banwarilalபல்கலைக்கழக நடவடிக்கைகளில் தலையிடுவதற்கே மாநில அரசுக்கு உரிமையில்லை என்று சொல்கிறார் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித். பிறகு பல்கலைக்கழக இணைவேந்தராக மாநிலக் கல்வி அமைச்சர் ஏன் நியமிக்கப்படுகிறார்?

போகிற போக்கைப் பார்த்தால், நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தின்போது, அரசு எழுதிக் கொடுக்கும் உரையை நான் படிக்க மாட்டேன், நானேதான் சொந்தமாக உரை எழுதிப் படிப்பேன் என்றும், அமைச்சர்கள் பதவிப் பிரமாணத்தை நான்தான் நடத்தி வைக்கிறேன் என்பதால், முதலமைச்சர், அமைச்சர்கள் எல்லோரையும் நான்தான் நியமிப்பேன் என்றும் அடுத்தகட்ட அறிவிப்பை ஆளுநரிடம் நாம் எதிர்பார்க்கலாம்.

பேராசிரியர் நிர்மலா தேவி தொலைபேசிச் சிக்கலில் இன்று ஆளுநர் பெயர் அடிபடுகிறது. ஆனால் அதற்கும் விசாரணை ஆணையத்தை ஆளுநரே நியமிக்கிறார். அனைத்தும் அத்து மீறிய செயல்களாக உள்ளன. இந்த ஆளுநர் தொடர்ந்து பதவியில் நீடித்தால், தமிழ்நாட்டில் ஜனநாயகம், மாநில சுயாட்சி ஆகியவை எதிர்காலத்தில் இல்லாமல் போய்விடும்.

ஆளுநரின் இந்தப் போக்கை மத்திய அரசு கண்டிக்காமல் மௌனமாக இருக்குமானால், மத்திய அரசின் ஒப்புதலின் பெயரில்தான் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஆளுநர் செயல்படுகிறார் என்று ஆகிவிடும்.

ஆளுநரைத் திரும்ப அழைத்துக் கொள்வதே மத்திய அரசு, தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்கிறது என்பதற்கு அடையாளமாக இருக்கும்!