தமிழகத் தமிழர் நலனாகட்டும் , ஈழத்தமிழர் நலனாகட்டும் , இரண்டிலும் இனத் துரோகம்ஒன்றை மட்டுமே செய்து தன் குடும்ப நலன் காக்கும் தலைவராகிவிட்டார் தமிழக முதல்வர் கருணாநிதி என்பது பலரும் அறிந்த பொதுச் செய்தி. இருந்தாலும், தற்போது சிங்கள இனவெறித் தாக்குதலுக்கு, ஈழத் தமிழ் மக்கள் அன்றாடம் கொத்து கொத்தாகச் செத்து மடியும், நாளும் மரண ஓலமும், அவல அழுகையும் கேட்கும் இந்தத் தருணத்திலும் அவர் இதயம் இளகவில்லையே, மனம் மாறவில்லையே என்பதே இப்போது பலருக்கும் அதிர்ச்சி.

Karunanidhiஈழ மக்களுக்கு இதுவரை செய்த துரோகம் போகட்டும். மக்கள் கொந்தளித்து எழும் போதெல்லாம் அதைத் தணிக்க அவர் கையாண்ட உத்தி களெல்லாம் போகட்டும். இந்த நெருக்கடியான கட்டத் திலும்,பிரச்சினையைத் தள்ளிப்போட பிப்ரவரி 15ஆம் தேதி தி மு க பொதுக்குழு கூடி முடிவு செய்யும் என்று அறிவித்தார். ஆனால் இதர கட்சிகள் ஒன்றுகூடி 28-01-09 அன்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தைத் தோற்றுவித்து இப்பிரச்சனைக்கு அது களம் இறங்கப் போகிறது என்று அநிந்த உடனேயே, 03-01-09 அன்று செயற்குழு என்றார்.

தி.மு.க. செயற்குழு அறிவிப்பு செய்தி வந்ததும், சரி மாற்றுக் கட்சியின் திட்டத்தை முறியடிக்க அவர்களைத் தாண்டி ஏதோ செய்யப் போகிறார். தீவிரமாக ஏதோ போராட்டம் அறிவிக்கப்போகிறார், தில்லியோடு உறவை முறித்துக் கொண்டு ஆட்சியையே இழக்கத் தயாரானாலும் ஆவார் என்று சில பத்திரிகையாளர்களும் மற்றும் உணர்வாளர்கள் பலரும் ஆர்வத்தோடு எதிர் பார்த்திருக்க வழக்கமான தன் புஸ்வாண அறிவிப்பைச் செய்து தமிழர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டிருக்கிறார்.

செயற்குழு முடிவு என்ன? ஈழப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண வேண்டுமாம். இதற்காக இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை என்னும் அமைப்பு ஒன்றைத் தொடங்குகிறாராம். அது ஊர் ஊராகப் போய் பொதுக் கூட்டம் போட்டு பிரச்சாரம் செய்யுமாம். இதுதான் முடிவு. அதாவது அன்றாடம் செத்துக் கொண்டிருக்கும் தமிழரைக் காப்பாற்ற வழி சொல் என்றால் அதை விட்டு பழங்கதைகளை அவிழ்த்து விட்டும், பிரபாகரன் சர்வாதிகாரி என்றும், சகோதர யுத்தமே இந்த நிலைமைக்கு காரணம் என்றும் கதையளந்து பிரச்சனையிலிருந்து தப்பித்து கவனத்தைத் திசை திருப்ப முயற்சித்திருக்கிறார்.

