சங்க இலக்கியப் பாடல்களில் புதைந்துகிடந்த தமிழ் இசை பற்றிய உண்மைகளை அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஆராய்ந்து வெளிப்படுத்தியவர் தமிழ்ப் பண்ணாராய்ச்சி வித்தகர், ஏழிசைத் தலைமகன் குடந்தை ப.சுந்தரேசனார் ஆவார். இவர் ஈராயிரம் ஆண்டுக்கு முந்தைய தமிழிசையை நுட்பமாக அடையாளம் கண்டு, தமிழர்களிடையே இசையார்வம் தழைக்க உழைத்தவர். கடந்த நூற்றாண்டில் தமிழ்இசைக்குத் தொண்டாற்றிய அறிஞர்களை நினைவு கூர்கையில் சுந்தரேசனாரின் பங்கு மகத்தானது; போற்றுதற்குரியது.

தமிழர், நிலத்தை ஐவகையாகப் பிரித்ததைப் போலவே, தமிழ் இசையையும் ஐவகைப் பண்களாகப் பிரித்தனர். முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலையென நிலத்துக்கான பிரிவுகளின் பெயர்களையே பண்ணுக்கும் வைத்துள்ளனர். இது மண்ணுக்கும் பண்ணுக்குமான ஒருவகை ஒத்திசைவைக் காட்டுவ தாகும். தமிழர்வாழ்வு இசையோடு இயைந்த வாழ் வாகும். முதற்பொருளாக நிலமும் பொழுதும் வைத்த திலும், அதிலும் நிலத்தை முதலாக வைத்து அந்நிலத்து மக்களுக்கான வாழ்முறைக்கேற்ற பண்களையும் பகுத்துக் காட்டியதில் அவர்களது இசைவாழ்வின் நுண் மாண் நுழைபுலத்தை நாம் நன்கு உணரமுடிகிறது.

பண்டையத் தமிழ்ப்பண் மரபு இன்று முற்றிலுமாக முறிந்து, திரிந்து, சிதைவுற்றுக் கிடக்கிறது. தமிழிசை என்பதைப் பெரும்பாலோர், தமிழைப் பாடுவது, தமிழில் பாடுவது அல்லது தமிழால் பாடுவது என்றுமட்டுமே கருதிக் கொண்டிருக்கின்றனர். இந்நாளில் இசை பயில்வோர் கூட எழுபத்தியிரண்டு தாய் இராகங் களையும், அதிலிருந்து பிறக்கும் ஜன்ய இராகங்களையும் பற்றிப் படிக்கிறார்களே ஒழிய, ஐவகைப் பண்களின் வழியாக இசையைப் பயிலுவதில்லை. அப்படிப் பயிற்றுவிக்கவும் ஆள் இல்லை.

மேடை போட்டுக் கச்சேரி நடத்துவோர் கருநாடக இசை என்னும் பெயரில் பண்டைய தமிழ்ப் பண் களைத்தான் பெயர்களை மாற்றிப் பாடிக்கொண்டி ருப்பதாக இசையறிந்தோர் கருத்துத் தெரிவிக்கின்றனர். ஆனால், இந்தபாட்டு இப்பண்ணைச் சார்ந்தது என்று விளக்கியுரைத்து எவரும் வேலைசெய்யவில்லை. தமிழிசை அறிஞர்கள் சிலர் அறிந்திருக்கக்கூடும். ஆனால், அது பொதுவெளிக்கோ, ஊடகங்களுக்கோ, பரவலாகப் பாடத்திட்டங்களுக்கோ வரவில்லை. சங்க இலக்கியங்களில் தோய்ந்து எழுந்து ஆழ்ந்து சொற் பொழிவாற்றுவோர் கூட, அப் பாக்களில் பொதிந்துள்ள தமிழ் இசைமரபை, இசைவடிவங்களை, நுணுக்கங் களை எடுத்துக் கூறினாரில்லை. எடுத்துக் கூற மறந்து விட்டார் என்று சொல்ல முடியாது. அவர்களும் கூட, இன்னின்ன பாக்களை, இன்னின்ன பண்ணோடும் தாளத்தோடுந்தான் பாடவேண்டும் என்று அறிந்திருக்க வாய்க்கவில்லை.

