‘ஜவஹர்லால் நேரு தேசிய நகரப் புனரமைப்புத் திட்டத்திற்கு' குறைந்தது ஒரு லட்சத்து இருபதாயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்று கூறப்படுகிறது.

Globe இந்தப் பணத்திற்கு எங்கே போவது? என்ற கேள்வி உடனே எழும். இந்தத் திட்டத்தை நடத்த வேண்டும் என்ற ஆலோசனையை முதன் முதலில் மத்திய அரசுக்கு யார் கொடுத்தது என்பதை அறியும் போது திட்டத்திற்குத் தேவையான பணம் எங்கிருந்து யாரால், எதற்காக வரப் போகிறது என்பது புரியத் தொடங்கும்.

இந்திய நகரங்களில் வாழும் மக்களின் அடிப்படை வசதிகளை மாற்றி அமைக்கும் "மெகா' திட்டம் ஒன்றை உருவாக்கினால் தனக்கு சாதகமான அரசியல், பொருளாதார சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்ள முடியுமா என்று 1990 ஆம் ஆண்டில் அமெரிக்க அரசு சிந்திக்கத் தொடங்கியது. இந்தப் பணியை நடத்தி முடிப்பதற்காக அதன் ‘கொடை' நிறுவனமான ‘சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க நிறுவனம்' களம் இறக்கி விடப்பட்டது.

1993 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து USAID நிறுவனம் புதுடெல்லியில் உள்ள ‘நகரங்களுக்கான தேசிய ஆய்வு நிறுவனத்துடனும்', (NIUA) வீடுகள் கட்டக் கடன் கொடுக்கும் மத்திய அரசு நிறுவனமான HUDCOவுடனும், நாட்டின் அடிப்படை வசதிகளை மாற்றி அமைப்பதற்காக அரசு மற்றும் தனியார் துறைகளுக்கு வட்டிக்குக் கொடுத்து வந்த ஐ.எல்.எஃப்.எஸ் என்ற கந்து வட்டிக் கம்பெனியுடன் சேர்ந்து இதற்கான பல்வேறு செயல்களில் ஈடுபட ஆரம்பித்தது. FIRE(D) என்று இந்தத் திட்டத்திற்கு பெயர் சூட்டப்பட்டது. பொதுத்துறைக்குக் கடன் கொடுக்கும் வட்டி நிறுவனங்களை மாற்றி அமைப்பதும், அவற்றைப் பரந்த அளவில் வளர்த்து விடுவதுமே FIRE(D) என்ற பெயருக்கான் பொருளாகும்.

USAID இன் செயல்பாடுகள் மட்டும் போதாது என்று அமெரிக்க அரசு நினைத்ததோ என்னவோ உலக வங்கியும் இதற்கான பணியில் இறங்கியது. 1980 களின் இறுதியில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள நகரங்களின் அடிப்படை வசதிகளை மாற்றியமைப்பதற்காக உலக வங்கி கடன் கொடுக்கத் தொடங்கியது. தமிழ்நாடு நகர வளர்ச்சிக்கான நிதி (TNUDF)என்பது இதன் பெயராகும். இந்த நிதியை நிர்வகிப்பதற்கு 1996ம் ஆண்டின் போது தமிழ்நாடு அரசையும், ஐ.சி.ஐ.சி.ஐ, ஹெச்.டி.எஃப்.சி., ஐ.எல்.எஃப், எஸ் ஆகிய கந்து வட்டிக் கம்பெனிகளையும் உறுப்பினர்களாகக் கொண்டு TNUIFSL என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் 51% பங்குகளை மேற்கூறிய கந்துக் கம்பெனிகளும், 49% பங்குகளை தமிழ்நாடு அரசும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று உலக வங்கி பார்த்துக் கொண்டது. இதன் காரணத்தால் TNUIFSL நிறுவனத்தின் அனைத்து இறுதி முடிவுகளையும் இந்த வட்டிக் கம்பெனிகளே முடிவு செய்யும் நிலை ஏற்பட்டது.

