சமூக நீதிக்கான போராட்டம், நவீன தாராளமயமாக்கல் கொள்கைகளுடன் சமரசம் செய்து கொள்ளும் நிர்ப்பந்தம், மாநில முதலாளித்துவ அரசியல் கட்சிகள் மத்திய ஆட்சியில் கூட்டணி அமைக்கத் துவங்கிய பிறகு அதிகரித்துள்ளது. அதிகாரம் பெறுவதில் முன்னெழுகிற போட்டி, பல பிராந்திய முதலாளித்துவ கட்சிகளை, தனது கொள்கைகளை விலக்கி வைக்கும் சூழலை ஏற்படுத்துகிறது.

அதேநேரத்தில், முதலாளித்துவ பொருளாதார கொள்கைகளுக்கு எதிரான ஒருங்கிணைப்பைத் தடுக்கும்விதத்தில் அடையாளங்களை முன்னிறுத்தும் அரசியல் நடவடிக்கையையும் பாதுகாக்கிறது. நமது நாட்டில் காஷ்மீர் துவங்கி, எட்டுத் திசைகளிலும் புதுப்புது அரசியல் இயக்கங்கள் அடையாளத்தை முன்வைத்து வளர்ச்சி பெற்று வருகின்றன.

உழைக்கும் மக்களாக உள்ளவர்களை சாதி, மதம், இனம் ஆகிய அடையாளங்களின் பெயரில் அதே அடையாளங்களைத் கொண்ட, முதலாளிகளுடன் இணைந்து கொண்டு, ஒரே அடையாளம். எனவே உரிமை கேட்கிறோம், என்று உணர்ச்சி வசப்படுத்தும் அரசியலை நாம் பார்க்கிறோம். இதன் சூத்ரதாரி உலகமயமாக்கல், நவீன தாராளமயமாக்கல் என்பதை உழைக்கும் வர்க்கத்திற்கு உணர்த்துவதில் மக்கள் இயக்கங்கள் சிரமப்படுகின்றன. இந்தியாவில் 1990களுக்குப் பின்னர்தான் சாதிய மோதல்களும், அடக்கப்பட்டவர்களுக்கான உரிமைக்கான போராட்டமும் வலுப்பெற்று இருப்பதாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக, பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கான உரிமைகளை முன்வைத்து, பொதுமக்களைத் திரட்டுவது அதிகரித்துள்ளது.

ஆனால், இதே காலத்தில் தான் உலகமயமும், நவீன தாராளமயமும் இந்தியாவின் எல்லா திசைகளிலும் வெற்றி நடைக்கு முயற்சித்து உள்ளது. அரசுத்துறையில் இரண்டாம் கட்ட சீர்திருத்தம் என்ற பெயரில் மத்திய. மாநில அரசுகள் காலிப்பணியிடங்களை அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. நாடு முழுவதும் 30 லட்சத்திற்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளன. தமிழகத்தில் சுமார் 2.5 லட்சம் பணியிடங்கள் காலியாக வைக்கப்பட்டு இருக்கிறது.

அதே நேரத்தில் பெருகி இருக்கும் மக்கள் தொகைக்கும் இன்றைய அரசுஊழியர், ஆசிரியர் ஆகியோரின் எண்ணிக்கைக்கும் இடைவெளி அதிகரித்து வருகிறது. மக்கள் தொகை மற்றும் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசுஊழியர், ஆசிரியர் பணி நியமனங்கள் அதிகரிக்குமானால், மத்தியிலும், மாநிலத்திலும் புதியதாக பல லட்சம் பணியிடங்கள் உருவாகும்.

இத்தகைய காலிப்பணியிடங்கள் மற்றும் புதிய பணியிடங்கள், நிரப்பப்படவோ, உருவாக்கப்படவோ செய்தால் சமூக ரீதியில் ஒடுக்கப்பட்ட பின்தங்கிய மக்களுக்கான இடஒதுக்கீடு கிடைக்கும். இதன்மூலமே கடந்த காலத்தில் இழந்த சமூகநீதியை மீட்டெடுக்க முடியும். இதே நிலைதான் பொதுத்துறை நிறுவனங்களிலும் பிரதிபலிக்கிறது. உலகமயமாக்கல், நவீன தாராளமயமாக்கல் கொள்கை அமலாகத் துவங்கிய கடந்த 18 அல்லது 19 ஆண்டுகளில் அரசு கைவசம் இருந்த பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போதும், அரசுத்துறைப் பங்குகள் விற்பனை மூலம் வரவு என்பதும் கணக்கீடு செய்யப்படுகிறது. அரசுகளின் இந்த நடவடிக்கை பல லட்சம் வேலை வாய்ப்புகளைப் பறித்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்கள் அடிப்படையில் இந்தியாவில் உள்ள தொழிலாளிகளில் 92 சதமானோர் முறைசாராத் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் என்பதையும், 8 சதமானோர் மட்டுமே அணிதிரட்டப்பட்ட தொழிலாளர்கள் என்பதையும் அறிய முடிகிறது.  வேலையின்மை ஏற்படுத்தியுள்ள மற்றொரு தாக்கம், அரசே ஒப்பந்தத் தொழிலாளர்களை நியமனம் செய்யத் துவங்கியது ஆகும். மிகக்குறைவான கூலி, கடுமையான வேலை, எட்டுமணி நேரத்திற்கும் அதிகமான உழைப்பு நேரம் போன்ற தொழிலாளர் நல உரிமைபறிப்பை அரசே முன்னின்று செய்துவருகிறது. அரசு காலிப்பணியிடங்கள், பொதுத்துறை நிறுவனங்களின் புறக்கணிப்பு, தொழிலாளர் உரிமைபறிப்பு ஆகிய மூன்றையும் பெரும்பாலான தொழிற்சங்கங்கள் கண்டு கொள்வதில்லை.

