வயிற்றுக்குத் தமிழ் படித்தோர், வாழ்வுக்குத் தமிழ் படித்தோர் எனத் தமிழ்ப் புலமையாளரை இரு பிரிவாக்கலாம். ஆரியத்தை ஆதரித்துத் தம்மை வாழ வைத்துக் கொள்வோர், ஆரியத்தை எதிர்த்துத் தமிழரை வாழவைப்போர் எனவும் அவர்களை வகைப் படுத்தலாம்.

ஆரியத்திடமிருந்து இனத்தை மீட்க எழுந்தது திராவிடர் இயக்கம்; தமிழை மீட்க எழுந்தது தனித் தமிழ் இயக்கம்.

இனமீட்பராகப் பெரியார் எழுந்தார். மொழி மீட்பராக மறைமலையடிகள் எழுந்தார்.

மறைமலையடிகளார் தமிழுக்கும் சைவத்திற்கும் சமபங்கு அளித்தவர். தமிழுக்கு மட்டுமே இடம் தந்து தனித் தமிழியத்தை அடுத்தகட்டத்திற்கு உயர்த் தியவர் திராவிட மொழிநூல் ஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர்.

பாவாணர் வழியை வளப்படுத்த வந்தோரில் குறிப்பிடத்தக்கவர் புலவர் இரா. இளங்குமரனார். பாவாணர் 1968-இல் உலகத் தமிழ்க் கழகத்தைத் தொடங்கு முன், 10.7.1962-இல் தமிழ்க் காப்புக்கழகம் கண்டவர் பேராசிரியர் சி. இலக்குவனார். இவ்வமைப்பின் முதலாவது பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றவர் புலவர் இரா. இளங்குமரனார்.

தமிழ்க்காப்பு, தமிழ் மீட்பு என இரு நோக்கத்தோடு கருத்துப்போரை எழுத்து வழியாகவும் களப்போரைச் செயல் வழியாகவும் நிகழ்த்தியதால் தமிழ்நாட்டின் கவனத்தைப் பெற்றவர் இளங்குமரனார்.

இவர் தந்தையார் பெயர் இராமு. எப்போதும் படித்துக் கொண்டே இருக்கும் பழக்கம் உடையவர் என்பதால் ஊர் மக்கள் வைத்த பெயர் படிக்கராமு.

தாயார் பெயர் வாழவந்தாள்! அவர் பெயரை நினைவூட்டுவதாய் அமைந்துவிட்டது ஊரின் பெயர். வாழவந்தாள்புரம் என்பதே ஊர்ப்பெயர்!

பெற்றோருக்கு இவர் எட்டாவது குழந்தை. எட்டாவது குழந்தைக்கு அந்த நாளில் ‘கிருஷ்ணன்’ எனப் பெயர் வைப்பது வழக்கம். கிருஷ்ணன் என்ற பெயரை ‘இளங்குமரன்’ என இவர் மாற்றிக் கொள்ளக் காரணமாய் இருந்தது மறைமலையடிகளார், தேவநேயப் பாவாணர் வழியாகப் பெற்ற தனித்தமிழ் உணர்ச்சி.

தொடங்கியதென்னவோ தொடக்கப் பள்ளி ஆசிரியராகத்தான்! ஓய்வுபெற்றதோ மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆய்வு அறிஞராக!

ஆசிரியப் பணியைத் தொடங்கிய போது இவருக்குப் பதினாறு வயது. அதே வயதில் இவருக்குத் திருமணமும் ஆகிவிட்டது. வாழ்க்கைத் துணைவியாக வந்தவர் செல்வம் அம்மையார்.

ஆசிரிய வாழ்வையும் இல்லற வாழ்வையும் அடிமை இந்தியாவிலேயே தொடங்கிவிட்டார். தொடக்கப் பள்ளி ஆசிரியப் பணியைத் தாம் பிறந்த ஊரிலேயே 8.4.1946-இல் தொடங்கினார். புலவர் பட்டம் பெற்ற பின் தமிழாசிரியப் பணியை 1951-இல் கரிவலம் வந்த நல்லூரிலும் தளவாய் புரத்திலும் தொடர்ந்தார். நீண்டகாலம் பணியாற்றியது மதுரை மு.மு.மேல் நிலைப்பள்ளியில்!

தொடர்ந்து 43 ஆண்டுகள் ஆசிரியப் பணியாற்றும் வாய்ப்பை இளங்குமரனார் பெற்றதுபோல், இனியொருவர் பெறுவது அரிது.

மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆய்வு அறிஞராகப் பணியாற்றிய போது, இவர் உருவாக்கியது ‘தொல் காப்பியக் கலைச்சொற் களஞ்சியம்’. நான்காண்டு கால உழைப்பில் அது உருவானது.

