமாய் உலவ முடியாது. இந்த உண்மையை எடுத்துச் சொல்வதே பொங்கலுக்கு முதல்நாள் வரும் போகிப் பண்டிகை. 

வேண்டாதவற்றை போக்கிக் கொள்! 

வேண்டியவற்றை புதுப்பித்துக் கொள்! - என்று 

நமக்கு எடுத்துச் சொல்வதே போகி!  வேண்டாதவற்றை வீட்டிலிருந்து போக்குவதால் போ(க்)கிப் எனப் போற்றப்படுகிறது  

"மார்கழியின் உச்சியில் வருக தைப் பொங்கல் நாள்" - எனப் பொங்கலைப் புதுமையாக வரவேற்பார் பாவேந்தர் பாரதிதாசன். 

தமிழர் ஆண்டான திருவள்ளுவர் ஆண்டு பொங்கல் நாளில் தான் தொடங்குகிறது. பிரபவ, விபவ....சர்வதாரி என அறுபதுக்குள்ளேயே திரும்பச் திரும்பச் செக்குமாடாய்ச் சுற்றி வருவது வடமொழி ஆண்டுவரிசை. தமிழர் வீட்டுத் திருமண அழைப்பிதழ்களில் இந்த ஆண்டைத்தான் கவனமாக இடம்பெற வைப்பார்கள் புரோகிதர்கள்! 

தமிழரின் அடையாளத்தைப் பாதுகாக்க விரும்பும், எவரும் திருவள்ளுவர் ஆண்டைத்தான் நடைமுறைப்படுத்த வேண்டும். ஆங்கில ஆண்டோடு 31 ஐக் கூட்டினால் திருவள்ளுவர் ஆண்டு வந்துவிடும். இயேசு நாதரை விட முப்பத்தொரு ஆண்டுகள் மூத்தவர் திருவள்ளுவர்.இந்த பொங்கலில் தொடங்குவது (2017 + 31) திருவள்ளுவர் ஆண்டு 2048 . 

தமிழருக்கான ஆண்டு திருவள்ளுவர் ஆண்டு 

தமிழரின் நூல் திருக்குறள் 

தமிழருக்கான பண்டிகை பொங்கல் 

தமிழரின் பண்பாட்டு அடையாளங்களைப் பாதுகாத்து வழங்குவது பொங்கல் நாள்! நாம் வாழும் பூமிப் பந்து, சூரியனிலிருந்து பிய்த்து வந்த சிறுபகுதி!  சூரியனை மையமாக்கித்தான் மனித வாழ்வின் எல்லா இயக்கமும் சுழன்று வருகின்றது. இவற்றை நினைவு  கூர்வதற்குத்தான், பொங்கல் நாளில் சூரியனுக்கு முன்பாக பொங்கல் வைக்கிறோம். 

பொங்கலுக்கு மறுநாள் வருவது மாட்டுப்பொங்கல்! நன்றியுணர்வையும் தன்னல மறுப்பையும் சமுதாயத்தில் எழுப்புவதற்காக ஏற்படுத்தப்பட்டது இந்த விழா! மனிதர்கள் ஒதுக்கித் தள்ளியவற்றை உணவாக்கிக் கொள்கிறது மாடு! ஆனால் அனைவருக்கும் உணவாகும் பாலை வழங்குகிறது! 

தேவைப் படாதவற்றைத் தனதாக்கிக் கொண்டு, தேவைப்படுவதைப் பிறருக்கு வழங்கும் மாட்டின் செயல் - மனிதர்களுக்கு வழிகாட்டுகிறது. அரிசியை நமக்கு வழங்கிவிட்டு, அதனோடு இருந்து உமியையும், தவிட்டையும் உணவாக்கிக் கொள்கிறது மாடு! 

நெல்லை நமக்கு தந்துவிட்டு வைக்கோலை தனதாக்கிக் கொள்கிறது மாடு! எண்ணெய் நமக்கு! பிண்ணாக்கு மாட்டுக்கு! கழுவிய அரிசி நமக்கு ! கழுநீர் மாட்டுக்கு! நம்மையும் நமது நிலத்தையும் மட்டுமே எண்ணுவது தன்னலம்! மண்ணையும் மற்றவர்களையும் எண்ணி உழைப்பது பொதுநலம்! 

தன்னல மறுப்பே சமுதாயத்தை தலை நிமிர வைக்கும். இதனை எண்ணிப்பார்க்கச் செய்வது மாட்டுப் பொங்கல். தமக்கான பண்பாட்டு அடையாளங்களைப் பாதுகாக்கும் இனங்கள் மட்டுமே, காலத்தால் பாதுகாக்கப்படும். தமிழினம் தன்னைப் பாதுகாத்து கொள்ளுமா? இந்த வினாவை நம் எல்லோரையும் நோக்கி எழுப்புவதே இந்த தமிழர்த் திருநாள்! 

இந்த 21ஆம் நூற்றாண்டின் இறுதிக்குள் அழியக் கூடிய மொழிகள் பட்டியலில் 200 எனப் பட்டியலிட்டனர் மொழி வல்லுநர்கள். அழியக் கூடிய அந்த இருநூறு மொழிகளில் தமிழ் இடம்பெற்றிருப்பது உள்ளதை நடுங்க வைக்கும் செய்தி தான்! 

