இலைகளில் படர்ந்து கொண்டிருந்த வெள்ளி வெயில் கண்களைக் கூச வைத்தது. என்னோடு பயணித்துக் கொண்டிருந்த உறவுக்காரப் பிள்ளைகள் இருவரும் தங்களுக்குள் கலகலத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு தனியான வாகனத்தில் தொலைதூரப் பய்ணம் என்பது அவர்களவில் ஒரு ஊருக்கும் சிறைப்பட்டிருந்த உற்சாகத்தின் விடுதலை. வெளிக் காற்றின் மலர்ச்சியில் விகசித்துக் கொண்டிருந்தன அவர்களது இளம் முகங்கள். ஏ9 வீதியின் இரு கரையும் இராணுவப் பச்சையும் மரப் பச்சையுமாய் நீண்டிருந்தது. ஒரு துளிப் பசுமையுமற்ற வனாந்திரத்தினூடாகப் பயணிப்பது போன்ற வறண்ட மன நிலையை என்னால் தவிர்க்க முடியவில்லை. மனதின் புழுக்கம் என் கண்களுக்கு ஏறியிருக்கலாம். கூரையும் கதவுகளுமற்ற சில வீடுகளில் அகதியாக விதிக்கப்பட்ட விரட்டப்பட்ட மனிதர்கள் எண்ணெய் காணாத தலையோடு அமர்ந்திருந்தார்கள். அவர்களது விழிகள், எங்களைப் போன்றவர்களால் எக்காலத்திலும் உணர்ந்து கொள்ளப்பட முடியாத துயரத்தோடு ஏதோ ஞாபகத்தில் இலக்கின்றி நிலைத்திருந்தன. பாதையை ஞாபகத்தில் இலக்கின்றி நிலைத்திருந்தன. பாதையை அண்மித்திருந்த பகுதிகளில் மஞ்சள் நிற நாடாக்கள் கண்ணி வெடி அபாயப் பகுதிகளைப் பிரித்துக் காட்ட, குப்பை விறாண்டி போன்ற கருவியினால் இராணுவத் தினர் மண்ணைக் கிண்டி அபாயக் கிழங்குகளைக் கல்லிக் கொண்டிருந்தார்கள்.

yaal_library“இந்த வீதி எத்தனை பேரை போரைக் கண்டிருக் கும்!'' என்று நினைத்துக் கொண்டேன். ஜெயசுக்குறு நினைவில் வந்தது. வரலாறு எல்லாவற்றையும் பதிவு செய்து வைத்திருக்கிறதாம். எழுத்தில், கல்வெட்டில், சுவடிகளில், வாய்ப் பேச்சில், மனிதர்களில் வரலாறு வாழ்கிறதென்கிறார்கள். வீதிகளும் வரலாற்றைப் பதிவு செய்து வைத்திருக்கின்றன. ஆனால், அவை மௌன சாட்சியங்களாக மிதிபட்டும் சிதையுண்டும் நீள நெடுகக் காலகாலமாகக் கிடக்கின்றன.

ஓமந்தையில் வாகனப் பரிசோதனைக்கென நிறுத்தப் பட்டோம். ஆட்களை இறக்கவில்லை. பொதிகளைக் கிளறவில்லை. கடந்த தடவையைப் போல மோப்ப நாய் எதுவும் எனது புகைப்படக் கருவியினுள் குண்டு இல்லையென்று உறுதி செய்யவில்லை. அசிரத்தையான, சோம்பல் படிந்த கேள்விகளும் என்னை நோக்கி எறியப்படவில்லை. அடையாள அட்டையை மட்டுமே காட்ட வேண்டியிருந்தது. “வேலைக்குப் போகிறீர்களா?'' என்றொரு இராணுவத்தான் கேட்டான். “இல்லை'' என்றேன்.

“போகாவிட்டாலென்ன'' என்பதுபோன்ற கனிந்த புன்னகையை அவன் தனது முகத்தில் தவழ விட்டான். “ஒத்துழைப்பிற்கு நன்றி'' என்று வழியனுப்பி வைத்தவர்களைக் கொஞ்சம் வியப்போடு கவனித்தோம்.

