kowrilingas 350மக்களாட்சியின் நான்கு தூண்களில் ஒன்றாக மதிக்கப்படும் பத்திரிகைகள் இப்போது படாத பாடு படுகின்றன.  பத்திரிகையாளர்களும், சிந்தனையாளர்களும் தாக்கப்படுவதும், சுட்டுக் கொல்லப் படுவதும் மக்களாட்சிக்கு விடுக்கப்பட்ட அறை கூவல்களாகும்.

செப்டம்பர் 5 அன்று பெங்களூரு ராஜ ராஜேஸ்வரி நகரில் வசித்து வந்த கவுரி லங்கேஷ் என்ற பத்திரிகையாளர் வெளியே சென்று விட்டு இரவு 8 மணியளவில் வீட்டுக்கு வருகிறார்.  அங்கே மறைந்திருந்த 3 பேர் கைத்துப்பாக்கியால் சுட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டனர்.

நெற்றிப் பொட்டு, மார்பு உள்ளிட்ட இடங்களில் 3 குண்டுகள் பாய்ந்ததில் அவரது வீட்டு வாசலிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.  இதனால் ஒரு நல்ல பத்திரிகையாளரை, சிறந்த சிந்தனை யாளரை நாடு இழந்து விட்டது.

கன்னட நாளிதழில் பத்திரிகையாளராகப் பணியைத் தொடங்கிய கவுரி லங்கேஷ், தன் தந்தையின் மறைவிற்குப் பிறகு அவர் நடத்திய லங்கேஷ் பத்திரிகையின் ஆசிரியராகப் பொறுப் பேற்றுக் கொண்டார்.

இந்துத்துவம் மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக எழுதியும், நேரடியாகப் போராடியும் வந்தார்.  ஆர்.எஸ்.எஸ், விசுவ இந்து பரிஷத், பஜ்ரங்தள், பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளுக்கு எதிராகப் பேசியும், எழுதியும் வந்ததால் அவர்களது எதிர்ப்புக்கு ஆளானார்.

குஜராத் இனப்படுகொலை மற்றும் இஷ்ரத் ஜஹான் என்கவுண்டர் ஆகியவை பற்றி ராணா அய்யூப் எழுதிய ‘குஜராத் கோப்புகள்’ என்னும் ஆங்கில நூலை கன்னடத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.  இது பாஜக.வினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் ‘பசுமை வேட்டை’ என்ற பெயரில் நக்சல்களுக்கு எதிரான தேடுதல் வேட்டையின் போது பழங்குடி மக்களும், தலித் களும் சூறையாடப்பட்டனர்.  அப்போது விதிக்கப் பட்ட தடைகளை மீறி வனப்பகுதிக்குள் நுழைந்த கவுரி லங்கேஷ் பாதிக்கப்பட்ட மக்களையும், நக்சல்களையும் சந்தித்து உண்மைகளை வெளியில் கொண்டு வந்தார்.

“ஒரு இந்தியக் குடிமகளாக பாஜக வின் பாசிச மற்றும் இனவாத அரசியலை ஒரு போதும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.  இந்து அமைப்பில் உள்ள ஜாதிய அமைப்பை நான் தொடர்ந்து எதிர்ப்பேன்.  நம் அரசியல் அமைப்புச் சட்டம் எனக்கு மதச்சார்பின்மையைக் கற்றுக் கொடுத்தது.  எனவே மதவாதத்துக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுப்பது என்னுடைய அடிப் படை உரிமையாகும்” என்று இவர் தொடர்ந்து துணிந்து குரல் கொடுத்து வந்தார்.

‘நீ உன் குரலை நிறுத்தாவிட்டால் நாங்கள் நிறுத்தி விடுவோம்’ என்று கொலையாளிகள் கூறாமல் கூறுகின்றனர்.  இந்தக் கொலையின் மூலம் மற்றவர்களுக்கும் எச்சரிக்கை விடுகின்றனர்.  இனிமேல் இந்துத்துவாவை எதிர்க்கும் துணிவு எவர்க்கும் வரக் கூடாது என்று மிரட்டுகின்றனர் என்பதைத் தவிர வேறு என்ன?