வரவர இவர் வாயைத் திறந்தாலே உணர்வாளர்கள் வயிறு எரிகிற அளவுக்கு இவரது போக்கு போய்க் கொண்டிருக்கிறது. இதில் தி.மு.க.வுக்கு அப்பால் உள்ள உணர்வாளர்கள் இருக்கட்டும். தி.மு.க.விலேயே உள்ள ஏராளமான தமிழின உணர்வாளர்கள், தமிழீழ ஆதரவாளர்களின் மன நிலையும் இதுதான். அவர்களுக்கே கருணாநிதியின் இந்தப் போக்கும் பேச்சும் பிடிக்காமல் அவர்கள் பொழிகிற வசை காது கொடுத்துக் கேட்க முடியாது, வார்த்தைகளிலும் எழுத முடியாது என்கிற அளவுக்கு மலிவாகப் போய்க் கொண்டிருக்கிறது. மிகுந்த வெறுப்பிலும், கசப்பிலும், எதோ இவ்வளவு காலம் இருந்து விட்டோம் இன்னும் கொஞ்ச காலம் என்கிற நிர்ப்பந்தத்திலும்ட தேவையிலுமே இவர்கள் கட்சியில் இருக்கிறார்களே தவிர முன்னைப்போல கொள்கைப் பிடிப்போடு உணர்வுப் பூர்வமாக ஒன்றி கழகச் செயல்பாடுகளில், நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபட்டிருக்கவில்லை. கருணாநிதி 5 முறை (2 + 5 + 2 + 5 + 3) 17 ஆண்டுகள் முதல்வர் பதவியில் இருந்திருக்கிறார். இன்னும் முதியவருக்கு பதவி ஆசை விடவில்லையே, குடும்பத்துக்கு அடுத்த பத்துத் தலைமுறைக்கும் தாங்குமளவுக்கு சொத்து சேர்த்து குடும்ப உறுப்பினர்களையும் முக்கிய பொறுப்புகளில் அமர்த்தியிருக்கிறார். இன்னமும் குடும்பத் தன்னலம் விடவில்லையே என்று குமுறுகிறார்கள். இதை அவர்கள் பேசுவது வேறு வார்த்தைகளில் .நாகரிகம் கருதி அவற்றைத் தவிர்த்து பேச்சின் பொருளை மட்டும் இங்கே தருகிறோம்.

இது ஒரு புறம் என்றால் அப்பாவிகளாக அல்லது இன்னமும் கலைஞர் அபிமானிகளாக உள்ள சிலரோ கருணாநிதியை விட்டால் பிறகு வேறு யார் முதல்வராவது, ஜெ.தானே வந்து அந்த இடத்தில் அமர்வார். ஜெ. தமிழின விரோதி. சர்வாதிகாரி அவர் வந்தால் அடக்கு முறை அதிகமாக இருக்கும் இப்போது நடத்துகிற சாதாரணப் போராட்டங்களைக்கூட அவர் ஆட்சியில் நடத்த முடியாதே. அதனால் கருணாநிதியே இருந்துவிட்டுப் போகட்டும் என்று சொல்கிறார்கள்.

இப்படிச் சொல்கிறவர்கள் இரண்டு உண்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒன்று கருணாநிதி ஆட்சியில் இல்லாமலிருக்கும் போது தமிழர்களுக்காக குரலாவது கொடுப்பார். ஜெ எதிர்ப்பு அரசியல் நடத்த ஜெ. ஆட்சிக்கு எதிராக வீர வசனங்கள் பேசுவார். தமிழர்களைக் காக்க ஆட்சி நம்மிடம் இல்லையே என்று புலம்புவார். சுற்றி சுற்றி வந்து எல்லாப் பிரச்சினை களையும் கடைசியில் ஆட்சியதிகாரத்துக்குக் கொண்டு வந்து நிறுத்தி மீண்டும் தன்னை ஆட்சியில் அமர்த்தக் கோருவார். இப்படி ஆட்சியைக் கைப்பற்ற வேனும் தமிழர் துருப்புச் சீட்டைப் பயன்படுத்தி தமிழர் நலம் பேசுவார்.ஆனால் ஆட்சியில் அமர்த்தினாலோ அடுத்த நிமிடமே தமிழர்களுக்கு துரோகம் செய்வார். தமிழர் நலனைக் காவு கொடுப்பார். தமிழர்களுக்காக ஆட்சியை இழக்கவும் தயார் என்று சொல்லிக் கொண்டே ஆட்சியை விடாமல் கெட்டியாகப் பிடித்து ஒட்டிக் கொண்டிருப்பார்.

ஆக சுருக்கமாக கருணாநிதி ஆட்சியில் இல்லாமலிருந்தால் கொஞ்சமாவது தமிழர்களுக்கான குரல் கேட்கும். தமிழர்களுக்காக ஏதாவது பயன் இருக்கும். ஆட்சியில் இருந்தால் அதுவும் இருக்காது. சுத்தமாக எதிர் நடவடிக்கைகளும் அதை நியாயப்படுத்த சூதும், வஞ்சகமும், துரோகமும் மலிந்த பசப்பு வார்த்தைகளே மிஞ்சும் . மனிதன் பேசிப் பேசியே தமிழனைச் சாகடித்துச் சுண்ணாம்பாக்கிவிடுவார்.

