இணையத்தின் பூட்டைத் திறந்து
அரபுக் குதிரைகளையும்,
நீர் யானைகளையும்
அழைத்து வருகிறான்
மாப்பிள்ளை
குதிரைகள் ஓரிடத்தில் நிற்பதில்லை
கவிஞனைப் பின் தொடர்வதும்
திரும்பினால் ஒளிந்து கொள்வதும்
சந்தையில் விலை போவதும்
மதுரசத்தில் தன் நிலை மறந்து
தன் முன்னங்காலைத் தூக்கியபடி
எதிர்கொள்ள முடியாதவன்
குறியை மெல்லுகிறது.
கரும்புத் தின்ன
கடவுசீட்டு வாங்கிவந்த நீர்யானை
நகரத்தின் சந்துகளில்
அங்குசம் உள்ளவனைக் கண்டதும்
முன் அனுபவத்தின் மிரட்சியில்
உடலைக் குலுக்குகிறது
அதிலிருந்து விழுந்த
மாப்பிள்ளை பாகன் சொல்கிறான்
நீரற்ற உலகத்தையும்
மரணமுற்று வாழும் ரகசியத்தையும்
குதிரைகளும் யானைகளும்
உலகம் முழுக்கச்
சொல்லித் தருகின்றன என்று.

- இளங்கவிஅருள்