தொல்காப்பியம், திருக்குறள் இரண்டையும் தமிழுக்கு வாய்த்த இரு கண்கள் எனப் போற்றுவது இளங்குமரனார் வழக்கம். இரு நூல்களையும் பல கோணங்களில் பார்த்து, இவர் வெளிப்படுத்தியுள்ள நூல்களே எண்ணிக்கையில் மிகுதி.

பாவாணர், இலக்குவனார், பெருஞ்சித்திரனார் முதலிய இவரின் மதிப்பிற்குரிய பலர் திருக்குறளுக்கு உரை வரைந்திருந்தாலும் இவர் மனம் அவற்றில் நிறைவடையவில்லை.

“தந்தை பெரியார் எவை எவை திருக்குறளில் பொருந்தாதன உள்ளன என்றாரோ, அவை யெல்லாம் உரை கண்டவரால் நேர்ந்தவை. வள்ளுவத்தில் பொருந்தாதது எதுவும் இல்லை. நாம் திருக்குறள் முழுமைக்கும் உரை எழுதிவிட்டால் பெரியார் எண்ணத்தை நிறைவேற்றியதாகும்.” (இளங்குமரனார் தன் வரலாறு, ஒரு புல், ப.28)

இந்த நோக்கோடு இளங்குமரனார் உருவாக்கியதே திருக்குறள் வாழ்வியல் உரை. ஈரோட்டில் இந்நூல் ஒரு மாத கால வினா விளக்க நிகழ்ச்சியோடு அரங்கேறியது. உரையாசிரியர்களின் சொல்லாய்வு நுட்பங்களில் தேர்ந்தவர் இவர்.

திருவையாறு அரசர் கல்லூரியில் நான்பயின்ற 1971-ஆம் ஆண்டு, இளங்குமரனார் நூல் தற்செயலாக அறிமுகமானது. கல்லூரி நூலகத்தில் எடுத்துப் படித்த ‘உரையாசிரியர் கண்ட சொற்பொருள் நுண்மை விளக்கம்’ தந்த ஈர்ப்பு இவரின் ஒவ்வொரு நூலையும் தேடிப் படிக்க வைத்தது.

நூலோடு நேர்ந்த பழக்கம். இவரோடு இணைந்து பல ஊர்களுக்கும் செல்லும் பொழிவு வாய்ப்பாக வளர்ந்தது. எந்த ஊரில் எந்தப் பொருளில் பேசினாலும் அதனை உடனே நூலாக விரித்தெழுதும் வழக்க முடையவர் இளங்குமரனார்.

“இவ்வளவு செய்திகளைத் திரட்டி வந்து பேசும் நீங்கள், உடனே இவற்றை நூலாக எழுதுங்கள்.”

ஒவ்வொரு முறையும் இளங்குமரனார் இந்த அறிவுரையைத் தவறாமல் கூறுவார். மிக அரிதாகத்தான் அதனை என்னால் பின்பற்ற முடிந்தது.

‘திரு.வி.க. இப்படித்தான் செய்வார்’ எனத் தம் எழுதுமுறை முன்னோடியாக அவரைக் காட்டுவார். பேசிய உடனேயே குடிஅரசு, விடுதலை ஏடுகளுக்கு எழுதி அனுப்பும் பெரியார் வழக்கத்தையும் ஒப்பிட்டுப் பேசுவார்.

திருவள்ளுவர், மறைமலையடிகள், திரு.வி.க., தேவநேயப் பாவாணர், நால்வரும் தந்த நூல் வெளிச்சத்தில் நடப்பதாகப் பெருமிதம் கொள்பவர் புலவர் இளங்குமரனார்.

தமக்குப் பெயர் தந்தவராக மறைமலை அடிகளாரை யும் நெஞ்சம் தந்தவராகத் திரு.வி.க.வையும் தோள் தந்தோராகப் பாவாணர் இலக்குவனாரையும் துணிச்சல் தந்தோராகப் பாரதியார், பாவேந்தரையும் குறிப்பிடுவது இளங்குமரனார் வழக்கம். தம்மை வடிவமைத்த அடித்தளங்களை மறக்காத அந்த இயல்பே, இவரைப் பலரும் வழிகாட்டியாக நினைக்கும் அளவிற்கு உயர்த்தியது.

“தனித்தமிழ்ச் சொல்லாய்வாளர், வரலாற்று ஆசிரியர், உரையாசிரியர், படைப்பாளர், பாவலர், பதிப்பாசிரியர், பழம்நூல் மீட்பர்”எனப் பல முனைகளிலும் விரிந்த அறிவுப் பரப்பைக் காட்டுவன இவரின் நூல்கள்.

ஐநூறுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய இளங்குமரனார், அத்தனையும் கைப்பட எழுதியவை. மறைவதற்குச் சில நாள் முன்பு இவர் இறுதியாக எழுதிய எழுத்தும் மணிமணியாக உள்ளது.

