“தேசியம் குறித்த விவாதத்தை தீவிரமாக முன்னெடுத்துச் செல்லுங்கள்” என்று பாரதிய சனதாக் கட்சியின் அனைத்திந்தியத் தலைவர் அமித்ஷா தங்கள் கட்சியினருக்கு அழைப்பு விடுக்கிறார். அக்கட்சியின் அனைத்திந்திய செயற்குழுக் கூட்டம் கடந்த 2016 மார்ச்சு 20 - 21 நாட்களில் நடந்தபோது, முதன்மைத் தீர்மானமாகவும் இதுவே சொல்லப்பட்டது.

“தேசியம் குறித்த விவாதத்தில் நாம் முதல் சுற்று வெற்றியடைந்திருக்கிறோம்’’ என இந்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மகிழ்ச்சிக் கூத்தாடுகிறார். கூர்ந்து கவனித்தால் இது உண்மையென்பதும் புலப்படும்.

அதைவிட இந்துத்துவம் என்பது வன்மையான இந்தியம் என்றும், இந்தியம் என்பது மென்மையான இந்துத்துவம் என்றும் நாம் கூறுவது உறுதியாக மெய்ப்பிக்கப்படுகிறது என்பதும் புலப்படும். மதச்சார் பற்ற இந்தியம் என்பதோ,முற்போக்கான இந்தியம் என்பதோ, பன்மைக்கு இடமளிக்கும் இந்தியம் என்பதோ எதுவும் இல்லை என நாம் கூறி வருவதும் உறுதிப்படுகிறது.

JNU Protestsஇப்போது, இந்த விவாதம் கடந்த 2016 பிப்ரவரி 8ஆம் நாள், தில்லி - சவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட அடக்குமுறையிலிருந்து மேலெழுந்தது. இதில் ஆர்.எஸ்.எஸ். - பா.ச.க. பரிவாரங்களை கருத்தியல் களத்திலும் போராட்டக் களத்திலும் எதிர்கொண்டு வருபவர்கள் முதன்மையாக சி.பி.ஐ., சி.பி.ஐ.எம்., சி.பி.ஐ.எம்.எல். ஆகிய இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த மாணவர்களும் கல்வியாளர்களுமே ஆவர்.

இப்போராட்டக் களத்தில், பாரதிய சனதா குண்டர்களையும் ஆட்சி நிர்வாகத்தின் அடக்குமுறைகளையும் உறுதியாக அவர்கள் எதிர் கொள்கிறார்கள் என்பது பாராட்டத்தக்கது.

பா.ச.க. ஆட்சியின் பாசிச அடக்கு முறை சவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தோடு மட்டும் நிற்கவில்லை. அகமதாபாத் பல்கலைக் கழகம், புனே பெர்கூசன் கல்லூரி, மீண்டும் அடுத்த சுற்று ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் வரலாறு காணாத காவல்துறைத் தாக்குதல் என தொடர்கிறது. இங்கெல்லாம் மாணவர்கள் மட்டுமின்றி பேராசிரியர்களும் கடும் தாக்குதலுக்கு ஆளாகி வருகிறார்கள்.

“இந்திய இராணுவம் காசுமீரிலும் வடகிழக்கு தேசிய இன மாநிலங்களிலும் ஆக்கிரமிப்புப் படையாக செயல் படுகிறது’’என ஓர் கருத்தரங்கில் பேசியதற்காக புகழ்பெற்ற பேராசிரியர் நிவேதித்தா மேனன் தாக்கப்பட்டார். அந்த அம்மையார் மின்னஞ்சலுக்கும் கைப்பேசிக்கும் திட்டமிட்ட முறையில் அன்றாடம் நூற்றுக்கணக்கான ஆபாச வசவுகள் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களால் அனுப்பப்படுகின்றன. ஜீ தொலைக் காட்சி உள்ளிட்ட வடநாட்டு ஊடகங்கள் சில அவரை இந்திய எதிரியாக தொடர்ந்து சித்தரிக் கின்றன. அவர் மீது பொய் வழக்கும் போடப்பட்டுள்ளது.

