கீதாஞ்சலி பிரியதர்சினி கவிதைகள்
துறைமுகங்களைக் காணாத அலைகள்
வேண்டுதல்கள் கோரிக்கைகள் ஏதுமற்றதாய்
குரல்களின் அர்த்தம் புரியாத அலைகள் பிறக்கும்
உன் ஆணைகளுக்குள் சிக்கிக் கொள்ளாமல் மிதமாய்
கடந்து போகின்றன. படகு வீடென மிதக்கிறாய்.
குறைகளைக் கேட்காமல் பறக்கின்றன வெண்ணிற
கடல் நாரைகள் இப்போது பகல் வேளையில்.
உன் உடலில் கிளைவிட்டு பரவுகின்றது
உப்புச் செடியின் பூத்தாவரம் ஒன்று வெப்பமுடன்.
மூங்கில் மரங்கள் குழப்பத்தை மறைத்தவாறு
குறுக்கும் மறுக்குமாய் காற்றைத் துழாவுகின்றன.
கடல் மீன்கள் காலத்தை தின்று நுரை துப்புகின்றன.
உள் உதடுகள் உச்சரிக்க மீதமொரு அன்பு.
ஆணை பழுதுபடாமல் உறைகிறது வேளை பார்த்து.
உன் புனைவின் அரூப நொடியன்றில்
அசையாமல் சென்று கொண்டிருக்கும் பருவ
காலத்தின் மேல் அசையும் சிறு வீடொன்று.
மிச்சமாகிற பொழுதில்
சொல்லித் தீர்த்தபின்னும் நிச்சயமற்ற
ஒரு நாளின் இறுதியில் மிஞ்சும் சில சொற்கள்.
ஆடைகளற்று அலையும் அவற்றை அறையின்
நிலைக்கண்ணாடியின் பின் ஒளித்துவைத்தேன்.
பிரேதங்களின் நெடியடிப்பதாக அவை
என்னிடம் ஓயாமல் புகார் சொல்லிக் கொண்டன.
தினந்தோறும் புதிதாய் ஒளிந்து கொள்ள வரும்
வார்த்தைகள் அதிகமாகிவிட்டால் நெடி தானாக
குறைந்துவிடும் எனவும், அதுவரை கொஞ்சம்
குழந்தைகளின் உடைகளை அணிந்து
கொள்ளும்படியும் சிபாரிசு செய்துவிட்டேன்.
இப்போது, அவைகள் புதிதாய் முகம் பார்ப்பவர்களிடம்
பயமுறுத்தி காசு பறிக்கவும் தொடங்கி விட்டதாக
அறையை பகிர்ந்து கொண்டவர்கள் மோசமாக
ஏசத் தொடங்கி விட்டார்கள்.
சிறைக்கம்பிகள் தானாக அலையத் தொடங்குகின்றன.
அடுத்த பகற்பொழுது ஒன்றில் - குற்றவாளிகள்
மேலும் ஒடுங்கி மறைகின்றனர்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|