எழுத்து நடுக்கமும் நினைவுத் தடுமாற்றமும் வாராத பெரும்பேறு, 91 வயதிலும் இவருக்கு வாய்த்தது வியப்பு.

கருத்துப் பணியோடு நின்றுவிடாமல், தமிழ் காக்கும் களப்பணி வீரராகவும் செயல்பட்டார். அறிஞர் சி. இலக்குவனார் உருவாக்கிய தமிழ்க்காப்புக் கழகத்தின் பொதுச் செயலாளராகத் திகழ்ந்தார்.

பாவாணரின் ‘உலகத் தமிழ்க்கழகம்’, ‘குறளாயம்’ என இவர் பணியால் பயன்கொண்ட அமைப்புகள் பல.

தமிழ்ப் பயிற்று மொழியை வலியுறுத்திச் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 25.4.1999-இல் நடந்த உயிர் துறக்கும் போராட்டத்திலும், 102 அறிஞர்க் குள் ஒருவராகத் தோள்தட்டி நின்றவர் இளங்குமர னார்.

தமிழர் வாழ்வின் எல்லா நிலைகளிலும் தமிழை முன்னிறுத்த வேண்டும் என்பதற்காக திருச்சிராப்பள்ளி காவிரியாற்றங்கரையில் ‘திருவள்ளுவர் தவச்சாலை’ நிறுவினார். தமிழில் திருமணம், குடமுழுக்கு, வாழ்வியல் சடங்குகள் நடத்தவல்ல நூற்றுக்கணக்கானோரைப் பயிற்சி தந்து உருவாக்கினார்.

தமிழில் திருமணம் நடத்துவதை 21 வயதில் தொடங்கி, எழுபதாண்டுகள் தொடர்ந்து நடத்தி வந்தார். நான்காயிரத்திற்கு மேற்பட்ட திருமணம் நடத்தி வைத்திருப்பதைப் பட்டியலிட்டு ஆவணப்படுத்தியுள்ளார்.

இவரின் சொல்லாய்வுத் திறம் வியந்த தேவநேயப் பாவாணர், தமது ‘செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி’த் திட்டத்தின் சிறப்புத் தொகுப்பாளராக இவரை இணைத்துக் கொண்டார்.

தமிழுக்குக் கிடைத்த அரும்பொருள் வைப்பாகப் பாவாணர் வழங்கியுள்ளவை 58 நூல்கள்! புலமை வாய்ந்தோரே பாவாணர் நூலோடு உறவாட முடியும்.

பாவாணர் நூற்பரப்பு முழுமையிலும் பரவிக் கிடக்கும் வேர்ச்சொல்லாய்வு விளக்கங்களைத் திரட்டி, பாவாணர் நூல்களுக்கு நுழைவாயிலாக ‘தேவநேயம்’ என 14 தொகுதிகளை வழங்கியுள்ளார் இளங்குமரனார்.

பாவாணர் வரலாற்றை எழுதியுள்ள இவர், பாவாணர் மடல்களைத் திரட்டி இரு தொகுதிகளாக வெளியிட்டுள்ளார்.

தொல்காப்பியத்தில் மனம் தோய்ந்து மூழ்கி எழுந்த இளங்குமரனார், தொல்காப்பிய முழு நூற்பிழிவாக வழங்கியுள்ள அரிய நூல் ‘தமிழர் வாழ்வியல் இலக்கணம்’. தொல்காப்பியத்தில் புலமை பெற விரும்புவோர்க்கு இவர் வழங்கியுள்ள வழிகாட்டி நூல் ‘தொல்காப்பியம் சொற்பொருட்களஞ்சியம்’.

தமிழ்ச் சொற்கள் ஒவ்வொன்றுக்கும் பொருட் காரணம் உண்டு என்பார் தொல்காப்பியர். ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்பது நூற்பா. அதனை உறுதிப்படுத்தும் பெரு முயற்சியில் ஈடுபட்டு, ‘செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம்’ எனும் பத்துத் தொகுதிகளை வழங்கியுள்ளார் இளங்குமரனார். ‘அழகு’ எனும் ஒரே ஒரு சொல்லுக்கு 67 பொருள் உண்டு என்று மெய்ப்பிக்கும் அழகே அழகு.

இவர் எழுதியவை அனைத்தும் மக்களை எட்டும் அரும்பணியைச் சென்னை தமிழ்மண் பதிப்பகம் வாயிலாக நிறைவேற்றியிருப்பவர் (அண்மையில் மறைந்த) கோ. இளவழகனார்.

இளங்குமரனார் எழுதியவை தமிழ்மண் பதிப்ப கத்தால் உடனுக்குடன் நூலானதால் ஊக்கம் பெற்ற இவர் தொடர்ச்சியாக எழுதிக் குவித்தார்.

