கண்ணில் மின்னல்
சி.ஆர்.ரவீந்திரன் நாவல்
நவீனத்துவம் வளர்ந்து வரும் இன்றைய தமிழ்ச் சூழ லில் மக்களின் வாழ்க்கை மிகமிக வேகமான மாறுதல் களுக்கு உள்ளாகி வருவது வெளிப்படையாகவே தெரி கிறது. மக்கள் தொடர்பு சாதனங்களான ஊடகங்கள் அதை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் ஊக்கு வித்து வருவதையும் கவனித்து வருகிறோம். மண்வளமும், மனிதவளமும், நீர்வளமும் நிறைந்த இந்தியா வியக்கத் தகுந்த விதத்தில் உருமாறி வருகிறது. விவசாயத் தொழிலை அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்து வரும் மக்கள் இன்றைய நவீன வாழ்க்கைச் சூழலில் பழமைக்கும் புதுமைக்கும் இடையில் வாழ்க்கையை நிலைநிறுத்திக் கொள்ளக் கடுமையாகப் போராடி வருகிறார்கள். அவர்களின் வாழ்வியல் இயக்கமும் அதன் வழியான மாற்றங்களுமே இங்கு நாவலாக மாற்றம் பெற்றிருக்கின்றன.
உலகமயமாதலும், உலகச் சந்தையும் முதன்மைப்படுத்தப்படும் இன்றைய சூழலில் மக்கள் தங்களுடைய வாழ்வாதாரங்களை உதறிவிட்டு நவீன தொழில் சார்ந்த வாழ்க்கைக்குள் ஆவேசமாக நுழைந்து கொண்டிருக்கிறார்கள். காலம் காலமாக அவர்கள் காப்பாற்றி வந்த மரபு வழிப்பட்ட கலாச்சாரப் பண்பாடு களைப் புறக்கணித்துவிட்டு நுகர்வுத்தன்மை நிறைந்த வாழ்க்கைக்குள் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள தீவிரமாக முயற்சித்து வருகிறார்கள்.
இந்திய விடுதலைக்குப் பின் ஏற்பட்ட வேகமான மாற்றங்களையும், அமோக மான வளர்ச்சியையும் விரயப்படுத்தி அவற்றை போதாமைக்கு உள்ளாக்கி வருவதும் ஓர் எதார்த்தமான உண்மை. கல்வியறிவு பெற்ற புதிய தலை முறையினர் விவசாயத் தொழிலைப் புறக்கணித்துவிட்டு நகரங்களை நோக்கி விரைகிறார்கள். அழிந்துவரும் விவசாயத் தொழிலைக் காப்பாற்ற முடியாமல் கிராமத்து எளிய மக்கள் உடலுழைப்பைத் தேடி இடம் பெயர்கிறார்கள். நகர்ப்புறங்களை வாழ்விடமாக்கி அவற்றைச் சேரிகளாக்குகிறார்கள். கிராமப் புறங்களில் மக்கள் எளிமையாக வாழ்ந்தாலும் பாதுகாப்பாக இருக்க முடிந்தது. புதிய வாழ்க்கைச் சூழலுக்குள் பாதுகாப்பு இல்லாமல் வேர்கள் அழுகிப்போன மரங்களாக வாழ்வுக்கும், சாவுக்குமிடையில் பிழைப்பு நடத்தி வருகிறார்கள்.
தொலைநோக்குப் பார்வை கொண்ட காந்தியடிகள் இந்தியாவின் தனித் தன்மையும், உன்னதமான கலாச்சாரப் பண்பாட்டு வாழக்கையும் கிராமங்களில் அடங்கிக் கிடப்பதை இனம் கண்டுகொண்டு, நகரங்களை உருவாக்கி வளர்ப் பதன் வாயிலாக சேரிகளை உருவாக்க வேண்டாமென்று மக்களை எச்சரித்தார். கிராமத் தொழில்களை உயிர்ப்பித்து ஊக்குவித்து வளர்த்ததன் வாயி லாக மக்களிடையே ஒரு விழிப்புணர்வை உருவாக்கினார். புதிய இந்தியாவை வடிவமைத்து விடுதலைப் போரில் மக்களை ஈடுபடுத்தினார். விடுதலைக்குப் பிறகு உலகில் நிகழ்ந்த அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி இந்தியாவின் கிராமங் களை உருமாற்றியது. புதிய புரிதல்களுக்கும், புதிய வாழ்க்கை முறைகளுக்கும் உள்ளாகி மக்கள் அவர்களுக்கே உரிய அடையாளங் களை இழந்து உருமாறிப் போனார்கள்.
மாற்றங்கள் இயல்பானவை. இயற்கையானவை. தவிர்க்க முடியாதவை. இயற்கையோடு இயைந்து வாழ்ந்த மக்கள் இயற்கையை விட்டு விலகித் தங்களுடைய வாழ்வாதாரங்களைத் துறந்து வெளியேறி இயற்கையைச் சிதைப்பதன் விளைவாக தங்களையே அழித்துக் கொள்ள முனைவது போன்ற ஒரு தோற்றம் எங்கும் காணப்படுகிறது. மக்களின் வாழ்வாதாரமான விளைநிலங்கள் அழிக்கப்பட்டுத் தொழில் துறைக்கு முதன்மை அளிக்கப்பட்டு வருவதால் நாடெங்கும் மக்கள் தங்களுடைய பாதுகாப்பான தொழில் வாய்ப்புக்களையும், வாழ்க்கை முறைகளையும் இழக்கிறார்கள். விளைநிலங்களை விட்டு வெளியேறும் மக்கள் நவீன தொழில் நாகரிக வாழ்க்கைச் சூழலுக்குள் அகப்பட்டுக் கொண்டு நுகர்வுக் கலாச்சாரத்தை வாழ்க்கையின் ஒரே நோக்கமாகக் கருதி அதற்குள் அமிழ்ந்து கிடக்கிறார்கள்.
அந்நியச் செலவாணியை ஈட்டுவதற்காக வடிவமைக்கப்படும் சிறப்புப் பொரு ளாதார மண்டலத்தின் முன்மாதிரியாக விளங்கும் திருப்பூர் நகரத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை இந்த நாவல் காட்சிப்படுத்துகிறது.
(வெளியீடு : காவ்யா, சென்னை. ரூ.125)
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|