இந்தியச் சமூக அமைப்பில் இன்று வரை ஆதிக்கம் செலுத்தி வரும் ஒரு கருத்தியல், தீண்டாமைக் கருத்தியல் ஆகும். நான்கு வருணங்களாகப் பிரிக்கப்பட்டிருந்த பண்டைய இந்தியச் சமூகத்தில் இந்நான்கு வருணங் களுக்கும் அப்பால் புதிய பிரிவு ஒன்று மனு என்றழைக்கப்படும் சுமதிபார்கவி என்பவரால் உருவாக்கப்பட்டது. வருணமற்றவர்கள் என்ற பொருளில்  அவர்ணர்கள் என்று இப்புதிய பிரிவை அழைத்த  மனுச் சண்டாளர் என்ற பெயரையும் இட்டார்.            

இந்திய மக்கள்  தொகையில்  பெருவாரியான  இம் மக்கள்  பிரிவினர், இந்தியாவின்  பல்வேறு பகுதிகளில் பல்வேறு சாதிப் பெயர்களுடனும் சாதிப்பட்டங் களுடனும்  பெரும்பாலும் கிராமப்புறங்களில் வேளாண்  தொழிலாளர்களாக வாழ்ந்தனர்.

ஆங்கிலக் காலனிய அரசு, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முறையை இந்தியாவில் அறிமுகம்  செய்த போது தீண்டத்தகாத சாதியினர் யாவர்   என்பதைப் பதிவு செய்தது. அவ்வாறு பதிவு செய்ய வழிகாட்டும் வகையில், சில வரையறைகளை 1911-இல் உருவாக்கியது. இவ்வரையறைகளைப் படித்துப் பார்க்கும் போது இம் மக்களின் சமூகப் பொருளியல் நிலை எவ்வாறு இருந்தது என்பதை  நம்மால்  யூகிக்க முடியும்.

கிறித்தவ மறைப்பணியாளர்களும் ஆங்கில அரசும், தீண்டாமை என்ற ஓர் அடையாளத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டு இக்கொடுமைக்கு ஆளான மக்கள் பிரிவினருக்குப் பெயரிட்டன. இம்மக்களின்  தனித்தனிப் பண்பாடுகளும், வாழ்வியலும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. இது ஒரு வகையான  இனமையவாதச் சிந்தனையின் வெளிப்பாடுதான். இவ்வகையில் ஒடுக்கப்பட்டோர், தாழ்த்தப்பட்டவர், தீண்டத்தகாதோர் என்ற பொதுப் பெயர்களால் இம் மக்கள்  பிரிவினர்  சுட்டப்பட்டனர்.  இவர்களின்  சாதிப் பெயர்கள் அட்டவணைப்படுத்தப்பட்டதன் அடிப் படையில் அட்டவணை சாதியினர் என்றும் அழைக்கப் படலாயினர்.

···

இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஒரு முக்கிய கட்டமான சுதேசி இயக்கம் இந்தியாவின் நகர்ப் புறங்களை மையமாகக் கொண்டே நிகழ்ந்தது. மிகச் சொற்ப அளவில் தான் இதன் தாக்கம் கிராமப் புறங்களில் இருந்தது.    

காந்தியின் வருகைக்குப் பின்னர் 1920ல்  தொடங்கிய ஒத்துழையாமை இயக்கம், சுதேசி இயக்கத்தை விடப் பரவலான களங்களில் நிகழ்ந்தது. கிராமங்களை அதிகமாகக் கொண்டிருந்த இந்தியாவில் கிராம மக்களை ஈர்க்காமலும், அவர்களது பங்களிப்பு இல்லாமலும் விடுதலைப் போராட்டத்தை நடத்த முடியாது என்ற உண்மையைக் காந்தி அறிந்து கொண்டார். அதன் அடிப்படையில் கிராமப்புற மக்களை ஈர்க்கும் வகை யிலான செயல் திட்டங்களை உருவாக்கினார்.  இம் முயற்சியில் தீண்டத்தகாதோர் என்று ஒதுக்கி வைக்கப் பட்டிருந்த மக்கள் பிரிவின் மீது அவரது பார்வை படிந்தது. அவரது மனிதநேய உணர்வும் இதில் கலந்து கொண்டது.

ஹரிஜன்

பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்ட  தீண்டத் தகாதோர்  பிரிவு மக்களுக்கு ஒரே அடையாளத்தைத் தரும் வகையில்  ஒரு பெயரை இடவிரும்பினார், இதன் அடிப்படையில்  ‘ஹரிஜன்’ என்ற பெயரை இட்டார்.