‘நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிப்பேன்.

படிக்காதபோது எழுதிக் கொண்டிருப்பேன்’

இப்படியொரு வாழ்க்கை முறையை இவர் அமைத்துக் கொண்டதால், எழுத்தாலும் படிப்பாலும் தமிழே இவரின் மூச்சானது.

‘ஒரே ஒரு நூலை மட்டும் படித்து அறிஞராக முடியுமா?’ என வினவுவோர்க்கு இளங்குமரனார் விரல் நீட்டும் நூல் ‘புறத்திரட்டு’. புறத்திரட்டைப் படிக்கும் எவரும் அறிஞராவது உறுதி என்பார்.

அழிந்துபோன நூல்களாகக் கூறப்பட்ட காக்கைபாடினியம், களவியற்காரிகை முதலிய பல நூல்கள் இவரால் உயிர் பெற்றன.

தமிழரின் வாழ்வியல் நடைமுறைகளை விளக்கும் ‘தமிழக ஒழுகு’ எனும் அரிய நூலை இவரைப் பதிப்பிக்கச் செய்து வெளியிட்டுள்ளது பாரதிதாசன் பல்கலைக்கழகம்.

அந்த நூலை எழுதிய விருதை சிவஞான யோகி 19.11.1908-இல் தொடங்கிய திருவிடர் கழகமே முதல் தனித்தமிழ் அமைப்பு என இளங்குமரனார் வெளிப் படுத்தியபோது, வியந்தது தமிழுலகம்! திருவிடர் கழகத்தில் உறுப்பினராக இருந்த சுவாமி வேதாசலம், அங்குப் பெற்ற தனித்தமிழ் உணர்வால் 1916-இல் விரிந்த அளவில் உருவாக்கியதே தனித்தமிழ் இயக்கம்.

தனித்தமிழ் இயக்கம் (1981), தேவநேயப் பாவாணரின் சொல்லாய்வுகள் (1985), இலக்கண வரலாறு (1990) முதலான ஆய்வு நூல்களால் ஆய்வுச் செழுமைக்கு வலிமையூட்டினார் இளங்குமரனார்.

சுவடிகள் அச்சேறிய வரலாற்றை விளக்கும் இவரின் சுவடிக்கலை (1984), சுவடிப் பதிப்பு வரலாறு (1990) நூல்கள் கடும் உழைப்பில் பிறந்தவை என்பதை அறிந்தோர் சிலரே!

சி.வை. தாமோதரனார், உ.வே.சா. வழியில் பழைய நூல்களைத் தேடிப் பதிப்பிப்பவராக நம் காலத்தில் திகழ்ந்தவர் புலவர் இளங்குமரனார்.

அரசஞ்சண்முகனார் வரலாற்றை எழுதும் பணியில் ஈடுபட்டிருந்த இவர், சோழவந்தானுக்குச் சென்றுள்ளார். அரசஞ்சண்முகனாரின் சொந்த ஊர் சோழவந்தான்.

பெரும்புதையல் போல அரிய நூல்களும் ஆவணங் களும் அங்கே இவருக்குக் கிடைத்தன. தனித்தமிழ் காக்கும் முதல் அமைப்பாக 1908-இல் சிவஞான யோகி உருவாக்கிய ‘திருவிடர் கழகம்’ தொடர்பான வியப்பான ஆவணங்கள் அங்கே கிடைத்துள்ளன. அந்த அமைப்பில் உறுப்பினராக இருந்த ‘சுவாமி வேதாசலம்’ பின்னர் மறைமலையடிகள் ஆனார். தனித்தமிழியக்கத்தை விரிவுபடுத்திச் செயல் வேகமூட்டி னார் என்பதையெல்லாம் அந்த ஆவணங்கள் பேசின.

தமிழருக்கான வாழ்க்கைச் சட்ட நூல் இல்லை என்பது இன்றுவரை குறையாகத் தொடர்கிறது. ஈழத் தமிழருக்குத் ‘தேசவளமைச் சட்டம்’ உள்ளது.

தமிழரின் வாழ்க்கைச் சட்ட நூலாகச் சிவஞான யோகி ‘தமிழக ஒழுகு என்ற மக்கட் சட்டம்’ என்ற நூலை 1923-இல் எழுதியிருப்பதைக் கண்டுபிடித்தவர் இளங்குமரனார். திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகம் அந்த நூலை அழகிய பதிப்பாக 2010-இல் வெளியிட்டுள்ளது. அந்த நூல் இரு பாகங்களைக் கொண்டது.

ஒரு பகுதி கிடைத்தும் இரண்டாம் பகுதி கிடைக்க வில்லையே என்ற ஏக்கத்துடன் இளங்குமரனார் வாழ்வு நிறைவு பெற்றுவிட்டது.

செந்தலை ந.கவுதமன்