கடந்த 2015 ஆகஸ்டு 30 அன்று ஹுப்ளியில் எம்.எம். கல்புர்கி என்ற பேராசிரியர் இதே முறையில் கொலை செய்யப்பட்டார்.  இரண்டு ஆண்டுகளாகியும் கொலையாளிகளைக் கண்டு பிடிக்க முடியவில்லை.  அதே கொலையாளிகள் தாம் தொடர்ந்து இதையும் அச்சமின்றி அரங் கேற்றியுள்ளனர்.

கர்நாடக அரசும், காவல்துறையும், உளவுத் துறையும் இதனைக் கண்டுபிடிக்க முயற்சி செய்ய வில்லையா, கண்டுபிடிக்க முடியவில்லையா என்ற கேள்வி எழுகிறது.  இந்த நீண்ட இடைவெளியின் காரணமாகவே இந்தக் கொலையும் அரங்கேறி யுள்ளது என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

‘சமூக நீதிக்காகப் போராடுகிறவர்களை நாட்டில் நடமாட விட மாட்டோம்” என்று ஓர் அநியாயக் கும்பல் அறைகூவல் விடுகிறது என்பது தானே பொருள்.  இந்த வெறியர்களின் நெறி கெட்ட போக்கை இன்னும் எத்தனை காலம் அனுமதிக்கப் போகிறோம்?

2016 பிப்ரவரி 16 அன்று கோலாப்பூரில் கோவிந்த் பன்சாரே கொலை செய்யப்பட்டார்.  2013 ஆகஸ்ட் 20 அன்று புனேயில் நரேந்திர தபோல்கர் கொலை செய்யப்பட்டார்.  என்ன நடந்தது? அரசியல் தலைவர்கள் கண்டித்தனர்.  பத்திரிகைகள் கண்டித்து எழுதின.  பத்திரிகை யாளர் சங்கங்கள் ஆர்ப்பாட்டங்களும், இரங்கல் கூட்டங்களும் நடத்தின.  போதுமா?

மனிதன் எப்படி படிப்படியாய் வளர்ச்சி யடைந்தான் என்பதை டார்வின் கண்டுபிடித்தார்.  மானிட சாதியின் வரலாறு எப்படி படிப்படியாய் வளர்ச்சியடைந்தது என்பதை கார்ல் மார்க்ஸ் கண்டுபிடித்தார்.  இதற்கு இடைவிடாத சிந்தனையின் உழைப்பே முதலீடாகும்; மூலதனமாகும்.

கார்ல் மார்க்ஸ் இறந்து போனதை, ‘அவர் சிந்திப்பதை நிறுத்தி விட்டார்’ என்று அவர் தோழர் ஏங்கெல்ஸ் குறிப்பிட்டார்.  டெஸ்கார்ட்டே என்ற தத்துவஞானி, ‘நான் சிந்திக்கிறேன்; எனவே உயிரோடு இருக்கிறேன்’ என்று கூறினார்.

எனவே சிந்திப்பதும், செயல்படுவதும் சமுதாய மாற்றத்தை விரும்பும் மேதைகளின் செயல்பாடு களாகும்.  எழுத்துக்கு எழுத்தும், பேச்சுக்குப் பேச்சுமே பதில்களாக இருக்க வேண்டும்.  அதுவே ஆக்கப்பூர்வமான வளர்ச்சியாகும்.

அதை விடுத்து தனிமனிதர்களைத் தாக்குவதும், கொலை செய்வதும் கோழைகளின் எதிர் நடவடிக்கை களாகும்.  இதன் மூலம் சிந்தனையையும், செயல் பாட்டையும் தடுத்து நிறுத்த முடியாது.  அவர் விட்டுச் சென்ற பணியை வேறொருவர் தொடர் வார்.  இதற்கு முடிவு கிடையாது.

“அரசியல் கொடுமைகளை விட சமூகக் கொடுமைகளே மிகப் பயங்கரமானவை.  எனவே சாதிக் கொடுமைகளை எதிர்த்துப் போராடும் சமூக சீர்திருத்தவாதியே அரசியல்வாதியை விட அதிக வலிமை மிக்கவன்” என்றார் டாக்டர் அம்பேத்கர்.

உலக வாழ்வில் சாதி, சமயம் என்பவை தவிர்க்க முடியாத - தடுக்க முடியாத அம்சமாக இருக்கும் வரை மூடநம்பிக்கைகளும் வளர்ந்து கொண்டேயிருக்கும்.  தலைவிதியைக் காரணம் காட்டி உழைக்க மறுக்கும் இளைஞர்களின் எதிர் காலம் வீணாவதை யாரால் தடுக்க முடியும்?