இப்பெயரை அவர் உருவாக்கவில்லை. அவர் பிறந்த  குஜராத் மாநிலத்தில் வாழ்ந்த நார்சி மோத்தா  என்ற குஜராத் கவிஞர் உருவாக்கிய சொல் இது. இந்து சமயம் உருவாக்கிப் பேணிக் காத்த தேவதாசி முறையில்  பிறந்த பிள்ளைகள், தம் தந்தை பெயர்  அறியாது  வாழ வேண்டிய  அவலம்  நிலவியது.  மனித நேய  உணர்வு கொண்ட இக்கவிஞர், இவர்கள் விஷ்ணுவின்  பிள்ளைகள் என்ற பொருளில் ஹரிஜன் (ஹரி - விஷ்ணு) என்று  பெயரிட்டழைத்தார், இச் சொல்லையே  காந்தி  ஏற்றுக்கொண்டு தீண்டத்தகாதோர் என்று ஒதுக்கப் பட்டிருந்த மக்கள் பிரிவைக் குறிக்கப் பயன்படுத்தலானார்.   தாம் நடத்திய பத்திரிகைக்கும் இப்பெயரை இட்டார்.  காங்கிரஸ் இயக்கத்தின் அரசியல் கலைச் சொல்லாக இது விளங்கலாயிற்று.

இரட்டை வாக்குரிமை

மற்றொரு பக்கம் காங்கிரஸ் இயக்கத்திற்கு வெளியே  இம்மக்கள்  பிரிவினரிடம்  இருந்தே  தலைவர் களும் சிந்தனையாளர்களும் ஆங்காங்கே உருவாகத் தொடங்கினர். இவ்வரிசையில் சிறப்பான  இடத்தைப் பெற்றவராக  அம்பேத்கர்  விளங்கினார். இம் மக்களின்  முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு அவர் முன் வைத்த திட்டங்களுள் ஒன்று இரட்டை வாக்குரிமை யாகும்.

அவரது திட்டப்படி தீண்டத்தகாத பிரிவைச்  சேர்ந்த வாக்காளர்கள் மட்டும் இரண்டு வாக்குகளைத் தேர்தலில்  வழங்கும் உரிமை பெற்றிருப்பர். இவற்றுள் ஒரு வாக்கைப் பயன்படுத்தி ஏனைய வாக்காளர்களுடன்  இணைந்து ஒரு வேட்பாளரைத் தேர்வு செய்வர், அவர் களுக்கு மட்டுமே உரிய ஒரு வாக்கைப் பயன்படுத்தி தீண்டத்தகாத பிரிவைச் சார்ந்த ஒரு வேட்பாளரைத் தேர்வு செய்வர்.

இதனால்  பிற இயக்கங்களின்  கட்டுப்பாட்டிற்குள்  வராத தீண்டத்தகாத பிரிவைச் சேர்ந்த ஒருவரைத் தேர்வு செய்ய முடியும். இதில் பிற வகுப்பினர் தலையிட முடியாது.

இதைத் தொடக்கத்தில் இருந்தே காங்கிரஸ் எதிர்த்து வந்தது.  கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்தது.

இந்தியாவுக்கு எத்தகைய அரசியல் சட்ட வரைவை  உருவாக்குவது என்பது தொடர்பாகக் குழு ஒன்றினை ஆங்கில அரசு 1928 இல் அமைத்தது. இது, இக் குழுவின்  தலைவரான  சைமன் என்பவரின் பெயரால் சைமன் கமிஷன் எனப்பட்டது.  மக்களின்  கருத்தறிய  இக்குழு இந்தியா வந்த போது, இதற்கு எதிராக, சைமன் கமிஷன் எதிர்ப்புப் போராட்டத்தை காங்கிரஸ் நடத்தியது. அன்றைய காலகட்டத்தில் பரவலான

மக்கள் ஆதரவைப் பெற்ற காங்கிரசின் எதிர்ப்பால் எதிர் பார்த்த அளவுக்கு சைமன் குழு வருகை வெற்றி பெறவில்லை. இதனை  ஈடு செய்யும் வகையில் 1930 இல்  வட்டமேசை மாநாடு ஒன்றை  இலண்டனில்  ஆங்கில அரசு நடத்தியது.  ஆனால்  காங்கிரஸ்  இதில்  கலந்து கொள்ளவில்லை.  இதனால் எந்தவொரு முடிவையும்  இம்மாநாடு எடுக்க முடியாமல் போனது.

ஆயினும் இந்தியாவுக்கு என்று தனியாக அரசியல்  அமைப்புச் சட்டத்தை உருவாக்கும் போது, தீண்டத் தகாதோர் எனப்படும் மக்கள் பிரிவைக் கலந்து முடிவெடுக்க வேண்டும் என்ற முடிவு  முதலாம் வட்ட மேசை மாநாட்டில் எடுக்கப்பட்டது. இவ்வகையில்  இது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வெற்றி தருவதாய்  அமைந்தது.

1931 செப்டம்பரில் இரண்டாம் வட்ட மேசை மாநாடு நடந்தது. இதில் காந்தியடிகள் கலந்து கொண்டார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தனித் தொகுதி முறையை காந்தி எதிர்த்தார்.  மற்றபடி  எந்த முடிவும்  எடுக்கப்படவில்லை. 1932 ஜனவரியில்  காந்தி  கைதானார். இதே ஆண்டில் இரட்டை வாக்குரிமையை ஏற்றுக் கொள்ளும் முடிவை இங்கிலாந்து பிரதமர்  அறிவித்தார்.

