Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruSivakamiyin SabathamPart 1
கல்கியின் சிவகாமியின் சபதம்

முதல் பாகம் : பரஞ்சோதி யாத்திரை
45. மலைக் கணவாய்

சூரியன் உதயமாகி இரண்டு நாழிகைப் பொழுது ஆனபோது, அந்த மலைக் கணவாய்ப் பிரதேசம் கோரமான ரணகளமாய்க் காட்சியளித்தது. இளம் கதிரவனின் செங்கிரணங்கள் பாறையில் ஆங்காங்கு தோய்ந்திருந்த கரும் இரத்தத்தில் படிந்து ரணகளத்தின் கோரத்தை மிகுதிப்படுத்திக் காட்டின. கால் கை வெட்டுண்டும், தலை பிளந்தும் தேகத்தில் பல இடங்களில் படுகாயம் பட்டும் உயிரிழந்த ஒன்பது வீரர்களின் பிரேதங்கள் அந்தக் கணவாய் பாதையிலே கிடந்தன.

அப்படிக் கிடந்த உடல்களினிடையே வஜ்ரபாஹு சஞ்சரித்துக் கொண்டிருந்தான். அந்த உடல்களை அவன் புரட்டிப் பார்த்தும் அவற்றின் உடைகளைப் பரிசோதித்தும் எதையோ பரபரப்புடன் தேடிக் கொண்டிருந்ததாகத் தோன்றியது.

சற்றுத் தூரத்தில் ஒரு பாறையின் மீது பரஞ்சோதி உட்கார்ந்திருந்தான். அவன் முகத்தில் மிகுந்த சோர்வும் அருவருப்பும் குடிகொண்டிருந்தன. கையிலே வாளைப் பிடித்து ஊன்றிக் கொண்டிருந்தான். பக்கத்திலே இரத்தம் தோய்ந்த வேல் கிடந்தது.

சற்று முன்னால் நிகழ்ந்த கொடுமையான ஒரு சம்பவம் பரஞ்சோதியின் மனக் கண் முன்னால் நின்றது. சளுக்க வீரர்களில் மூன்று பேரைப் பரஞ்சோதியும் ஐந்துபேரை வஜ்ரபாஹுவும் யமனுலகுக்கு அனுப்பினார்கள். அவர்களுக்குச் சற்றுத் தூரத்திலேயே நின்ற ஒன்பதாவது வீரன் சண்டையிடாமல் குதிரையைத் திருப்பி விட்டுக் கொண்டு ஓடப் பார்த்தான். அப்போது வஜ்ரபாஹு வேலை எறிய, அது ஓடுகிறவன் முதுகில் போய்ப் பாய்ந்தது, அவனும் செத்து விழுந்தான். அதுவரையில் வஜ்ரபாஹுவின் அஸகாய சூரத்தனத்தைப் பார்த்துப் பார்த்து வியந்து கொண்டிருந்த பரஞ்சோதிக்கு இதைப் பார்த்ததும் பெரும் வெறுப்பு உண்டாயிற்று. "ஓடுகிறவன் முதுகில் வேல் எறிவதும் ஒரு வீரமா?" என்று வஜ்ரபாஹுவை அவன் மனம் இகழத் தொடங்கியது.

திடீரென்று 'ஆ!' என்ற சத்தத்தைக் கேட்டு பரஞ்சோதி திரும்பிப் பார்த்தபோது, வஜ்ரபாஹு ஓர் ஓலையைக் கையில் வைத்துக்கொண்டு படிப்பதைக் கண்டான். பிறகு, வஜ்ரபாஹு விரைந்து வந்து பரஞ்சோதி உட்கார்ந்திருந்த பாறைக்குப் பக்கத்தில் நின்ற தன் குதிரைமீது ஏறிக் கொண்டான். பரஞ்சோதி இன்னும் எழுந்திராமல் உட்கார்ந்திருப்பதைக் கண்டு, "தம்பி! நீ வரப்போவதில்லையா?" என்று கேட்டான்.

