Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...


கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் களவாணித்தனம்

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 16
குறைந்தஅதி சிறந்த 

உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்துக்கு மக்களிடையே ஏகோபத்திய ஆதரவு இருப்பதாக நண்பர் ஒருவர் என்னிடம் பெருமையாகச் சொன்னார். அவரும் அந்தத் திட்டத்தால் ஏழை-எளிய, நடுத்தர மக்கள் பயன்பெறுவதாக நம்பினார். அவரிடம் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள அரசியல், பொருளாதார பின்னணிகள் குறித்து உரையாடினேன். நான் பேசியதையடுத்து கலைஞர் காப்பீட்டுத் திட்டம் பற்றி அவர் கொண்டிருந்த மாயை உடைந்துபோனது. அவரிடம் ஏற்பட்ட இந்த மாற்றம் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் பற்றி ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று என்னைத் தூண்டியது. 

      இனி கட்டுரைக்குள் போகலாம். 

      அண்மைக் காலமாக அமெரிக்காவில் மருத்துவமனைகளுக்குச் செல்வதில் அந்நாட்டு மக்கள் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லையாம். சாதாரண உடல் உபாதைகள், உடல் நலக்கோளாறுகளுக்குத் தங்களுக்குத் தெரிந்த ஏற்கெனவே சாப்பிட்டு வந்த மருந்து மாத்திரைகளை வாங்கி விழுங்கிக் கொள்கிறார்களாம். இது ஏதோ கற்பனையில் கண்டுபிடித்து சொல்கிறேன் என்று நினைத்துவிட வேண்டாம். அண்மையில் அமெரிக்கா வுக்குச் சென்று வந்த என் தோழியின் சகோதரரனான கண் மருத்துவர்தான் இதை என்னிடம் சொன்னார். 

      இந்தளவுக்கு அமெரிக்கர்கள் மருத்துவமனைகளை வெறுக்க என்ன காரணம் என்பதையும் அவரே என்னிடம் விளக்கினார். 

கண்மருத்துவ சேவையைத் தனியார்மயப்படுத்தினால் ஏற்படும் பேரவலத்துக்கு அமெரிக்காதான் முன்னுதாரணம். அங்கு மருத்துவம் முழுக்க தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் பிடிக்குள் இருப்பதால், காப்பீட்டுத் தவணை செலுத்த முடியாத ஏழைகளுக்கு மருத்துவ சேவை முற்றிலும் மறுக்கப்படுகிறது. 

கண்காப்பீட்டு நிறுவனங்களின் கொள்ளையால் அமெரிக்காவில் மட்டும் 5 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவ சிகிச்சை பெறமுடியாமல் அவதிப் படுகின்றனர். 

அமெரிக்காவில் மருத்துவச் செலவு விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து விட்டதற்குக் காரணம் மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள்தான். 

காப்பீட்டு நிறுவனங்களின் களவாணித்தனம் 

      அமெரிக்கா மட்டுமல்ல வளர்ந்த (முதலாளிய) நாடுகளில் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு அந்நிறுவனங்கள் மருத்துவக் காப்பீட்டு வசதிகளை வழங்குகிறது. அது மட்டுமின்றி, அந்நாடுகளில் உள்ள பொதுமக்களும் ஆத்திர அவசரத்துக்கு உதவுமென்று  மருத்துவக் காப்பீடு எடுத்துக் கொள்கிறார்கள். மொத்தத்தில்,  அந்நாடுகளில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணையாதவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நிலைமை மாறி விட்டது. 

      இவ்வாறு மருத்துவக் காப்பீடு பெற்றவர்கள், சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் செல்லும்போது, அவர்களுக்கு வேண்டிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு சிகிச்சைக் கட்டணத்தைக்  காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து மருத்துவ மனை பெற்றுக் கொள்ளும். பயனாளிகள் நேரடியாகப் பணம் செலுத்துவதில்லை என்பதை சாதக மாக்கிக் கொண்டு, வழக்கத்தைவிட கூடுதலாக மருத்துவக் கட்டணம் வசூலிப்பது அந்நாட்டில்  வழக்க மாகிவிட்டது. சாதாரணமாக ஓர் அறுவைச் சிகிச்சைக்கு 15 ஆயிரம் ரூபாய் செலவாகிறது என்று வைத்துக் கொண்டால், அந்த அறுவை சிகிச்சையை காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் செய்வதற்கு இரண்டு மடங்காக 30 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்திக் காட்டி காப்பீட்டு நிறுவனங்களிடம் மருத்து வமனை நிர்வாகம் வசூலித்து விடும். 