“நன்றாகத்தானே இருந்தார்கள்... திடீரென என்ன வாயிற்று!'' என்றாள் சித்தியின் மகள். தமிழர்கள்பால் "அன்பு' செலுத்தப்பட வேண்டுமென்று அவர்களுக்கு மேலிடத்திலிருந்து அறிவுறுத்தப்பட்டிருப்பது தெளிவாகவே தெரிந்தது. "பிளாஸ்டிக்' கருணைகளை எப்போதும் தாங்க முடிவதில்லை. "பிளாஸ்டிக்' புன்னகைகளையும் அந்தப் பிரிவின் வழி அவர்கள் சொல்ல நினைக்கும் சேதிதான் என்ன? “விடுதலைப் புலிகள் அழிந்து விட்டார்கள். இனி நீங்கள் நிம்மதியாக வாழலாம்'' என்பதா? “உங்களவர்களை நாங்கள் கொன்று விட்டோம்தான்... இனி அது தொடராது'' என்ற குற்றவுணர்விலிருந்து பிறந்த குழைவா? எதுவானாலும் எங்களால் திடீர் தோசை மாவு போன்ற திடீர் அன்பைத் தாங்க முடியாமலிருந்தது.

தென்னிலங்கைச் சிங்களவர்களுக்கு புதிதாக ஒரு சுற்றுலாத் தலம் கிடைத்திருக்கிறது. அது யாழ்ப்பாணம்! அங்கே புத்தம் புதிதான விகாரைகள் முளைத்திருக் கின்றன. அவற்றை வழிபடுவதற்காக நாளாந்தம் ஆயிரக் கணக்கில் சிங்களச் சனங்கள் யாழ்ப்பாணத்திற்குப் போகிறார்கள். ஹைஏஸ் வாகனங்களிலும், பேருந்துகளி லும், விறகுகள், சட்டி பெட்டிகள், குழந்தைகள் சகிதம் அவர்கள் போய்க் கொண்டிருக்கிறார்கள். கொள்ளளவை மீறி அன்னாசிப் பழங்கள் நிறைக்கப்பட்ட வாகன மொன்று மூச்சுத் திணறியபடி நகர்ந்தது. “இந்திய மக்களின் அன்பளிப்பு'' என்று எழுதப்பட்ட வெள்ளை பாலித்தீன் பொதிகளடங்கிய வாகனமொன்று கடந்து போனது. கிலுகிலுப்பை, காப்புகள், ஒப்பனைப் பொருட்கள் இன்னபிற பிதுங்கி வழிய சிற்றூர்தியொன்று கடந்து விரைந்தது. யாழ்ப்பாணத்திற்கு அவர்கள் நாகரிகத்தைக் கொண்டு போனார்கள்.

நீலப் படங்கள், களியாட்டங்கள் வழியாக அங்குள்ள இளைஞர்களது உணர்வுகள் திசை திருப்பப்பட்டுக் கொண்டிருப்பதாக நான் சந்தித்த பெரியவர்களில் ஒருவர் ஆதங்கப்பட்டார். நாங்கள் எல்லாவற்றையும் மறந்துவிட வேண்டுமென்று அவர்கள் விரும்பினார்கள். குறிப்பாக விடுதலையை அதன் பொருட்டான உடமை, உயிரிழப்புகளை. வழியில் வாகனம் நிறுத்தப்பட்டிருக்க, தலைவாரிக் கொண்டிருந்த சிங்கள இளம் பெண்ணொருத்தி மெதுவாகக் கடந்த எங்கள் கண்களை உற்று நோக்கினாள். அவள் எதையோ சொல்ல விழைவது போலிருந்தது! அது எனக்கு பிரமையாகவுமிருக்கலாம். அவர்கள் தமிழர்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை நாங்கள் உண்மையில் தெரிந்து கொள்ள விரும்பினோம். சாதாரண சிங்களச் சனங்கள் தமிழர்களின் "வீழ்ச்சியை'க் கொண்டாடு கிறார்களா? எங்களுக்காக அவர்கள் எப்போதாவது துயருற்றார்களா?

