makkal viduthalai sep15

தமிழகத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டம் முறையாக அமல்படுத்தப்படுவதேயில்லை. அப்படியே குற்றம் சாட்டப் பட்டாலும் யாரும் தண்டிக்கப்படுவதில்லை என்ற சூழலில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எந்த நோக்கத்திற்காக எழுப்பப்பட்டதோ அதைவிட மூர்க்கத்தனமான உள்நோக்கத்தோடு குஜராத்தின் பட்டேல்களின் போராட்டம் நடைபெற்று வருகிறது.

கடும் பொருளாதார சூழலில் வாடிக் கொண்டிருக்கும் வன்னியர் சமூக மக்களுக்கான சமூகப் பொருளாதார மேம் பாட்டுக்காக குரல் கொடுப்பது, அதற்காகப் போராடுவது அவசியமானது, அவசரமானது. ஆனால், இராமதாசோ அமல்படுத்தவே படாத ஒரு பல்போன சட்டம் பெயரளவில் இருப்பதைக்கூட தாங்கிக் கொள்ள முடியாமல் கொதித்ததன் நோக்கமென்ன? தன் கட்சியையும் குடும்பத்தையும் பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தைத் தவிர வேறென்ன நோக்கமுள்ளது?

குஜராத்தின் தொழில்துறை, வணிகம், அரசியல் என்று அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தும் பட்டேல்களின் போராட்டமும் இதேபோன்ற நயவஞ் சக நோக்கம் கொண்டதே. இந்த போராட்டத்தை வழி நடத்திய ஹிர்த்திக் பட்டேல் வெளிப்படையாக அறிவித்தது என்ன? ”ஒன்று எங்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்து துறைகளிலும் இடஒதுக்கீடு வழங்கு அல்லது இட ஒதுக்கீட்டு முறையையே ஒழித்து விடுங்கள்” என்கிறார். பட்டேலின் நோக்கம் தெளிவானது. தங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டுமென்பதைவிட இட ஒதுக்கீட்டு முறையையே ஒழித்திட வேண்டும் என்பதுதான்.

சுதந்திரம் பெற்று அறுபது ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான தொழிலகங்களும் வயல்வெளிகளும் வணிகத் துறையும் பஞ்சாயத்தில் இருந்து பாராளுமன்றம் வரையில் உள்ள அரசியல் அதிகாரமும் உயர்மட்டக் கல்விப் பயிலகங்களும் இன்னும் ஆதிக்கச் சாதியினர் கையிலேயே உள்ளதென்று பல ஆய்வுகள் நிரூபித்த போதும் ஹர்திக் படேல்கள் ஏன் கொதிக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள அதிகம் கஷ்டப்பட வேண்டியதில்லை. இந்தியாவில் வேலைவாய்ப்பு வழங்கும் துறைகளில் அமைப்பாக்கப்பட்ட துறை வெறும் ஏழுசதவிகிதமே. அதிலும் இரண்டு சதவிகிதம் மட்டும்தான் அரசு மற்றும் பொதுத் துறை சார்ந்தவை. இட ஒதுக்கீடு வழங்கப்படுவதாக கூறப்படும் இந்த இரண்டு சதவிகிதத்திலும் இட ஒதுக்கீடு எந்த இலட்சணத்தில் அமலாக்கப்படுகிறது என்பது எல்லோருக்கும் தெரியும். தற்போதைய உலக மயமாக்கல், தனியார்மயமாக்கலுக்கு பிறகு இந்த இரண்டு சதவிகிதம் என்பது கிட்டதட்ட இல்லாத நிலைமைக்குப் போய்க் கொண்டிருக்கிறது. கல்வித் துறையிலும் இதே நிலைமைதான். இந்த இலட்சணத்தில் படேல்களின் போராட்டத்திற்கு ஒரே நோக்கம்தான் உள்ளது. இட ஒதுக்கீடு என்ற பெயரில்கூட தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோர்கள் யாரும் எழுந்து வந்துவிடக் கூடாது. ஆண்ட தலைமுறையே மீண்டும் மீண்டும் ஆள வேண்டும் என்பதுதான்.