      இதே நிலை தொடர் கதையாகி, சாதாரணமாக சிகிச் சைக்கு வரும் நோயாளிகளிடமும் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கும் போது பெறப்படும் கட்டணமே வசூலிக்கும் நிலை உருவாகிவிட்டது. இதனால்தான், மருத்துவச் செலவு அங்கே அதிகரித்துவிட்டது” என்றார், அமெரிக்காவுக்குச் சென்று வந்த அந்த மருத்துவர். இந்நிலை அமெரிக் காவில் மட்டும்தான் என்று நினைத்து விட வேண்டாம். இந்தியாவிலும் அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் இதே நிலை உருவாகிவிட்டது. 

அதற்குக் காரணம் யார்? 

அரசு ஊழியர்களுக்கு மருத்துவக் காப்பீடு 

      ‘ஸ்டார் ஹெல்த் அன்ட் அலைடு இன்சூரன்சு’ என்ற பன்னாட்டு காப்பீட்டு நிறுவனத் திடம் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்து வதற்கான ஒப்பந்தம் போடப் பட்டுள்ளது. இந்நிறுவனம் பட்டிய லிட்டிருக்கும் தனியார் மருத்துவ மனைகளில் அரசு ஊழியர்களுக்கு 4 ஆண்டு காலத்திற்கு 2 லட்சம் ரூபாய் வரைக்கும் சிகிச்சை தரப்பட உள்ளது. இதற்காக ஒவ்வொரு அரசு ஊழியரிடமும் மாதந்தோறும் 50 ரூபாய் வசூலித்து, காப்பீட்டு நிறுவனத்துக்கு இத்தொகையை தமிழக அரசு வழங்குகிறது. இதன் மூலம் காப் பீட்டு நிறுவனத்துக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும் நிரந்தர வருவாயை அரசு உறுதிப் படுத்தியுள்ளது. 

உயிர்காக்கும் உயர் சிகிச்சை கலைஞர் காப்பீட்டுத் திட்டம்  

      அதே போல் உயிர் காக்கும் உயர் சிகிச்சை கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின்படி ஏழைக் குடும்பம் ஒவ்வொன்றுக்கும்  அரசே ஆண் டொன்றுக்கு ரூ.500 வீதம் காப்பீட்டுத் தொகையாக ஸ்டார் ஹெல்த் காப்பீட்டு நிறுவனத்துக்குச் செலுத்தி விடும். இப்போதைக்கு கருணாநிதியின் காப்பீட்டுத் திட்டம், ஏழைகளிடமிருந்து கட்டணம் ஏதும் வசூலிப்பதில்லை. 

      ஆனால் அரசின் நேரடி மருத்துவ சேவைகள் படிப்படியாக ஒழிக்கப்பட்ட பின்னர், அனைத்துத் தரப்பினரையும் தனது வியாபார வலைக்குள் காப்பீட்டு நிறுவனம் கொண்டு வந்து விடும். அதன்பிறகு மருத்துவத் துறையில் அவர்கள் வைப்பதுதான் சட்டம் என்றாகி விடும். “காய்ச்சல் என்றால் ஆயிரம் கொடு” என்பார்கள். “சளி என்றால் பத்தாயிரம் கொடு” என்பார்கள். அப்புறம் என்ன? மருத்துவக் காப்பீடு வைத்துள்ளவர்கள் அல்லது பணம் படைத்தவர்கள் மட்டுமே சிகிச்சை பெற முடியும் என்கிற ஆபத்தான நிலை (இப்போது அமெரிக்காவில் உள்ளது போல்) உருவாகிவிடும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் இன்றைக்கு அனைத்து அரசு ஊழியர்களுக்கும், விவசாயிகள், கட்டடத் தொழி லாளர்கள், தினக் கூலிகள், தி.மு.க. உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டு வருகிறது. (மத்திய அரசு ஊழியர்களுக்குக் குறிப்பிட்ட சில மருத்துவமனைகளில் இலவச மாக சிகிச்சை அளிக்கப்படும். ஆனால் அதற்கான கட்டணத்தை சம்பந்தப்பட்ட ஊழியர்கள் பணி யாற்றும் மத்திய அரசு நிறுவனம் செலுத்திவிடும். இங்கேயும் மருத்து வச் செலவைக் கூடுதலாகக் காட்டி அரசிடம் வசூலிக்கும் நடைமுறை உள்ளது) 