அதேபோல், உலகப்புகழ் பெற்ற வரலாற்றியலாளர் முனைவர் சமன் லால் மார்ச்சு 23 அன்று பகத்சிங் நினைவு நாளில்,தில்லி பல்கலைக் கழகத்தில் பா.ச.க. வெறியாட்டத் தைக் கண்டித்துப் பேசியதற்காகத் தாக்கப்பட்டார்.

இந்தக் கல்வியாளர்கள் இத் தாக்குதல்களைக் கண்டு அஞ்சாமல் தங்கள் கருத்துகளை உறுதியாகப் பேசி வருகிறார்கள்.

ஆயினும், இந்த இடதுசாரி மாணவர்களும் பேராசிரியர்களும் இக்கட்சிகளின் தலைவர்களும் இந்துத்துவாவிற்கு எதிராக பன்மைகளை ஏற்கும் இந்தியத் தேசியம், மதச்சார்பற்ற இந்தியத் தேசியம், உலகமயத்திற்கு எதிரான முற்போக்கு இந்தியத் தேசியம் என பேசும் போது தான் தோல்வியை மீண்டும் மீண்டும் சந்திக்கிறார்கள். 

ஏனெனில், இந்துத்துவத்திற்கு எதிராக இந்தியத் தேசியத்தை முன்வைப்பது உண்மையில் வெறும் நிழல் சண்டைதான்! ஆனால், இந்த நிழல் சண்டையை தெரிந்தோ தெரியாமலோ அவர்கள் தொடர்கிற போது, “முதல் சுற்று வெற்றி எங்களுக்கு’’ என அருண் ஜெட்லிகள் கொக்கரிக்க வாய்ப்பு ஏற்படுகிறது.

இந்த விவாதத்தின் போக்கில் இவர்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு தங்கள் விசுவாசத்தை சத்தியம் செய்து உறுதி செய்கிறார்கள்.

இவற்றின் காரணமாக பா.ச.க.வின் இந்துத்துவத் தேசியத்திற்கு எதிரான, மக்கள் சார்பான மாற்றுகளை இவர்களால் முன்வைக்க முடியவில்லை. நடைமுறை யில், ஒரே கருத்தியல் முகாமுக்குள் நடக்கிற சண்டை யாக இது தொடர்கிறது.

உயராய்வு நிறுவனங்களிலும், பல்கலைக்கழகங் களிலும் தங்கள் ஆட்களை உயர் பதவியில் அமர்த் துவது காங்கிரசு ஆட்சியிலும் நடந்ததுதான். ஆயினும், தகுதியுள் ளவர்களில் தங்களது ஆட்களைக் கொண்டு காங்கிரசு ஆட்சி இந்த இடங்களை நிரப்பியது. இதனால், தங்கள் தகுதி காரணமாக இடது சாரி அறிஞர்கள் இந்த ஆய்வு நிறுவனங்களில் முகாமையான இடங்களில் செயல்பட முடிந்தது.

ஆனால், பா.ச.க. ஆட்சி இதே வேலையை செய்யும் போது, ஓர் அடிப்படை வேறுபாடு உள்ளது. தகுதியற்றவர்களாக இருந்தாலும், அது பற்றியெல்லாம் பொருட்படுத்தாமல் தங்கள் பரிவார ஆட்களைக் கொண்டு உயராய்வு நிறுவனங்களை நிரப்புவது பா.ச.க. ஆட்சியின் பொதுப் போக்காக உள்ளது.