இவ் அறிவிப்பு வந்த பின்னர் இம்முடிவுக்கு எதிராக காந்தி உண்ணாநோன்பை 1932 செப்டம்பர் 20ஆவது நாளில் தொடங்கினார். இந்து மகாசபையினரும் காந்தியின்  நிலைப்பாட்டிலேயே இருந்தனர்.  மக்களின் செல்வாக்குப் பெற்ற தலைவரான காந்தியின் உயிரைக் காப்பாற்ற வேண்டிய இக்கட்டான சூழலில், இரட்டை வாக்குரிமையை விட்டுக் கொடுக்கும் ஒப்பந்தத்தில் 24.09.1932 இல் அம்பேத்கர் கையெழுத்திட்டார்.

இவ்வாறு முதலாம் வட்ட மேசை மாநாட்டில் பெற்ற இரட்டை வாக்குரிமையை, காந்தியடிகளின்  உண்ணா நோன்பால் தாழ்த்தப்பட்ட மக்கள் இழந்தனர்.  

இதுவரைப் பார்த்த செய்திகளின் பின்புலத்தில் அம்பேத்கரின் ‘தீண்டப்படாதவர்களுக்கு காங்கிரசும் காந்தியும் சாதித்ததென்ன’ என்ற நூலைப் படிக்க வேண்டும்.

நூல்

இந்திய அரசியல் அரங்கில், தீண்டத்தகாதவர்களின்  பாதுகாவலர்கள் என்ற அடையாளத்தை காந்தியும்  காங்கிரசும் உருவாக்கியிருந்த சூழலில் இந்நூலின் தலைப்பு அதிர்ச்சியூட்டுவதாய் அமைந்திருந்தது.  நூலின் முதல் பதிப்பு 1945 இல் வெளியானது.

பதினொன்று இயல்களைக் கொண்டிருந்த இந் நூலில், விரிவான பின் இணைப்புகளை அம்பேத்கர் கொடுத்துள்ளார்.

இந்நூல் தமிழில், பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்  நூல் தொகுப்பு வரிசையில் பதினாறாவது தொகுதியில்  இடம்பெற்றுள்ளது. இப்பதினாறாவது தொகுதி முழுமையும் இந்நூலை உள்ளடக்கியதுதான். எனவே இந்நூலைப் படிக்க விரும்புவோர், அம்பேத்கர் நூல் தொகுதி வரிசையில்  பதினாறாவது தொகுதியை வாங்கிப் படிக்க வேண்டும். 627 பக்கங்களைக் கொண்ட

இந்நூல் நாற்பது ரூபாய்தான். நூலகப் பதிப்பின் விலை கூட ரூபாய் நூறுதான்.

நூலின் செய்தி

நூலின் முதல் இயல் 1917 ஆம் ஆண்டில் கல்கத்தாவில் நிகழ்ந்த இந்திய தேசியக் காங்கிரஸின்  வருடாந்திரக் கூட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின்  குறை பாடுகளை அகற்றுவதை வலியுறுத்தும் தீர்மானத்தில் இருந்து தொடங்குகிறது.

இத்தீர்மானத்தை வரி மாறாது மேற்கோளாகக் காட்டிவிட்டு இத் தீர்மானத்தை முன்மொழிந்த நடேசன், இத் தீர்மானத்தை ஆதரித்து உரையாற்றிய, புலபாய் தேசாய், ராமய்யர், ஆசப் அலி ஆகியோர் ஆற்றிய உரைகளை மேற்கோளாகக் காட்டுகிறார்.  இவ் உரைகள் தீண்டப்படாதோர் என்று கூறப்படும்  மக்கள்  பிரிவின்  மீதான  காங்கிரஸின் அனுதாப  உணர்வையும், அவர்கள் முன்னேற்றத்தின் மீது கொண்டுள்ள  ஆர்வத் தையும் வெளிப்படுத்துபவை. இவ்வுரைகள்  கண்ணிய மான சொற்களைக் கொண்டுள்ளதாகக் குறிப்பிடும் அம்பேத்கர் இது விநோதமான நிகழ்வு என்றும் மதிப்பிடுகிறார்.

இம்மதிப்பீட்டிற்கான காரணத்தை இந்நிகழ்வுக்குத் தலைமை வகித்த அன்னிபெசண்டில் இருந்து தொடங்கு கிறார். தீண்டத்தகாதவர்களின் மீது இயல்பான  வெறுப்புணர்வு கொண்டார் அன்னிபெசண்ட் என்ற கருத்தை முன்வைக்கும்  அம்பேத்கர்  அதற்குச் சான்றாக  1909 பிப்ரவரியில்  வெளியான இந்தியன் ரெவ்யூ என்ற ஆங்கில ஏட்டில் Ôஒடுக்கப்பட்ட வர்க்கங்களை மேம் படுத்தல்Õ என்ற தலைப்பில் அன்னிபெசண்ட் எழுதிய கட்டுரையை விரிவான மேற்கோளாகக் காட்டுகிறார்.