குறிப்பாக பிற்படுத்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர் என்ற அடையாளங்களுடன் கூடிய தொழிற்சங்கங்களும் இடஒதுக்கீட்டுக்கான போராட்டத்தின் நாயகன் என்று கூறிக்கொள்ளும் மாநில அரசியல் கட்சிகளின் தொழிற்சங்கங்களும் இப்பிரச்சனை குறித்து விவாதிப்பதில்லை. இந்த சமரசத்தை எட்டுவதற்கு உலகமய, தாராளமயக் கொள்கைகளும் உணர்ச்சிமயமாக்கப்பட்ட அடையாள அரசியலும் பங்களிப்பு செய்திருக்கிறது. முதலாளித்துவத்தின் லாபத்தைப் பாதிக்காத அரசியல் பொருளாதாரம் தெளிவாக அமலாவதைப் பார்க்க முடியும். இதுபோன்ற அமைப்புகளின் சமூக உரிமைக்கான போராட்டம், சம்பந்தப்பட்ட சமூகத்தினை பொருளாதார ரீதியாக சுரண்டிக் கொள்வதற்கான லைசன்சாக மாற்றப்பட்டு வருகிறது.  

சாதிய அமைப்புகளும், பெண்ணுரிமை பேசுகிற சில தன்னார்வக் குழுக்களும் இதே காலத்தில் இளம்பெண்கள் மீது நிகழ்த்துகிற உழைப்புச் சுரண்டல் மற்றும் பாலியல் சுரண்டல் குறித்து பெரும்பாலும் பேசுவதில்லை. குறிப்பாக, தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பெண்களே சுமங்கலித் திட்டம், மாங்கல்யத் திட்டம், கேம்ப் கூலி போன்ற பெயர்களில் இளம் பெண்களின் உழைப்பைச் சுரண்டுகிறது.

நாடும், மக்களும் தொழில்நுட்ப ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் வளர்ந்து விட்டது என சிலர் பேசுகின்றனர். ஆனால், பழைய நிலப்பிரபுத்துவ சமூகத்தில் வயலைச் சுற்றி அடைத்து வைக்கப்பட்ட மனிதக் கூட்டம், உழைப்பைக் காலநேரம் இல்லாமல் மன்னர்களுக்கும், பண்ணையாளர்களுக்கும் அர்ப்பணித்ததைப் போல், இந்த நவீன தாராளமயமாக்கல் கொள்கை, தன் உழைப்புச் சுரண்டல் என்ற சமூகக் கொடுமையைப் பூட்டி வைத்த விடுதிகளுக்குள்ளிருந்து அமலாக்கிக் கொண்டிருக்கிறது. இதோடு இணைத்து பாலியல் சுரண்டலையும் அரங்கேற்றி வருகிறது. இவை வேலையின்மை என்ற சமூகக் கொடுமையினால் பிரசவிக்கப்பட்ட அவலங்கள் என்பதை பல்வேறு சாதீய அமைப்புகள் ஏற்க மறுக்கின்றன. பல லட்சம் பெண் தொழிலாளர்கள் தமிழகத்தின் பஞ்சாலைகளிலும், கோடிக்கும் அதிகமான பெண் தொழிலாளர்கள் நாடு முழுவதிலும் சுரண்டப்பட்டு வருகின்றனர்.

வேலை கொடுப்பது அல்லது முறைப்படுத்துவது அரசின் கடமை அல்ல என்ற சிந்தனையின் வெளிப்பாடே, மேற்படி சுரண்டல் முறைகள். ஜனநாயக நாட்டில் சொத்து சேர்க்கும் உரிமைக்கு வக்காலத்து வாங்கும் அரசுகளும், அமைப்புகளும் இதுபோன்ற மனித உரிமைகளை பாதுகாக்கும் கடமையை மறுக்கின்றன. அப்படி மறுப்பதற்கு சமூக இயக்கங்களைப் பயன்படுத்துகின்றன என்பதையும் கவனிக்கவேண்டும். இதன் தொடர்ச்சியே, இன்றைய தமிழக ஆட்சியாளர்களின் மொழிப்பற்று. தாய்மொழியில் அல்லது தமிழ் மொழியில் படித்தோருக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை என்ற முழக்கமும் முன்னுக்கு வந்துள்ளது.

தொடரும்...