“எங்கள் மண்ணை நாங்கள் தோற்று விட்டோம்'' என்ற நினைவு நெருடிக் கொண்டேயிருக்கிறது. இருந்து விட்டுப் போங்கள் நாய்களா!'' என்று அவர்கள் யாசகம் இட்ட நிலத்தில் வாழ்வதைப் போன்ற கூச்சத்தைத் தோலில் உணர முடிந்தது. துட்டகை முனு எல்லாளன் வரலாறு திரும்பியதைப் போல ... ச்சே! இந்தப் புளித்த உதாரணங்களால் புண்ணை நக்கிக் கொள்வதை முதலில் நிறுத்தியாக வேண்டும். முன்னர் விடுதலைப் புலிகளின் சோதனைச் சாவடி இருந்த இடத்தில் ஒரு சுவடுமில்லை. எல்லாம் தலைகீழாகி விட்டது. காற்று மட்டும் உலாவிக் கொண்டிருக்கும் வெற்றிடத்தைக் கடந்து செல்கையில் உரத்து விம்மியழ வேண்டும் போலிருந்தது. கடல் கோள் கொண்ட கிராமத்திலாவது எச்சங்கள் மீதியிருக்கம்.

பிரதான வீதி திருத்தப்படும் இடங்களை, உள்நோக்கி இறங்கும் உப பாதைகள் நிவர்த்திக்கின்றன. அந்தப் பாதைகளில் ஓயாத வாகனப் போக்குவரத்து நிகழ்ந்துக் கொண்டிருக்க, செம்மண் புழுதியேறி சிவந்த தலைகளோடும் உடலோடும் நின்ற பனை மரங்கள் காட்சிப் பிழை போல் தோன்றின. பயண நெடுகிலும் அபத்த நாடகமொன்றில் தவறிப் போய் வந்தமர்ந்து எழுந்தும் போகவியலாமல் அலங்க மலங்க விழித்துக் கொண்டிருக்குமொருத்தியைப் போலிருந்தேன். நான் கிளம்பும் போதே அம்மா கேட்டா, “இப்ப ஏன் யாழ்ப்பாணத்துக்குப் போறாய்?'' “சும்மா பார்க்க'' என்று சொன்னேன். பழகிய, அறிந்த, உறவு மனிதர்களே ஊரெனப் பொருள் கொண்டால், நான் யாழ்ப்பாணத் திற்குப் போயிருக்க வேண்டிய அவசியமில்லை. நானறிந்த, பழகிய, உறவு மனிதர்களில் அநேகர் தொலை நகரங்களுக்கும் தேசங்களுக்கும் பெயர்ந்து போய் விட்டார்கள். அந்த அநிச்சய அமைதியை நான் பயன்படுத்திக் கொள்ள விரும்பினேன். இனியொரு போதிலும் அங்கு போக வாய்க்காது என்று பயந்தேன். இறந்த காலத்தை மீள் சேகரிக்கும் பேராவலே அந்தப் பயணத்தை நோக்கி என்னைச் செலுத்தியது.

நீல நிறக் கூடாரங்கள் சீன எழுத்துக்களுடன் காற்றுக் குப் பழிப்புக் காட்டிக் கொண்டிருந்தன. கூரையைப் பிரித்து கூடாரத்தை வழங்கியிருக்கும் சீன பகவானுக்கு நன்றி.

முறிகண்டிப் பிள்ளையாரைச் சுற்றி வந்த போது அதுகாறும் அடக்கி வைத்திருந்த கண்ணீர் பெருகியோடி யது. எத்தனைதான் நடந்தபோதும் ஒன்றும் செய்யாமல் உட்கார்ந்திருக்கும் கல்லுப் பிள்ளையார்களிடத்தில் நமது கண்ணீரைக் கொட்டித் தீர்ப்பதன்றி வேறு போக்கிடந்தான் ஏது? ஏதேதோ ஞாபகங்கள்... பழகிய போராளிகள். முள்ளிவாய்க்கால், நந்திக் கடல் சிதைந்து சதைக் கூழாய்க் கிடந்த உடல்கள், வைத்திய சாலைகளில் இரத்தக் கட்டோடு வலியில் கதறிக் கொண்டிருந்த குழந்தைகள், "எங்களைக் காப்பாற்றுங்கோ' என்று இரக்கமில்லாத வர்களைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்ட பின் அனைவராலும் கைவிடப்பட்ட கண்ணீர் முகங்கள். வாழ்க்கை மிகக் குரூரமானது! அதிகாரங்களைச் சுண்டு விரலில் வைத்திருக்கும் அரசாங்கங்களே முதலில் தூக்கிலிடப்பட வேண்டியவை. சாதாரண சனங்களின் துரதிர்ஷ்டம் பயங்கரவாதிகளால் ஆளப்பட்டுக் கொண்டிருப்பதே!