 ஆர்.எஸ். எஸ் சின் நோக்கமும் இதுதான். இதனால்தான் இந்தப் போராட்டம் ஆரம்பித்த உடனேயே விசுவ இந்து பரிசத்தின் இன்றையப் பொதுச் செயலாளர் சுரேந்திர ஜெபான், சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று குதிக்கிறார். பா.ச.க. நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.டி. ரவி, ”சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாதென்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்” என்று கதறுகிறார். தினமணி, ’பிரச்சனையாகும் இட ஒதுக்கீடு’ என்று தலையங்கம் எழுதுகிறது. அதில் இட ஒடுக்கீட்டுக்கு சாதியையோ மதத்தையோ அடிப்படையாக கொள்ளாமல் வருமானத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு முறை என்கிற எம்.ஜி.ஆர். ஃபார்முலாவை ஏற்றுக் கொள்ள யாரும் தயாராக இல்லை என்று புலம்புகிறது.

உண்மையில் எம்.ஜி.ஆர். சாதிய ஒதுக்கீட்டுக்குள் பொருளாதார வரையறையைத்தான் கொண்டு வந்தார் என்பதையும் அதற்காகவே அவர் 1980 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்தார். அதனையட்டி நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற உடனே அவர் தனது திட்டத்தைக் கைவிட்டது மட்டுமின்றி இட ஒதுக்கீட்டை 69% சதவிகிதம் என்ற அளவிற்கு உயர்த்தினார் என்பதையும் மூடி மறைக்கின்றது தினமணி.

 இந்த நிலையில் வழமை போன்று சி.பி.ஐ.(எம்). நாடகமாடுகிறது. தமிழக சி.பி.ஐ. (எம்) இன் மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.இராமகிருஷ்ணன் படேலின் போராட்டத்தை விமர்சித்து அறிக்கை விடுகிறார். ஆனால், அவர்களின் மையக் குழுவோ கல்வி, வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம் ஆகியவைப் பாதிக்கப்படும்போது அரசை நோக்கி மக்கள் கேள்வி எழுப்புவது இயல்பானது.

படேல் சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் சம உரிமை மறுக்கப்பட்டதே இப்போதையப் பிரச்சனைக்குக் காரணம் என்று அறிக்கை விடுகின்றது. படேல்களின் இந்தப் போராட்டத்திற்கு குஜராத் மாநில அரசும் போலீசும் எந்த அளவிற்குப் போட்டி போட்டுக் கொண்டு உதவின என்று ஊடகங்கள் வேதனைப்படும் வேளையில் படேல்களின் இந்தப் போராட்டத்திற்குப் பின்னான சமூகப் பொருளாதாரக் காரணங்களை நாமும் தெரிந்து கொள்ளவே விரும்புகிறோம். ஆனால் இப்போராட்டத்தின் திசைவழியும் கோரிக்கைகளும் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக இருக்கிறதே. இந்நிலையில் நம்மைப் பொறுத்தவரை வாய்ப்புகளும் வசதிகளும் அனைவருக்கும் கிடைக்கும் அளவிற்கு விரிவடையும்வரை சாதி, மத ரீதியிலான இட ஒதுக்கீடு அவசியமானது, அடிப்படையானது என்று கருதுகிறோம்.

அதே போன்று இந்த இட ஒதுக்கீட்டு முறை அந்தந்த மக்களின் அடித்தட்டுப் பிரிவினரைச் சென்றடைகிறதா? என்பதை உறுதி செய்யும் நோக்கில் குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை ஆய்வு செய்ய வேண்டும். அதே போன்று சாதி ஒழிப்பிற்கும் இட ஒதுக்கீட்டு முறைக்கும் இடையிலான தொடர்பு குறித்து ஒரு பரந்த விவாதம் தேவை என்று கருதுகிறோம். 

Pin It

 மோடி அரசு நிலம் கையகப்படுத்தும் சட்டம் கொண்டுவந்ததிலிருந்து கடும் எதிர்ப்பைச் சந்தித்தது. நிலங்களிலிருந்து விவசாயிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவதோடு அவர்களின் வாழ்வியல் உரிமைகளை மறுப்பதாகவும் உணவு தானிய உற்பத்திக்கு இந்த சட்டம் பெரும் தடையாக மாறும் என்று எதிர்கட்சிகளும், விவசாய அமைப்புகளும், மக்கள் இயக்கங்களும் உறுதியாக போராட்டங்களை நடத்தின. ஆனால், மோடி அரசோ நாட்டின் வளர்ச்சிக்கும், இந்தியா வல்லரசாவதற்கும் இந்த நில அபகரிப்பு சட்டம் அவசியம் என்று கிளிப் பிள்ளை போல் சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லியது.