இன்று கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் கூடத் தமிழ்ப்பாடம் பயிலுவோருக்கு இசைத்தமிழைக் கற் பிக்காமலேயே குறைத்தமிழுக்கான சான்றிதழ்களையே கொடுத்து அனுப்புகின்றன. தமிழ் படித்தோர் முத்தமிழ் அறிந்தவராக இல்லாமல் இயற்றமிழ் மட்டுமே அறிந்தவராக உள்ளனர். கருநாடக இசை, திரைப்பட இசை என்னும் இரண்டோடு நிற்கிறது இன்றைய தமிழரின் இசை நிலை. அதை உடைத்துத் தமிழ் இலக்கியங்களில்- பாடல்களில் எத்தகு பண்ணமைப்புகள் உள்ளன என்பதை ஆராய்ந்து கண்டு, ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக வெளிப்படுத்தியவர்தான் இசைமேதை குடந்தை ப. சுந்தரேசனார்.

இருபதாம் நூற்றாண்டில் தமிழிசை மூவர் எனப்படும் முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை, அருணாசலக் கவிராயர் ஆகியோர் வாழ்ந்த சீர்காழி மண்ணில் தோன்றித், தமிழுக்கு ஆற்ற வேண்டிய பணியைத் தேவையுணர்ந்து ஆற்றியவர்தான் குடந்தை ப. சுந்தரேசனார் அவர்கள்.

28.05.1914ல் சீர்காழியில் நாகமங்கலம் உடை யான் கோத்திரத்தில் பஞ்சநதம்பிள்ளை- குப்பம்மாள் இணையருக்குப் பிறந்த இவர், நான்காம் வகுப்புவரை மட்டுமே படித்திருந்தாலும் தமிழ், தெலுங்கு, வடமொழி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார். இவரது துணைவியார் சாரதா அம்மையார். இவருக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன. ஆனால் மூவரும் இறந்துவிட்டனர். இசையின் மீதுள்ள விருப்பத்தின் காரணமாக இவரது மூன்றாவது பிள்ளைக்கு விபுலா னந்தன் என்றே பெயர்சூட்டியிருந்தார். வாழ்நாள் முழுவதும் கும்பகோணம், பேட்டை நாணயக்காரத் தெருவில் வசித்ததால் குடந்தை சுந்தரேசனாராகவே அடையாளப்படுத்தப்பட்டார்.

சிறுவயதிலிருந்தே பாரதம் போன்ற தொடர்ச் சொற்பொழிவுகளைக் கேட்டும், ஒலிவட்டுகளைக் கேட்டும் இசையோடு சொற்பொழிவாற்றும் ஆற்றலை வளர்த் துக்கொண்டார். தமிழ் வித்வானுக்குப் படிக்கவிரும்பி சிலகாலம் திருவாவடுதுறை ஆதீன வித்வான் த.ச. மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் பாடம் கேட்டார். பிடில் கந்தசாமி தேசிகர், வேப்பத்தூர் பாலசுப்பிரமணி, குடந்தையில் வாழ்ந்த வேதாரண்யம் இராமச்சந்திரன் ஆகியோர் இவரது இசை ஆசிரியர்களுள் குறிப்பிடத் தக்கவர்கள்.