மேற்கூறிய இரண்டு திட்டங்களும் முதலில் சிறிய அளவில், நகரங்களின் குறிப்பான வசதிகளை மாற்றி யமைக்கும் திட்டங்களுக்கு வட்டிக்குக் கொடுக்கும் செயலில் ஈடுபட்டன. இவ்வாறு ஈடுபட்ட போது தான் இரண்டு முக்கிய பிரச்சினைகள் அவற்றின் கவனத்திற்கு வந்தன. இது போன்ற திட்டங்களுக்கு வட்டிக்கு விடும் போது வட்டிப் பணத்திலிருந்து கூடுதல் ஆதாயம் பெற வேண்டும் என்றால் அதற்கு சாதகமாகத் திட்டத்தை வளைத்துக் கொடுக்கும் பொறயாளர்களின் துணை அவசியம் என்பது முதல் படிப்பினை, வட்டிக்கு வாங்கும் உள்ளாட்சி நிர்வாகங்களில் இருந்து இந்தக் கந்து வட்டித் திட்டத்தை எதிர்த்துக் குரல் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? அரசிடம் கூட்டு வைக்காமல் இதைச் சாத்தியமாக்க முடியாது என்பதை அவை முதலில் புரிந்து கொண்டன. வட்டிக்கு வாங்கும் உள்ளாட்சித் நிர்வாகங்களுக்கு அரசிடம் இருந்து கூடுதல் இலவசத் திட்டங்களைப் பெற்றுக் கொடுப்பதன் மூலமாக எதிர்ப்பைச் சமாளிக்க முடியும் என்ற படிப்பினையை அவை அடைந்தன.

இவைதவிர, வட்டிக்கு வாங்கும் உள்ளாட்சி நிறுவனங்கள் வட்டியை ‘ஒழுங்காக'த் திருப்பிக் கட்டுவார்களா என்பதைத் தெரிந்து கொள்ளாமல் பணத்தை முதலீடு செய்ய முடியுமா? சிரத்தையுடன் தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி நிறுவனிங்களே சில சமயம் வட்டியைத் திருப்பிக் கட்டத் தவறி விட்டால், அதை வசூலிக்க என்னென்ன முறைகளைக் கையாள வேண்டும்? என்கிற கேள்விகளையும் அவை சந்தித்தன.

உள்ளாட்சி நிறுவனங்களின் வரவு செலவுகணக்குப் புத்தகத்தை நிர்வகிக்கும் முறையை மாற்றி அமைத்தால் ஒழிய எந்தெந்த உள்ளாட்சி நிறுவனங்களால் வட்டிப் பணத்தைத் திருப்பி அடைக்க முடியும் என்பதைத் தெரிந்து கொள்ள முடியாது என்பதை அவை உணர்ந்து கொண்டன. இதன் காரணமாகவே உள்ளாட்சியின் நிதி நிலையைத் தெளிவாகத் தெரிவிக்கும் கணினி மயப்படுத்தும் திட்டத்தை உள்ளாட்சி நிர்வாகங்களைக் கடைப்பிடிக்க வைக்க வேண்டும் என்று அவை முடிவு செய்தன. மாநில அரசுகளின் உதவி கொண்டு இதனை நடைமுறைப்படுத்தவும் தொடங்கியிருக்கின்றன.

மேலும் வட்டிக்கு கொடுக்கப்படும் பணத்திற்கு ஈடாக உள்ளாட்சிகளின் வருவாய் நிதியை ஈடாக எழுதி வாங்கினால் ஒழிய வட்டிப் பணத்திற்கு உத்தரவாதம் இல்லை என்பதை அவை உணர்ந்து கொண்டன. இதன் காரணமாகவே வட்டிக்கு வாங்கும் உள்ளாட்சி நிர்வாகங்கள் தம் வருடாந்திர வருவாயை வட்டி நிறுவனங்களால் பரிந்துரை செய்யப்பட்டும் வங்கிகளில் ஈடாகக் கட்டிய பின்னரே பணத்தையும் எப்போதும் போல உபயோகிக்க வேண்டும் என்றும், வட்டியைக் கட்டத் தவறும் போது ஏற்கனவே ஒப்பந்தம் செய்து கொண்டதற் கிணங்க ஈட்டை நிர்வாகித்து வரும் வங்கியனாது உள்ளாட்சி நிர்வாகத்தை கேட்காமலேயே அந்த வருடத்திற்கான வட்டியையும் அசலையும் கழித்து வட்டி நிறுவனத்திற்கு அனுப்பிக் கொள்ளலாம் என்றும் கூறுகின்ற திட்டத்தை அவை உருவாக்கின.