கிளிநொச்சி சிதைந்து போய்க் கிடக்கிறது. சமாதான காலத்தில் (?) கண்ட கிளிநொச்சி நகரத்தை தலைகீழாகத் தூக்கி வீசியெறிந்தாற் போலிருக்கிறது. பள்ளிக் கூடத்தில் அகதிகள் இருக்கிறார்கள். நீதிமன்றக் கட்டிடத்தை ஊகிக்க முடிந்தது. ஒரு பெரிய காங்கிரீட் மலை சாய்ந்து கிடப்பதைப் போல் தண்ணீர்த் தொட்டி விழுந்து கிடக்கிறது. புலம் பெயர்ந்த தமிழர்களின் "பாஸ்' போன்ற விடயங்களைக் கவனித்த "நந்தவனம்' இப்போது இராணுவ நிலையமாகியிருக்கிறது. "அறிவமுது புத்தக சாலை' யைத் தேடினேன். காணவில்லை. பேருந்து நிலையமும் பெயர்க்கப்பட்டு விட்டது. அநேகமாக அனைத்துக் கட்டிடங்களும் கூரையிழந்திருந்திருக்கக் கண்டோம். "த' என்று தொடங்கும் இலக்கத் தகட்டினை யுடைய வாகனங்கள் ஒருபுறத்தில் தகரக் குவியல்களாகக் கிடப்பதைப் பார்த்தோம். கரடிப் போக்குச் சந்தியருகில் புதிதாக ஒரு புத்தர் கருணைபாலித்தபடி எழுந்தருளி யிருக்கக் கண்டோம். நம்புதற்கியலாத கனவைக் கண்டு கொண்டிருப்பதைப் போன்றி ருந்தது.

கரடிப் போக்கு சந்தியினைக் கடந்து உப்பளப் பிரதேசத்தினுள் வாகனம் போய்க் கொண்டிருந்தது. உப்பு வாடை மூக்கில் அறைய, அந்த இடத்தில் அலைந்து கொண்டிருந்த வறட்சி மனதில் மேலும் முள் பரத்தியது. இதே ஆனையிறவை விடுதலைப் புலிகள் கைப்பற்றியதும், இராணுவச் சமநிலையில் அந்த வெற்றியானது அந்நாளில் ஏற்படுத்திய மாற்றமும் ஞாபகத்தில் வந்தது. "பொய்யாய் பழங்கதையாய் போயினவே' என்ற அரதப் பழசான புலம்பலும் கூடவே. ஆனையிறவினருகில் உப்புக் காற்றால் துருவேறிய ஒரு கவச வாகனம் கிடந்தது. அதன் மீது ஒரு புகைப்படம் வைக்கப்பட்டிருக்க, இளஞ்சிவப்பு பூக்கள் அதனடியில் கிடந்தன.

தொலைவில் இருந்து பார்க்கும்போது அது ஒரு இராணுவத்தானுடையதாகப் போலிருந்தது. அதைச் சுற்றி நின்று சில இளம் புத்த பிக்குகள் படமெடுத்துக் கொண்டிருந்தார்கள். இராணுவத்தைச் சேர்ந்த யாரோ ஒருவரின் வெற்றியை ஞாபகங் கொள்ளும் சின்னமாக அங்கே அந்தக் கவச வாகனம் காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தது என்பதை ஊகிக்க முடிந்தது. இயக்கச்சி, பளை, கொடி காமம், சாவகச்சேரி எங்கெங் கிலும் இராணுவப் பச்சையால் வேலியமைத்திருக் கிறார்கள். “விடுதலைப் புலிகள் வெற்றி கொள்ளப்பட்டு போர் உண்மையாகவே முடிந்து விட்டதெனில், மக்களைக் காட்டிலும் அதிகப்படியான இராணுவம் வழியில் குவிக்கப்பட்டிருப்பது எதனால்?'' என்ற கேள்வி அந்த வழியாகச் செல்லும் எவருக்கும் எழுவே செய்யும்.

