நூல் அறிமுகம்

கண்ணில் ஓர் காவியம்

டாக்டர் ஏ.பி. சாமி.

டாக்டர் மீனா பதிப்பகம்,

கோவை -_ 45

பக்: 984 | ரூ. 350

புது வாழ்க்கையை ஆரம்பித்த ஓர் இளம் ஆசிரியை தன் பார்வையைப் பறி கொடுத்த பிறகு எந்த விதமான ஆதரவுமே இல்லாமல், தனது நம்பிக்கையால் தளராத விடா முயற்சியால் திட்டமிட்ட செயல்பாடுகளால் கின்னஸ் சாதனைகளை எப்படி செய்தாள் என்பதை விபரங்களுடன் புனைகதையாகக் கூறும் இந்தப் புதினம் எழுநூறு கதா பாத்திரங்களைக் கொண்டது.

உணவு நெருக்கடி: வளர்ந்த

நாடுகளின் புதிய சுரண்டல்

-ஏ. பாக்கியம்

பாரதி புத்தகாலயம்

சென்னை - 18 | பக்: 24 | ரூ. 10

உணவிற்கு விலைப்பட்டியல் முதன் முதலாக 1845ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்றைக்கு உள்ள விலைப்பட்டியலைப் பார்க்கும்போது இப்படி ஒரு விலையேற்றத்தை இதுவரை உலகம் சந்திக்கவில்லை. இந்த விலையேற்றத்தால் 2008 ஆம் ஆண்டில் உடனடியாகப் பட்டினி உலகத்தில் 12.5 கோடி மக்கள் தள்ளப்பட்டனர். இந்தப் பட்டினியால் உலகில் உணவுக்கான மோதல்கள் தீவிரமடைந்துள்ளன. இந்த மோதல்கள் பின்னணியில் உணவுப் பாதுகாப்பு என்பது இன்று என்னவாக இருக்கிறது என்பதையும், உணவுப் பாதுகாப்பு சட்ட நடைமுறைகளைப் பற்றியும் விளக்குகிறது இந்நூல்.

பரமஹம்ஸர் நூறு

-டாக்டர் நல்லி

குப்புசாமி செட்டியார்.

பிரையின் பேங்க்,

சென்னை _ 17

பக்: 112 | ரூ. 50

ஸ்ரீ ராமகிருஷ்ணரின் நூறு மேற்கோள்களை எடுத்துக் கொண்டு, அதை தொழில் மற்றும் வர்த்தகத்துறைகளோடு தொடர்புபடுத்தியும் இவை சார்ந்த நிர்வாகவியலையும் யதார்த்த தன்மையில், தன் வாழ்நாள் அனுபவங்கள் மூலமாக விளக்கிச் சொல்கிறார் இந் நூல் ஆசிரியர். மேலும் இந்நூலில் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் மேற்கோள்களும் விளக்கமும் தனித்தனியாகத் தரப்பட்டுள்ளது. இந்நூலை மேலும் கூடுதல் சிறப்பாக்குகிறது.

காரல் மார்க்சு

குடும்பமும் வாழ்வும்

-வில்லியம் லீப்னெட்,

பால் லவார்க்

தமிழில் : எஸ்.ஏ. பெருமாள்

கஸ்தூரி பதிப்பகம்,

கோயமுத்தூர்-- _ 2

பக்: 108 | ரூ. 50

சிலந்தியும், ஈயும் என்ற சிறு பிரசுரம் கோடிக்கணக்கில் உலகம் முழுவதும் பரவியுள்ளது. இந்த பிரசுரத்தின் ஆசிரியரான வில்லியம் லீப்னெட்டும், பிரான்சில் தொழிலாளர் கட்சியை அமைத்த தலைவர்களில் ஒருவரும், காரல் மார்க்சின் மருமகனான பால்லவார்கும், எழுதிய கட்டுரைகளும், காரல் மார்க்சுக்கு பி.ஏங்கல்ஸ் ஆற்றிய இரங்கலுரையும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. மேலும் இந்த மூவரும் மார்க்ஸோடு நெருங்கிப் பழகியவர்களின் கட்டுரை என்பதால் வாசிப்பவரை வசீகரப்படுத்தும் என்பதில் ஆச்சரியமில்லை.