புனே, திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கல்லூரியில் தலைவராக அமர்த்தப்பட்ட கஜேந்திர சவுகான், இந்திய வரலாற்றுக் கழகத்தின் தலைவராக அமர்த்தப்பட்ட சுதர்சன ராவ், தேசிய புத்தக ஆணையத் தின் தலைவராக அமர்த்தப்பட்ட பாலதேவ் சர்மா, திரைப்படத் தலைமைத் தணிக்கையாளராக அமர்த்தப் பட்ட பாலாஜி நிகலானி போன்றவர்கள் அவர்கள் வகிக்கும் பொறுப்பிற்கு உரிய தகுதி பெற்றவர்கள் அல்லர். ஆர்.எஸ்.எஸ். ஆட்கள் என்பது மட்டுமே அவர்களின் தகுதி!

இதுபோன்ற சிற்சில இடங்களில் இந்த இடது சாரிகள் சரியான மாற்றுகளை முன்வைத்துப் போராடினாலும், கருத்தியல் தளத்தில் மாற்றுகளை முன்வைக்க முடியாமல் தத்தளிக்கிறார்கள்.

இவர்கள் விசுவாசம் காட்டும் இந்திய அரசமைப்புச் சட்டம் இந்தியத் தேசியம் என்பதாக ஒன்றை சொல்லாவிட்டாலும்,இந்த இடதுசாரிகள் பா.ச.க.வை விடவும் இந்தியத் தேசியம் குறித்து உரத்துப் பேசுகிறார்கள்.

இந்திய அரசமைப்புச் சட்டம் வரையப்பட்டு, 1950-இல் செயலுக்கு வந்தபோது, “இறையாண்மையுள்ள சனநாயகக் குடியரசு’’ என்பதாகத்தான் இந்தியா வரையறுக்கப்பட்டது. இந்திரா காந்தியின் அவசர நிலை ஆட்சிக் காலத்தில், 1976இறுதியில்தான் 42ஆவது திருத்தத்தின் மூலம் “இறையாண்மையுள்ள மதச்சார்பற்ற சோசலிச சனநாயகக் குடியரசு’’ என மாற்றப்பட்டது.

ஆனால், இதே காலப்பகுதியில்தான் முஸ்லிம்கள் தில்லியில் கட்டாயக் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைக்கு ஆளாக்கப்பட்டார்கள். துர்க்மான் கேட்டில் அவர்களது வீடுகள் தரைமட்டமாக்கப் பட்டன. தன்னை நிலைநிறுத்திக் கொள்ள போலியாக இதுபோன்ற பல்வேறு சட்டங்களை இந்திரா காந்தி பிறப்பித்தார். அவசரகால ஆட்சிக் காலத்தில்“கல்வி’’யும், “வனம்’’ தொடர்பான அதிகாரங்களும் மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டன.

ஆயினும், சுதந்திரப் போராட்டக் காலத்திலிருந்து மதச்சார்பற்ற இந்தியா என்பது பேசப்பட்ட ஒன்றாக வே தொடர்ந்தது. மதச்சார்பின்மை கருத்தியலின் இந்தியத் தலைமகனாக கருதப்பட்ட சவகர்லால் நேரு கூற்றுகளிலிருந்தே,இந்தியத்திற்கும் மதச்சார்பின் மைக்கும் தொடர்பேதும் இருக்க முடியாது என்பது தெளிவாகும்.

நேரு எழுதிய புகழ்பெற்ற நூலான “தி டிஸ்கவரி ஆப் இந்தியா’’வில், “ஆரிய நாகரிகமும், பிராம ணிய கட்டமைப்பும் இணைந்த இந்துயிசத்தின் அடிப்படையில் உருவானதுதான் இந்தியத் தேசியம்” என பல இடங்களில் குறிப்பிடு கிறார். அவர் ஆற்றிய பல்வேறு சொற்பொழிவுகளிலும் இதே செய்தியை வெவ்வேறு சொற்களில் குறிப்பிடுகிறார்.