இப்போது மோடி அரசு பிறப்பித்திருந்த அவசர சட்டம் ஆகஸ்டு 31 ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. மத்திய அரசு மீண்டும் அதை நீட்டிக்கவில்லை. நிலம் கையகப்படுத்தும் சட்டம் 2013-ல்(காங்கிரசு அரசு கொண்டு வந்தது) அடங்கிய 13 மத்திய சட்டங்களை ஒன்றிணைத்து ஒரு நிர்வாக உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. பீகார் தேர்தலைக் கருத்தில் கொண்டும் மாநில அரசுகளின் ஊடாக தான் விரும்பியபடி இச்சட்டத்தை அமல்படுத்திக் கொள்ளலாம் என்பதே உண்மை. மூன்றில் ஒரு பங்கு மாநில அரசுகள் பா.ச.க. வசம் உள்ளது. பீகார், மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், அசாம் ஆகிய மாநிலங்களின் தேர்தல்கள் வர இருக்கின்றன. இவை மூன்றில் இன்னொரு பங்கு. எனவே, நிலத்தைக் கையகப்படுத்தி கார்ப்பரேட்டுக்கு தாரை வார்க்கும் இந்திய, தமிழக வரலாற்றை உற்று நோக்க வேண்டியுள்ளது.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்புவரை 70% மக்கள் கிராமப்புறங்களைச் சார்ந்தும், வேளாண்மை மற்றும் வேளாண்மையின் சார்பு தொழில்களை சார்ந்தே மக்கள் இருந்தனர். உலகமயமாக்களுக்குப் பிறகு தொழில்துறை வளர்ச்சி நேரடி அந்நிய மூலதன இறக்குமதி, நகரமயமாக்கல், உற்பத்தி சாராத சேவை தொழில்களின் வளர்ச்சியைக் குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையின் வேகமான வளர்ச்சி இவைகளின் காரணமாக வேளாண்மை சாராத மக்களின் எண்ணிக்கைபடிப்படியாக அதிகரித்தது. இதே காலத்தில்தான் விவசாயமானது பசுமை புரட்சியின் எதிர்விளைவாக தொடர் சரிவைச் சந்தித்து விவசாயிகளை கடன்காரன்களாக்கி தற்கொலைக்கு தள்ளியது. தற்கொலையின் எண்ணிக்கையும் ஆயிரக்கணக்கில் ஆண்டுக்காண்டு கூடிக்கொண்டே வருகிறது. இதன் காரணமாக வாழ்வதற்கே வழியில்லாத கிராமப்புறவிவசாய கூலி ஏழை மக்களும், குறிப்பாக சிறுகுறு விவசாயிகளும் நிலம் சார்ந்த விவசாய வேலைகளிலிருந்து திவாலான நிலையில் வெளியேறி வருகின்றனர். இந்த சூழ்நிலையில்தான் தாராளமயமாக்கல், தனியார் மயமாக்கல், உலக மயமாக்கல் என்ற பெயரில் நாட்டை நவீனப்படுத்துகின்றோம் என்று சொல்லி பெரும்பான்மை மக்களுக்கும், நாட்டின் உணவுக்கும் முதுகெலும்பாக உள்ள நிலத்தைத் தொழில் வளர்ச்சி என்ற பெயரில் ஏற்கெனவே உள்ள நில கையகப்படுத்தும் சட்டத்தில் உள்ள குறைந்தபட்ச உரிமைகளைக் கூட புதைத்துவிட்டு நில அபகரிப்பு சட்டத்தை கொண்டுவர மோடி துடியாய் துடித்தார்.