திருப்பூர் நகரத்தின் கூட்டுக் குடிநீர் பாதாள சாக்கடைத் திட்டம், பூனா நகரத்தின் குடிநீர் சாக்கடைத் திட்டம், பெங்களூர் குடிநீர்த் திட்டம், சென்னை மெட்ரோ வாட்டர் திட்டம், ஆலந்தூர் பாதாள சாக்கடைத் திட்டம், நாகபுரி/ விஜயவாடா/ திருப்பூர் நகரங்களின் திடக்கழிவு மேலாண்மைத் திட்டங்கள், மதுரை பை பாஸ் ரோடு திட்டம், கூரர் கட்டணப் பாலத் திட்டம், கோவை நகரின் எல் டி ஆத்துப்பாலம், ஆகிய திட்டங்களில் இருந்து USAIDஉம் உலக வங்கியும், மேற்கூரிய கந்து வட்டி நிறுவனங்களும் தமக்கான ஆரம்பக் கல்வியைக் கற்றுத் தெளிந்தன.

இந்தத் தெளிவின் அடிப்படையில் இயங்கியதால் இந்த நிறுவனங்களின் பண பலமும் மத்திய, மாநில அரசுகளிடம் இருந்த செல்வாக்கும் பல்கிப் பெருகின. சிறிய திட்டங்களில் இருந்து கற்ற பாடங்களை ‘மெகா' திட்டமாக நாடு முழுவதிலும் ஈடுபடுத்துவதற்கான காலம் 2004ம் ஆண்டில் கனிந்தது. இதற்கான திட்டத்தை NIUA உதவியுடன் அவர்கள் தயாரிப்பதில் ஈடுபட்டனர். இந்திய பிரதமர் மன்மோகன்சிங் அவர்களின் ஜூலை 2005 ஆம் ஆண்டு அமெரிக்க விஜயமும், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் பிப் 2006ஜுலை மாதத்திய இந்தியப் பயணம் இந்தத் திட்ட தயாரிப்புக்கு மிகப் பெரிய ஊக்கத்தை அளிப்பதாக அமைந்தது. இவ்வாறு தீட்டப்பட்ட திட்டம் 2005 டிசம்பரில் 'ஜவஹர்லால் நேரு நகரப் புனரமைப்புத் திட்டம்' என்ற பெயரில் பிரதமர் அவர்களால் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது'.

இத்திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியின் ‘உள் கட்டமைப்பு வசதிக்கு 35000 கோடி ரூபாயும், கோவை மாநகரின் உள் கட்டமைப்பு வசதிக்கு 3186 கோடி ரூபாயும் மதுரை மாநகருக்கு 3000 கோடி ரூபாயும், ஒதுக்கியது. சோழியன் குடுமி சும்மாவா ஆடும்? நாம் கோவை மாநகரை மட்டும் இந்த இதழில் பார்ப்போம்.

இந்தியாவின் மற்ற 62 நகர மக்களைப் போலவே, கோவை நகரத் திட்டம் குறித்து தெரிந்திருக்கவில்லை. நம் கருத்துகளைக் கேட்காமலேயே நம் அடிப்படை வசதிகளை மேம்படுத்த மேற்கூறிய வாறு செயல்பட்டு வரும் அமெரிக்க ரோடு போடும் கம்பெனியான "வில்பர் ஸ்மித் அசோசியேட்ஸ்' நிறுவனத்துடன் மாநகராட்சி ஒப்பந்தம் செய்து கொணடது. ஜுலை 2006 இல் திட்ட அறிக்கையை அந்த நிறுவனம் மாநகராட்சியிடம் சமர்ப்பித்தது.

நகர மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த 3186 கோடி ரூபாய் தேவைப்படும் என்று கூறிய அந்த அறிக்கை. இந்தப் பணத்தில் சுமார் 908 கோடி ரூபாயை மாநகராட்சித் திட்டம் பட்சத்தில் (அல்லது அதற்கான உத்தரவாதத்தை அளிக்கும் பட்சத்தில்) ஜவகர் திட்டத்தின் கீழ் மீதியுள்ள 2278 கோடி ரூபாயை மத்திய, மாநில அரசுகள் இலவசமாக வழங்கும் என்று அறிவித்தது. வரவுக்கும் செலவுக்குமே சரியாக இருக்கும் நிதியைக் கொண்டிருக்கின்ற மாநகராட்சியால் 908 கோடி ரூபாயை எப்படித் திரட்ட முடியும்? ஆனால் இந்தப் பணத்தைத் திரட்டாவிட்டால் 2278 கோடி இலவசப் பணம் கிடைக்காது என்ற கிடுக்கிப் பிடி போடப்பட்டது.