இக்கட்டுரையில் இம் மக்களைக் குறித்த எதிர் மறையான, அருவருப்பான சித்திரத்தைத் தீட்டும் அன்னிபெசண்ட் அதைப் போக்கும் வழிமுறைகளைக் கூறவில்லை. இதற்குக் காரணமான  ஆட்சியாளர்களை விமர்சிக்கவில்லை. மாறாக  மேட்டிமைக் குழு மக்களின்  குழந்தைகள் பயிலும் பள்ளிகளில் இச் சமூகத்தின்  குழந்தைகளை அனுமதிக்கக் கூடாது என்று வாதிடு கிறார்.  இத்தகைய  சிந்தனைப் போக்குடைய அன்னி பெசண்ட்டின்  தலைமையில்  இத்தீர்மானம்  நிறைவேற்றப் பட்டமையே ‘வினோதமான சம்பவம்’ என்று குறிப்பிடும்படி அவரைத் தூண்டியுள்ளது. 

இரண்டாவது மாநாடு தொடங்கி, சமூக சீர்திருத்தங் களின் பால் தனக்குள்ள அக்கறையை காங்கிரஸ் இயக்கம் வெளிப்படுத்தி வந்தது.  1895 இல் புனே நகரில் நடந்த  காங்கிரஸ் மாநாட்டில் சமூக சீர்திருத்தம்  தொடர்பான கருத்துக்கள் மாநாட்டில் இடம் பெறுவதை ‘சமூகப் பழமைவாதிகள்’  திலகர்  தலைமையில் எதிர்த்தனர்.  இதன் பின்னர் சமூகத் தீமைகளைக் களைவதிலோ அல்லது தணிப்பதிலோ அக்கறையில்லாத ஆர்வமில்லாத ஓர் அரசியல் அமைப்பாக  காங்கிரஸ் மாறியது என்கிறார் அம்பேத்கர்.

இதனால்தான் தீண்டத்தகாதவர் என ஒதுக்கி வைக்கப்பட்ட  மக்கள் பிரிவினரின் நலன் தொடர்பாக 1917 காங்கிரஸ் மாநாட்டில் இயற்றப்பட்ட  தீர்மானத்தை விநோதமான சம்பவம் என்கிறார் அம்பேத்கர்.

இவ்வாறு குறிப்பிட்டு விட்டு, பின்வரும் ஆறு வினாக்களை எழுப்புகிறார்.     

·          இப்படி ஒரு தீர்மானத்தை இயற்ற வேண்டியது அவசியம் என்று, காங்கிரஸ் ஏன் கருதியது?

·          இவ்வாறு அக்கறை கொள்ள அதைத் தூண்டியது எது?

·          இதனால் அது பெற விரும்பிய ஆதாயம் என்ன?

·          அது யாரை ஏமாற்ற விரும்பியது?

·          அதன் பார்வையால் ஏற்பட்ட மாற்றமா? அல்லது  உள்நோக்கமா?

·          எது இதை நிறைவேற்றத் தூண்டியது?

இதன் தொடர்ச்சியாக, ‘காங்கிரஸ் தீர்மானத்திற்குப் பின் ஓர் உள்நோக்கம் இருந்தது... அந்த நோக்கம் ஆன்மீக நோக்கமல்ல, அது ஓர்  அரசியல்  நோக்கமாக இருந்தது’ என்பதை விளக்கியுள்ளார். 

1885 ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட காங்கிரஸ் 32 ஆண்டுகள் கழித்து 1917 இல் தாழ்த்தப்பட்ட வர்க்கங்கள் குறித்து தீர்மானம் நிறைவேற்றியமைக்குக் காரணம் என்ன  என்ற வினாவை எழுப்பும் அம்பேத்கர்  அதற்கு விடையும் அளிக்கிறார். 1917 இல் நாராயண் சந்தவார்க்கரின்  தலைமையில்  நிகழ்ந்த  தாழ்த்தப்பட்ட  வகுப்பினர் மாநாட்டில்  இயற்றப்பட்ட  தீர்மானங்களே இதற்குக் காரணம் என்பது அவரது கருத்தாகும். இம் மாநாட்டை அடுத்து இரண்டாவது கூட்டமும் இதே பங்களிப்பைச் செய்துள்ளது.

காங்கிரஸ் லீக் திட்டத்திற்கு தாழ்த்தப்பட்டவர்களின்  ஆதரவு தேவை என்ற நிலையில் இத்தீர்மானத்தை நிறை வேற்ற வேண்டிய கடப்பாடு காங்கிரசுக்கு இருந்தது.

பர்டோலி தீர்மானம்    

1919 இல் காந்தியின்  வருகைக்குப் பின்னர்,  பொது மக்களிடம் தொடர்பு கொள்ளும் இயக்கமாக  காங்கிரஸ் மாறியது.  இம் மாற்றத்தை  அடுத்து 1922 பிப்ரவரியில்  பர்டோலி என்னும் ஊரில் நிகழ்ந்த கூட்டத்தில் சில செயல் திட்டங்களை அறிவித்தது. உறுப்பினர் சேர்க்கை,  கதர் உற்பத்தி, மது எதிர்ப்பு போன்றவற்றுடன்  தாழ்த்தப் பட்ட மக்களை மையப்படுத்தும் திட்டம் ஒன்றும் இச் செயல் திட்டத்தில் பின்வருமாறு இடம் பெற்றிருந்தது.

