புதுவை இரத்தினதுரை
பிரிவு: உரிமைத் தமிழ்த் தேசம் - ஜனவரி 2021

muthukumarமுத்துக்குமாரா!
முகம் தெரியாப்போதினிலும்
செத்துக் கிடக்கின்றாய் எமக்காக,
எனவறிந்து
தேகம் பதறுகிறதே திருமகனே!
உன்றன்
ஈகம் அறிந்து எம்மில் தீப்பற்றுதே
நீட்டிக்கிடக்கின்றாயாம் நீ
உனக்கு அஞ்சலியெழுதும் என்னைச் சுற்றி
நூறு உடல்கள் கிடக்கின்றன வரிசையில்
அத்தனையும் எம் உறவுகளின் உயிரிழந்த கூடுகள்.
உன் மேனியில் மூண்ட நெருப்பு
உன்னை எரித்ததாய் சொல்லுகின்றார்
நீ எரிந்தவன் அல்லன், விரிந்தவன்.
சின்ன அக்கினிக் குஞ்சே!
உன் நெஞ்சிலிருந்த நெருப்பால் எரிந்தாய்
அந்தச் சோதிப் பெருவெளிச்சம்
எமக்குச் சக்தி தரும்
வையவாசலை எமக்காகத் திறக்கச் செய்யும்.
உன் இறுதி மூச்சு
புயலாகித் தமிழ்நாட்டைப் போட்டுலுப்பும்.
எல்லோருக்கும் சாவு வாழ்வின் இறுதி
உனக்கு மட்டுமே சாவு தொடக்கமானது.

தம்பி!
வாய்நிறைய உன் நாமம் உரைத்து அழைக்கின்றேன்.
நீ எங்களுக்கு வெறும் முத்துக்குமார் அல்ல
எமக்குப் பலம் நல்கும் சக்திக்குமார்.
இங்கிருந்து உன் முகத்தைக் காண்கிறேன்.
உன் குரலைக் கேட்கிறேன்.
உன் மூச்சை உள்வாங்குகிறேன்.
இடையில் கடல் கடந்தும் வருகின்றது
உன் சிரிப்பின் ஓசை.
எமக்காக எரிந்தவனை எரிக்கவா போகின்றீர்?
கடலிலே அனுப்பி வையுங்கள்
அவன் பொன்மேனியை ஒருதரம் தழுவ,
ஈழத்தமிழரைச் சுமந்த இதயத்தைப் பார்க்க,
கண்மூடிக் கிடந்தாலும் அவன் காதோடு பேச.

மகனே!
நெருப்பெரியும் தேசத்தை எண்ணி
நெருப்பில் எரிந்தவனே!
உன் நெஞ்சின் உணர்வுகளை வாங்கி
இங்கே உயிர்கள் பிறக்கும்
உன் இறுதி மூச்சை உள்வாங்கி
உயிர்கள் சுவாசிக்கும்
நாளை உயிர் தரித்திருப்போம் என்பதற்கு
எந்த உத்தரவாதமும் அற்று வாழ்கின்றனர் ஈழத்தமிழர்
உயிர் எரியும் வலியில் ஈழம் துடிக்கின்றது
ஆயினும் பகைக்குப் பணிவிடை செய்யோம் என்றபடி
நிமிர்ந்துள்ளோம் நாங்கள்.

முத்துக்குமார்,
நீ செத்துக் கிடக்கின்றாயாமே எமக்காக
யாராவது அவனின் புனித உடலை
எமக்குப் பொதிசெய்து அனுப்ப மாட்டீர்களா?
இந்த வீரமண்ணில் விதைப்பதற்காக
அந்த வித்துடல் வேர் பிடித்து
புதிய தலைமுறை ஒன்றைப் பிரசவிப்பதற்காக.

தம்பி!
வார்த்தை ஏதும் வரவில்லையே
உன்னை வனப்புச் செய்து வாசலில் வைப்பதற்காக
தமிழீழம் உனக்காக விழியுடைத்துப் பெருகுகிறது
உன் கடைசிக் கடிதத்தின் பொருள் உணர்ந்து
நெஞ்சுருகி உன்னைப் பாடுகின்றது தமிழீழத் தமிழ்.

நண்பனே!
முகம் தெரியாத எம் முத்துக்குமார்
உன்னை நெஞ்சில் வைத்துச் சத்தியம் செய்கின்றோம்.
நீ மூட்டிய சோதி நெருப்பு சும்மா அவியாது
விண் தொட எழும் – அந்த வெளிச்சத்தில்
நாங்கள் ஒளி பெறுவோம்.

என் பிரிய உறவே!
சென்று வருக
திரும்பி வராவிட்டாலும்
நன்றியென்ற ஓருணர்வை
நாம் சுமந்து நிற்கின்றோம்.
பிரிய தோழனே! உனக்குத் தமிழீழத்தின் வீரவணக்கம்!

- கவிஞர் புதுவை இரத்தினதுரை