|
பாரதியார் பாடல்கள்
ஜாதீய கீதம்-2
(புதிய மொழிபெயர்ப்பு)
நளிர் மணி நீரும், நயம்படு கனிகளும்
குளிர்பூந் தென்றலும், கொழும்பொழிற் பசுமையும்
வாய்ந்துநன் கிலகுவை, வாழிய அன்னை! (வந்தே) 1
தெண்ணில வதனிற் சிலிர்த்திடும் இரவும்
தண்ணியல் விரிமலர் தாங்கிய தருக்களும்
புன்னகை ஒளியும், தேமொழிப் பொலியும்
வாய்ந்தனை இன்பமும் வரங்களும் நல்குவை. (வந்தே) 2
கோடி கோடி குரல்கள் ஒலிக்கவும்
கோடி கோடி புயத்துணை கொற்றமார்
நீடு பல்படை தாங்கிமுன் னிற்கவும்
‘கூடு திண்மை குறைந்தனை’, என்பதென்?
ஆற்றலின் மிகுந்தனை, அரும்பதங் கூட்டுவை,
மாற்றலர் கொணர்த்த வன்படை யோட்டுவை. (வந்தே) 3
அறிவும் நீ, தருமம் நீ, உள்ளம் நீ, அதனிடை
மருமம் நீ, உடற்கண் வாழ்ந்திடும் உயிர் நீ,
தோளிடை வன்புநீ, நெஞ்சகத்து அன்புநீ,
ஆலயந் தோறும் அணிபெற விளங்கும்
தெய்வச் சிலையெலாம் தேவி இங்குனதே. (வந்தே) 4
பத்துப் படைகொளும் பார்வதி தேவியும்
கமலத் திதழ்களிற் களித்திடும் கமலையும்
அறிவினை யருளும் வாணியும் அன்னை நீ! (வந்தே) 5
திருநி றைந்தனை, தன்னிக ரொன்றிலை!
தீது தீர்ந்தனை, நீர்வளஞ் சார்ந்தனை,
மருவு செய்களின் நற்பயன் மல்குவை,
வளனின் வந்ததோர் பைந்நிறம் வாய்ந்தனை,
பெருகு மின்ப முடையை, குறுநகை
பெற்றொ ளிர்ந்தனை, பல்பணி பூண்டனை,
இருநி லத்துவந் தெம்முயிர் தாங்குவை,
எங்கள் தாய் நின் பதங்கள் இறைஞ்சுவோம்! (வந்தே) 6
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
|
|