ச.விஜயலட்சுமி கவிதைகள்
அம்மாவும் அப்பாவும்
நேரமின்றி ஏதோ செய்துகொண்டிருக்க
பாடப்புத்தகங்களுக்குள்
உறங்கிக் கிடக்கும் உடன்பிறப்பு
கதை கூறுவதை கதை பேசுவதை மறந்து
தொலைக்காட்சிக்குள் உலவும்
தாத்தா பாட்டி
பளிங்குத் தரையெங்கும்
குவித்து வைக்கப்பட்டிருக்கும்
விளையாட்டுச் சாதனங்கள்
தொலைக்காட்சியில்
தொடர்ந்து பேசிச்சிரிக்கும் பொம்மைகள்
குதியாட்டம் போடும் காட்சிகள்
கணினித் தொடுதலில்
உயிர்த்தெழும் புத்தம்புது விளையாட்டுகள்
குழந்தைகளின் மன உலகில்
நெருங்கிப் பிடிக்க முடியா
கனவுப் பகுதிகளோ
கொஞ்சி களித்து விளையாட
சக மனசுகளைத் தேடியவாறே...
விரிந்த கவிதையின் பொருளென
உன் புன்னகையின் பரப்பு அதிர
கவிமொழியின் தோல்வியென
நிரவிய வார்த்தைகள்
என் கூட்டுக்குள் அடையும்
சிநேகத்தின் குளிர்ப்பகுதியைத் தாண்டி
ஏதோ வீச்சமூட்டிச் செல்கிறது
இரத்த வாடையின் நெடியடிக்க
முகாந்திரமற்று விடைபெறுதலறியா
நிரந்தரப் பிரிவொன்றின் ரணம்
இதழ் விரித்துத் தலை திருப்புகிறது
கட்டாயப் புன்னகையோடு.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|