சுப்ரபாரதிமணியன் தன் தொடர்ந்த நாவல் செயல்பாடுகளில் அவரின் 15 வது நாவலாக ” கடவுச்சீட்டு “ மலேசியப் பின்னணி நாவலாக வெளிவந்துள்ளது. அவரின் மலேசியா அனுபவங்களை முன்பே கட்டுரைகள், சிறுகதைகள் மூலம் பல படைப்புகளில் எழுதியிருந்தாலும் ஒரு முழு நாவலாக இதைத் தந்திருக்கிறார். அதுவும் கோலாலம்பூர்-செந்தூல் பகுதியில் வாழும் ஒரு தமிழ்ப் பெண்ணின் வாழ்க்கையை இந்நாவல் சொல்லுகிறது.

ஒரு வெளிநாட்டு தமிழ்ப்பெண்ணின் கனவு சிதைந்து போவதை இந்நாவல் காட்டுகிறது. அந்தப்பெண் இங்கு வருவதற்கு முன்பே பெண் பார்க்க்கும் படலத்தின் போதே இந்நாட்டைப்பற்றி வருங்காலக் கணவனிடம் பல சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்கிறாள். இங்கு தமிழர்கள் எவ்விதம் இருகிறார்கள். கோவிலகள் உண்டா . முஸ்லீம் நாடென்றால் சட்டதிட்டங்கள் கடுபிடியா. மதுப்பழக்கம் ஆண்களிடம் எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்கிறாள். இங்கு வந்த பின்பு அவள் கணவன் குடிகாரனாக இருப்பதைக் கண்டு வாழ்க்கையை ஓட்டுகிறாள். இந்த நாட்டு நடைமுறையில் இருக்கும் சுகாதாரமும், மருத்துவமனைகளில் இல்லாத லஞ்சம் போன்றவை அவளை மகிழ்விக்கின்றன.ஆனால் அவளின் வாழ்க்கை யதார்த்தம் வேறு மாதிரியாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் சர்க்கரை நோய் என்பார்கள் இங்கு இனிப்பு நீர் வியாதி என்கிறோம். இது போன்ற சிறுசிறு விசயங்களையும் கவனமாகக்குறிப்பிட்டிருக்கிறார். லிட்டில் இந்தியா ஜோசியர்கள் வரை இவரின் எழுத்துப் பார்வையில் படாதவர்கள் இல்லை. மஜாஜ் சமாச்சாரம் முதல் மலேசியா பற்றிய பல விபரங்களை இந்நாவலில்  கொட்டி விட வேண்டும் என்ற ஆவல் இதில் தென்படுகிறது .அவற்றை பல இடங்களில் விபரங்களாகவும் சில இடங்களில் உரைநடைமூலமாகவும் தெரிவித்திருக்கிறார். தோட்டப்புறத்தில் பங்களாதேஷ்காரர்கள், இந்தோனிசியாக்காரர்கள் அதிகரித்து தமிழர்களின் நிலை மேசமாகியும் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட சமீப நிகழ்வுகள் வரை இதில் பதிவாகியிருக்கின்றன.

 தமிழ் இளைஞர்களின் வன்முறைக் கலாச்சாரத்தில்  கட்டை, சரக்கு போன்றவை  ஆக்கிரமித்திருப்பதைச் சொல்கிறார். சீனர்களின் வாழ்க்கை முறை, பொருட்களை எரித்தல், இந்தோனிசியப்புகையால் பாதிப்பு போன்றவையும் தப்பவில்லை. இவ்வளவு சுற்றுச்சூழல் சிறப்பாக இருக்கும் போது மூன்று வேளை உணவையும் உணவு விடுதிகளில் சாப்பிடும் பழக்கத்தையும் தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் கேடாக  இருக்கும் போது உணவு விடுதிகளை அதிகம் நாடாததையும் சொல்கிறார். இலக்கியம் வேதனையை, சோதனையை மட்டுமா சொல்ல வேண்டும் என்ற கேள்வி எழும்பாமல் இல்லை. ஆனால் மலேசிய தமிழ் குடும்பம் ஒன்றின் யதார்த்ததை இதில் வெளிக்காட்டியிருக்கிறார். அகிலனின் “ பால் மரக்காட்டினிலே “ அறுபதில் இருந்த மலேசியா தமிழ்ச் சமூகத்தை பிரதிபலித்தது என்றால் சுப்ரபாரதிமணியனின் நாவல் இப்போதைய சூழலில் எழுதப்பட்டிருக்கும்  முக்கியப் படைப்பு என்ற வகையில் சிறப்பு பெறுகிறது

(ரூ 100, முன்னேற்றப் பதிப்பகம், சென்னை)

- பெ.இராஜேந்திரன், தலைவர், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம், கோலாலம்பூர்