‘தாழ்த்தப்பட்ட வகுப்பினரை ஒரு சிறந்த வாழ்க்கை வாழ ஒருங்கமைத்தல், அவர்களுடைய சமூக, மன மற்றும் தார்மீக சூழ்நிலைகளை மேம்படுத்தல், தங்களுடைய குழந்தைகளை தேசியப் பள்ளிகளுக்கு அனுப்ப அவர்களைத் தூண்டுதல், இதர பிரஜைகள் அனுபவிக்கும் சாதாரண வசதிகளை அவர்களுக்கு வழங்குதல்’ ஆகியவைகளாகும்.

பின்னர் இத்திட்டம் காங்கிரஸ் காரியக் கமிட்டி யால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதை நிறைவேற்ற 

குழு ஒன்றையும் நியமித்தது. அத்துடன் இதற்காக ஐந்து இலட்சம் நிதியும் ஒதுக்கப்பட்டது.

1923-இல் மும்பையில் கூடிய கூட்டத்தில், “... தீண்டப்படாதவர்களின் பிரச்சினை குறிப்பாக இந்து சமுதாயம் சம்பந்தப்பட்டதாக இருப்பதால், இந்து சமுதாயத்தினரிடையே இருந்து இத் தீமையை அகற்றும் கடும் முயற்சிகளை மேற் கொள்ளவும், இந்த விஷயத்தைத் தன் பொறுப்பில் ஏற்றுக் கொள்ளவும், அகில இந்திய இந்து மகா சபையை அது கேட்டுக் கொள்கிறது.”

என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத் தீர்மானம் குறித்து,

‘தீண்டப்படாதவர்களின் மேம்பாடு குறித்த பணியை மேற்கொள்வதற்கு இந்து மகாசபையை விட சற்றும் பொருத்தமற்ற ஓர் அமைப்பு வேறெதுவும் இருக்க முடியாது. தீண்டப்படாதவர்களின்  பிரச்சினையை  சிரமேற்கொண்டு தீர்க்க சற்றும்  தகுதியற்ற ஓர் அமைப்பு இருக்கிறதென்றால்  அது இந்து மகாசபை தான்.  அது ஒரு தீவிரவாத இந்து அமைப்பாகும்... அது ஓர் அப்பழுக்கற்ற அரசியல் அமைப்பு, அதன் பிரதானக் குறிக் கோளும் நோக்கமும் இந்திய அரசியலில்  முஸ்லீம்களின் செல்வாக்கை எதிர்த்துப் போராடு வதேயாகும். தனது அரசியல் வலிமையைப் பேணிக் காப்பதற்காக அது தனது சமூக ஒருமைப்பாட்டை பராமரிக்க விரும்புகிறது. சமூக ஒருமைப்பாட்டை பராமரிக்கும் வழிமுறை, ஜாதி அல்லது தீண்டாமையைப் பற்றிப் பேசாதிருப்பதேயாகும்”.

மேலும், தீண்டப்படாதவர்களின் உண்மையான நண்பரான  சுவாமி சித்தானந்தாவை, தான் உருவாக்கிய  குழுவின் ஒருங்கிணைப்பாளராக நியமிப்பதை தொடக்கத்தில்  இருந்தே காங்கிரஸ் விரும்பவில்லை. அவருக்குப் பதிலாக ஓர் ஆசாரமான பிராமணரான தேஷ்பாண்டேயைத் தேர்வு செய்தது. இறுதியாக இப்பிரச்சினையை இந்து மகாசபையிடம் ஒப்படைத்தது. பர்டோலி  தீர்மானத்தை  நடைமுறைப்படுத்த உதவும் வகையில் தேவையான  நிதி வழங்கவும் காங்கிரஸ் விரும்பவில்லை. இது தொடர்பாக  சுவாமி சித்தானந்தாவுக்கும் பண்டித மோதிலால் நேருவுக்கும் இடையில் நிகழ்ந்த கடிதப் போக்குவரத்தின்  நகல்கள் நூலின் பின் இணைப்பில்  இடம் பெற்றுள்ளன.  இறுதியில் சுவாமி சித்தானந்தா  இக்குழுவில் இருந்து 1922 இல் விலகி விட்டார்.

மன்னரின் தீர்ப்பு     

தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனித்தொகுதி வழங்கும் திட்டத்தை இரண்டாவது வட்ட மேஜை மாநாட்டில் காந்தி ஏற்றுக்கொள்ளவில்லை. தாழ்த்தப் பட்ட வகுப்பினருக்குத் தனித்தொகுதி உரிமை அளிக்கப் படுமானால் என் உயிரைக் கொடுத்தேனும் அதை எதிர்ப்பேன் என்று காந்தி குறிப்பிட்டார்.  பின்னர் அவர் இந்தியா திரும்பியதும்  கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். சட்ட மறுப்பு இயக்கத்தை மீண்டும் தொடங்கப் போவதாக  அவர் எச்சரித்ததே இதற்குக் காரணம்.

சிறையில் இருந்தபடியே 1932 மார்ச் 11இல்

இந்திய மந்திரி சாமுவேல் ஹோருக்கு  கடிதம் ஒன்றை எழுதினார். இக்கடிதத்தில் தாழ்த்தப்பட்டோருக்குத் தனித்தொகுதி உருவாக்குவது குறித்த தன் எதிர்ப்பைப் பின்வருமாறு பதிவு செய்திருந்தார்.