தமிழ்நாட்டில் மாவட்டந்தோறும் சிப்காட், டிட்கோ, சிட்கோ என்ற பெயரில் 80-களின் இறுதியிலும், 90-களின் தொடக்கத்திலும் தொழில் வளர்ச்சிக்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களைத் தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. பல மாவட்டங்களில் தனியார் நிலங்களையும் இதற்காக அரசு வாங்கியது. ஒசூர், இராணிப்பேட்டை, அம்பத்தூர், பெருந்துறை, கோவை போன்ற பகுதிகளில் தொழிற்பேட்டைகளை உருவாக்கியது. சிப்காட்டிற்காக நில ஒதுக்கீடு செய்யப்படாத மாவட்டம் தமிழ்நாட்டில் எதுவும் இல்லை. 1991-க்கு பிறகு பல இடங்கள் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக கையகப்படுத்தப்பட்டது. குறிப்பாக ஸ்ரீபெரும்பத்தூர், ஒரகடம், டைடல் தொழில்நுட்பப் பூங்கா போன்ற பகுதிகள் பன்னாட்டு நிறுவனங்களுக்காகவே ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள், ஒரு ஏக்கர் 5 ரூபாய், 10 ரூபாய் ஆண்டு கட்டணம் என ஒதுக்கீடு செய்யப்பட்டன. தடையற்ற மின்சாரம், பாதிவிலையில் மின்சாரம், 15 ஆண்டுகளுக்கு வரிவிலக்கு, கட்டுப்பாடற்ற ஏற்றுமதி இறக்குமதி, இரவுப்பணி செய்யப் பெண்களுக்கு அனுமதி, யாரை வேண்டுமானாலும் வேலைக்கு வைத்துக்கொள்ளவும், யாரை வேண்டுமானாலும் நீக்கவும் கம்பெனிகளுக்கு அதிகாரம், தொழிற்சங்க உரிமைகளை மறுத்தல் இவையெல்லாம் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் ’சிறப்பு’ அம்சங்கள்.

 இத்தனை சலுகைகளையும் 10 ஆண்டுகளாக அனுபவித்த நோக்கியா நிறுவனம் 40,000 கோடி வரி பாக்கியை அரசுக்கு செலுத்தாமல், வேலை செய்த சுமார் 40,000 தொழிலாளர்களை நடுத்தெருவில் விட்டுவிட்டு போய்விட்டனர். இதுதான் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் இன்றைய சிறப்பு அம்சத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு. நாடு முழுக்க உள்ள சுமார் 50 சிறப்பு பொருளாதார மண்டலங் களிலிருந்து கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் நோக்கியா போன்ற 150 நிறுவனங்கள் இலாபங்களைச் சுருட்டிக்கொண்டு ஓடிவிட்டனர். அதாவது இந்த நிறுவனங்கள் மூலம் மத்திய மாநில அரசுகளுக்கு வரி வருவாய், வேலை வாய்ப்பு மூலம் கிடைத்த வருமானம் அனைத்தையும்விட பலமடங்கு நாட்டு வளங்களைச் சுரண்டியுள்ளனர். குறிப்பாக தண்ணீர், காற்று, நிலம், மனித உழைப்பு இதன் மதிப்பு கணக்கில் அடங்காது. இந்த பாதிப்புகளை நிச்சயமாக இவர்களால் நமக்கு திருப்பி தர முடியாது.

நாம் இங்கு புரிந்து கொள்ள வேண்டிய விசயம் என்னவென்றால் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, ஒரிசா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்கள்தான் இந்தியாவில் தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றன. பன்னாட்டு தொழில் நிறுவனங்களும், உள்நாட்டுப் பெரும் தொழில் நிறுவனங்களும் இங்குதான் குவிந்துள்ளன. இந்த மாநிலங்களில் எல்லாம் மாநில அரசின் தொழில்துறையின் மூலமாக கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் மத்திய அரசின் தொழில் வளர்ச்சிக்கான நோக்கத்திற்காக கையகப்படுத்தபட்ட நிலங்கள் மட்டுமல்லாது, நேரு காலந்தொட்டு இன்றுவரை கனரக தொழில், இராணுவப் பயன்பாடு, பொதுத் துறை நிறுவனங்களுக்கான பயன்பாடு போன்ற திட்டங்களுக்காக இலட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்தி அரசு தன்வசம் வைத்துள்ளது. இந்த நிலங்கள் விவசாய உற்பத்தியிலும் இல்லை, தொழில் துறை உற்பத்தியிலும் இல்லை. இவை பயன்பாட்டில் இல்லாத கையிருப்பு நிலம் என்று அரசின்வசம் உள்ளது.