ஆனால் ஜெ. அப்படியில்லை. அவர் ஆட்சியிலிருந்தாலும் சரி, ஆட்சியில் இல்லாமல் இருந்தாலும் சரி, அவர் நிரந்தரமான தமிழின விரோதி.தமிழர் எதிரி. இதில் கருணாநிதி மாதிரி இரட்டை வேடமெல்லாம் அவரிடம் கிடையாது. என்றும் ஒரே நிறம். தமிழின விரோத நிறம். எதிர்ப்பு நிறம்.இந்த தமிழின விரோதப் போக்கிலேயே தன்னுணர்ச்சி காரணமாக எப்போதாவது சில துணிச்சலான தடாலடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு விடுவார். இதில் தமிழனுக்கு நல்லதோ கெட்டதோ எதுவும் நடக்கும்.ஆனால் அப்படிப்பட்ட துணிச்சலையோ தடாலடி நடவடிக்கைகளையோ எதையும் கருணாநிதியிடம் எதிர்பார்க்க முடியாது.

தவிர, ஜெ. தமிழின விரோதி என்பதால், அவருடைய ஆட்சிக் காலத்தில் அடக்கு முறைக்கு எதிராக இயல்பாக தமிழின உணர்வு பொங்கி எழும் தமிழகத்தில் விழிப்புணர்வும், வீராவேசமும் பெருகும். பெருக வாய்ப்புண்டு. ஆனால் கருணாநிதி ஆட்சியில் அப்படி கிடையாது. இவர் ஆட்சியில் கிடைப்பதாக நம்பப்படும் கொஞ்ச நஞ்ச சுதந்திரமும் தமிழ் உணர்வைத் தணிக்க மடைமாற்றம் செய்ய, காயடிக்க மட்டுமே பயன்படும் பயன்பட்டிருக்கிறது.

இவ்விருவர் ஆட்சிக் காலத்திலும் தொடர்கிற தமிழர் சிக்கலை ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு ஆராய்ந்தால் இது தெரியும். யார் யாரோ எந்தெந்த தலைப்பிலோ பட்டிமன்றம் நடத்துகிறார். முனைவர் பட்ட ஆய்வு செய்கிறார்கள். அவர்களில் யாராவது தமிழினத்தின் உரிமைகள் மிகுதியும் பறிபோனது தமிழினத் தலைவர் ஆட்சிக் காலத்திலா,அல்லது ஜெ. ஆட்சிக் காலத்திலா என்கிற தலைப்பில் ஒரு பட்டிமன்றம் நடத்தினாலோ அல்லது ‘தமிழினத் தலைவர் ஆட்சியில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம்’ என்கிற தலைப்பில் ஒரு முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டாலோபல உண்மைகள் தெரியவரும். கச்சத் தீவு, காவிரியுரிமை, முல்லைப் பெரியாறு, பாலாறு உரிமை பறிபோனதும், போய்க் கொண்டிருப்பதும் ஒகேனக்கல் திட்ட இழுத்தடிப்பும், செம்மொழிப் பித்தலாட்டமும், தற்போது தமிழீழ மற்றும் தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்டு வரும் துரோகமும் எல்லாமும் தெரியவரும். இப்படி தமிழினத்துக்கு துரோகம் செய்து தமிழனின் காலை வாருகிற ஆட்சி கருணாநிதி ஆட்சி.

தற்போது போரை நிறுத்தச் சொல்லி இதுபோன்று இருமுறை சட்டமன்றம் நிறைவேற்றிய தீர்மானம் ஜெ. மட்டும் ஆட்சியில் இருந்து நிறைவேற்றப் பட்டிருக்குமேயானால், அதைச் செயல்படுத்தாமல் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மன்மோகன்சிங் இதுபோன்று சாதாரணமாக தமிழகம் வந்து போயிருக்க முடியாது. கடும் எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டியிருந்திருக்கும். வேறு யாரும் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய தில்லை. அ.தி.மு.க. மகளிரணி போதும். அது சுப்பிரமணிய சுவாமிக்கு வழங்கிய சாத்துப்படியையும் திருக்காட்சி திவ்ய தரிசனங்களையும் மன்மோகன் சிங்கிற்கும் வழங்கியிருக்கும். மன்மோகன் சிங் பல அபூர்வக் காட்சி களையெல்லாம் கண்டு அசந்து போயிருப்பார்.அப்படி ஒரு நிலைமை அவருக்கு வாய்க்காமல் போனது தமிழர்களின் கெடு வாய்ப்புதான். போகட்டும்.

ஆக சுருக்கமாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியது.

1. தமிழர் உரிமைகள் அதிகம் இழந்தது தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில்.

2. ஈழச் சிக்கலுக்கு தொடர்ந்து அதிகம் துரோகமிழைத்ததெல்லாம் கருணாநிதி ஆட்சியில் இருந்த காலத்தில்.