உண்மைகளை ஏற்க மறுக்கும் மனிதர்கள் மூடநம்பிக்கைகளின் பின்னே ஓடுகின்றனர்.  ‘இது என் நம்பிக்கை’ என்று சொல்கிறவர்களை எப்படி திருத்த முடியும்? படிப்பறிவில்லாத பாமர மக்களுக்கும், இவர்களுக்கும் வேறுபாடு இல்லை.

“கிறித்து பிறப்பதற்கு முந்தைய காலத்து புத்தகங்களை ஆதாரமாக வைத்துக் கொண்டு இன்றைய பிரச்சினைகளை தீர்க்க முனைவது அறியாமையாகும்.  நிகழ்காலம் என்பது ஓடுகிற ஆற்று வெள்ளத்தைப் போன்றது.  கடந்த கால மாகிய மலையிலிருந்துதான் அது உதிர்ந்தது என்றாலும், எதிர்காலமாகிய கடலை நோக்கியே அது ஓட வேண்டும்” என்றார் காண்டேகர்.

சாதிப் பிரிவுகள் சொல்லி - அதில்

தாழ்வென்றும் உயர்வென்றும் கொள்வார்

நீதிப் பிரிவுகள் செய்வார் - அங்கு

நித்தமும் சண்டைகள் செய்வார்’

என்று பாரதி பாடுகிறார்.

‘மூடப் பழக்கம் முடிவற்ற கண்ணுறக்கம்

ஓடுவ தென்றோ? உயர்வதென்றோ? நானறியேன்’

என்று பாரதிதாசன் தன் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார்.

தமிழ்நாடு மற்ற மாநிலங்களிலிருந்து கொஞ்சம் வேறுபட்டு உள்ளது.  இங்கும் இப்படிப்பட்ட சமூக சீர்திருத்தவாதிகள் தோன்றாமல் இல்லை.  பெரிய பூகம்பம் போல் எழுந்த பெரியார் தனி மனிதராகப் போராடவில்லை.  ஓர் இயக்கமாகச் செயல்பட்டார்.  அதனால் அவர் எல்லாத் தாக்கு தல்களிலிருந்தும் தப்பிப் பிழைத்தார்.

கல்லடியும், சொல்லடியும் தொடர்ந்து வந்த போதிலும் துவண்டு போகாமல் வீறு கொண்டு எழுந்தார்.  அவரது தொண்டர் படை கவசமாக இருந்து அவரைக் காப்பாற்றியது.  எதிரிகள் அவருடன் எதிர்த்து நிற்க முடியாமல் ஓடி ஒளிந்தனர்.

“சமூக சீர்திருத்தம் என்ற பெயரால் இங்கும் அங்கும் ஏதோ மாறுதல்களைச் செய்வதோ, ஒட்டு வேலை - மேல் பூச்சு வேலை செய்வதோ பயன் தராது.  இன்றைய சமுதாய அமைப்பையே அடி யோடு ஒழித்துவிட்டுப் புதியதொரு சமுதாய அமைப்பை - சாதியற்ற, உயர்வு தாழ்வு அற்ற சமுதாய அமைப்பை உருவாக்க வேண்டும்” என்பது அவர் கொள்கை.

இப்படிப்பட்ட பகுத்தறிவாளர்கள் இந்தியாவில் மட்டும் அல்ல, உலகெங்கும் தோன்றிபடாத பாடு பட்டுள்ளனர்.  அரசு அவர்களை வேட்டையாடியுள்ளது.  நாடு கடத்தல், சிறை, மரண தண்டனை என அவர்களை ஓட ஓட விரட்டியது.  ஆனால் அவர்களது கொள்கைகளே இப்போதும் ஆளு கின்றன.

பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை என்பதும் அதன் தொடர்ச்சியே! காந்தியைப் போல, கல்புர்கியைப் போல இவரும் கொலை செய்யப்பட்டுள்ளார்.  இதனால் கர்நாடகத்தில் மட்டுமே தெரிந்தவராக இருந்த இவர் உலகமே தெரிந்தவராக மாறியிருக்கிறார்.

எல்லாம் சரி, ‘இந்தியாவில் பத்திரிகையாளர் களுக்குப் பாதுகாப்பு இருக்கிறதா?’ என்ற கேள்விக்குப் பதில் என்ன?