|
பாரதியார் பாடல்கள்
பாரத நாடு
[ராகம் - ஹிந்துஸ்தானி]
பல்லவி
பாருக்குள்ளே நல்ல நாடு -- எங்கள்
பாரத நாடு.
சரணங்கள்
ஞானத்தி லேபர மோனத்தி லே -- உயர்
மானத்திலே அன்ன தானத்திலே,
கானத்தி லேஅமு தாக நிறைந்த
கவிதையி லேஉயர் நாடு -- இந்தப் (பாருக்) 1
தீரத்தி லேபடை வீரத்திலே -- நெஞ்சில்
ஈரத்தி லேஉப காரத்திலே,
சாரத்தி லேமிகு சாத்திரங் கண்டு
தருவதி லேஉயர் நாடு -- இந்தப் (பாருக்) 2
நன்மையி லேஉடல் வன்மையிலே -- செல்வப்
பன்மையி லேமறத் தன்மையிலே,
பொன்மயி லொத்திடும் மாதர்தம் கற்பின்
புகழினி லேஉயர் நாடு -- இந்தப் (பாருக்) 3
ஆக்கத்தி லேதொழில் ஊக்கத்திலே -- புய
வீக்கத்தி லேஉயர் நோக்கத்திலே,
காக்கத் திறல்கொண்ட மல்லர்தம் சேனைக்
கடலினி லேஉயர் நாடு -- இந்தப் (பாருக்) 4
வண்மையி லேஉளத் திண்மையிலே -- மனத்
தண்மையி லேமதி நுண்மையிலே,
உண்மையி லேதவ றாத புலவர்
உணர்வினி லேஉயர் நாடு -- இந்தப் (பாருக்) 5
யாகத்தி லேதவ வேகத்திலே -- தனி
யோகத்தி லேபல போகத்திலே
ஆகத்தி லேதெய்வ பக்திகொண் டார்தம்
அருளினி லேஉயர் நாடு -- இந்தப் (பாருக்) 6
ஆற்றினி லேசுனை யூற்றினிலே-தென்றல்
காற்றினி லேமலைப் பேற்றினிலே
ஏற்றினி லேபயன் ஈந்திடுங் காலி
இனத்தினி லேஉயர் நாடு -- இந்தப் (பாருக்) 7
தோட்டத்தி லேமரக் கூட்டத்திலே -- கனி
ஈட்டத்தி லேபயிர் ஊட்டத்திலே
தேட்டத்தி லேஅடங் காத நிதியின்
சிறப்பினி லேஉயர் நாடு -- இந்தப் (பாருக்) 8
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
|
|