Ò...தனித்தொகுதி முறை அவர்களுக்கும் இந்து சமயத்திற்கும் தீங்கு விளைவிக்கக் கூடியது. கேடு பயப்பது என்று கருதுகிறேன்... ...இந்து சமயத்தைப் பொறுத்தவரையில் தனித் தொகுதி முறை அதனை உடைத்துத் தகர்த்துக் கூறு போட்டு விடும்.  எனக்கு  இந்த  வகுப்பாரின்  பிரச்சினை பிரதானமாக தார்மீகச் சார்புடையது. சமயத் தொடர்புடையது.Ó

காந்தியடிகளின் இக்கூற்று ஒரு சமூக அரசியல் பிரச்சினையை மதப்பிரச்சினையாகப் பார்த்ததன்  வெளிப்பாடுதான். அடுத்ததாக,

Òதாழ்த்தப்பட்ட இனத்தாருக்கு தனித்தொகுதிகள்   அமைப்பதென அரசு முடிவு செய்யும் பட்சத்தில் அதனை எதிர்த்து  நான் சாகும்வரை உண்ணா விரதம் இருப்பேன் என்பதை மன்னர் பிரான் அரசாங்கத்துக்குப் பண்போடு தெரிவித்துக் கொள்கிறேன்... தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்குத் தனித் தொகுதிகளை உருவாக்கும் உத்தேசம் ஏதும் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு இல்லை என்றும் நம்பவே விரும்புகிறேன்Ó

என்றும் தம் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். 1932 ஆகஸ்ட் 17-இல், இங்கிலாந்தின் மன்னர் வெளியிட்ட அறிக்கையானது காந்தியின் எச்சரிக்கையைப் பொருட் படுத்தாததன் வெளிப்பாடாக அமைந்தது. அதன் முக்கிய செய்திகள் வருமாறு:

·          தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று தனித் தொகுதிகள் ஒதுக்கப்படும்.

·          இம்மக்கள் பிரிவினர் மட்டுமே இத்தொகுதி களில் வாக்களிப்பர்.

·          இத்தொகுதியில்  வாக்களிக்கும்  உரிமை  பெற்றவர் பொதுத் தொகுதியிலும் வாக்களிக்கும் உரிமையைப் பெறுவார்.

·          தாழ்த்தப்பட்ட மக்கள் மிகுதியாக வாழும்  பகுதிகளில்  இத்தனித்தொகுதி அமைக்கப்படும்.

·          இருபது ஆண்டுகள் வரை இம் முடிவு  நீடிக்கும்.

இங்கிலாந்துப் பிரதமரின் இத்தீர்ப்பை எதிர்த்து,  கடிதம் ஒன்றை அவருக்கு காந்தி எழுதினார்; அக் கடிதத்தில் இருந்து சில பகுதிகள் வருமாறு:

என் உயிரைப் பணயம்  வைத்து உங்கள் முடிவை  எதிர்க்க வேண்டியவனாக இருக்கிறேன். இதைச் செய்வதற்கு எனக்குள்ள ஒரே வழி சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதே ஆகும். பிரிட்டிஷ் அரசாங்கம்... தனது முடிவை மாற்றிக் கொள்ளு மானால் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்குத் தனித் தொகுதிகளை ஒதுக்கும் தனது திட்டத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுமானால்  என் உண்ணாவிரதத்தை நிறுத்தி விடுவேன்.Ó

காந்தியின் இக்கடிதத்திற்கு இங்கிலாந்தின்  பிரதமர்  ராம்ஸே மக்டொனால்டு பதில் எழுதினார். அதில், 

Òதாழ்த்தப்பட்ட வகுப்பினர், தங்களது குரலை எதிரொலிக்கக் கூடிய குறிப்பிட்ட எண்ணிக்கை உள்ள தங்கள்  பிரதிநிதிகளைத் தாங்களே தங்கள் விருப்பப்படி தேர்ந்தெடுத்து அனுப்புவதைத் தடுக்கும் ஒரே நோக்கத்துடனேயே நீங்கள் உண்ணா விரதத்தை மேற்கொள்ளத் தீர்மானித்திருக் கிறீர்கள். இவ்வாறு தான் உங்கள் போக்கை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.Ó

என்று குறிப்பிட்டிருந்தார்.

புனே ஒப்பந்தம் 

தாம் குறிப்பிட்டபடி காந்தியடிகள் தம் உண்ணா விரதத்தை 1923 செப்டம்பர் 20 ஆம் நாளன்று தொடங் கினார்.  இதனால்  காந்தியின்  உயிரை எவ்வாறு காப்பது என்ற பிரச்சினை உருவானது என்று அம்பேத்கர் குறிப்பிட்டார். காந்தியின் உண்ணாவிரத நிர்ப்பந்தத் திற்குப் பணிந்து  தாழ்த்தப்பட்டவர்களின்  வகுப்புரிமை தொடர்பான  பிரிட்டிஷ் பிரதமரின் தீர்ப்பில் மாற்றம் செய்ய அம்பேத்கர் இணங்கினார்.  இறுதியில் ஒப்பந்த விதிகள் இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இவ்வொப்பந்தம் இரட்டை வாக்குரிமையைப் பறித்து விட்டது.  இது குறித்து சற்று விளக்கமாக  சில செய்திகளை  அம்பேத்கர்  கூறச் செல்கிறார்.  இதனை அடுத்து  தீண்டப்படாதவர்கள் மீதான  காங்கிரசின் கருணையை அதன் உள்ளார்ந்த  பொருள் என்ன என்று  வெளிப்படுத்துகிறார். இந்திய மக்கள் அனைவரையும்  காங்கிரஸ் பிரதிநிதித்துவப்படுத்துகிறதா என்ற வினாவை எழுப்பி ‘தாழ்த்தப்பட்ட இன வேட்பாளர் உண்மையில் இந்துக்களால் நியமிக்கப்படுபவர் என்றே கூற வேண்டும்’ என்கிறார்.