1991-க்கு பிறகு சென்னையின் மெப்ஸ், மும்பையின் செப்ஸ், நொய்டாவின் செப்ஸ், பால்டாவின் செப்ஸ் (மேற்கு வங்கம்) போன்ற சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் தோற்றுவிக்கப் பட்டன. உற்பத்தி மற்றும் சேவை துறையின் ஏற்றுமதி அதிகரிப்பது நேரடி அந்நிய முதலீடுகளை ஈர்ப்பது, வேலை வாய்ப்பைப் பெருக்குவது, ஏற்றுமதியைப் பெருக்குவது போன்றநோக்கத்தை முன்வைத்தனர். கார்ப்பரேட் வரியிலிருந்து 15ஆண்டுகளுக்கு சலுகை, இறக்குமதி செய்வதற்கு உரிமம் தேவையில்லை, சேவை வரியிலிருந்து விலக்கு போன்ற சலுகைகளை அரசு கொடுத்தது. ஆனால் வேலை வாய்ப்பைப் பொருத்தவரை  CAG அறிக்கையின்படி SEZ மூலம் சராசரியாக கடந்த 20 ஆண்டுகளில் 8% வேலை வாய்ப்புகள் மட்டுமே உருவாக்கபட்டிருக்கிறது. 2006 முதல் 2013 ஆம் ஆண்டுவரை சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் செயல்படும் நிறுவனங்கள் 83,104 கோடி ரூபாய் வரிச்சலுகைகளை அனுபவித்துள்ளன. அதுமட்டுமல்லாது, 2011 ஆம் ஆண்டு முதல் நிறுவனத்தின் இலாபத்தின்மீது விதிக்கப்படும் குறைந்தபட்ச மாற்றுவரி மற்றும் டிவிடண்ட் வரி 15% விதிக்கப்பட்டது. இந்த வரி முறையை நீக்க வேண்டும் என்றும் உடனடியாக 7.5% ஆக குறைக்க வேண்டுமென்றும் நிறுவனங்கள் அரசுக்கு நெருக்கடியைக் கொடுக்கின்றன.

இந்தியா முழுமையும் 436 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இதுவரை அனுமதிக்கப்பட்டன. மேலும் 32 சிபொமகளை அனுமதிக்க அரசு பரிசீலித்து வருகிறது. இப்போது நாடு முழுவதும் 199 சிபொம-கள் முழுமையாக செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் மட்டும் 36 சிபொமகைள் உள்ளன. இதில் தமிழ்நாட்டில் பெரும்பாலான சிபொம-கள் ஐ.டி. துறையைச் சார்ந்தது. மொத்தமுள்ள 436 சிபொம-களில் 9% மட்டுமே உற்பத்தி துறையைச் சார்ந்தவையாகும்.

 தொழில்துறை வளர்ச்சிக்காக இதுவரை கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் ஒரிசாவில் 96.6%-மும், மேற்கு வங்கத்தில் 96.3%-மும், மராட்டியத்தில் 70.1%-மும், கர்நாடகத்தில் 56.7%-மும், தமிநாட்டில் 49%-மும், (ஒன்றுபட்ட) ஆந்திரா 48.3%-மும், குஜராத்தில் 47.5% நிலமும் பயன்படுத்தப்படாமல் உள்ளது. நிலைமை இப்படி இருக்க தொழில் வளர்ச்சியைக் காரணம் காட்டி நாட்டின் முன்னேற்றம் என்ற பெயரிலும் மேலும் மேலும் நிலங்களை விவசாயிகளிடமிருந்து பிடுங்கி முதலாளிகளுக்கு சலுகை விலையில் கொடுப்பதன் நோக்கத்திற்கு பின்னே ஒளிந்திருக்கும் காரணம் என்னஎன்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. தொழில் புரட்சி தோன்றிய காலத்தில் பண்ணையடிமைகள் கூலி உழைப்பாளர்களாக மாற்றப்பட்டு பெரும் ஆலைகளை நோக்கித் தொழிலாளர்களாக முதலாளிகளால் திருப்பப் பட்டார்கள். இந்த வரலாறு தலைகீழாக மாறி வருகிறது. அதாவது நிலத்தை நம்பியிருக்கும் பழங்குடிகளும் கூலி விவசாயிகளும் சிறுகுறு விவசாயிகளும், பணக்கார மற்றும் பெரும் விவசாயிகளும் நிலங்களிலிருந்து துரத்தப்பட்டு நில உரிமையாளர்களாக கார்ப்ரேட் கம்பெனிகளும் உள்நாட்டு பெரு முதலாளிகளும் மாற்றப்படுகின்றனர். அதற்கான முன்னேற்பாடுகள்தான் கடந்த 20 ஆண்டு களுக்கு மேலாக இந்தியாவில் நடந்து வருகிறது. காடு, மலை, மண், ஆறு, கடல் அனைத்தும் முதலாளிகளுக்கே சொந்தம் இதற்குப் பெயர்தான் வளர்ச்சியும் முன்னேற்றமும். இதுதான் மோடியின் தாரக மந்திரம்.