இந்த இக்கட்டான பிரச்சினையை எப்படித் தீர்ப்பது என்ற ஆலோசனையையும் அது வழங்கியது. ‘908 கோடி ரூபாயை மாநகராட்சி ஏன் திரட்ட வேண்டும்? அந்தப் பணத்தைத் தனியார் நிறுவனங்களை முடக்கச் செய்வது மக்கள் வசதிக்கான திட்டங்களை நிர்வகிக்கும் பொறுப்பையும் அவர்களிடமே ஒப்படைத்து விடலாமே', என்று ஐடியா கொடுத்தது. ‘இவ்வளவு பணத்தை முடக்கத் தனியார் முன் வருவார்களா? இதில் உத்தரவாதமாக லாபம் கிடைக்கும் என்று நம்பாதவரை அவர்கள் எப்படி இதில் ஈடுபடுவார்கள்? இருக்கும் மிகக் குறைந்த அவகாசத்தில் தனியார் நிறுவனங்களைப் புரிய வைத்து இதில் ஈடுபடுத்துவது சாத்தியம் தானா' என்ற கேள்விகள் எழுந்த போது அவற்றிற்கும் பதில்கள் தயாராயிருந்தன.

"தனியார் கம்பெனிகளை இதில் ஈடுபடச் செய்யும் பொறுப்பை TNUIFSL நிறுவனத்தை நிர்வாகித்து வரும் "ஐ.எல்.எஃப். எஸ்., ஐ.சி.ஐ.சி.ஐ., ஹெச்,டி.எஃப்.சி' ஆகிய நிறுவனங்களிடம் விட்டு விடுங்கள். அவர்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்கள்!'

"இது நிச்சயம் நடக்கும்! ஏனென்றால் இந்தத் திட்டங்களை ஏற்று நடத்த முன் வரும் எந்த நிறுவனமும் தன் சொந்தப் பணத்தில் ஒரு ரூபாயைக் கூட இதில் ஈடுபடுத்தத் தேவை இல்லை! ஐ.எல்.எஃப்.எஸ்., ஐ.சி.ஐ.சி.ஐ., ஹெச்.டி.எஃப்.சி ஆகிய நிறுவனங்கள் குறைந்த வட்டிக்குக் கொடுக்கத் தயாராயிருக்கின்றன. மேலும் திட்டத்திலிருந்து மாநகராட்சி நிர்வாகமானது எதிர்காலத்தில் திமிறி வெளியேறி விடாமல் இருப்பதை உறுதி செய்யும் ‘ஈட்டுப் பத்திரங்களை' மாநகராட்சியிடம் எப்படி எழுதி வாங்க வேண்டும் என்பதிலும் அவர்களுக்கு 10 வருட கால அனுபவம் இருக்கிறது. எனவே தான் அவர்கள் உத்தரவாதம் கொடுத்தால் ஜவகர் திட்டத்தின் மத்திய, மாநில அரசுகளின் இலவசப் பணம் உடனடியாகக் கிடைக்கும்' என்று ஆலோசனை கூறப்பட்டது.

என்ன காரணத்தாலோ 2007 மார்ச் மாதத்தில் தமிழ்நாடு அரசானது தான் கொடுக்க வேண்டிய 20% பங்குப் பணத்தை வழங்கப் போவதில்லை என்று அறிவித்தது. 7 வருடங்களில் திருப்பிக் கொடுக்க வேண்டிய வட்டியில்லாக் கடனாகவே இந்தப் பணத்தை அதன் ‘டுபிட்கோ' நிதி நிறுவனம் அளிக்கும் என்று கூறியது. மத்திய அரசின் ஜவகர் இலவசப் பணத்தைப் பெற வேண்டும் என்றால் ஐ.எல்எப்.எஸ்., ஐ.சி.ஐ.சி.ஐ., ஹெச்.டி.எஃப்.சி நிறுவனங்களை நாடுவதைத் தவிர வேறு வழியே இல்லை என்ற கட்டாய நிர்ப்பந்தத்திற்கு மாநகராட்சியைத் தமிழ்நாடு அரசின் இந்த முடிவு தள்ளியது.

வில்பர் ஸ்மித் நகர மேம்பாட்டு அறிக்கையால் முன் வைக்கப்பட்ட திட்டங்களின் அடிப்படையில் ‘விரிவான திட்ட அறிக்கைகளை' தயாரிக்க 2006 ஆம் வருடத்தின் இறுதியில் மேற்கூறிய வட்டிக் கம்பெனிகள்.

