தமிழ்ச்சிறுகதைகளில் வட்டாரமொழிக்கதைகளுக்கென்று தனி இடமுண்டு.அதில் கரிசல் வட்டாரம் சார்ந்து எழுதும்உதயசங்கரின் ஒவ்வொரு கதையும் அதன் தோற்றப் பின்புலத்தைப் புலப்படுத்து கின்றன.அவர் எந்த வர்கத்துக்கானவர் என்பதும் அவரின் கதைகளின் மூலமே விளங்கும். சாதாரண மக்களின் எளிய வாழ்பனுவங்களைக் கதையாக்கியதிலிருந்தே இதனைப் புரிந்துகொள்ளமுடியும். எளிய வருணனையும் சொற்பிரயோகமுமே கதையின் கருவை வாசகனுக்கு எளிமைபடுத்தித் தருகின்றன. எண்பதுகளில் வெளி வந்த இவரின் கதைகள் பல்வேறு இதழ்களில் வெளி வந்தவை.குறிப்பாக இடதுசாரி இதழான செம்மலரில் வந்தவை.

தீபம், தேடல், தாமரை,விழிகள்,சுபமங்களா என்று அதன் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. ஒரு எழுத்தாளரின் ஒரே சமயத்தில் எழுதித் தொகுப்பாக்கம் பெறும் பிரதிக்கும் பல்வேறு காலகட்டங் களில் எழுதியவற்றைத் தொகுப்பாகக் கொண்டுவரும் பிரதிக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. பல்வேறுகட்டங்களில் பல்வேறு இதழ்களில் வெளிவந்த கதைகள் அதன் உள்ளடக்கம் மற்றும் புறச்சூழலின் தாக்கம் அதிகம் பெற்று முந்தயதைவிட கனமான படைப்பாக வெளிவரும் என்பதை மறுக்க முடியாது. மேலும் கதைகள் பத்திரிகைகளுக்குத் தகுந்தாற்போல் அடக்கமான ஒன் றிரண்டு பக்கங்களைக் கொண்டிருப்பதையும் தவிர்ப்பதற்கில்லை. அந்த வகையில் உதயசங்கரின் இருபதாண்டுகால உழைப்பு ’பிறிதொறு மரணம்’ என்ற தலைப்பில் ’வம்சி புக்ஸ்’ வெளியீடாக வந்துள்ளது.

உதயசங்கரின் கதைகளைப் படிக்கத்தூண்டுவது அவரின் கரிசல் வட்டார நடையே எனலாம்.விருவிருப்பு,சுவாரசியம் கலந்த வெகுசன நடையில் இல்லாமல்,மனித உறவுகளின் துக்கம்,அவலம், மனக்கசப்பு மற்றும் சகிப்புத்தன்மை கொண்ட பாத்திரங்களைப் படைத்திருக்கிறார். நடுத்தரவர்க்க வாழ்க்கையை விவரிக்கும் இவரின் கதைகளில் இடைஇடையே வரும் வருணனையும் வட்டாரச் சொற்களும் கதையை நகர்த்திச் செல்கின்றன. “அமைதியானஇரவு. சின்னச் சின்ன இரவுப் பூச்சிகளின் கீச்சொலி விடாது முழங்குகிறது. தாமிரபரணிசின்ன சிரிப்புடனும் அந்தரங்க மான குசுகுசுப்புடனும் ஓடிக் கொண்டிருக்கிறது. மேலே நிலவின் வெள்ளையளி நீரின் மீது பட்டுத்தெளித்தது.அந்த ஒளியைத் தின்ன நீரின் மேற்பரப்பி லிருந்து மீன்கள் துள்ளி விழும் ‘சளப் சளப்‘ என்ற சத்தம் இடையிடையே இவரின் ஒவ்வொருகதையிலும் இத்தன்மையான வருணனைகளைக் காணமுடியும்.

இத்தொகுப்பின் அனைத்துக் கதைகளிலும் ’வறுமை’ இழை யோடுகிறது. வறுமைக்கான பின்புலம் எதையும் ஆராயாமல் அதனால் எற்படும் பிரச்சனைகளை மட்டுமே கதைகள் விளக்குவது அதற்குத் தீர்வாக அமையவில்லை. ஆனால் இவரின் ’பிறிதொரு மரணம்’ கதையில் ரூபாய் நோட்டில் சிரித்துக்கொண்டிருக்கும் ‘காந்தி‘-க்கு ஊழல் சமுதாயத்தால் பிறிதொரு மரணம் நிகழ்கிறது. இது சமகால ஊழலொழிப்புப் பேர்வழிகளை நினைவுபடுத்துகிறது. பணம் என்கிற ஒற்றைக் காரணத்தினால் மனித மனங்களில் ஏற்படும் சஞ்சலம், வெறுப்பு, பகைமை, அவமதிப்புக் குணங்கள், வாழ்க்கைக் கான மனப் போரட்டங்கள் என அனைத்தையும் அவரின் பாத்திரப் படைப்புகள் சித்திரிக்கின்றன. தீப்பெட்டித்தொழிற்சாலையில் ஈடுபடுத்தப்படும் குடும்பத்தின் நிலையை “பொம்பளைப் பிள்ளைகள் ஆவுடையம்மாளும் மரகதமும் உயிரின் நெருப்பைத் திரட்டி தீக்குச்சிகளில் சேர்க்க தீப்பெட்டியாபீசுக்குப் போயிருந்தார்கள். தீக்குச்சிகளுக்குநெருப்பின் சூட்சுமத்தைத் தந்ததுக்குப் பிரதிபலனாக மெழுகின் மக்குவாசமும் பழையசோறும் சாய்பு கடை புரோட்டா சால்னாவும் கிடைத்தன......” என்று விவரிக்கிறார்.

