narayanasamy91-ஆம் அகவைநாளில் நேர்காணல்

பத்து நாட்களாக உடல்நலம் இல்லாமல், சளித் தொல்லை, மூச்சுவிடமுடியவில்லை. தனலட்சுமி - சீனிவாசன் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டேன்.

கடைசியாக “அறுவை சிகிச்சை செய்யவேண்டும். துணைக்கு யார் வந்திருக்கிறார்கள்?” என்றனர். “யாருமில்லை” என்றேன். “துணையோடு வாருங்கள்” என்று அனுப்பிவிட்டனர்; வந்துவிட்டேன்.

வயது என்ன? 90 இருக்குமா?

ஆமாம். 90-தான் நடக்கிறது. 30.11.2019-இல் 91 ஆரம்பம்.

இதற்குமேல் அறுவை சிகிச்சை வேண்டாம். பெருந் தொல்லை.

நானும் அப்படித்தான் நினைக்கிறேன். ஆனாலும் மூச்சுவிட முடியவில்லை. 10 அடிகூட நடக்கமுடிய வில்லை. நடுமகன் மேகநாதன்தான் பார்த்துக் கொள்கிறான். வீட்டில் உள்ள பேரன், பேத்திகள், மருமகள் எல்லோரும் சாப்பிடுங்கள், சாப்பிடுங்கள் என்று நச்சரிக்கிறார்கள்; முடியவில்லை. அவ்வப் போது மாத்திரை போட்டுக்கொள்கிறேன்; ஆனாலும் சரியாகவில்லை.

உங்கள் இளமைக் காலம் பற்றிச் சொல்லுங்கள்.

எங்கள் குடும்பம், கொள்ளுத்தாத்தா நாராயணசாமி காலத்தில் பெரியவெண்மணியிலிருந்து வரகூருக்கு வந்துள்ளது. அவருக்கு மூன்று மகன்கள், ஒரு பெண். மூத்தமகன் நா.கோவிந்தசாமிக்கு மாரி முத்து, இராமாயி ஆகிய இரு பிள்ளைகள்.

என் பெற்றோர் மாரிமுத்து - செல்லம்மாளுக்கு பிறந்த பெண் குழந்தைகள் அடுத்தடுத்து இறந்து விட்டன. நான் 6-ஆவது குழந்தை. இன்று, 30.11.2019-இல் நாராயணசாமி (91) ஆகிய நான் மட்டுமே உயிருடன் இருக்கிறேன்.

எதுவரை படித்தீர்கள்?

உள்ளூரில் இருந்த தொடக்கப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு வரை படித்தேன். மேற்கொண்டு படிக்க என் தந்தையார் ஒப்புக் கொள்ளவில்லை. 10 ஏக்கர் நிலம், நிறைய கால்நடைகள் இவற்றைப் பார்த்துக் கொள்ள நான் பயன்பட்டேன்.

பெரியாரை எங்கே, எப்போது பார்த்தீர்கள்?

எனக்கு வயது 19 நடந்தது. 1948-இல் எங்க மூத்த அக்கா அலமேலு, மாமா இ.க.தங்கவேல் ஆகியோரைப் பார்க்க இலந்தங்குழிக்கு அடிக்கடி போவேன். மாமா சிவபக்தர். அவரைப் பார்த்து நானும் பக்தனானேன்.

அப்போதுதான் பெரியார் அரியலூர் வருகிறார் எனத் தெரிந்து நானும், மாமாவும் ஆ.செ.தங்கவேல் மற்றும் சிலரும் அரியலூருக்கு பெரியாரைப் பார்க்கப்போனோம். பெருமாள் கோயில் தெருவில் பி.ஆர்.சின்னசாமி தலைமையில் கூட்டம் நடந்தது.

