|
இருத்தல்
மு. அழகர்பாரதி, சில்வர்பட்டி, தேனி
எதையோ தொலைத்துவிட்டு
தேடுகின்ற
மும்முரத்தில் நானிருக்கையில்
வெகுதூரம் என்னை
களவாடிச் சென்றுவிட்டாய்
நீ...!
நாலாபுறமும்
காற்றின்
காதுகளுக் கெட்டிய
செய்திகள்
விரவப்படுகின்றன
நமதான காதல் கடிதங்களாய்...
வெண்பனித்துளிகளோடு
எழுதிய
அன்றையதின அதிகாலைக்
கவிதையை
இன்னும் வைத்திருக்கிறேன்...
என்றேனும் நீ வருகையில்
உன்னிடம் ஒப்படைக்கும்
தருணம் நோக்கி...!
கயிறு ஏறுதல்
புஜங்களின் வலி பொறுத்து
கொச்சக் கயிற்றின்
நுனிமுதலாய் தொடங்கி
ஏறிக் கொண்டிருக்கிறேன்...
எனக்கு முன்பாக
எவனோ ஒருவன்
பாதி சிநேகிதன்
பாதி எதிரி
கிளையில் அமர்ந்து கொண்டு
அழைக்கிறான் மேல்நோக்கி
வாவென்று
பாதி தூரம் ஏறியதும்
பூமியை உற்றுப் பார்த்ததில்
அந்தரத்தின் பிரமை
என்னுள் அலையாடுகிறது
காற்றோடு சேர்ந்து
தள்ளாடுகிறேன்
சிராய்ப்புகளுடன் திரும்பி
வந்துபின்
சிரித்துக் கொண்டேன்
இன்று நான்
நாளை எப்படியேனும்
அவனுக்குத்தான்
நிகழ்தல் நிகழும்பொருட்டு...!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
|
|