இடதுசாரி இதழ்களில் இவரின் கதைகள் வந்திருப்பினும் அவை அனைத்தும் வர்க்க முரணைப் பேசுவதாயில்லை என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். பெற்றோர்-பிள்ளைகள், கணவன்-மனைவி, சமூகம்-மனிதர் என்பதாக இவர் சமூக முரண்பாடுகளை முன்னிறுத்துகிறார். சமூகத்தில் இருக்கும் மற்ற முரண்களை இவர் கணக்கில் எடுத்துக்கொள்ளாததும் குறிப்பிடத்தக்கது. குடும்பமே இவரின் கதைக்களமாக விரிகிறது. குடும்ப வன்முறை என்பதும் அதில் பெண்கள் ஒடுக்கப்படுதல் என்பதும் அடக்கம்.கணவன் மனைவிமீது வைக்கும் சந்தேகம் தொடங்கி அவள் மீது திணிக்கும் பாலியல் வன்முறை ஈராக அனைத்தையும் கேள்விக்கு உள்ளாக்குகிறார். இதைத் தாயின் மீதான தந்தையின் வன்முறையாக மகனிடமிருந்தே தொடங்குகிறார். ‘’ அவன் கண்களைத்திறந்தபோது கரிய பூதம் ஒன்று அம்மாவின்மேல் படர்ந்திருந்தது.அம்மா மூச்சுத் திணறிக்கொண்டிருந்தாள். ஆனால், அந்த பூதம் அம்மாவின் மேல் உட்கார்ந்து குடல்குந்தாணியெல்லாம் வெளியே இழுத்துப் போட்டது. அம்மா ஈனஸ்வரத்தில் முனகினாள். அது அந்தப் பூதத்துக்கு சந்தோஷமே போல மேலும் மேலும் விழுந்து நசுக்கியது‘‘

இத்தகைய கதைக்களங்களுடன் இவரின் தொழிலான இரயில்வே பணியானது இன்னொரு கதைக்களனாக அமைகிறது. அதில் அவர் பெற்ற அனுபவங்களும் படிப்பினைகளும் சம்பவங்களும் கதைகளாகப் புனையப்பட்டுள்ளன. ஆசிரியர்தான் வாசித்த ‘நள்ளிரவில் சுதந்திரம்‘ நூலின் அனுபவத்தை சமகால நிகழ்வாகப் புனைந்துள்ளார். ‘குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனில் ஓரிரவு‘ என்ற அந்த கதை கடந்தகால வரலாற்றில் இஸ்லாமியர்களுக்கு நிகழ்ந்த ஒடுக்குமுறைகளுக்கு நிகழ்காலத்தில் [அந்த சம்பவங்களுக்கு] விடைதேடுவதாக இருக்கிறது. என்றோ நிகழ்ந்த சம்பவத்தைச் சமகால நிகழ்வாகக் கருதுவது படைப்பாளியின் மீதான நம்பகத் தன்மையை ஏற்படுத்துகிறது. அது தொடர்பான அவரின் வெளிப்பாடு இப்படியாக அமைகிறது.

‘ஒரு கருத்துக்காகவா நம்பிக்கைகாகவா இத்தனைக் கொலைகள். நடைமுறையில் இல்லாத, செயல்படுத்த முடியாத கருதுகோள்களும் யூகங்களும் புனைவுகளும் கற்பனைகளும் மனிதர்களை இப்படி கொடிய ஒரு காட்டுமிராண்டிகளாக்கிவிடுமா?’’ என்ற படைப்பாளியின் கேள்விகளை நம்மைப்பார்த்து நாமே விளிப்பதாகக் கருதிக் கொள்ள முடியும்.’ இதுவே படைப்புமனம். இத்தகைய மனமே படைப்பாளியின் படைப்பை ஸ்திரத்தன்மைக்குக் கொண்டு செல்கிறது. அதில் உதயசங்கர் வெற்றிபெற்றுள்ளார்.

உதயசங்கரின் படைப்புகள் எளிமையும் நோக்கமும் கொண்டிருப்பினும் அவரின் கதைகள் அனைத்தும் ஒரே ‘தொனி‘யில் எழுதப்பட்டிருப்பதால் வாசிப்பில் ஒருவித சளிப்பை ஏற்படுத்துவதைத் தவிர்க்க முடியவில்லை. இது படைப்பாளியின் அடுத்தகட்ட நகர்வை கேள்விக்குள்ளாக்கவும் செய்கின்றன. 

(கட்டுரையாளர் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறையின் முனைவர் பட்ட ஆய்வாளர்.“தமிழ்ச் சூழலில் வைதீக மரபு உருவான வரலாறு” குறித்து ஆய்வு செய்து வருகிறார்.)