3. ஈழத்தில் இவ்வளவு கொடுமை நடந்து, தமிழகமே பதறி எழுந்து கொந்தளித்து போராடிய போதிலும், அதைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் தன்னலவாத குடும்ப அரசியல் நடத்தி வருவது இப்போதைய இவருடைய ஆட்சிக் காலத்தில்.

4. இப்படி துரோக அரசியல் நடத்தி வருவதோடு மட்டுமல்ல, அதை நியாயப்படுத்த நேரத்திற் கொருவிதமாக பசப்பு வார்த்தைகளைப் பேசி மக்களின் உணர்வுகளை மழுங்கடித்து உணர்வாளர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டு வருபவர் தற்போது ஆட்சியில் இருக்கும் கருணாநிதி.

இவர் மட்டும் தற்போது ஆட்சியில் இல்லாது எதிர்க் கட்சியாக இருந்திருந்தால் ஜெ எதிர்ப்பு அரசியலுக்காவேனும் ஈழப் பிரச்சனையைக் கையிலெடுத்திருப்பார் . அதை வைத்து கொஞ்சமாவது துள்ளிக் குதித்திருப்பார். தமிழகத்தில் தமிழன் ஆட்சியில் இல்லாததால்தான் ஈழத் தமிழர்கள் இப்படித் துன்பப் படுவதாகவும், தான் மட்டும் ஆட்சியில் இருந்திருந்தால் இந்நேரம் ஈழத் தமிழர்களை இப்படித் துன்பத்தில் உழல விடாமல் காத்து ஈழத்தை அமைதிப்பூங்காவாக ஆக்கி தமிழகத் தமிழர்களுக்கு இனிப்புச் செய்தி தந்திருப்பேனே , என்ன செய்வது ஆட்சி நம்மிடம் இல்லையே என்று புலம்பி ஒப்பாரி வைத்திருப்பார்.

இப்படி எப்போதும் ஆட்சி, நாற்காலி, குடும்பம் என்று இதே சிந்தனையாய், இதே குறியாய், இதே கனவாய் இதைப் பெறவோ அல்லது இதைக் காப்பாற்றிக் கொள்ளவோ தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் எப்படிப்பட்ட துரோகத்தைச் செய்யவும் தயாராயிருப்பவர் கருணாநிதி. அப்படிப்பட்ட ஒரு துரோகத்தைத்தான் தற்போது ஈழ மக்களுக்கு தமிழக மக்களுக்கு செய்து கொண்டு வருகிறார் கருணாநிதி. இதைக் கழக உடன்பிறப்புகள் உணர வேண்டும். இன்னமும் கழக சேவை ,கலைஞர் சேவைசெய்து வாழ்நாளை வீணடித்துக கொண்டிருகக வேண்டுமா என்பது குறித்து சிந்திக்க வேண்டும்.

Jayalalitha1965இல் தமிழகத்தில் இந்தித் திணிப்புக்கு எதிராக எழுந்த மாபெரும் மாணவர் கிளர்ச்சியும், எழுச்சி மிக்க இளைஞர்களின் தியாகத்தையும் மூலதனமாகக் கொண்டுதான் தி.மு.க. அரியணை ஏறியது. 40 ஆண்டுகளுக்குப் பின் இன்று வரலாறு மாறியிருக்கிறது. எந்த மாணவர் கிளர்ச்சி தி.மு.க.வை அரியணையில் அமர்த்தியதோ அதே மாணவர் கிளர்ச்சிதான் இன்று தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்பப் போகிறது.அந்த அளவுக்கு தமிழகம் இன்று கொந்தளித்துக் கிடக்கிறது.

கோடிகோடியாய் சேர்த்து வைத்துள்ள சொத்துக்கள் தரும் தெம்பு மிகை நம்பிக்கை பிழை மதிப்பீடு கொள்கைகளைக் காற்றிலே பறக்கவிட்டு கரன்சிகளால் வாக்குகளை விலை பேசி விடலாம், தேர்தலிலே வெற்றி பெற்று விடலாம் என்கிற நம்பிக்கையைத் தந்திருக்கலாம். திருமங்கலம் தேர்தல் வெற்றி கருணாநிதியின் கண்ணை மறைத்திருக்கலாம்.

தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியை விட்டு விலகாது என்கிற முடிவின் உறுதிப்பாடுதான் தி.மு.க. செயற்குழு முடிவின் சாரம். தி.மு.க. காங்கிரசோடு உறவை முறித்துக் கொள்வதாயிருந்தால் செயற்குழு முடிவு வேறு விதமாக இருந்திருக்கும். தீர்மானத்தில் ஈழம் பற்றி சில வீர வசனங்கள் இடம் பெற்றிருக்கும் ஆனால் அப்படி இல்லை என்பதன் வெளிப்பாடு இது. ஆக கூட்டணி உறவு சார்ந்துதான் கொள்கை முடிவு. ஈழச் சிக்கல் குறித்த நிலைப்பாட்டிற்கான முடிவு. மற்றபடி அம்மக்களைக் காப்பாற்றுவதற்கான எந்த முடிவும் அல்ல.

இந்த முடிவில் எற்கெனவே தி.மு.க. கூட்டணியிலிருந்து பா.ம.க. வெளியேறியது அல்லது வெளியேற்றப்பட்டது போல் தற்போது சிறுத்தைகள் அமைப்பு வெளியேறினாலும் கருணாநிதி கவலைப் படப்போவதில்லை.

காரணம் தி.மு.க., காங்கிரசுடன் தே.மு.தி.க. கூட்டு சேர பேரம் பேசிக் கொண்டிருப்பதாக செய்திகள் வெளி வரத் தொடங்கியுள்ளன. அதாவது, தி.மு.க. நேரடியாகவோ, அல்லது தே.மு.தி.க. நேரடியாகவோ ஒன்றுக்கொன்று கூட்டு வைத்துக் கொள்ளாதாம். தி.மு.க. காங்கிரசுடனும், காங்கிரஸ் தே.மு.தி.க. வுடனும் கூட்டு வைத்துக் கொள்ளுமாம். அப்படி ஒரு ஏற்பாடு. எதையும் எந்த அநியாயத்தையும் நியாயப்படுத்திப் பேச நாக்கு இருக்கிறது அதற்கான சாதுர்யம் விளக்கம் இருக்றது. எப்படியோ எதிர் வரும் தேர்தலுக்காக இப்படி ஒரு அணி தயாராகிக் கொண்டிருக்கிறது.

இன்னொரு அணி அதிமுக தலைமையில் உருவாக இருக்கிறது. இதில் ஏற்கெனவே ம.தி.மு.க , இ.க.க , இ.க.க.மா ,ஆகியவை இருக்கினறன. தி.மு.க. கூட்டணியில் ஈழச்சிக்கலில் கருத்து மாறபாடு என்று எதுவும் வர வாய்ப்பில்லை. காரணம் எல்லாமே ஈழ எதிர்ப்புக் கட்சிகள்தாம். ஆனால் அ.தி.மு.க. கூட்டணி அப்படியல்ல. இது ஈழ ஆதரவு மற்றும் எதிர்ப்பு என்கிற இரு வேறு நிலை கொண்ட முரண்பட்ட கட்சிகளின் கூட்டணி. இதனால்தான் இந்தச் சிக்கல். முரண்பாடு எதுவுமில்லாமல் ஜெ. அணியில் உள்ள ஈழ ஆதரவுக் கட்சிகள் அக்கூட்டணியிலிருந்து விலகி தற்போது இக்கூட்டணியில் இல்லாத பா.ம.க., வி.சி.க.ஆகிய அமைப்புகளைச் சேர்த்துக் கொண்டு ஒரு மாற்று அணியை அதாவது மேற்கண்டுள்ள இரு அணிகளையும் விட்டு விலகிய ஒரு மாற்று அணியை உருவாக்கவேண்டும் என்று கோருகிறோம்.

இப்படி ஒரு கூட்டணி உருவானால் இது ஈழத்தமிழர்களுக்கும் தமிழகத் தமிழர்களுக்கும் ஒரு சேர குரல் கொடுக்கிற ஒருமித்த கருத்துகொண்ட ஒரே கூட்டணியாக இருக்கும். இப்படி ஒரு கூட்டணி உருவாக வேண்டும் என்பதே, அது தமிழர் பாதுகாப்பு இயக்கமாக இருக்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பு.

இந்த எதிர்பார்ப்பை தமிழர் மீது அக்கறையுள்ள தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் சிந்திக்க வேண்டும் அதன் நிறைவேற்றத்துககான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கழக உடன் பிறப்புகளும் ரத்தத்தின் ரத்தங்களும் அவரவர் கட்சியை விடடு வெளியேறி தமிழர் பாதுகாப்பு இயக்கத்தை வலுப்படுத்தி ஈழத்தமிழர் பாதுகாப்பிற்கும் தமிழகத் தமிழர் உரிமைக்கும் குரல் கொடுக்க போராட உறுதி ஏற்க வேண்டும்.

- இராசேந்திர சோழன்

Pin It