பணம் கறக்கும் காப்பீட்டு நிறு வனங்கள், கார்ப்ரேட் மருத்துவ மனைகள் 

      கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற வருவோரிடம், “நோயாளியா பணம் தருகிறார், அரசு தானே தருகிறது” என்று தங்கள் விருப்பத்துக்கு மருத்துவச் செலவை உயர்த்திக் காட்டி தனியார் மருத்துவமனைகள் கொள்ளை லாபம் ஈட்டுகின்றன. காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறும் அரசு ஊழியர்களுக்கும் இதே நிலைதான். இதனால், காலப் போக்கில் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க வசூலிக்கப் படும் தொகையே எல்லோரிடமும் வசூலிக்கும் நிலை உருவாகிவிடும். “மற்ற நோயாளிகள் வந்தால் என்ன? வராமல் போனால் என்ன? நமக்குக் காப்பீட்டுத் திட்டம் இருக்கிறதே” என்ற எண்ணத்தில் மருத்துவ மனைகள் செயல்படத் தொடங்கி விடும். 

அரசன் வழங்கிய பனிக்கட்டி! 

      கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் ஸ்டார் ஹெல்த் தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்குத் தமிழக அரசு கட்டணத் தொகையாக (பிரிமியம்) முதலாண்டில் கொடுத் திருப்பது ரூ. 628.20 கோடி! ஆனால், பல்வேறு அறுவை சிகிச்சை களுக்காக அந்தத் தனியார் காப்பீட்டு நிறுவனம் பயனாளிகளின் சார்பாக மருத்துவமனைகளுக்குக் கட்டண மாகக் கொடுத்திருப்பதோ வெறும் ரூ. 415.43 கோடி. மக்களின் வரிப்பணத்தில் சுமார் ரூ. 200 கோடி லாபம் ஈட்டியிருக்கிறது தனியார் காப்பீட்டு நிறுவனம். காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவ மனைகள் ஒன்றும் இலவசமாக மருத்துவம் பார்க்கவில்லை. பயனாளிகள் சார்பில் காப்பீட்டு நிறுவனம் மருத்தவமனைக்ளுக்கு செலுத்திய 415.43 கோடியில் மருத்துவமனைகளின் லாபப் பங்கு எவ்வளவு இருக்கும் என்பதை சிந்தியுங்கள். 

      இரண்டாவது ஆண்டுக்கு, அரசு அந்தத் தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்கு ஒதுக்கியிருக்கும் கட்டணத் தொகை ரூ. 750 கோடி. அரசன் வழங்கிய பனிக்கட்டி அமைச்சர்கள், அரசு ஊழியர்கள் என கைமாறி வருவதற்குள் கரைந்து விடுமே அதுபோல இந்தத் திட்டத்தின் பயன் மக்களை வந்து சேர்வதற்குள் மக்களின் வரிப் பணத்தில் தனியார் காப்பீட்டு நிறுவனமும், தனியார் மருத்துவ மனைகளும் தான் கொள்ளை லாபம் அடிக்கப்போகின்றன. அத்துடன், கூடுதல் பலனாக காலப்போக்கில் அரசு மருத்துவமனைகளும், இன்றைக்குக் கிடைத்து வரும் இலவச மருத்துவமும் முற்றிலும் அழிந்துவிடும். தமிழக கார்ப்ரேட் மருத்துவமனைகளின் தரத்தில் நமது அரசு மருத்துவமனைகளைப் பராமரிப்பதுதான் முறையான நல்லாட்சிக்கு அடையாளமாக இருக்கும். அதை மறைத்து கலைஞர் காப்பீட்டுத் திட்டம் என்பதே மக்கள் நலன் திட்டம் போல் விளம்பரம் செய்து வருகிறார்கள். மக்களும் கேள்வி கேட்காமல் அறியாமையில் ஏமாறுகிறார்கள். 

மருந்து மாத்திரைக்கென்று, தனியாக காசு பிடுங்குகிறார்கள்! 