‘தீண்டப்படாதோர் உட்பட இந்தியா முழு வதையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே அமைப்பு’ காங்கிரஸ் தான் என்ற கருத்தை அயல்நாட்டினர்

நம்பி வந்த சூழலில், இந்திய சமூக அமைப்பு குறித்த  உண்மையை இந்நூலின் ஒன்பதாவது இயலில் அம்பேத்கர் வெளியிட்டுள்ளார். ‘சுதந்திரத்திற்காக காங்கிரஸ் போராடி வருகிறதா என்ற கேள்வி யாருடைய சுதந்திரத்திற்காக, காங்கிரஸ் போராடி வருகிறது

என்னும் கேள்வியுடன் ஒப்பிடும் போது மிக மிகக் குறைந்த முக்கியத்துவத்தையே பெறுகிறது’ என்று குறிப்பிட்டு விட்டு, இந்தியாவின் ஆதிக்க வகுப்பினராகப் பிராமணரும் பனியாக்களும் விளங்கி வருவதை அம்பேத்கர் வரலாற்றுச் சான்றுகளுடன் சுட்டிக் காட்டியுள்ளார். இவ்வியலின் இறுதியில்  ‘காங்கிரசை ஆதரிப்பது என்பது மற்றவர்களை அடிமைப்படுத்த கொடுங்கோன்மைக்கு சுதந்திரமளிப்பதையே குறிக்கும்’ என்று முடித்துள்ளார்.

எட்டாவது  இயல்  இந்து சமயத்திற்கும்  தீண்டத் தகாதவர்  என்று ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும்  மக்கள் பிரிவினருக்கும் இடையிலான எதிர்மறையான  உறவினை விளக்குகிறது.

இறுதி இயல்  ‘காந்தியம்  தீண்டப்படாதவர்களின்  தலைக்கு மேல் தொங்கும் வாள்’ என்ற தலைப்பைக் கொண்டுள்ளது. கல்விப்புலம் சார்ந்த பாடநூல்கள், காந்தியவாதிகள் எழுதிய நூல்கள் வாயிலாக மட்டுமே  காந்தியை அறிந்து கொண்டவர்களுக்கு இத்தலைப்பு அதிர்ச்சியூட்டுவதாகவே அமையும். தலைப்பு மட்டு மின்றி  இவ்வியலில்  இடம் பெற்றுள்ள சாதி, வருணம்  தொடர்பான காந்தியின் கூற்றுகளும்கூட அதிர்ச்சி யூட்டுபவை தாம். சாதிமுறை, வருணமுறை தொடர்பான  காந்தியின் கூற்றுகளை அப்படியே மேற்கோளாக அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார் (பக் 442 - 444). இவை அவரது வருணாசிரமச் சார்பை வெளிப்படுத்தி நிற்கின்றன.

உழைக்கும்  வர்க்கத்தினரான தொழிலாளிகளுக்கும் விவசாயிகளுக்கும் அவர் வழங்கியுள்ள அறிவுரை களையும்  அம்பேத்கர் மேற்கோளாகக் காட்டியுள்ளார். இவையும் கூட எரிச்சலூட்டும்  தன்மையின. நம் கால காந்தியவாதிகள் சிலர் ஆலைத் துணிகளையும் ஏன் கைத்தறித் துணிகளையும் கூடத் துறந்து, கதராடை  அணிந்து வாழ்ந்தாலும் சாதி உணர்வைத் துறக்காது வாழ்கிறார்கள். அம்பேத்கர் மேற்கோளாகக் காட்டும்  இப் பகுதிகளைப் படிக்கும் போது அவர்கள்  உண்மை யாகவே  காந்தியைப் பின்பற்றுபவர்கள் என்றே கூறத் தோன்றுகிறது.

Ôஅம்பேத்கர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கையாள்Õ என்ற குற்றச்சாட்டை முன்வைப்பவர்களின் போலி வாழ்க்கையையும், குருவாயூர் கோவில் நுழைவுப் போராட்டத்தில் காந்தியின் எதிர்மறையான செயல் பாட்டையும் அம்பேத்கர் வலுவான சான்றுகளுடன் வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன் பின்வரும்  வினாக்களையும் காந்தியை நோக்கி எழுப்பியுள்ளார்.