“மதத்தோடு மெய்யியலும் வரலாற்றோடு மரபும் பழக்க வழக்கங்களும் சமூகக் கட்டமைப் பும் கலந்த கலவைதான் இந்திய வாழ்வின் மிகப்பெரும்பாலான கூறுகளில் நிறைந்து காணப்படு கிறது. பிராமணியம் அல்லது இந்துயிசம் என்று கூறப்படும் இந்தப் பொதுத்தன்மைதான் இந்தியத் தேசியத்தின் குறியீடாக இருக்கிறது. இதுதான் தேசிய மதமாகவும் விளங்குகிறது’’ என்பதே சவகர்லால் நேருவின் இந்தியா குறித்த வரையறுப்பு.

இதற்குள் நின்றுகொண்டு, சில சகிப்புத்தன்மைகளை அவர் கூறுகிறார். இதைத்தான் மதச்சார் பின்மை என்பதாக தலையில் வைத்துக் கொண்டாடுகிறார்கள்.

ஆரிய பிராமணிய இந்துத் தன்மைதான் இந்தியத் தின் அடிப்படை! இதில், மதச்சார்பற்ற இந்தியத் தேசியம் எனக் கூறுவதற்கு என்ன இடமிருக்கிறது?

ஏனெனில், எந்தவொரு தேசியத்திற்கும் ஓர் மெய்யியல், வரலாறு, மரபு, இனத் தொடர்ச்சி ஆகியவை அடிப்படையாக தேவைப்படுகிறது. இந்தியத் துணைக் கண்டத்தில், இதில் எந்தவொரு கூறிலும் ஒற்றைத் தன்மை இல்லை. ஒத்தத்தன்மையும் இல்லை. எனவே, ஏதாவதொரு சமூகத்தின் மேற்கண்ட கூறுகளைக் கொண்டு ஓர் தேசியத்தை புனைய வேண்டிய அவசியத்தில் இதிலுள்ள ஆதிக்க சக்திகள் உள்ளன. அவ்வாறான ஆதிக்கப் புனைவே இந்தியத் தேசியமாகும்.

இன்னொன்று, எந்தவொரு தேசியத்திற்கும் ஓர் வரலாற்றுத் தாயகமும், தேசிய மொழியும் இன்றிய மையாதக் கூறாகும்.

நேருவும், காந்தியடிகளும் அடிக்கடி கூறியது போல், பிரித்தானிய இந்திய ஆட்சிப் பகுதியே இவர்களது புனைவுக்கான தாயகமாக வாய்த் தது. இயற்கையில் ஆட்சிப் பகுதியும் (Territory) தேசியத் தாயகமும் வரலாற்றில் பல நேரங்களில் வெவ்வேறாக அமைந்து விடுகின் றன. தேசியத் தாயகமே ஆட்சிப் பகுதியாக மாறும்போது, அங்கு ஓர் தேச அரசு மலர்கிறது. அது விடுதலையின் அடையாளம்!

ஆனால், வரலாற்றில் தற்செய லாக ஆயுத வலிமை காரணமாக அமைந்துவிட்ட ஓர் ஆட்சிப் பகுதியை தேசியத் தாயகமாக மாற்ற முயலும்போது, அது ஆதிக்கப் புனைவாக அமைகிறது. அதற்குள் பல்வேறு தேசியத் தாயகங்கள் சிறைப்படுகின்றன. இந்தியாவில் அதுதான் நிகழ்ந்தது.

காந்தி, நேரு, அம்பேத்கர், பொதுவுடைமைத் தலைவர்கள், இந்து மகா சபையினர் ஆகிய வெவ்வேறு உலகப் பார்வை கொண்ட இந்தியத் தலைவர்கள் மேற்கண்ட ஆட்சிப் பகுதி தேசியத்தில் (Territorial Nationalism) ஒரே கருத்துடையவர்களாக இருந் தார்கள்.