பரஞ்சோதி ஆசாபங்கமும் அருவருப்பும் நிறைந்த கண்களினால் ஒரு தடவை வஜ்ரபாஹுவைப் பார்த்துவிட்டு மறுபடியும் முன்போல் தலையைக் குனிந்து கொண்டான்.

வஜ்ரபாஹு குதிரையுடன் பரஞ்சோதியின் அருகில் வந்து, "அப்பனே! கைதேர்ந்த வீரனைப் போல் நீ சண்டையிட்டாய். அதிலாகவத்துடன் போர் புரிந்து மூன்று ராட்சஸச் சளுக்கர்களைக் கொன்றாய். உன்னைப் பல்லவ சைனியத்தின் குதிரைப் படைத்தலைவனாக ஆக்கவேண்டும் என்று பல்லவ சேனாதிபதியிடம் சொல்ல எண்ணியிருக்கிறேன். இத்தகைய சோர்வும் சோகமும் உன்னை இப்போது பிடித்ததன் காரணம் என்ன?" என்று கேட்டான்.

பரஞ்சோதி மறுமொழி சொல்லவும் இல்லை. தலை நிமிர்ந்து பார்க்கவும் இல்லை. வஜ்ரபாஹுவின் முகத்தையே பார்க்கவிரும்பாதவன்போல் கிழக்கே மலைக்கு மேலே சூரியன் தகதகவென்று ஒளி வீசிச் சுழன்று கொண்டிருந்த திசையை நோக்கினான்.

வஜ்ரபாஹு குதிரையை இன்னும் கொஞ்சம் பரஞ்சோதியின் அருகில் செலுத்திக்கொண்டு கூறினான்: "தம்பி! உன்னை இந்த நிலையில் பார்த்தால் எனக்கு யாருடைய ஞாபகம் வருகிறது தெரியுமா? குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் இருதரப்பு சைனியங்களும் வந்து யுத்தத்துக்கு ஆயத்தமாக நின்றன. யுத்தம் ஆரம்பிக்க வேண்டிய சமயத்தில் அர்ச்சுனன் வில்லைத் தேர்த்தட்டில் போட்டுவிட்டு, 'எனக்கு ராஜ்யமும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம் என்னால் யுத்தம் செய்ய முடியாது!' என்று சோகமடைந்து விழுந்தான். உன்னை இப்போது பார்த்தால் அந்த அர்ச்சுனனைப் போலவே இருக்கிறது."

அர்ச்சுனன் என்ற பெயர் காதில் விழுந்தவுடனேயே பரஞ்சோதி வஜ்ரபாஹுவை நோக்கினான். அவனுடைய கண்களிலே சோர்வு நீங்கி ஒரு புதிய ஒளி சுடர் விட்டது. வஜ்ரபாஹு நிறுத்தியதும், "அப்புறம் என்ன நடந்தது?" என்று ஆர்வத்துடன் கேட்டான்.

"நல்ல வேளையாக அர்ச்சுனனுக்குக் கிருஷ்ண பகவான் ரதசாரதியாக அமைந்திருந்தார். பரமாத்மா அர்ச்சுனனைப் பார்த்து 'அர்ச்சுனா! எழுந்திரு! நீ ஆண்பிள்ளை! க்ஷத்திரியன்! யுத்தம் செய்வது உன் தர்மம், கையிலே வில்லை எடு!' என்றார். இந்த மாதிரி இன்னும் பதினெட்டு அத்தியாயம் உபதேசம் செய்தார்! அதனால் அர்ச்சுனனுடைய சோர்வு நீங்கி மறுபடியும் ஊக்கம் பிறந்தது..." என்று சொல்லி வஜ்ரபாஹு நிறுத்தினான்.

"பிறகு?" என்று பரஞ்சோதி கேட்டான்.