கூறிய ஆலோசனையின் அடிப்படையில் தனியார் ஆலோசனை கம்பெனிகளுடன் மாநகராட்சி ஒப்பந்தம் செய்து கொணடது. 2007 பிப்ரவரியில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக சமர்ப்பிக்கப்பட்டு வரும் இந்த அறிக்கைகளுக்குத் தொழில்நுட்ப அங்கீகாரத்தை மத்திய நகர்ப்புற அமைச்சகம் அளிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்த குறிப்பான திட்டங்களுக்குத் தேவையான மாநகராட்சியின் பங்குப் பணமான30%ற்கு மேற்கூறிய கந்து வட்டிக் கம்பெனிகள் உத்தரவாதம் அளித்திருப்பதால் மத்திய அரசு தன் 50% இலவசப் பணத்தையும், மாநில அரசு தன் 20% வட்டியில்லாக் கடனனுக்கான பணத்தையும் கொடுப்பதாக ஒத்துக் கொண்டுள்ளன.

இன்றைய தேதியில் கோவை நகருக்கான மூன்று திட்டங்கள் மேற்கூறிய கட்டங்களைக் காத்திருக்கின்றன. நகரத்தின் குப்பைகளை ‘அறிவியல்' ரீதியாக அகற்றப் போகும் ‘திட்டக் கழிவு மேலாண்மைத் திட்டமும்' நகரின் 90 குடிசைப் பகுதி மக்களுக்கு "மிகக் குறைந்த' விலையில் வீடு கட்டிக் கொடுக்கும் திட்டமும், பில்லூர் இரண்டாம் கட்டத் திட்டமுமே இந்தத் திட்டங்களாகும்.

இவற்றில் முதலில் 97 கோடி ரூபாய்க்கான குப்பை அகற்றும் திட்டத்தில் 70 கோடி ரூபாய் மதிப்புள்ள பணிகளில் பங்கேற்க வருமாறு உலக நிறுவனங்களை அழைக்கும் அறிக்கையை மாநகராட்சியின் சார்பில் ஐ.எல்.எஃப்.எஸ் நிறுவனம் தயாரித்தது.

இவ்வாறாக, ஜவகர் திட்டம் கோவையை சூழத் தொடங்கியிருக்கிறது.

இனி நம் கோவை மாநகரம் சந்திக்கப் போவது சுதந்திரத்தையா? சர்வ நாசத்தையா? ஜூலை 4 அமெரிக்க நாட்டின் சுதந்திர தினம்.

ஆகஸ்டு 6 1945 ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரின் மீது அமெரிக்க ராணுவம் வெடிகுண்டை வீசி சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் மனிதர்களையும் எண்ணிலடங்கா உயிர்களையும் விநாடிகளில் சாம்பலாக்கிச் தற்செயலாகத் தப்பிப் பிழைத்த பிற மக்களுக்கும், பல்வேறு புற்றுநோய்களைக் கொடையாகக் கொடுத்த பேய் நாள் அது.

ஈராக் நாட்டின் மீது பல்லாயிரம் டன் பயங்கர வெடிகுண்டுகளை வீசித் தாக்கிய போர்க்கப்பலில் ஒன்றான யு.எஸ்.எஸ்.நிமிட்ஸ், சென்னைத் துறைமுகத்தில் அமெரிக்காவின் சுதந்திர தினத்தன்று நங்கூரம் பாய்ச்சி நிற்கிறது. ஈராக்கில் போரிட்டுக் களைத்துப் போன அதன் கூலிப் படையினருக்கு உல்லாசமாக அவர்தம் நாட்டின் சுதந்திர நாளைக் ‘கொண்டாடிட' சென்னை நகரின் நட்சத்திர விடுதிகளில் விலைக்காகத் தம் உடல்களை விற்கத் தயாராயிருக்கும் நம் நாட்டு மகளிர்களைத் தனியார் ஒப்பந்தக்காரக் கம்பெனிகள் ஏற்பாடு செய்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன. நிற்க. இதற்கும் கோவை மாநகருக்கும் என்ன சம்பந்தம்?

பணம் மற்றும் அதிகாரத்தைத் தவிர வேறு எதுவும் அவசியம் இல்லை என்று கருதம் அமெரிக்க நாட்டரசின் சுதந்திர தினத்தன்று தான் கோவை மாநகராட்சியானது நகரத்தின் குப்பைகளை அகற்றும் திட்டத்தில் பங்கேற்பதற்காக சர்வதேச அளவில் ‘குப்பைகளை அள்ளி' பெரும் லாபம் சம்பாதித்து வரும் சர்வதேச தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடும் "சர்வதேச அளவில் ஒப்பந்தம் கோரும்' அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