இதன் தவிர்க்க முடியாத தருக்க முடிவாக அவர்களுக்கு ஓர் ஒற்றை தேசிய மொழி தேவைப் பட்டது. அதற்கு, இந்தி மொழியைத் தேர்ந்தெடுத் தார்கள். அரசமைப்புச் சட்டத்தில் இந்தியை அலுவல் மொழி எனக் குறிப்பிட்டாலும்,இவர்களது புனைவான இந்தியத் தேசியத்தின் தேசிய மொழியாகவே அதை நடைமுறையில் மாற்றினார்கள். “சமற்கிருத மயமாக்கப்பட்ட இந்தி’’ என்பதிலும் பெரிய வேறுபாடு இவர்களிடையே இல்லை.

வேற்றுமையில் ஒற்றுமையை வலியுறுத்திய நேருவின் ஆட்சியில் மிகத் தீவிரமான போராட்டத் திற்குப் பிறகே மொழிவழி மாநிலங்கள் அமைய முடிந்தது. இச்சிக்கலில் தீவிர இந்தியவாதியாக அம்பேத்கர் விளங்கினார். மொழிவழி மாநிலத்தையே எதிர்த்தார்.

தனி நாடாக விளங்கிய காசுமீரின் மீது படை யெடுத்து பாகிஸ்தானோடு பங்கு போட்டுக் கொண்டதிலோ, நாகாலாந்து - மிசோரம் - மணிப்பூர் போன்ற தனித்தன்மையான தேசங்களின் மீது படை நடத்தி அவற்றை இந்தியாவின் மாநிலங்களாக மாற்றிக் கொண்டதிலோ, தனி அரசோடு விளங்கிய சிக்கிம்மை இந்தியாவின் ஆட்சிப் பகுதியாக மாற்றிக் கொண்டதிலோ வலதுசாரி -- இடதுசாரி, மதவாத -- மதச்சார்பற்ற, முற்போக்கு - பிற்போக்கு இந்தியத் தேசியத் தலைவர்களிடையே ஒரு வேறுபாடும் இல்லை.

அங்கங்கே நடக்கும் சில மிகை அத்துமீறல்களைக் கண்டித்து அவ்வப்போது சிலர் முனகுவார்கள் என்பதைத் தவிர இந்த இந்தியத்திற்குள் எந்த வேறுபாட்டையும் காண முடியாது.

இதனால்தான் “காசுமீரைப் பற்றி நாங்கள் எதுவும் பேசவில்லை’’ என்று கண்ணையா குமாரிலிருந்து சீத்தாராம் யெச்சூரி வரை எல்லோரும் ஒரே ‘தேசபக்தி’ கூக்குரல் எழுப்புகிறார்கள். தமிழீழ இனப் படுகொலையில் எல்லாத் தரப்பு வட இந்தியத் தலைவர்களும், ஒத்த கருத்தில் இருப்பதற்கும் இதுவே காரணம்! ஏழு தமிழர் விடுதலையில் அனைத்திந்தியத் தலைவர்கள் அனைவரும் ஒரே குரலில் பேசுவதன் அடிப்படையும் இதுதான்!

காவிரிச் சிக்கலிலோ, முல்லைப் பெரியாறு சிக்கலிலோ அனைத்திந்தியத் தலைவர்கள் பலரின் அழுத்தமான மவுனத்திற்குப் பின்னணியும் இதுதான்!

இந்திய அரசியலும், இந்திய அரசமைப்பும் இவ்வாறு இருப்பதன் காரணமாகத்தான் இந்திய நீதிமன்றமும் பெரும்பாலான நேரங்களில் இது போன்ற வழக்குகளில் இவர்களுக்கு ஒத்த குரலில் பேசுகின்றது.

நேரு, அம்பேத்கர், இந்து மகா சபையினர், இடதுசாரிகள் அனைவருமே வலுவான இந்தியா, வல்லரசு இந்தியா என்ற முழக்கத்தில் ஒரே குரலில் பேசுகின்றனர். இதன்வழியாக அதிகாரக் குவிப்பதற்கு துணையாகவோ, மவுன சாட்சியாகவோ நிற்கின்றனர்.