இறந்த காலமும் பிறந்த மண்ணுந்தான் எத்தகைய கிளர்ச்சியூட்டுவனவாக இருக்கின்றன!

"ஆயுபோவன் வெல்கம் ரூ ஒஅஊஊNஅ என்ற வாசகத்தைத் தாங்கிய வரவேற்புப் பலகை ஆரவாரமாக யாழ்ப்பாணத் தினுள் வரவேற்கிறது. கைதடி நாவற் குழிப் பாலத்தில் சிங்கக் கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது. ராஜபக்சே இங்கும் அகலமாகச் சிரித்தபடி நிற்கிறார். என்னவொரு வாஞ்சை வழியும் புன்னகை! டக்ளஸ் தேவானந்தாவும் "கட் அவுட்'களில் தன் பங்கிற்கு அளவாகப் புன்னகைக் கிறார். இவர்களுக்கு அடுத்தபடியாக "டயலொக்' தொலை பேசியின் விளம்பரப் பலகைகளிலும் கடைகளின் பெயர்ப் பலகைகளிலும் ஒரு பெண் தீராத சிரிப்புடன் காட்சியளித்துக் கொண்டிருக்கிறாள். "ஒரே நாடு ஒரே மக்கள்' இன்ன பிற ஐக்கியத்தைக் கோரும் வாசகங்கள் புளகாங்கிதமடையத் தூண்டுகின்றன.

பயணம் குறித்த கிளர்ச்சி ஏறத்தாழ தீர்ந்து விட்டி ருந்தது. உண்மையில் அந்த நிமிடமே நானும் திரும்பிச் செல்ல விரும்பினேன். ஏதோவொரு விசித்திரமான உணர்வு என்னைச் சூழ்ந்து கொண்டிருந்தது. அந்நிய மனிதர்கள் சாரை சாரையாகச் செல்வதைப் பார்த்தபடி அந்நிய நகரமொன்றில் எரிக்கும் வெயிலில் நின்று கொண்டிருப்பதாக உணர்ந்தேன். "ஊர் என்பது மனிதர்களே' என்பதை இத்தனை தூரம் வந்து தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது.

நாங்கள் யாழ்ப்பாண நூலகத்தைப் போய்ப் பார்ப்பதாகத் தீர்மானித்தோம். நாலரை மணியளவில் நூலக வாசலைச் சென்றடைந்தோம். வாசலில் ஒரே கூட்டமாயிருந்தது. "பார்வையாளர் நேரம் பிற்பகல் 56 வரை என்று வாயிலில் எழுதப்பட்டிருந்தது. தென்னிலங் கையிலிருந்து சுற்றுலா வந்திருந்த சிங்களச் சனங்கள் நிறையப் பேர் வாசலில் காத்திருந்தார்கள். “இவர்கள் திரும்பவும் எதற்காக வந்திருக்கிறார்கள்?'' என்று என் தங்கை கேட்டாள். "திரும்பவும்' என்ற சொல்லில் கசப்பு வழிந்தது. பெறுமதி மதிப்பிடவியலா இலட்சக்கணக்கான நூல்களை தீக்கிரையாக்கத் துணிந்த அந்தக் கொடிய இரவும் அதன் வழி உமிழப்பட்ட காழ்ப்புணர்வும் இனவெறியும் மறக்கப்படக் கூடியனவல்ல. உயிர், உடமையிழப்பினைக் காட்டிலும் அறிவழிப்பு என்பது மிகக் கீழ்த்தரமான படுபாதகம்.