"பிறகு என்ன? அர்ச்சுனன் காண்டீபத்தைக் கையில் எடுத்து நாணேற்றி டங்காரம் செய்தான். கிருஷ்ணபகவான் பாஞ்ச ஜன்யம் என்கிற சங்கை எடுத்து 'பூம் பூம்' என்று ஊதினார். உடனே மகாபாரத யுத்தம் ஆரம்பமாயிற்று."

"யுத்தம் எப்படி நடந்தது?" என்றான் பரஞ்சோதி.

"லட்சணந்தான். இங்கே நான் உட்கார்ந்து உனக்குப் பாரத யுத்தக் கதை சொல்லிக் கொண்டிருந்தால், இப்போது நடக்க வேண்டிய யுத்தம் என்ன ஆகிறது?" என்று சொல்லி விட்டு வஜ்ரபாஹு தன்னுடைய குதிரையைத் திருப்பிக் கொண்டு அந்த மலைப் பாதையில் மேலே போகத் தொடங்கினான்.

பரஞ்சோதி துள்ளி எழுந்து வேலையும் வாளையும் எடுத்துக் கொண்டு தன் குதிரையின் மீது தாவி ஏறினான். விரைவில் அவன் வஜ்ரபாஹுவின் அருகில் போய்ச் சேர்ந்தான்.

வஜ்ரபாஹு திரும்பிப் பார்த்து, "தம்பி! வந்து விட்டாயா? உன் முகத்தைப் பார்த்தால், என்னோடு சண்டை பிடிக்க வந்தவன் மாதிரி தோன்றுகிறது; அப்படித்தானே?" என்றான்.

"பயப்படாதீர்கள் அப்படி நான் உங்களோடு சண்டை செய்ய வந்திருந்தாலும் பின்னாலிருந்து முதுகில் குத்திவிட மாட்டேன்! முன்னால் வந்துதான் சண்டையிடுவேன்! போர்க்களத்திலிருந்து ஓடும் எதிரியின் முதுகில் வேலை எறிந்து கொல்லும் தைரியம் எனக்குக் கிடையாது!" என்று பரஞ்சோதி கசப்பான குரலில் சொன்னான்.

வஜ்ரபாஹு சற்று மௌனமாயிருந்துவிட்டு, "அப்பனே! ஓடித் தப்ப முயன்றவனை நான் வேல் எறிந்து கொன்றிராவிட்டால் என்ன நேரும் தெரியுமா?" என்றான்.

"என்னதான் நேர்ந்துவிடும்?"

"நாம் பார்த்த மாபெரும் வாதாபி சைனியம் ஒரு மாதத்திற்குள்ளாகக் காஞ்சி நகரின் வாசலுக்கு வந்து சேர்ந்து விடும். வைஜயந்தி பட்டணத்துக்கு என்ன கதி நேர்ந்ததென்று சொன்னேன் அல்லவா?"

"வைஜயந்தியின் கதி காஞ்சிக்கு நேருமா? பல்லவ சைனியம் எங்கே போயிற்று? மகேந்திர சக்கரவர்த்தி எங்கே போனார்?"

"அதுதானே மர்மமாயிருக்கிறது, தம்பி! காஞ்சியிலிருந்து கிளம்பிய மகேந்திர பல்லவர் எங்கே போனார் என்பதுதான் யாருக்கும் தெரியவில்லை! அவர் இன்னும் பல்லவ சைனியத்தின் பாசறைக்கு வந்து சேரவில்லையாம்!" என்றான் வஜ்ரபாஹு.

பரஞ்சோதி சற்றுச் சும்மா இருந்துவிட்டு, "ஐயா! அப்புறம் அர்ச்சுனன் என்ன செய்தான்? சொல்லுங்கள்!" என்று கேட்டான்.

முந்தைய அத்தியாயம்அத்தியாய வரிசைஅடுத்த அத்தியாயம்

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com