பொறுத்தது போதும் விண்ணும் மண்ணும் நமக்கே சொந்தம், மண்ணிலிருந்து மட்டுமில்லை இந்த அண்ட வெளியிலிருந்தே இந்த சுரண்டல் கும்பலை விரட்டியடிப்பது நமது தலையாய கடமையாகும். 

Pin It

தமிழகத்தின் மையமான மதுரை மீண்டும் களை கட்டத் தொடங்கியுள்ளது. 2011 செப்டம்பர் 11 பரமக்குடி துப்பாக்கிச்சூடு தொடங்கி ஓரிரு ஆண்டுகள் சல சலப்பாக இருந்த தென் மாவட்டங்கள் சாதிவெறி கௌரவக் கொலைகள் மற்றும் பரவலாக சாதியப் படு கொலைகளைச் சந்தித்து வருகின்றது. கள்ளுக் குடித்த குரங்கைத் தேள் கொட்டினால் எப்படி இருக்குமோ அதுபோல சாதி அரசியலுடன் மதவாத அரசியலும் கரம் கோர்க்கும்போது சனநாயகத்திற்கான அச்சுறுத்தல் தலை தூக்கியுள்ளது. தாழ்த்தப்பட்ட மக்களையும், சிறுபான்மை மத மக்களையும் குறி வைத்த சாதிய-காவி பயங்கரவாதக் கூட்டணி உருவாகி வருகிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சாதிவெறி இராமதாசுடன் இயல்பாகக் கூட்டணி கண்ட பா.ச.க.வருகிற 2016 தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலில் தனக்கான செல்வாக்கை உருவாக்க மோடி வித்தை செய்த பா.ச.க சாதி வித்தைச் செய்யத்தொடங்கியுள்ளது. ஆர்.எஸ்.எஸ் சின் தத்துவக்குரு தமிழகத்தின் அவதாரம் குருமூர்த்தியின் முயற்சியால் ஜுலை 15 வாக்கில் முக்குலத்தோர் கலந்துரையாடல், ரெட்டி சங்க மாநாடு, தேவேந்திர அமைப்புக்கூட்டம், விருதுநகரில் நாடார் மகாசன சங்க கல்வித் திருவிழா என அமித்ஷா கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு பா.ச.க வின் மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் மற்றும் குருமூர்த்தி கலந்துகொண்டனர். ஆகஸ்ட் மாதம் பா.ச.க தலைவர் அமித்ஷா வரவழைக்கப்பட்டு தேவேந்திர குல அமைப்பு எனும் பெயரில் மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் பல்வேறு சாதிச் சங்கத் தலைவர்கள் வரிசையாக நிறுத்தப்பட்டனர். தேடிப்பார்த்தால் நிகழ்ச்சி ஏற்பாடே ஆர்.எஸ்.எஸ்சின் சதியா லோசனையின் படி தேவேந்திரக் குலச் சமூகத்தைக் குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது.

தேசியம், தெய்வீகம் எனும் முழக்கத்தின்படி கள்ளர்-மறவர்களை குறிவைத்த பா.ச.க., ஆர்.எஸ்.எஸ், நாடார் சமூகத்தின் மத்தியில் கிறித்தவர்களுக்கு எதிராக மத வெறியைத் தூண்டி கலவரத்தை உருவாக்கிய ஆர்.எஸ்.எஸ் கோவைக் கலவரத்தை உருவாக்கியதன் மூலம் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் மக்களைக் குறிவைத்து ஓரளவு வெற்றி கண்ட ஆர்.எஸ்.எஸ் கொங்கு மண்டலத்தில் கவுண்டர் சமூகத்தின் பொருளாதார ரீதியாக பலமடைந்த சக்திகளுடன் கூட்டு சேர்ந்துள்ளனர். தந்தை பெரியாருக்கும் அவரது சிந்தனைகளுக்கும் எதிரான செயற்பாடுகள் இடஒதுக்கீடு மறுப்புக் கருத்துக்கள் பா.ச.க ஆட்சியேறிய பின் அதிகரித்து வருகின்றன.