இனி வரும் வருடங்களில் 3186 கோடி ரூபாய்க்கான திட்டங்களை நகரில் சர்வதேச தனியார் நிறுவனங்களைக் கொண்டு நடைமுறைப்படுத்தப் போவதாக இது வரை வெறுமனே வாயாடிக் கொண்டிருந்த மாநகராட்சி நிர்வாகம் இந்தத் திட்டங்களின் முதல் படியான 96.51 கோடி ரூபாய் மதிப்புள்ள ‘நகரின் குப்பைகளை அகற்றும்' திட்டத்தை அமெரிக்க நாட்டின் நிமிட்ஸ் அடியாள் கப்பலின் கூரைகள் சென்னையின் ஐந்து நட்சத்திர விடுதிகளில் தாம் ஈராக் நாட்டில் கொள்ளையடித்த டாலர்களை நம் இனப் பெண்களிடம் விட்டெறிந்து மிருக போதையில் ஆடித் திளைத்துக் கொண்டிருக்கும். அந்தப் ‘புனித' வேளை பார்த்துத் தான் வெளியிட்டிருக்கிறது.

இவ்வாறு வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் ஒப்பந்தம் கோரப் போகும் ‘குப்பை' முதலாளிகளின் விண்ணப்பங்களை மாநகராட்சி என்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளுமாம்?

ஆகஸ்டு 6 ஆம் தேதியன்று!

அதாவது ஹிரோஷிமா நகரில் அமெரிக்க அரசு பேயாட்டம் இட்டு இந்தப் பூவுலகிடம் இப்படியும் ஒரு பயங்கரன் இருப்பதாக அறிவித்துக் கொண்ட அதேநாளில்!!

இந்த நாட்களை மாநகராட்சி தற்செயலாகத்தான் தேர்ந்தெடுத்ததா? சர்வதேச அளவிலும், மானுட வரலாற்றிலும் முக்கியத்துவம் வாய்ந்த நாட்களை மனதில் வைத்து அதற்கேற்ப மாநகராட்சியின் பணிகளைத் திட்டமிடும் அளவிற்கு மாநகராட்சியி‘ன் அதிகாரிகள் இருப்பார்களா என்ற அப்பாவிக் கேள்வி நம்முள் எழக் கூடும்.

கலைஞர், தளபதி, புரட்சித் தலைவர், அண்ணா, பெரியார் என்றே ஒரு கால் நூற்றாண்டை ஓட்டி விட்ட நம் மாநகராட்சியால் இப்படிப்பட்ட ‘விசித்திரமான' ஒரு முடிவை எடுத்திருக்க முடியுமா என்ன?

‘இதைத் தவிர அதனால் வேறு என்ன செய்திருக்க முடியும்? என்பது தான் இதற்கான பதில். ஏனென்றால் ஜவஹர்லால் நேரு தேசிய நகரப் புனரமைப்புத் திட்டம் என்ற இந்தத் திட்டத்தைப் பொருத்த வரையில் நம் மாநகராட்சியானது சாதாரண மனிதர்களின் நேரடிப் புலன்களுக்குப் புலப்படாத பல்வேறு பயங்கர சக்திகளின்' கைப்பாவையாக இருக்கிறதேயொழிய வேறில்லை என்பது தான் உண்மை.

கோவை மாநகராட்சியை விலங்கிவிட்டு சிறைப்பிடிக்கத் துடிக்கும் சர்வதேச வட்டிக் கும்பல்கள்: ஜூலை 4 ஆம்  தேதி மாநகராட்சியில் வெளியிடப்பட்ட குப்பை அள்ளும் ஒப்பந்தித் தேர்விற்கான அறிக்கையை  மாநகராட்சிக்காகத் தயாரித்துக் கொடுத்தது யார்? திட்டத்திற்கான சர்வதேச ஒப்பந்தத்தைக் கோருவதற்கான தேதிகளைக் குறித்துக் கொடுத்தது யார்?

புதுடெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு 1987ம் ஆண்டில் இருந்து இறங்கி வரும் IL&FS என்ற வட்டிக் கம்பெனியின் ஒரு அங்கமான Infrastructure Development Corporation Limited என்ற நிறுவனமே இந்த அறிக்கையை மாநகராட்சிக்குத் தயாரித்துக் கொடுத்திருக்கிறது. அறிக்கையின் அனைத்து கருத்துக்களும் அதன் மூளையில் இருந்து உதித்தவையே, சர்வதேச ஒப்பந்தத்திற்கான தேதிகளையும் அதுவே முடிவு செய்திருக்க வேண்டும். பொதுச் சொத்துக்களைத் தனியார் மயமாக்குவதில் தன்னைப் போல் அனுபவம் மிக்க நிறுவனம் இந்தியாவிலேயே இல்லை என்று வெளிப்படையாகவே பெருமிதம் கொள்ளும் நிறுவனம் தான் அது. 1987ம் ஆண்டில் அந்த நிறுவனம் உருவாக்கப்பட்டதற்கான அடிப்படை நோக்கமே அரசு சொத்துக்களைத் தனியார் மயமாக்குவதை ஊக்குவிப்பதற்குத் தான்!

