அரசியல் விஷயத்தில் பேதம் கொண்ட சிலர் காந்தியடிகளுக்கு செல்வாக்குக் குறைந்து வருகின்றதெனக்கூறி வருகின்றனர். இக்கூற்று ஆதாரமற்றது. காந்தியடிகளின் அன்பரும், சீடருமாகிய பூஜ்யர் ஆண்டுரூஸ் ஒரு பத்திரிகையில் இந்திய சட்டசபையின் அங்கத்தினர்கள் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் அங்கத்தினர்கள் போன்று தற்கால நாகரீகத்தில் மயக்கமுற்றுள்ளார்கள். பாமர ஜனங்களே, காந்தியடிகளின் உண்மை உபதேசத்தை அறிந்து நிர்மாண வேலையில் திளைத்து நிற்கின்றனர் என வரைந்துள்ளார். இதை உண்மையென்று எவரும் கூறுவர். மேனாட்டு நாகரீகத்தில் மயக்கமுற்று நிற்கும் அரசியல்தந்திரிகளுக்கு, எம்பெருமானின் திட்டம் கூடாதுதான். நிர்மாணத் திட்டத்தை நிறைவேற்றுவது கடினமே. நம் நாட்டைப் போன்றே சீன தேசத்தில் இதுகாலை வாடும் எளிய மக்கள் மகாத்மாவிற்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்கள். உலகில் சுதந்திரமற்று வாடும் நாடுகள் எல்லாம் காந்தியடிகளைத் துணைக்குக் கூவுகின்றன. எல்லாச் சுதந்திரம் பெற்ற மேல்நாட்டினரும் காந்தியை ஏசுநாதர் எனப் போற்றிப் புகழ்கின்றனர். இந்நிலையில் அப்பெரியாருக்கு மதிப்புக் குறைந்து வருகின்றதெனக் கூறும் அரசியல் தந்திரக்காரர்களைக் கண்டு இரங்காது நாம் வேறு என் செய்வது ?
(குடி அரசு - துணைத் தலையங்கம் - 02.08.1925)
RSS feed for comments to this post