ரத்திகா கவிதைகள்
கதையல்ல! கடவுள்!
பூமியில் வசிப்பவளும்
பெண் எனப்பட்டவளுமான நான்
கடவுளின் வீரதீரபராக்கிரம செயல்களை
கேட்டும் படித்தும்
அவர் மீது தீராத காதல் கொண்டேன்
உலகின் குறுக்கு வழிகளிலெல்லாம் பயணித்து
ஒரு வழியாய் அவரை அடைந்தேன்
கடவுளுக்கும் எனக்குமான
மண ஒப்பந்தத்தில் கையெழுத்திட
மானிடர் அஞ்சியதால்
நாங்கள் சாத்தானின் தயவை நாடுகிறோம்
வசீகரமான அவன் கையெழுத்தில்
தம்பதிகளானோம்
இனிமையான வாதங்களைச் சுமந்தபடி
வெளியேறுகிறது எங்கள் முதல் இரவு
வெளி அவரது வீடாக இருக்கிறது
வரவேற்பறை
சமையலறை
குளியலறை
படுக்கையறையென
அவர் காட்டிய அனைத்தும்
சுவர்களற்ற வெளியாகவே இருந்தது
தான் படைத்ததாக
பெருமிதத்தோடு அவர் காண்பித்த
வானம்
நட்சத்திரங்கள்
கோள்கள்
நிலவுகள்
விண்கற்கள்
அனைத்துமே உயிரற்றவையாக இருந்தன
பசிக்கவில்லையெனினும் சமைக்கத் தோன்றியது
உறக்கமில்லையெனினும் படுக்கத் தோன்றியது
கூடவில்லையெனினும் குளிக்கத் தோன்றியது
யாருமில்லையெனினும் உடுத்தத் தோன்றியது
...............யெனினும் அழத்தோன்றியது
யாருமற்ற வெளி
நாளுக்கு நாள்
என்னில் வெறுமையை நிரப்ப
கடவுளுக்கும் எனக்குமிடையே
பூமி வளர்ந்த வண்ணமிருந்தது
இன்று
எங்கள் மணமுறிவு நாள்
சாட்சிக் கையெழுத்திட
மனிதர்கள் நீண்ட வரிசைகளில்
மீண்டும் சாத்தானை அழைக்கின்றோம்
பூமியை எனக்கு பரிசளிக்கும் அவன்
ஏனோ கடவுளாய்த் தெரிகிறான்
இப்போதும்
கடவுளின் முகம்
சிலையைப் போலவே
அமைதியும்
அழகும்
நிறைந்ததாய் பிரகாசிக்கிறது.
சுதந்திரம்
எல்லாம் தருகிறேன்
என் அழகிய பறவைக்கு
சிறகுகள் அதிர்ந்து நீண்டு
படபடக்கும் அதிர்வுகளால்
விரிசல் விடத் தொடங்கிவிட்டது
எங்கள் வீடு
எதை விற்றேனும்
உடன் வாங்கிய வேண்டும்
இதைவிட பெரிய கூண்டு
அல்லது
சிறிய கத்தரிக்கோல்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|