இப்படிப்பட்ட நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட அறிக்கை கோவை மாநகரை எங்கு இட்டுச் செல்லும்?

IL&FS நிறுவனமானது முதலில் "சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா', யுனியன் டிரஸ்ட் ஆப் இந்தியா' "வீடு கட்டக் கடன் கொடுக்கும் நிதி நிறுவனமான) HDFC ஆகியோரால் தொடங்கப்பட்டது. பின்னர் உலக வங்கி, (19ம் நூற்றாண்டில் சீனாவில் ஆங்கிலேயர்களின் வியாபாரத்தை வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்டு, இன்று உலகின் மிகப் பெரிய வங்கியாக இருக்கும்) ஹாங்காங், ஷாங்காய் பேங்கிங் கார்ப்பரேஷன் ஜப்பானில் கார்களை வாங்க வட்டிக்கு கொடுக்கும் நிறுவனமாக ஓரிக்ஸ் கார்ப்பரேஷன் (அபுதாபி மன்னருக்கு சொந்தமான, உலகின் முன்னணி வட்டி நிறுவனங்களில் ஒன்றான) அபுதாபி இன்வெஸ்ட்மென்ட் அத்தாரிட்டி, பிரான்ஸ் நாட்டின் ரெடிக் கமர்ஷியல் டி பிரான்ஸ் மற்றும் எல்.ஐ.சி ஆகிய நிறுவனங்களை தன் அங்கத்தினர்களாக ஆக்கிக் கொண்டது.

இன்று இந்த நிறுவனத்தில் எல்.ஐ.சி சுமார் 27% பங்கையும், ஜப்பானின் ஓரிக்ஸ் நிறுவனம் சுமார் 24% பங்கையும், HDFC சுமார் 13% பங்கையும், அபுதாபி நிறுவனம் சுமார் 13%ஐயும், சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா சுமார் 9%ஐயும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 7.68% பங்கையும், நிறுவனத்தின் அதிகாரிகள் சுமார் 6.5% பங்கையும் வைத்திருக்கிறார்கள்.

globalization அதாவது இந்த நிறுவனத்தில் தனியாரின் முதலீடு சுமார் 57% ஆகவும், அரசு வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் முதலீடு மீதமுள்ள 43% ஆகவும் உள்ளது. தனியாரின் முதலீட்டில் சுமார் 40% அந்நிய நாட்டு நிறுவனங்களின் முதலீடாக இருக்கின்றது.

இந்தத் தனியார் வட்டி நிறுவனங்களே கோவை நகர மேம்பாட்டிற்கான திட்டத்தை தயாரித்துக் கொடுத்தது மட்டுமல்லாமல், இந்தத் திட்டங்கள் அனைத்திலும் தனியார் முதலாளிகளை உள்ளே நுழைப்பது மூலமாக கோவை நகரின் பொது சொத்துக்களையும், இதுவரை மாநகராட்சிக்கு மக்கள் கடடி வந்த வரிப் பணத்தையும், மத்திய அரசு மான்யமாக வழங்க முன் வந்திருக்கும் பணத்தையும் இந்த முதலாளிகளுக்குத் தாரை வார்க்கும் யோசனையையும் கோவை மாநகராட்சிக்கு வழங்கியிருக்கின்றன.

இந்தத் திட்டத்தையும் யோசனைகளையும் எவ்விதக் கேள்வியும் இன்றி கோவை மாநகராட்சி ஏற்றுக் கொண்டது மட்டுமல்லாமல் வட்டி மற்றும் லாபம் என்ற வார்த்தைகளைத் தவிர வேறு எதையும் விரும்ப விரும்பாத அற்ப ஜீவிகளின் கைப்பாவையாக மாறி செயலாற்ற எத்தனித்திருப்பது தான் கோவை மக்களின் வரலாற்று சோகம்.

10 லட்சத்துக்கும் கூடுதலான மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவின் 63 நகரங்களைப் பல்லாயிரம் கோடி ரூபாய் மூலதனம் கொண்டு மாற்றியமைக்கலாம் என்பது நம் அரசின் மூளையில் உதித்த திட்டமே அல்ல.