திராவிடக் கட்சிகளின் துரோக அரசியல் பா.ச.கவை நோக்கி ஈர்ப்பை உருவாக்கியுள்ளது. சாதிக் கட்டமைப்புகள் மேல் நோக்கிய பயணத்தில் பட்டியல் சாதிகளிலிருந்து நீக்கவும், தனி ஒதுக்கீடு கோரியும், ஒரே சாதிப் பெயரில் அழைக்கக் கோரியும் வலியுறுத்தி வரும் தேவேந்திர குல சமூகத்தில் வளர்ந்த பிரிவினரைக் குறிவைத்து காவிப்படை களம் இறங்கியுள்ளது. திராவிடக் கட்சிகளின் வரலாற்றுத் துரோகமும், இடதுசாரி அமைப்புகளுக்கு மக்கள் அடித்தளமின்மையும் தமிழகத்தின் பொருளாதாரத் தளத்தில் முன்னெடுத்து வரும் சமூகத் தன்மைகளுக்கு பாச.க தன்மைப் பிரதிநிதியாக முன்னிறுத்தி முயற்சிக்கிறது. காலங்காலமாககல்வி,அரசுவேலைமறுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின், தலைவர்களின் போராட்டங்களின் காரணமாக, இடஒதுக்கீடு சட்டப்படி அமலாக்கப்பட்டது.

கடந்த காலங்களில் நீண்டகாலமாக பதவி சுகங்களை அனுபவித்து வந்த முன்னேறிய பிரிவினர் தங்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இணைக்க வலியுறுத்தி குரல் எழுப்பி வந்தனர். மாநிலங்களிலும், மத்தியிலும் வழங்கப்படும் இடஒதுக்கீட்டுச் சலுகைகளுக்கு எதிராக எப்போதும் இயக்கம் தூண்டப்பட்டு வந்தது. இடஒதுக்கீடு என்றாலே தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும்தான் என்பது போன்ற தோற்றமளிக்கும் விவாதங்கள் திட்டமிட்டு நடைபெற்று வந்தன. மத்தியில் ஓ.பி.சி மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட,மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் 30+20= 50 சதவீதம் இடஒதக்கீடு அனுபவித்து வருவதை எளிமையாக மறைக்கின்றனர். வடக்கே தற்பொழுது எங்களை ஓ.பி.சி பட்டியலில் இணை இல்லையேல் இடஒதுக்கீட்டை இரத்து செய் என தூண்டப்பட்ட சாதியத்தின் குரல் இடஒதுக்கீட்டுக்கு எதிராக எழுந்து வருகிறது. ‘எங்களுக்கு இடஒதுக்கீடு வேண்டாம்’ எனும் குரல் தமிழகத்தில் ஆர்.எஸ். எஸ் பின்னணியில் எழுப்பப்பட்டு வருகிறது. இட ஒதுக்கீட்டு அமலாக்கத்தில் திட்டமிட்டு தவறு செய்யும் அரசுகளுக்கு எதிராக உரிய போராட்டங்கள் நடைபெறுவதில்லை. எங்களுக்கு சாதி வேண்டும். ஆனால் இடஒதுக்கீடு வேண்டாம் எனும் முன்னேறிய பிரிவினரின் குரல் திட்டமிட்டு

எழுப்பப்பட்டு வருகிறது-அரசு, பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டு வரும் சூழலில் இடஒதுக்கீட்டு உரிமைக்கான போராட்டம் புதியவகையில் எழ வேண்டிய தேவை உள்ளது.

சாதிய- காவி பயங்கரவாத கூட்டுக்கு எதிராக தமிழகத்தின் பார்ப்பனிய எதிர்ப்பு மரபும், சாதி ஒழிப்புப் போராட்டமும், சனாதன எதிர்ப்பும், காவிப்படை அரசியலுக்கு எதிரான சனநாயகப் போராட்டமும் ஓரணியில் அணி சேர வேண்டிய தேவை எழுந்துள்ளது. பெரியார்- அம்பேத்கர்- மார்க்சிய சிந்தனையாளர்கள், இயக்கங்கள், ஒடுக்கப்பட்டோர் இயக்கங்கள், மதச் சிறுபான்மை இயக்கங்கள் இணைந்து சனநாயகம், மதச்சார்பின்மை, சாதி ஒழிப்பு முனைப்பு கொண்ட பரந்த மேடை உருவாக்க வேண்டிய தேவை நம் முன்னே சவாலாக உள்ளது. மக்கள் சனநாயகத்திற்கான போராட்டத்தை வீரியத்துடன் முன்னெடுப்போம். 

Pin It