தமிழக முதல்வருக்கு படைப்பாளிகள் வேண்டுகோள்
 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
 
செங்கல்பட்டு சிறப்புமுகாமிலும் திருச்சியிலும் அடைத்துவைக்கப்பட்டுள்ள ஈழ அகதிகளைத் திறந்தவெளி முகாம்களுக்கு மாற்றக்கோரியும், குடும்பத்தாரோடு வாழ அனுமதிக்கக் கோரியும், செங்கல்பட்டு சிறப்புமுகாமில் மார்ச் 7ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய ஈழ இளைஞர் செந்தூரன் கைது செய்யப்பட்டதும், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டதும் உங்களுக்கு நினைவிருக்கும்.
 
வேலூர் சிறையிலும் தனது போராட்டத்தைத் தொடரும் செந்தூரன், இன்று 19வது நாளாக உண்ணாவிரதத்தைத் தொடர்கிறார். அவரது எடை குறைந்துள்ளது. உடல் நலிவடைந்துள்ள அவரைச் சந்திக்கச் சென்ற அவரது மனைவி மற்றும் குழந்தையைக் கூட சிறை நிர்வாகம் பார்க்க அனுமதிக்கவில்லை. அது எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
உண்ணாநிலை அறப்போரைத் தொடரும் செந்தூரனின் உடல்நலன் குறித்துக்கூட அறியமுடியாத நிலை கவலையளிக்கிறது. அவரது உடல்நலன் குறித்த கவலையோடு இந்த வேண்டுகோளை எங்கள் அனைவர் சார்பிலும் தமிழக முதல்வர் முன் வைக்கிறோம்.
 
மனிதாபிமான அடிப்படையில் தமிழக முதல்வர் இதில் நேரடியாகத் தலையிடவேண்டும். சிறப்புமுகாம் என்கிற தடுப்புமுகாம்களில் இருந்து திறந்தவெளி முகாம்களுக்கு ஈழத் தமிழ் உறவுகளை மாற்றவேண்டும். காலவரையற்ற உண்ணாநிலை அறப்போரைத் தொடர்வதால் உடல்நலிவடைந்திருக்கும் செந்தூரனைக் காப்பாற்றத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
 
நன்றி!
 
என்றும் அன்புடன்,
 
புலவர் புலமைப்பித்தன், இயக்குநர் ஆர்.சி.சக்தி, கவிஞர் தாமரை,
 
கவிஞர் இன்குலாப், எழுத்தாளர் செயப்பிரகாசம், கண குறிஞ்சி.
 
கவிஞர் அறிவுமதி, மாலதிமைத்ரி, சுகிர்தராணி, பழனிபாரதி,
 
ஓவியர் டிராட்ஸ்கி மருது, வீரசந்தானம்,
 
இயக்குநர் கௌதமன், சுப்பிரமணியசிவா, புகழேந்தி தங்கராஜ்