1.         திரு காந்தி, தாம் மிகவும் நேசிக்கிற பல்வேறு நோக்கங்களுக்காக எத்தனையோ முறை உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்? இதே காந்தி தீண்டப்படாதோருக்காக ஏன் ஒரு முறை கூட உண்ணாவிரதம் மேற்கொள்ள வில்லை?

2.         தீண்டப்படாதோருக்கு ஆதரவாக காந்தி ஏன் ஒருமுறை கூட சத்தியாக்கிரகத்தை ஆரம்பிக்க வில்லை.

3.         பொதுக் கிணறுகளையும், ஆலயங்களையும் பயன்படுத்திக் கொள்வதற்கு இந்துக்களுக்கு எதிராக தீண்டப்படாதோர் காந்தியின்  வழியைப் பின்பற்றி 1929 முதல்  சத்தியாக்கிரகம்  செய்து வந்துள்ளனர். அவர்களது சத்தியாக் கிரகத்தை  திரு காந்தி ஏன் எதிர்க்க வேண்டும்?

பல முக்கிய ஆவணங்கள் இந்நூலின் பின்னிணைப்பு களாக இடம் பெற்றுள்ளன? மொத்தத்தில் தீண்டாமை  ஒழிப்பு தொடர்பாக காங்கிரசும் காந்தியும் மேற் கொண்ட அணுகுமுறை குறித்த ஓர் ஆழமான ஆய்வு நூலாக இந்நூல் அமைந்துள்ளது.

காங்கிரசின் எதிர்வினை

1945 இல் அம்பேத்கர் இந்நூலை வெளியிட்ட பின் இதற்கு மறுப்புரை எதையும்  காந்தி எழுதவில்லை. ஆனால் 26.07.1945ல் ராஜாஜிக்கும் 18.10.1945இல் ராஜாஜியின் சீடர் க.சந்தானத்திற்கும் கடிதம் எழுதி அம்பேத்கரின் நூலுக்கு மறுப்புரை எழுதும்படி வேண்டியுள்ளார். இருவரும் இரு சிறுநூல்களை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டனர்.

இந்நூல்களில் அம்பேத்கர் எழுப்பிய பல வினாக் களுக்கு விடையில்லை. மாறாக சில அறிக்கைகளையும் புள்ளிவிவரங்களையும் அடிப்படையாகக் கொண்ட  விளக்கங்களாக மட்டுமே  அமைந்தன. குறிப்பாக இந்து மதத்திற்கும் தீண்டாமைக்கும் இடையிலான நெருக்க மான பிணைப்பு, தீண்டத்தகாதவர்களுக்காக ஒரு முறை கூட காந்தி உண்ணாவிரதம் இருக்காமை, தீண்டத்தகாத மக்கள் மேற்கொண்ட சத்தியாக்கிரகத்தை காந்தி ஆதரிக் காமை,  சாதி குறித்த காந்தியின் கருத்து என அம்பேத்கர்  முன்வைத்த கருத்துக்களுக்குத் தெளிவான பதிலை இரு நூல்களிலும் காணமுடியவில்லை.

இவ்விரு நூல்களும் ஆங்கிலத்தில் வெளியாகி 71 ஆண்டுகள் கழித்து மதுரை காந்திய இலக்கிய சங்கம் இவற்றைத் தமிழில் மொழிபெயர்த்து ஒரே நூலாக இன்று வெளியிட்டுள்ளது. பதிப்புரை எழுதியுள்ள

திரு. மா.பா.குருசாமி தம் பதிப்புரையில்,

அண்ணலின் அரிய பணிகளை ஆய்வுரை என்ற பெயரில் புரட்டிப் போட்ட ஒரு நூலுக்கு மதிப்புரையாக இரண்டு அறிஞர் பெருமக்கள் ஆய்வுரை வழங்கினர்.

டாக்டர் அம்பேத்கர் “காங்கிரசும் காந்தியும் தீண்டத்தகாதோருக்குச் செய்ததென்ன?” என்ற ஒரு நூலை ஆங்கிலேய அரசிடம் நற்பெயர் பெறுவதற்காக எழுதி வெளியிட்டார். அதில் நெஞ்சறிந்தே பொய்களையும் புரட்டுகளையும் தொகுத்து வரலாற்றுண்மைகளை மறைத்து அண்ணல் காந்தியடிகளின் நற்பெயரைக் கெடுக்க முயன்றிருந்தார். அந்தக் கட்டியளந்த கருத்துக் களை அறிவார்ந்த முறையில் மறுத்து அண்ணலும் காங்கிரசும் தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் செய்ததைச் சான்றுகளோடு தொகுத்துத் தருகின்றன இந்த ஆய்வு நூல்கள்.

என்று எழுதியுள்ளார். அம்பேத்கரின் மீது அவர் கொண்ட காழ்ப்புணர்வின் பதிவாக இதைக் கருத இடமுள்ளது.

இன்றைய இந்தியாவின் அரசியல் சூழலில் அம்பேத்கர், பெரியார் சிந்தனாவாதிகளும் இடது சாரிகளும் இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது. இந்நிலையில் காந்தியத்தின் பெயரால் அம்பேத்கரை, சிறுமைப்படுத்தும் இந்நூலை இத்தகைய பதிப்புரையுடன் இன்று வெளியிடுவது யாருக்காக?