      தனியார் மருத்துவமனைகள் காய்ச்சல், இருமல் என்று போனாலே உயிர் பயத்தை ஏற்படுத்தி, ‘சிடி ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன், அந்த டெஸ்ட், இந்த டெஸ்ட்‘ என எடுக்க வைத்து குறைந்தது ரூ 5 ஆயிரத்தைக் கறந்து விடக் கூடியவை. கலைஞர் காப்பீட்டுத் திட்டம் பட்டிய லிட்டிருக்கும் மருத்துவமனைகள் எல்லாமே பணக்காரர்களுக்கான மருத்துவமனைகள்தான். இனி அந்த மருத்துவமனைகள், “காப்பீட்டுத் தொகை முழுவதும் அறுவை சிகிக்சைக்கே சரியாகிவிட்டது. மருந்து மாத்திரைகளுக்கு 5 ஆயிரம், 6 ஆயிரம் செலுத்துங்கள்” என்று பிடுங்கி விடுகிறார்கள். லட்சக் கணக்கில் ஆகவேண்டிய மருத்துவச் செலவில் சில ஆயிரங்கள் மருத்து செலவோடு போய்விட்டதே என்று சிலர் சமாதானம் ஆகிவிடுகிறார்கள். ஆனால், பெரும்பாலானோர் மருந்து மாத்திரைக்கு ஆகும் செலவை சமாளிக்கக் கடன் வாங்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள். 

அப்படியென்றால் அரசு மருத்துவமனைகள் எதற்கு? 

      கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு சிகிச்சை அளிக்க ஸ்டார் ஹெல்த் காப்பீட்டு தனியார் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு 750 கோடி ரூபாய் தமிழக அரசு ஒதுக்குகிறது. பத்து ஆண்டுகளில் மக்கள் வரிப் பணம் எவ்வளவு தொகை செலுத்தப்பட்டிருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். அதே சிகிச்சையை நையா பைசா செலவில்லாமல் அரசு மருத்துவ மனைகளில் செய்ய முடியும் தானே? அப்படியிருக்கும் போது, தனியார் மருத்துவமனைகள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு இந்த அரசே வழிவகை செய்ய என்ன காரணம்? உலகின் தலைசிறந்த மருத்துவ நிபுணர்கள், தமிழ்நாட்டு அரசு மருத்துவக்  கல்லூரிகளில் உருவாக்கப்படுகிறார்கள். தலை சிறந்த மருத்துவர்களாக இருக்கும் அரசு மருத்துவர்களைக் கொண்டு மக்களுக்குத் தரமான சிகிச்சை அளிக்காமல் தனியார் மருத்துவ மனைகளிடம் அதனை ஒப்ப டைத்தது ஏன்? 

நூறு கோடி ரூபாய் இருந்தால் அரசால் ஓர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையே கட்ட முடியும் என்கிற நிலையில், இவ்வளவு பெரிய தொகையை (ஆண்டுக்கு 750 கோடி ரூபாய்) தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்குக் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? 

அதே நேரத்தில், மதுரை அரசு மருத்துவமனையை அனைத்திந்திய மருத்துவ விஞ்ஞான கழகம் தரத்திற்கு உயர்த்தப் போவதாக அறிவித்து அரசு ஒதுக்கியுள்ள தொகையோ ரூ. 150 கோடிகள்தான். அப்படியென்றால், மருத்துவக் காப்பீட்டுக்குத் தனியாரிடம் ஒவ்வொராண்டும் போய்ச் சேரும் பணத்தைக் கொண்டு மூன்றுக்கும் மேற்பட்ட நவீன உயர்தர அரசு மருத்துவமனைகளைக் கட்ட முடியும். 

சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் இருக்கும் 30 அறுவைசிகிச்சை மையங்களில் 25 மையங்கள் தினமும் காலை 8 முதல் மதியம் 2 வரை மட்டுமே இயங்கு கின்றன. இவற்றை முறைப் படுத்தி 24 மணிநேரமும் இயங்குபவையாக மாற்ற எந்த நடவடிக்கையும் இல்லை. ஏற்கெனவே இருக்கும் அரசு மருத்துவ மனைகளின் உள் கட்டமைப்பையும் நிர்வாகத் தையும் சீரமைத்தாலே தரமான சிகிச்சை யினை அரசே தரமுடியும். 

காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சாதாரண மக்களும் உயர் சிகிச்சை பெறும் வசதியைச் செய்து விட்டதாகச் சொல்லும் தி.மு.க. அரசு, அதே சாதாரண மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இருக்கும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்களுக்கு சம்பளம் தருவது தண்டத்திற்காகவா? 

காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கும் மருத்துவ மனைகள் வசூலிக்கும் கட்டணத்தை ஒழுங்குபடுத்தும் நடைமுறைகள் எதுவும் அரசிடம் இல்லையே, ஏன்? 

கலைஞர் காப்பீட்டுத் திட்டத் துக்காக ஆண்டுக்கு 750 கோடியை ஸ்டார் ஹெல்த் காப்பீட்டு நிறுவனத்துக்கு அரசு வழங்குகிறது. இத் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளுக்கு இந்தத் தொகையில் இருந்து மருத்துவக் கட்டணம் செலுத்தப் படுகிறது.  எந்தவொரு தனியார் நிறுவனமும் 50 சதவிகித லாப நோக்கு இல்லாமல் தொழிலில் இறங்காது.  ஒவ்வொராண்டும் இந்தத் திட்டத்தின் மூலம் அந்நிறுவனம் பெறும் இலாபம் எவ்வளவு என்பதை அந் நிறுவனமோ அரசோ வெளியிடுமா? 

‘இங்கே கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்படும்’ என்று தனியார் மருத்துவமனைகள் விளம்பரம் செய்கின்றன. இதில் அவர்களுக்கு லாபம் இல்லை என்றால், விளம்பரம் செய்து மக்களை ஈர்க்க வேண்டிய அவசியம் என்ன? 

ஒரே நேரத்தில் அரசு பணத்தில் (அதாவது மக்களின் வரிப் பணத்தில்) காப்பீட்டு நிறுவனங்களும், தனியார் மருத்துவமனைகளும் கொள்ளை லாபம் ஈட்டும் போது இங்கே எப்படி முறையான நியாயமான மருத்துவம் கிடைக்கும்? 

இது திட்டமிட்ட சதி 

      ஓரளவுக்கு நுகர்வோர் நலம் பாதுகாக்கப்படும் அமெரிக்கா விலேயே மருத்துவமனைகளின் கொள்ளை லாபத்தைத் தடுக்க முடியாத நிலையில், தி.மு.க. அரசு மக்கள் பக்கம் இருக்குமா? கொள்ளை லாபம் ஈட்டும் ஸ்டார் ஹெல்த் மற்றும் தனியார் மருத்துவ மனைகள் பக்கம் இருக்குமா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்! 

      தமிழ்நாட்டில் தனியார் மருத்துவ மனைகளின் பெருக்கத் தையடுத்து அரசு மருத்துவ மனைகளின் வீழ்ச்சி தொடங்கியது. இது திட்டமிட்டே உருவாக்கப் பட்டது. நடுத்தர மக்கள் எலும்பு முறிவு சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைக்குப் போனால், “இங்கே ஆப்ரேஷன் செய்தால் இன்ஃபெக்சன் ஏற்படும். எனக்குத் தெரிந்த தனியார் மருத்துவமனை இருக்கிறது. அங்கே வாருங்கள், குறைந்த செலவில் சிறப்பாக அறுவை சிகிச்சை செய்து விடுகிறேன்” என்று மூளைச் சலவை செய்யும் வேலையை அரசு டாக்டர்கள் தொடங்கி கால் நூற்றாண்டுகள் ஆகிவிட்டது. 

      எத்தனை நாளைக்குத்தான் இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக அரசு மருத்துவமனைகளை அழித்துக் கொண்டிருப்பது என்று நினைத் திருப்பார்கள் போலும். ஒரேயடியாக அரசு மருத்துவ மனைகளை ஒழித்துக் கட்டிவிட்டு, தனியார் மருத்துவ மனைகளை வளர்க்க தி.மு.க. அரசு முடிவு செய்துவிட்டது. 

அழிவு விளிம்பில் அரசு மருத்துவமனைகள்! 

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் மறைமுக நோக்கம், அரசு மருத்துவமனைகளை முற்றிலும் செயலிழக்கச் செய்வதுதான். 

கலைஞர் காப்பீட்டுத் திட்டம் அமலுக்கு வந்த நாளிலிருந்து அரசு மருத்துவமனைகளுக்கு நவீன உபகரணங்கள் வாங்குவதை அரசு நிறுத்திவிட்டது. பைபாஸ் அறுவை சிகிச்சைக்கான வால்வுகள் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவ மனைகளில் இப்போது இருப் பில்லை என்பது  வேதனையான உண்மை. 

காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஓராண்டு வழங்கப்படும் ரூ.750 கோடியை அரசு மருத்துவ மனைகளில் செலவிட்டால், அதன் தரம் உயர்ந்து ஏழை எளிய மக்கள் பயன்பெறுவார்கள். அரசு மருத்துவ மனைகளில் தீவிர கண்காணிப்பைச் செயல் படுத்தினால்,  நடுத்தர வர்க்க மக்களும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளை நாடி வருவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. 

      இவற்றை எல்லாம் இந்த அரசு செய்யுமா? தனியார் நிறுவனங்கள் தூக்கிப் போடும் எலும்புத் தூண்டுகளுக்காக சொந்த மக்களைக் கொல்லக் கூடத் துணியும் என்பதற்கு போபால் விஷவாயு சம்பவத்தில் ஆண்டர்சனை தப்பிக்க விட்டது ஓர் உதாரணம். இப் போதும், அணுசக்தி விபத்து இழப்பீட்டு மசோதாவை நிறை வேற்றி அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சிகப்புக் கம்பளம் வரவேற்பு அளிக்கிறார்கள். அப்படி யான அரசுக்கு கங்காணி வேலை பார்க்கும் தி.மு.க. அரசும், அன்னிய முதலீடு, பொருளாதாரக் கொள்ளை போன்றவற்றில் இந்தியப் பேரரசை அடியொற்றி வருகிறது என்பதின் அடையாளமே உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம்!

(தமிழ்த் தேசத் தமிழர் கண்ணோட்டம் இதழில் வெளியானது)

Bookmark and Share

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு படைப்புகளை அனுப்ப‌ இங்கே அழுத்தவும். வேறு எந்த இணையதளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். வெளியாகும் படைப்புகளில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அந்தந்த ஆசிரியரின் சொந்தக் கருத்துக்களே! நாகரிகமற்ற/பிழையான‌ பின்னூட்டங்கள் குறித்து editor@keetru.com-க்குத் தெரியப்படுத்தினால், அவை நீக்கப்படும்.
Comments (4)
  • SELVAA
    கலைஞருடைய எல்லா திட்டங்களிலும் ஏதாவது ஒரு குறை கண்டுபிடிப்பதில் நியாயம் இல்லை. மற்ற திட்டங்கள் எப்படியோ, ஆனால் இந்த காப்பீட்டுத்திட்டத்தால் அதிகமான ஏழை மக்கள் பயனடைகிறார்கள் என்பதே உண்மை.
  • elagnairu
    செல்வா போன்றவர்கள் கட்டுரையை படித்துவிட்டு.. கண்மூடித்தனமாக கலைஞர் காப்பீட்டுத்திட்டம் சிறப்பானது என்று கூறுவது வியப்பல்ல.. படித்தவனால்தான் நாடு கெடுகிறது என்று பெரியார் சொல்லுவார்... அது செல்வா போன்றவர்களுக்கும் பொருந்தும். அரசு மருத்துவமனையை சிறப்பாக நடத்தி மக்களுக்கு சேவைசெய்ய கையாலாகாத அரசு... காப்பீட்டு திட்ட நிறுவனங்களுக்கும்.. தனியார் மருத்துவமனைகளுக்கும் பணத்தை அள்ளிக்கொடுப்பது.. சரியா செல்வா?
  • SELVAA
    இந்த திட்டத்தால் பயன்பெறும் பயனாளிகள் இலவசமாக சிகிச்சை பெறுகிறார்கள் என்பதை ஒப்புக்கொள்கிறீரா இல்லையா?
  • Ganesan.J
    naduthara makkal palar thittathil payanadaithullanar enbadhu unnmai.
Write comment
Your Contact Details:
Comment:
தமிழ் (ammaa=அம்மா) English
Security
Please input the anti-spam code that you can read in the image.
 

நுழைவாயில்

பயனர் பெயர்:

கடவுச்சொல்:

பதிவு செய்க

தொடர்புடைய படைப்புகள்

கீற்று படைப்புகளை மின்னஞ்சலில் பெற:

தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்

பகுப்புகள்


Tamil Magazines
on keetru.com


www.dalithumurasu.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com



www.thamizharonline.com

sinthanaiyalan

www.anangu.keetru.com



http://thamizhdesam.keetru.com/

http://kannottam.keetru.com/

மேலும்...


About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by Acanthus Infotech
Best viewed in Google chrome, Windows 2000/XP