அதிகாரத்திற்கு வால் முளைத்திருக்கிறது.
கால்களில் சக்கரமும் விலாவில் இறகும்
உருவாகியிருக்கின்றன.
நகங்கள் மேலும் மேலும் கூராகின்றன.
காற்றில் மழைநீரில் மண்ணில் அதன்
கொடிய விஷம் படிந்திருக்கிறது.

அரச அதிகாரமும் ஆன்மீக அதிகாரமும்
கோட்டையிலிருந்து -
கோபுரங்களிலிருந்து புறப்பட்டு
வியாசர்பாடி எம்.ஜி.ஆர் நகர் வழியாக
பாப்பாபட்டி கீரிப்பட்டிக்கு வந்தடைகின்றன.

மிதிபட்டு வதைபட்டு மரிப்பவர்களுக்காக
ஆறுதல் வார்த்தைகளும்
அவமானங்களையும் அரிதாரங்களையும்
மீறுபவர்களுக்கென துப்பாக்கிக் குண்டுகளையும்
கையேந்தி வருகிறது.

வெளிநாட்டு ஆணைக்காக, உள்நாட்டு பீடங்கள்
‘பிங்க்’ நாவுடனும் மயிர் முளைத்த கைகளுடனும் சேவகத்திற்காக காத்திருக்கின்றன.

எல்லோரையும் கவர்ந்திழுக்கும் மாயக் காந்தமாய் தன்னை மினுக்கி நிற்கிறது அதிகாரம்.
தன்வயமாக்க தன் மயமாக்க
அடித்தள மனிதரின் வழித்தடம் மறித்து
தன் பாதம் பணிந்து பணிகளைச் செய்ய
தீட்டிலிருந்து புனிதத்திற்கு
அழுக்கிலிருந்து தூய்மைக்கு
சறுக்கு மரத்தின் உச்சிக்கு
அழைக்கிறது அதிகாரம்.

அதிகாரத்திற்கு எதிராக
மயமாக்கல்களுக்கு எதிராக
மக்களுடன் ... மக்களுடன்...