lovers_350_copyஒப்பனை துளியும் இல்லாத
ஒரு பின்னிரவில் துயில் கலைய
நத்தையின் வழித்தடமென
மினுமினுக்கிறது
நம் பழைய சந்திப்புகள்

வெகு சாதுர்யமாக
உன் கண்களில்
மறைத்துவைத்திருந்த
ரகசியமான யாசிப்பின்
கணங்களை
அறிந்தும் அறியாதவனாய்
உன் அருகில் நான்.

உன் நெற்றியில் படர்ந்த
கேசம் கலைத்து நெருங்கும்போது
என் நாசியிலிருந்து வெளியேரும்
கந்தகச்சூட்டில
இறகுகளற்ற விட்டில் பூச்சியாய்
என் மடியில் அடைக்கலம்
தேடித்தவிக்கும் நீ

தயக்கமான நமது நெருக்கங்கள்
வெகு இயல்பாக அபினயிக்கிறது
ஒவ்வொரு முறையும்
புத்துத்திசையை நோக்கிப்
பயணிக்கும் ஒரு பாதசாரியைப்போல.

நிறைவாக
துளியும் பரிந்துரை இல்லாத
மௌனப்பரிவர்த்த‌னையில்
கைஅசைத்தபடி
பிரிந்துவிடுகிறோம்
பரஸ்பரம் ஒருவருக்கொருவர்
உளமார்ந்த நன்றிகளை
பகிர்ந்துகொள்ளாமலேயே.