இப்போது, மாட்டுக்கறி சிக்கலை முன்வைத்து தனி மனிதரின் உணவுப் பழக்கத்தையும் இந்துத்துவ வெறியர்கள் ஆக்கிரமிக்கிறார்கள் என்ற ஞாயமான எதிர்ப்பு கிளம்புகிறது. ஆனால், இதற்கான அடிப்படை “மதச்சார்பற்ற” இந்திய அரசமைப்புச் சட்டத்திலேயே உள்ளது.

அரசமைப்புச் சட்டத்தின் கூறு 48, பசுவிற்கு தனித்தப் பாதுகாப்பு வழங்குகிறது.

“மாநிலங்கள் வேளாண்மையையும் கால்நடை வளர்ப்பையும் நவீனமான அறிவியல் வழிப்பட்ட முறையில் ஒழுங்கமைத்துக் கொள்ள அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். பசு, அதன் கன்றுகள் மற்றும் பிற பால் வழங்கும் விலங்குகள், பண்ணை உழைப்பு விலங்குகள் ஆகியவற்றை கொல்வதைத் தடை செய்து அவற்றின் இனங்களை வளர்க்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்” என அரசமைப்பின் உறுப்பு 48 கூறுகிறது.

மேல் தோற்றத்தில் கால்நடை வளர்ப்பு குறித்து கவலைப்படுவதைப் போல இதன் வாசகங்கள் தோன்றினாலும்,இப்பிரிவின் உண்மை நோக்கம் அதுவல்ல!

இச்சட்டப்பிரிவு குறித்து அரசியல் நிர்ணய அவையில் நடந்த விவாதமும் அதை அடியொற்றி இதுகுறித்த வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புரையும்  இதற்கு சான்று கூறும்.

அரசியல் நிர்ணய அவையில் பிரிவு 48-ஐ, (அன்றைக்கு 38கி) முன்மொழிந்து பேசிய தாக்கூர் பர்காவா மற்றும் சேத் கோவிந்த தாஸ் ஆகியோர் முதலில் பசுப்பாலின் மேன்மையையும், வேளாண் உழைப்புக் கால்நடைகளின் தேவையையும் அவற்றின் பற்றாக்குறையையும் பட்டியலிட்டு பேசினர். இவ்விலங்குகளை எக்காரணம் கொண்டும் கொல்லக் கூடாது என வலியுறுத்தினர்.

சையது முகம்மது சாய்துல்லா என்ற உறுப்பினரும் வேறு சிலரும், இதனை மாற்றுப் புள்ளி விவரங்களோடு எதிர் கொண்டனர். பால் மறுத்துப் போன விலங்குகளையோ உழைக்கத் தகுதியற்ற விலங்கு களையோ தொடர்ந்து பராமரிப்பது உழவர்களுக்குப் பெரும் சுமையாக அமையும், அவ்விலங்குகளுக்கும் பெரும் துயரமாக இருக்கும் என மறுப்புரைத்தனர்.

இதில், திக்குமுக்காடிய மேற்சொன்ன இந்துத்துவ வாதிகள் தங்களது உண்மை நோக்கத்தை வேறு வழியின்றி வெளிப்படையாகக் கூறினர்.

“எங்கள் மத வழிபாட்டுச் சின்னம், எங்கள் கடவுள் கிருஷ்ணருக்கு விருப்பமான விலங்கு! எனவே பசுவை கொல்வதை நாங்கள் ஏற்க முடியாது. பசுவின் உயிர் வாழும் உரிமையை அடிப்படை உரிமையாக அரசமைப்புச் சட்டத்தில் சேர்க்க வேண்டும்” என வாதிட்டனர்.

வரைவுக்குழுத் தலைவர் அம்பேத்கரின் பெரு முயற்சிக்குப் பிறகு இப்பிரிவை அடிப்படை உரிமை என்ற பகுதிக்குப் பதிலாக ‘வழிகாட்டும் நெறி’ பகுதியில் சேர்க்க ஏற்றுக் கொண்டனர்.