பெரியார் கடவுள், மதம், புராணம், சமுதாயம் எதையும் விட்டுவைக்கவில்லை. அதிலுள்ள வண்ட வாளங்களை ஆதாரத்துடன் விளக்கிப் பேசினார். அதைக்கேட்ட எங்களுக்குப் பேரதிர்ச்சி! என்னடா இப்படிப்பேசுகிறார்? பயங்கரமா இருக்கிறதே! மறுக்க முடியாத அளவுக்கு ஆதாரமும் இதோ கையில் வைத்திருக்கிறேன் என்கிறாரே! வியப்பாக இருந்தது.

மூன்று மணிநேரம் பேசினார். அவர் பேச்சைக் கேட்ட எல்லாரும் கற்சிலைபோல் உட்கார்ந்திருந் தனர். எந்தஒரு சலசலப்புமில்லை. பேச்சு முடிந்தது; வீட்டுக்கு வந்தோம். அவ்வளவுதான். அன்று முதல் சுயமரியாதைக்காரனாக மாறிவிட்டேன்.

திருமணம், குடும்பம் பற்றிச் சொல்லுங்கள்.

1950-இல் பெரிய திருக்கோணம் தாய்மாமன் மகள் அலமேலுவைக் கட்டிவைத்தனர். எங்களுக்கு மூன்று மகன்கள், ஒரு மகள். முதல் மகன் பாண்டியன் - பொறியாளர்; 2 ஆண்டுக்குமுன் இறந்துபோனார். 2-வது மகன் மேகநாதன், 3-வது மகன் காமராசு, 4-வது பெண் அறிவுக்கண்ணு. மகளுக்குப் பெரியார் பெயர் வைத்தார்.

இயக்கப் பணிகள் பற்றிச் சொல்லுங்கள்.

பெரியார் பேச்சைக் கேட்டபின்னர் நெற்றியில் விபூதி பூசுவது போச்சு. பெயருக்குப் பின்னால் சாதிப்பட்டம் போச்சு. சாதிமறுப்பில் தீவிரம்.

உள்ளூரில் ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த கந்தனுக்கு சுயமரியாதைத் திருமணம் நடத்தி வைத்தோம். “சாதி இல்லை; தீட்டு இல்லை என் கிறீர்களே! சாப்பிட்டுப் போங்கள்” என்றனர். அவ் வாறே நான், அந்தூர் கி.இராமசாமி, ஆ.செ.தங்க வேல், கூடலூர் சுப்பையா அனைவரும் சாப்பிட்டு விட்டு வீடு திரும்பினோம்.

ஊரில் சாதிக் கட்டுப் பாடு செய்துவிட்டார்கள். எனக்கு அச்சமாக இருந்தது. ஆனால், நம் தோழர்கள், “எதற்கும் கவலைப்படாதீர்கள்; நாங்கள் இருக்கிறோம்” என்றனர். காலப்போக்கில் எல்லாம் சரியாயிற்று.

உங்கள் பொதுத்தொண்டு பற்றித் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.

என்னை மூன்று முறை ஊராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர் (1960-65; 1970-75; 1985-90). அந்தூரில் இருந்து வரகூரைப் பிரித்து தனிப் பஞ்சாயத்து ஆக்கினேன்.

1967-இல் வரகூரில் இருந்த 110 வீடுகள் தீயிக்கு இரையாயின. ஊர்க் கமிட்டி அமைத்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டும் பலனில்லை. நேரே அறிஞர் அண்ணாவிடம் சென்று மனு கொடுத்தேன். 3 மாதம் கழித்து உரு.1,10,000/- வழங்கி ஆணை வந்தது. பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் து.ளு.இராசு அவர்கள், “எப்படி ஐயா இந்தக் காரியத்தைச் சாதித்தீர்கள்!” எனக் கட்டிப்பிடித்துக் கொண்டு பாராட்டினார். தெரு மேம்பாட்டு வசதி, குடிதண்ணீர் வசதி, சாலைகள், பாலங்கள் என அன்றைக்கு நாங்கள் செய்ததைவிட, இன்றுவரை ஒரு கொம்பனும் அதிகம் செய்துவிடவில்லை.

அறிஞர் வே.ஆனைமுத்துவுடன் எப்போதிருந்து தொடர்பு?