1993ம் ஆண்டில் இருந்து இந்தியாவில் இயங்கத் தொடங்கிய அமெரிக்க அரசின் நிறுவனமான United States Agency for International Development (USAID) -இன் மூளையில் உதித்த திட்டமே அது. Financial Institutions Reform and Expansion – Debt (FIRE-D) என்ற திட்டமே இன்று மத்திய அரசின் மூலமாகவும், மாநில அரசு மூலமாகவும், IL&FS போன்ற வட்டி நிறுவனங்கள் மூலமாகவும் கோவை போன்ற நகரங்களின் மீது' ஜவஹர் நகர மேம்பாட்டுத் திட்டம்' என்ற பெயரில் கோடை இடியாய் இறங்கியிருக்கிறது.

USAID நிறுவனத்தால் வளர்க்கப்பட்டு, இன்று ஜப்பானியரைத் தன் முதலாளியாகக் கொண்டிருக்கும் IL&FS நிறுவனம் இந்தத் திட்டத்தின் சர்வதேச ஒப்பந்தத்திற்கான தேதிகளாக ஜூலை 4யும், ஆகஸ்டு 6ம் ஏன் தேர்வு செய்தன?

பிறவி ஊனம் கொண்ட அமெரிக்கப் பேராசை மனத்தில் இருந்து ‘நேரு மாமா' போர்வையைப் போர்த்திப் புறப்பட்டிருக்கும் இந்த இடியைக் கோவை மக்களாலும், இந்தியாவின் பிற நகர மக்களாலும் தாங்கிட, சமாளித்திட முடியுமா?

அல்லது இம்மக்கள் யாவரும் ஹிரோமேஷிமா நகரில் லட்சக்கணக்கானோர் அமெரிக் அணு குண்டுக்கு விநாடி நேரத்தில் இரையானது போல, பற்றியெரியும் அமெரிக்கக் ‘காய சண்டிகை' வட்டிப் பசிக்கு இரையாகித்தான் போவார்களா ?


ஜவகர் கோவையை விழுங்க வரும் யோஷிஹிகோ மியாசி: ORIX Corporation Lapan

ஐ.எல்.எஃப்.எஸ் கந்துவட்டி நிறுவனத்தில் 23.82% பங்குகளை வைத்திருப்பவர் இவர். இதன் காரணம் தமிழ்நாட்டின் TNUIFSL நிறுவனத்தின் பங்குதாரர் சுமார் 25 லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களை ஒரிக்ஸ் வைத்திருக்கிறது.

1964ல் இருந்து கார்கள் வாங்குபவர்களுக்குக் கடன் கொடுக்கும் பைனான்ஸ் கம்பெனியை ஜப்பானில் தொடங்கி பின்னர் உலகம் ரியல் எஸ்டேட் பைனான்சில் குதித்தவர். அமெரிக்க அரசின் குருட்டு ஆதரவாளர்.

ஜப்பான் நாட்டின் பொதுத்துறை சொத்துக்களைத் தனியாரிடம் விற்க அந்த நாட்டின் அரசை நிர்ப்பந்திக்கும் கூட்டத்தின் தலைவர். இதனாலேயே ‘ஜப்பான் நாட்டின் முதல் எதிரி’ என்ற நற்பெயரை அந்த நாட்டு மக்களிடம் சம்பாதித்திருப்பவர்.


உலகக் கந்து வட்டி முதலைகள்: சயீத் முபாரக் ரஷீத் அல் ஹஜேரி

Abul Dhabi Invesment Authority (ADIA) ADIA நிறுவனத்தின் தலைவர்.

நிறுவனம் அபுதாபி அரசருக்கு சொந்தமானது. சுமார் 27 லட்சம் கோடி ரூபாயைக் கையாளுகிறது.

கணக்குகள் ரகசியமாகவே கையாளப்படுகின்றன. பெட்ரோலை விற்பதன் மூலம் கிடைக்கும் பணத்தை பாதுகாப்பதாக முதலீடு செய்வதற்காக 1977ல் தொடங்கப்பட்டது. உலகம் முழுவதிலும் பொதுச் சொத்துக்களை வாங்குவதற்கும், தனியார் நிறுவனங்களை நடத்தவும் கடன் கொடுக்கிறது.

ஐ.எல்.எஃப்.எஸ் நிறுவனத்தில் 12.73% பங்குகளை வைத்திருப்பதால் TNUIFSL நிறுவனத்தின் பங்குதாரராகவும் இருக்கிறது.
Pin It