இவ்வாறு இன்று மாட்டுக்கறி உணவுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் எழுப்பும் கூக்குரலுக்கு அன்றைக்கே அரசமைப்புச் சட்ட ஏற்பு ஒருவகையில் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த வழிகாட்டும் நெறியை ஏற்றுக் கொண்டு பல்வேறு மாநில அரசுகள் பசு மற்றும் வேளாண் கால்நடைகளை இறைச்சிக்காகக் கொல்வதை தடை செய்து, சட்டங்கள் இயற்றின. இது குறித்து வழக்குகள் குவிந்தன. இதன் தொடர்ச்சியாக 2005இல் 7 நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு ஆயம் இச்சிக்கல் குறித்து விவாதித்துத் தீர்ப்பு வழங்கியது.

அன்றையத் தலைமை நீதிபதி ஆர்.சி. லகோத்தி தலைமையிலான அரசமைப்பு ஆயம் வழங்கியத் தீர்ப்பு,இச்சட்டப்பிரிவின் உண்மையான நோக்கத்தை எடுத்துக் கூறியது.

“பால் கறக்காது போனாலும், பசுவை மட்டும் கொல்லக்கூடாது ஏனெனில் பசு இந்துக்களின் தெய்வம். காளை உள்ளிட்ட பிறவும் தெய்வம்தான் எனினும் அவை அடுத்த நிலையிலானவை. அவை பயன் பாடற்றுப் போனால் கொல்வதற்குத் தடையில்லை. அதன் இறைச்சியை உண்ணவும் தடையில்லை” என தீர்ப்புரைத்தது.

அதன்பிறகு, எந்த மாட்டிறைச்சி தின்றாலும் அது பசு மாட்டிறைச்சி இல்லை என மெய்ப்பிக்கும் சிக்கல் உண்பவரது தரப்பில் மாற்றப்பட்டது. அண்மையில், மகாராட்டிர மாநில அரசு பிறப்பித்துள்ள சட்டம், பசு மாட்டிறைச்சி வைத்திருந்தார் என மெய்ப்பிக் கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறை என கூறுகிறது. இந்த சட்டமும் சரி என உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

தமிழ்நாட்டில்கூட இவ்விலங்குகள் பயனற்றவை என சான்று பெற்ற பிறகே உணவுக்காக கொல்லப்பட முடியும்.

இவ்வாறு உணவு பழக்க வழக்கம் தொடர்பாகவும், இந்துத்துவக் கோட்பாடு மதச்சார்பற்றதாகச் சொல்லப்படும் அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ளது.

எனவே, இடதுசாரித் தோழர்கள் நம்பச் சொல்வது போல் மதச்சார்பற்ற இந்தியத் தேசியமோ, வேற்றுமையில் ஒற்றுமை வழங்கும் பன்மைத் தன்மையான இந்தியத் தேசியமோ, தேசிய இனங்களின் வாழ்வுரிமையை ஏற்கும் சனநாயகமான இந்தியத் தேசியமோ இல்லை என்பது தெளிவாகும்.

இந்தியத் தேசியத்தை எவ்வளவு முற்போக்கு எண்ணத்தோடு உரத்து முழங்கினாலும், முதல் சுற்றில் மட்டுமல்ல இறுதிச்சுற்றிலும் வெல்வது இந்துத்துவமாகவே இருக்கும்!

ஏனெனில் இந்தியத் தேசியத்தின் இன அடிப்படை ஆரிய இனவாதம், மெய்யியல் அடிப்படை பிராமணிய வர்ணாசிரம வாதம்; மத அடிப்படை வேதமதவாதம்; பொருளியல் அடிப்படை கட்டற்ற முதலாளியம் ஆகும்!

(“மதச்சார்பற்ற இந்தியத்தேசியம் இருக்கிறதா?” என்ற தலைப்பில், தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் ஏப்பிரல் 1-15 இதழில், தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் எழுதியுள்ள கட்டுரை)