உலகின் மிகத் தொன்மையான மொழிகள் ஆறு எனப் பட்டியலிட்டு, அவற்றில் வாழும் மொழியாக நிலைத்திருப்பது தமிழ் மட்டுமே என உலகம் உச்சி முகர்ந்து ஒரு காலம்! அழிந்து போன மொழிகளாகச் சொல்லப்பட்ட ஈபுரு (இசுரேல்) மொழியும், மாண்டரின் (சீன) மொழியும் இப்போது உயிர் பெற்றுவிட்டன. உயிரோடு உள்ள தமிழோ, ஒவ்வொரு துறைகளிலிருந்தும் ஒதுக்கப்பட்டும், ஒழிக்கப்பட்டும் வருகிறது. 

தமிழே தமிழே அழிவாயா? 

தமிழர் நாங்கள் அழிவோமா? 

தமிழைக் கொல்வது தமிழன் கை ! 

தாயை கொல்வது மகனின் கை ! 

'மொழியின் அழிவு - இனத்தின் அழிவு' என்பதைத் தமிழர்கள் உணர வேண்டும். 

கல்வியில் ஆங்கிலம்! 

கலையில் கலப்படம்! 

இசையில் தெலுங்கு ! 

ஆட்சியில் இந்தி! 

வழிபாட்டில் சமற்கிருதம்! 

வாழ்வில் பண்பாட்டு குழப்பம்! 

தமிழர் வாழ்வின் எல்லா நிலையிலும் குழப்பமும் கலப்படமும் புகுத்தப்படுகின்றன. பொங்கலுக்குப் பதிலாக தீபாவளி உயர்த்திப் பிடிக்கப்படுகிறது! 

ஹோலி, ரக்சாபந்தன் முதலிய வடநாட்டுப் பண்டிகைகள் மூலமாக நஞ்சு கலக்கப்படுகிறது. தமிழெனும் உணர்வால் தமிழரே இணைக! - இப்போது எழுப்ப வேண்டிய முழக்கம் இதுதான். 

மதமும், சாதியும், மனிதரை பிளப்பவை! 

மனிதரை இணைப்பது மொழி மட்டுமே! 

மொழியும் முகமும் மனிதரின் இயற்கையான அடையாளங்கள். 

முகமிழந்த மனிதன் முண்டம்! மொழி இழந்த மனிதன் பண்பாட்டு அனாதை!  

தமிழ் சோறு போடுமா? எனக் கேட்பதும் பண்பாட்டு அடையாளத்தை இரைப்பையோடு இணைத்துப் பேசுவதும் பாமரத்தனம்! உணவு என்னும் ஒரே குறிக்கோளில் வாழ்க்கை சுழலுவது விலங்குகளுக்கு மட்டும் தான். 

சாதி,  மத, மொழி வேறுபாடற்ற என்று குழப்பக் குரல் கொடுப்போரும் இருக்கிறார்கள் .

ஒழிக்கப்பட வேண்டியது - சாதி !

தனிவாழ்வோடு ஒடுங்க வேண்டியது - மதம் ! 

உயர்த்தி வளர்க்கப்பட வேண்டியது - மொழி ! 

உயர்த்தி வளர்க்கப்பட வேண்டிய மொழியை அழிய வேண்டிய மதத்தோடும் சாதியோடும் இணைத்துப் பேசுவது அறியாமை! 

மொழிப்பற்று வந்த எவரும், விழிப்புற்று எழுவது இயற்கை ! 

தமிழன், கோவிலின் கருவறைக்குள் கால் வைக்கக் கூடாதாம், வைத்தால் தீட்டாகி விடுமாம். 

தமிழ் மொழியால் குடமுழுக்கும் வழிபாடும் செய்யக் கூடாதாம்! - செய்தால் தீமை வந்து விடுமாம் ! 

நம்மை ஒதுக்குவோரை நாம் ஒதுக்கித்  தள்ள வேண்டும். 

விழிப்பவர் மட்டுமே வாழ்வில் இலக்கை அடைந்து ஏற்றம் பெற முடியும் . 

விழிப்போரே நிலை காண்பார்! 

விதைப்போரே அறுத்திடுவார்! " 

"தமிழியக்கம்" என்னும் நூலில் பாவேந்தர் பாரதிதாசன் வழங்கிய வரையறை இது.  "மக்களை நேசிப்பது என்பது, மக்களின் மொழியை நேசிப்பது தான்" 

மக்களை அச்சுறுத்துவதாகவும் மக்களுக்கு விளங்காததாகவும் - கலையும் கல்வியும் மாறிவருவது அழிவின் அறிகுறி, தமிழில் கையெழுத்தும் முன்னெழுத்தும் போடுவதையும், திருவள்ளுவர் ஆண்டை நடைமுறைப் படுத்துவதையும் இந்த பொங்கல் திருநாளில் செயல் திட்டமாக்குவோம். 

எந்த பெரிய பாதையும் சிறிய காலடியில் தான் தொடங்கும். 

இந்தத் திசையில் காலடி வைப்போம் எதிர்கால விழிப்பிற்காக! 

பொங்கும் உணர்வுப் பொங்கல் இங்கே ! 

போகியில் பொசுங்கும் மடமைகள் எங்கே! 

எங்கள் தமிழர் எழுச்சி எங்கே ! 

இருளைக் கழுவும் ஒளிச்சுடர் எங்கே ? 

 - புலவர் செந்தலை .கவுதமன், பாவேந்தர் பேரவை, சூலூர்