‘எந்த ஊருக்குப் போனாலும் அந்த ஊரின் படித்த இளைஞர்களிடம் நூலகம் எங்கேயிருக்கிறது என்று கேளுங்கள். அந்த ஊரின் லட்சணத்தை எடைபோட்டு விடலாம்.’ Dr. எஸ். ராதாகிருஷ்ணன்.

தமிழ்ச் சமூகத்தின் கலை இலக்கியச் சூழலில் பொதுவாகவே சினிமாவுக்கு இருக்கிற மோகம் புத்தகத்திற்கு கிடையாது. மிக முக்கிய படைப்பாகள் கூட விற்பனையில் சாதனை படைப்பது என்பது தமிழ் சூழலில் கிடையாது. பாரதி காலத்திலிருந்தே இப்படித்தான். புத்தகத்தை எழுதி முடித்துவிட்டு அதை வெயிட முடியாமல் விழி பிதுங்கும் ஒரு மொழியின் அறிவுஜீவி... அவனை சார்ந்து தனது பிழைப்பை முழுமையாய் அர்ப்பணிக்கும் ஒரு பதிப்பகத்தார்..... தமிழில் பாரதியும், புதுமைபித்தனும், ஏனைய அவர்களது வழிவந்த அறிவுத்தேடல் மானுடவாதிகளுக்கும் கிடைத்த கொடியப் பரிசு வறுமையே. அப்படிபட்ட ஒரு துயர மரபு நம்முடையது.

கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசின் அறிவிப்புகளும், செயல்பாடுகளும் பதிப்பகங்களுக்கு நம்பிக்கை தருவதாகவே இருந்தது... பல்வேறு தமிழ் அறிஞர்கன் நூல்களை, நாட்டுடைமை ஆக்கியது.... அந்த வறுமைக் குடும்பங்களை காத்து ரட்சித்த விதம்.... அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராம நூலகங்கள்... யாவற்றுக்கும் மேலாக நூலகங்கள் இனி 1000 பிரதிகள் வாங்கும் எனும் புரட்சிகர அறிவிப்பு... ஆனால்..

கடந்த 2006 க்குப் பிறகு நூலகத்துறை எந்தப் புத்தகத்தையுமே ‘வாங்காமல்’ இருப்பது ஏன்? என்பதுதான் யாவரும் அறிய விரும்பும் விஷயமாகவும்..... ஆனால் கேட்கவே அஞ்சுகின்ற விஷயமாகவும் இருக்கிறது. நூலகத்துறைக்கும் பிரச்சனை இல்லாமல் இல்லை. எப்படி புத்தகங்களை தேர்வு செய்தாலும் எப்போதுமே ஒரு சார்பு...... எங்களை விட்டுவிட்டார்கள் என்று அவதூறுகளே மிஞ்சுகின்றன. 600 பிரதிகளை ஆயிரமாக வாங்கிட உத்திரவு வந்துள்ளது உண்மைதான், ஆனால் அதற்கு உரிய தொகையை அரசு உயர்த்தவில்லை என்பதை கேட்க மிகவும் வருத்தமாக இருக்கிறது.

புத்தகங்களே அரசு வாங்கவில்லை என்று நாங்கள் சொல்லவில்லை. எப்படிப்பட்ட நூல்களை வாங்குகிறது.....அண்ணா மறுமலர்ச்சி.... பள் வகுப்பறை நூலகம் என பல நல்ல திட்டங்கள் இந்த ஆட்சியில் நாம் கண்டோம் எனினும் ஒரு திட்டத்தை அறிவிக்கும் அரசு அதை இறுதிவரை கடைசி குடிமகன் வரை சென்று சேர்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டாமா என்பதுதான் கேள்வி.....

தன் வாழ்க்கையில் ஏற்படும் நெருக்கடிகளையே படைப்பாக மாற்றும் இந்தத் தமிழ் எழுத்து உலகம்...... இந்த நெருக்கடியை என்ன செய்யும்... புத்தகங்களை அரசு நூலகத்துறை வாங்காமலேயே மேலும் மேலும் கால நீட்டிப்பு செய்வது ஒரு ‘தமிழ்’ செம்மொழி சாதித்த அரசுக்கு நல்லதா என்பதை வலி மிகுந்த மனதோடு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. உடனே அரசு இதை கவனத்தில் கொள்ளுமென்று அனைத்து பதிப்பாளர் சார்பிலும் எதிர்பார்க்கிறோம்.