குடவாசலுக்கு அருகிலுள்ள திருக்கொள்ளம்புதூரில் 1947-இல் விபுலானந்த அடிகள் இயற்றிய யாழ்நூல் அரங்கேற்றத்தின்போது, அம் மேடையில் தமிழ்ப்பண் மரபுகளை உரிய நுணுக்கங்களோடு பாடி விபுலானந் தரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளார் சுந்தரேசனார். தமிழ்ப் பண்கள் குறித்துத் தான் எழுதிய இசைக் கட்டுரைகளைத் “தமிழ்ப் பொழில்” திங்களிதழில் வெளியிட்டுவந்தார். பண் ஆராய்ச்சியும், அதன் முடிவு களின் தொகுப்பும், முதல் ஐந்திசைப் பண்கள், தமிழிசை, இசைத்தமிழ்ப் பயிற்சிநூல் வினா-விடை போன்ற சிறந்த இசை நூல்களையும் எழுதியுள்ளார். அறிவனார் இயற்றிய பஞ்ச மரபு நூலின் மூலத்தை உரையோடு, ஈரோடு வட்டம் வேலம்பாளையம் வித்துவான் வே.ரா. தெய்வசிகாமணி கவுண்டரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு 1975-ல் வெளியிட்டார். “நித்திலம்” மாத இதழின் ஆசிரியராக இருந்து நடத்திவந்தார்.

பிரெஞ்சு நாட்டு அறிஞர் பிரான்ஸ்வா குரோ, பரிபாடலை பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்க முனைந்தபோது, சுந்தரேசனாரை அழைத்துப் பாடச்செய்து பரிபாடலின் உண்மைப் பொருளை உணர்ந்து மொழி பெயர்த்தார். முல்லை நிலத்து ஆயர் மக்கள்தான் முதன்முதலில் குழற்கருவி யையும் யாழ் கருவியையும் கண்டு தங்களது பேரறிவினாலே இசைக்கலையை வளர்த்தனர் என்று மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது உலகத்தமிழ் மாநாட்டில் இசைப்பேருரையாற் றினார்.

தனது அரிய உழைப்பின் பயனாக சிலப்பதிகாரம், திருமுருகாற்றுப்படை, தேவாரம், நாலாயிரத் திவ் வியப்பிரபந்தம், பெரியபுராணம், கந்தபுராணம், திரு விளையாடல் புராணம் போன்ற நூல்களில் பொதிந்துள்ள இசைக்குறிப்புகளை வெளிக்கொணர்ந்து தமிழ்ப் பண்ணிசைக்குப் பெருமை சேர்த்துள்ளார். உலகில் தோன்றிய இசை முறைமைகளுள் முதலில் தோன்றியது தமிழிசை முறைமையே என்பது சுந்தரேசனாரின் கருத்து. திருவையாறு அரசர் கல்லூரியில் பணியாற்றிய இவர் ஆடுதுறையில் அப்பர் அருள்நெறிக் கழகத்தையும், இலால்குடி எனப்படும் திருத்தவத்துறையில் ப.சுந்தரேசனார் நாடுகாண் குழு என்ற அமைப்பையும் தொடங்கி நடத்திவந்தார். அப்பர் அருள்நெறிக்கழகம் இன்றளவும் நடைபெற்று வருகிறது. தமிழோடு இசைந்த இவரது இசைவாழ்வு 09.06.1981 அன்று நிறைவுற்றது.

பெரிய அளவில் அரசாங்கப் பெருமையோ, பல்வேறு ஊடகப் பதிவுகளோ இல்லாத, தேடக் கிடைக்காத இவ்வறிஞரின் வாழ்க்கை வரலாற் றைத் தேடியெடுத்து, கிடைத்த தரவுகளைக் கொண்டு ஆவணப்படமாக்கித் தமிழிசை உலகிற்கு ஒரு பெருங்கொடையாகக் கொடுத்துள்ளார் புதுச்சேரி அரசின் பட்ட மேற்படிப்பு மையத் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் மு. இளங்கோவன் அவர்கள்.

இவ்ஆவணப்படத்தை உருவாக்கியதன் வாயி லாகக் குடந்தை ப. சுந்தரேசனாரின் தொண்டி னைவிட ஒருபடி மேலாகவே உள்ளது முனைவர் மு. இளங்கோவனின் பேருழைப்பு.