வீரானந்தபுரம் கணபதி குன்னத்தில் ஆசிரியர் வேலையில் இருந்தார். அந்தப் பகுதியில் பலரைப் பகுத்தறிவாளராக மாற்றிய பெருமை அவரையே சாரும். நானும் மற்ற தோழர்களும் அவரை அடிக் கடி சந்திப்போம். பெரம்பலூர் வட்ட தி.க. கூட்டம் குன்னத்தில் 2 நாள் மாநாடுபோல நடந்தது. அது முதல் தோழர் ஆனைமுத்துவோடு தொடர்பு.

அதனைத் தொடர்ந்து, நடந்த 26.11.1957-இல் சாதி ஒழிப்புப் போராட்டம், இந்திய தேசப்பட எரிப்புப் போராட்டம் (1960), இராமாயண எதிர்ப்புக் கிளர்ச்சி (1966) போன்றவற்றில் கலந்துகொண்டு கைதாகி விடுதலையானேன்.

தோழர் எஸ்.டி.விவேகி, வே. ஆனைமுத்து, கூட லூர் சுப்பையா, அந்தூர் இராமசாமி, ஆ.செ.தங்கவேலு இன்னும் பலரை யெல்லாம் அழைத்துத் திராவிடர் கழகக் கூட்டங்கள் நடத்தியுள்ளேன். அணைக்கரை டேப் தங்கராசை வைத்தும் கூட்டம் நடத்தினேன்.

06.06.1966-இல் வரகூருக்குப் பெரியாரை அழைத்துக் கூட்டம் நடத்தினேன்.

ஆனைமுத்து ஆரம்பித்த ‘பெரியார் சமவுரிமைக் கழகம்’ (இப்போது மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி) என்னை அவருடன் அதிக நெருக்கம் கொள்ளச் செய்தது.

2017 வரை பெரம்பலூர் மாவட்டத்தில் பெரியார் பிறந்த நாள் கூட்டம், அம்பேத்கர், பாரதிதாசன் பிறந்த நாள் கூட்டம், மலர் வெளியீடு மாநாடு எனப் பணியாற்றி இருக்கிறேன்.

2000 ஆண்டில் என் துணைவியார் இறந்தார். அதன் பிறகு உடல்நலம் கெட்டது.

2012 முதல் ‘நாராயணசாமி - அலமேலு கல்வி அறக்கட்டளை’ (பதிவு எண்.53/2012) என ஒன்றை நிறுவி ஆண்டுதோறும் 10-ஆம் வகுப்பில் முதல், இரண்டு, மூன்று மதிப்பெண் பெறும் மாணவர் களுக்கு ரூ.3000, ரூ.2000, ரூ.1000 பரிசு அளித்து வருகிறேன். 200-க்கும் மேற்பட்ட சுயமரியாதைத் திருமணங்கள் நடத்தியிருக்கிறேன். ஆதிதிராவிட மாணவர்கள் கோயில்நுழைவு நடத்தியிருக்கிறேன்.

இரா. கலியமூர்த்தியுடன் எப்போது தொடர்பு ஏற்பட்டது?

அரியலூரில் ஆ.செ.தங்கவேல், பெரியார் அங்காடியும் தேநீர்க் கடையும் நடத்தினார். அங்கே வந்த போதுதான், ஆனைமுத்துவுடன் உங்களை 1976-இல் சந்தித்தேன். அதுமுதல் நமது நட்பு தொடர்கிறது.

30.11.2019-இல் தங்களுக்கு 91-ஆவது பிறந்த நாள் வருகிறது. அன்று இரா.கலியமூர்த்தி, புலவர் அரங்க நாடன், தமிழ்க்களம் இளவரசன், காட்டுமன்னார்குடி தி.துரைசித்தார்த்தன் ஆகியோர் தங்களுக்குப் பிறந்தநாள் விழா கொண்டாட முடிவு செய்திருக்கிறோம் என்ற மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் சந்திப்போம். வணக்கம்.

மா.நாராயணசாமி : நன்றி, வணக்கம், வாருங்கள்!