ஐக்கிய முன்னணி தந்திரம்

-ஏ. நிசார் அகமது

பாரதி புத்தகாலயம்

சென்னை _- 18

பக்: 48 | ரூ. 20

ஐக்கிய முன்னணி என்பது என்ன? இது ஏன் தேவைப் படுகிறது, மேலும் நாடாளுமன்ற ஜனநாயக முறையில் கம்யூனிஸ்ட்களின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும்? இந்திய மண்ணில் ஐக்கிய முன்னணியின் தேவைகளைப் பற்றியும் இந்திய அரசியல் சமூகச் சூழல்களில் பயணம் செய்யவேண்டிய அரசியல் பாதையில் ஆழமான ஆய்வுகள் மூலம் விளக்குகிறது இந்நூல்.

மார்க்சிய வழிகாட்டி இ.எம்.எஸ்.

-பிரகாஷ் காரத், | தமிழில்: சுப்பாராவ்

பாரதி புத்தகாலயம்,

சென்னை _ -18 | பக்: 16 | ரூ. 5

இந்திய அரசியல் வரலாற்றில் மக்களுக்கு நடைமுறையில் வழிகாட்டும் கருத்துகளை எடுத்து வைப்பதில் வெற்றி கண்டவர் இ.எம்.எஸ். இந்திய கம்யூனிஸ இயக்க வரலாற்றிலும், கேரளாவின் பொது வாழ்க்கை வரலாற்றிலும் முக்கியமான இடத்தைப் பெற்றவர். பல நுணுக்கமான சமூக ஆய்வுகளை மேற்கொண்டு மக்களின் வாழ்வை மேம்படுத்தியவர். இப்படிப் பல பரிமாணங்களைக் கொண்ட இ.எம்.எஸ்.-ன் பணிகளை எளிமையாக விளக்கிச் சொல்கிறது இந்நூல்.

பின் நவீனத்துவ வாசிப்பில் இஸ்லாம் பிரதிகள்

-ஹெச். ஜி. ரசூல்

மருதா,

சென்னை _ 92 | பக்: 128 | ரூ. 80-

காலனியாதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற மூன்றாம் உலக நாடுகளின் முஸ்லீம் அறிஞர்கள் முன்வைக்கும் பின் காலனிய இஸ்லாமியச் சிந்தனைகள் பாசிச ஆக்ரமிப்புக்கு எதிர்நிலை அணித்திரட்டலான இஸ்லாம் அரசியல் என எல்லைகள் விரிவடைந்து சூபிகளின் மாற்று உரையாடல், நியோ சூபிசம், சூபி இசை, அடித்தள மக்களின் தர்கா பண்பாட்டு அரசியல், வெகுஜன இஸ்லாம் என்பதான தமிழ் மண்சார் அடையாளங்களை உள்வாங்கிய இஸ்லாத்தின் பரப்பு பற்றி இந்நூலில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் சார்பாக 28.8.2010 அன்று ஆவுடையார் கோவில் ஆர்.சி. நர்சரி பள்ளியில் திரு. எஸ். லியோஜோசப் மொழி பெயர்த்த ஸ்ரீ செண்பகா பதிப்பகம் வெளியிடான இந்திய மொழிச் சிறுகதைகள் நூல் வெளியிட்டு விழா நடைபெற்றது. விழாவில் டி.என். நடராசன், கனகராஜ், ஆ. மனுவேல், வள்ளியின் செல்வன், சேதுபதி, பழனியப்பன், சந்திரகாந்தன், பரிணாமன், இராபர்ட் பெல்லார்மின், பாரதி கிருஷ்ணகுமார், சிங்கமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.