ப. சுந்தரேசனாரின் உருவத்தைக் களிமண் சிற்பமாகச் செய்வதில் தொடங்கி, ஒளிவட்டு முடியும்போது சிற்ப வேலையையும் முடித்து முழுமைப்படுத்துவதாகக் காட்சியமைத்து இயக்கி யுள்ளவிதம் ஒரு நல்ல இயக்குநருக்கான கூறு களை இவரிடம் அடையாளம் காட்டுகிறது. தற் பெருமைக்காகவே படமெடுத்தாடும் பாம்புகளுக்கு நடுவே, தமிழ்ப்பெருமைக்காகப் படமெடுத் திருக்கிற மு. இளங்கோவனின் பணி பாராட்டு தற்குரியது.

பத்துப்பாட்டின் பெரும்பாணாற்றுப்படையில், முல்லைநிலக் கோவலரின் குழலிசையை விளக்கும்,

தொடுதோல் மரீஇய வடுஆழ் நோன்அடி

விழுத்தண் டூன்றிய மழுத்தின் வன்கை

என்னும் பாடலைச் சுந்தரேசனார் உரிய பண் ணோடு பாடும் இசைப்பொழிவோடு தொடங்குகிறது ஒளிவட்டு. மிகச் சிறந்த காட்சி நுட்பம், கருத்து நுட்பம், இசை நுட்பங்களோடு இந்த ஆவணப்படத்தை உருவாக்கியிருக்கிறார் மு. இளங்கோவன். ஆவணப்பட வேலைகளில் தொடக்க நிலையினராயினும், ஒரு தேர்ந்த இயக்குநருக்கான கூறுகளை இப்பதிவில் காணமுடிகிறது. கானல்வரிப் பாட்டிற்காகக் காவிரி ஆற்றையும் கரையையும் நடனத்தோடு காட்சிப் படுத்தியவிதம் மிக அருமை.

இசைப்பாடல்கள், நிழற்படங்கள், சுந்தரேசனாரைப் பற்றி அறிந்த, அவர்காலத்தில் வாழ்ந்து இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிற அறிஞர்களின் கருத்துகள் என இவருக்குக் கிடைத்த பதிவுகளை மிக நேர்த்தியாகக் காட்சிப்படுத்தியுள்ளார். இவரது படைப்பிற்கு மிகுந்த ஒத்துழைப்பாக அமைந்திருப்பது இராஜ்குமார் இராஜ மாணிக்கத்தின் இசையமைப்பும் படத்தொகுப்பும் ஆகும். நா.ஆ.சிவக்குமாரின் ஒளிப்பதிவு மிக அருமை.

இந்த ஆவணப்படத்தின் ஒளிவட்டு(டிவிடி) வெளி யீட்டுவிழா, மலேசியாவில் 28.12.2012 அன்று நடைபெற்றது. டத்தோஸ்ரீ உத்தாமா டாக்டர் ச.சாமிவேலு வெளியிட, டத்தோ சூ.பிரகதீஷ்குமார் பெற்றுக்கொண்டார். இந் நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தருண்விஜய், பேராசிரியர் மன்னர்மன்னன், டான்ஸ்ரீ சு.குமரன் ஆகியோர் பங்கேற்றனர். புதுச்சேரி வயல்வெளித் திரைக்களம் சார்பாக எழுதி, இயக்கி, தயாரித்திருப்பவர் முனைவர் மு. இளங்கோவன். புதுச்சேரி முதல்வர் ந.அரங்கசாமி அவர்கள் இந்த ஆவணப்படப் பணியைத் தொடங்கிவைத்துச் சிறப்புச் சேர்த்துள்ளார். குடந்தை ப. சுந்தரேசனாரின் தமிழ்இசைக்கான தொண்டினைத் தமிழ்மக்கள் வாழும் இடங்கள்தோறும் பரப்பவேண்டியது இன்றைய தமிழர்களின் கடமைகளுள் ஒன்றாக நாம் எல்லோரும் கருதவேண்டும்.

தொடர்புக்கு: முனைவர் மு. இளங்கோவன்

புதுச்சேரி, இந்தியா.

செல்பேசி : 0091 94420 29053 / 0091 95009 40482