யாழ்ப்பாணத்தில் எனது நண்பர்களில் சிலர் எஞ்சியிருந்தார்கள். அவர்களது தொலைபேசி இலக்கங்களும் என்னிடமிருந்தன. ஆனால் அவர்களைச் சந்தித்து என்ன கதைப்பது என்று தெரியவில்லை. உண்மையில் நான் அவர்களைப் பார்க்க விரும்பினேன். எதையும் கேட்க விரும்பவில்லை. நான் எனக்கே எனக்கேயான நம்பிக்கைகளில் வாழ்ந்து கொண்டி ருக்கிறேன். அவை சிதைக்கப்படுவதை நான் விரும்ப வில்லை. ஆதர்ச மனிதர்களும் ஆதர்ச உலகமும் என்றென்றைக்குமாக எனக்குள் வாழ்ந்து கொண்டி ருக்கட்டும். கோண்டாவிலில் எனது தோழியின் வீட்டுப் பக்கம் வாகனத்தைச் செலுத்தப்பணித்தேன். அங்கே அவளில்லை என்பதை நானறிவேன். புகைப் போக்கியிலிருந்து கிளம்பிக் கொண்டிருந்த புகைச்சுருள் அங்கே யாரோ இருக்கிறார்கள் என்பதை அறிவித்துக் கொண்டிருந்தது. மனதின் நீர்ப்பரப்பில் காட்சியலை எழுந்தடங்கிற்று.

நல்லூர்க் கோயில் பூட்டப்பட்டிருந்தது. மாலை ஐந்து மணியோடு பூட்டப்பட்டு விடுவதாக அங்கே நின்றிருந்த ஒருவர் தெரிவித்தார். "திலீபன் இந்த இடத்தில்தான் உண்ணாவிரதமிருந்து மறைந்தார்' ஓரிடத்தைக் காட்டி தங்கையிடம் சொன்னேன். திலீபன் பசியில் கருகியபோது அவள் மூன்று வயதுக் குழந்தையாயிருந்தாள். (சித்தியின் மகளுக்கும் எனக்குமிடையில் பல்லாண்டுகள் வயது வித்தியாசம்) ஆலய முன்புறத்தில் மத்திய கல்லூரி மாணவர்கள் ஏதோவொரு நிகழ்வை முன்னிட்டு பறையினையொத்த மேளமொன்றை அறைந்து கொண்டிருந்தார்கள்.

“இன்றைக்கே வீட்டுக்குத் திரும்பிப் போய்விடலாம்'' என்றாள் தங்கை. எனது எண்ணமும் அதுவாகவே இருந்தது. உண்மையைச் சொன்னால் யாழ்ப்பாணத்தின் முகத்தை எங்களால் பார்க்க முடியவில்லை. ஏதோவொரு மாயக் குரல் என்னை அழைத்தது. பிறகு அது மெல்ல மெல்லத் தேய்ந்து அடங்கிப் போயிற்று. ஏ9 பாதையில் அவரவர் நினைவுகளில் ஆழ்ந்த முகங்களுடன் இருளை ஊடறுத்தபடி திரும்பிக் கொண்டிருந்தோம். பரந்தன் கிளிநொச்சியைக் கடந்தபோது பெரும் வலியொன்று வாள் போல் நெஞ்சைக் கீறிப் பிளந்தது. ஆங்காங்கே மினுங்கிக் கொண்டிருந்த வெளிச்சப் பொட்டுக்கள் இராணுவ முகாம்கள் என்பதை நாங்களறிவோம். அதற்குமப்பால் இருளுக்குள் காடுகளுக்குள் எத்தனை யெத்தனை ஈரக் கண்கள் நிராதரவாய் காத்திருக் கின்றனவோ என்ற ஞாபகம் உயிரைத் தின்றது. கடவுள் என்ற ஒருவர் இருப்பாரங்கில், அவரிடம் கேட்பதற் கென்றொரு கேள்வியுண்டு.

“இவ்வளவு கேவலமாக நாங்கள் கைவிடப்படுவதற்கு அப்படியென்ன பாவம் செய்தோம் ஆண்டவரே!''

குறிப்பு: கடந்த மார்ச் மாதம் யாழ்ப்பாணத்திற்குச் சென்று திரும்பிய பிறகு எழுதியது.

- தமிழ்நதி

Pin It