makkal vidhuthalai logo

சென்ற இதழில் அடுத்த இதழ் உங்கள் கையில் கிடைக்கும்போது இலங்கை தேர்தல் முடிந்திருக்கும். இராஜபக்சே தோல்வியடைய அதிக வாய்ப்புள்ளது. ஒருவேளை தில்லுமுல்லுகள் செய்து வெற்றி பெற்றாலும் இராஜபக்சேவின் சரிவின் துவக்கப் புள்ளியாக இந்த அதிபர் தேர்தல் அமையும் என்று எழுதியிருந்தோம்.

அதேபோன்று 2009 ‘நான்காவது ஈழ யுத்தம்’ முடிந்திருந்த நேரத்தில் 2009 சூன் இதழில் ஈழ மக்களின் போராட்டம் இடைக்கால தோல்வியை சந்தித்திருக்கலாம். ராஜபக்சேக்கள் ஆணவத்தில் கொக்கரிக்கலாம். ஆனால் இவர்களைப் போன்றவர்களின் இனவெறி கூச்சலை மறந்து தங்கள் குழந்தைகளின் அடிப்படை வாழ்க்கையைப் பற்றி சிந்திக்க துவங்கியவுடனேயே ராஜபக்சேக்களெல்லாம் வரலாற்றின் குப்பை தொட்டியிலேயே தூக்கியெறியப்படுவார்கள். இதற்கு அதிக காலம் தேவைப்படாது. 5 ஆண்டுகளே அதிகம் என்று எழுதியிருந்தோம்.

நமது இந்த இரண்டு கணிப்பீடுகளுமே கன கச்சிதமாக யதார்த்தமாகியுள்ளன. இது அரசியல் ஆரூடமல்ல. வரலாறு நமக்கு தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிற பாடம். இதனைச் சர்வாதிகாரிகளும் கொடுங்கோலர்களும்தான் புரிந்துகொள்ளவே மறுக்கிறார்கள்.

இதே தவறைத்தான் இந்திராகாந்தி செய்தார்.

1971ல் நடைபெற்ற இந்திய- பாகிஸ்தான் யுத்தத்தில் இந்தியா பெரும் வெற்றிபெற்றது. வங்காளதேசம் புதிதாக உருவெடுத்தது. இதன் முழுவெற்றியும் தனக்குத்தான் சொந்தம் என்று இந்திராகாந்தி மார்தட்டிக்கொண்டார். அன்று நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வாஜ்பாயியே இந்திராவைத் துர்க்கையின் மறு அவதாரம் என்று போற்றிப் புகழ்ந்தர். இந்திராகாந்தியும் அதை நம்பத் தொடங்கினார்.

1975ல் மிசா அறிவிக்கப்பட்டது. காட்டாட்சி கட்டவிழ்த்து விடப்பட்டது. அனைத்து எதிர்ப்பு குரல்களும் ஒடுக்கப்பட்டன. மக்கள் குமுறிக் கொண்டிருந்தனர் ஆனால் இந்திராவைச் சுற்றி இருந்தவர்கள் பாடிய ‘இந்திராவே இந்தியா, இந்தியாவே இந்திரா‘ என்ற இனிய தாலாட்டில் அம்மையார் தன்னை மறந்து கனவுலகில் உறங்கிக்கொண்டிருந்தார்.

பல்வேறு அக, புற காரணங்களால் 1977ல் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடத்தும் நிர்பந்தத்திற்கு உள்ளானார் இந்திரா. விளைவு, தனது சொந்த தொகுதியான ரேபரேலியிலேயே இந்திரா படுதோல்வி அடைந்தார். அவரது மகன் சஞ்சய்யும் மண்ணைக் கவ்வினார். ஏன் இந்த நிலைமை? மக்களின் அத்தியாவசிய தேவைகளையும், அடிப்படை ஜனநாயக உரிமை களையும் புறக்கணித்துவிட்டு அடையாளத்தால் மட்டுமே அதிக காலம் ஒப்பேற்ற முடியாது என்பதற்கு ஒரு நல்ல உதாரணம் இது.

ஆனால் இந்தப் படிப்பினையை தற்போது இந்தியாவை ஆட்சி செய்யும் பாசிஸ்டுகள் புரிந்துகொண்டிருக்கிறார்களா? இந்துத்துவா பாசிஸ்டுகளுக்கும், அன்றிருந்த இத்தாலிய பாசிஸ்டுகளுக்கும் இடையிலிருந்து ரகசிய உறவு குறித்து பல தகவல்கள் இப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. மறுபடியும் இவர்களுக்கு வரலாற்றை நினைவுபடுத்த வேண்டியுள்ளது.

இந்துத்தவா பாசிஸ்ட்டுகள் எந்த இத்தாலிய பாசிஸ்ட்டுடோடு கூடி குலாவிக் கொண்டிருந்தார்களோ அந்த பாசிஸ்ட்டு அமைப்பின் தலைவன் முசோலினி எண்ணற்ற இத்தாலிய மக்களை கொன்றொழித்தவன், மக்களுக்கு எவ்வித சனநாயக உரிமையும் தர மறுத்தவன். என்னை எவராலும் வெல்ல முடியாது என்று கொக்கரித்தவன் ஆனால். 1945ல் இரண்டாம் உலகப்போர் முடிவை நெருங்கிய சமயத்தில் இத்தாலிய விடுதலைக்காக போராடிக் கொண்டிருந்த விவசாய போராளிகளால் அவன் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டான். அவனுடைய உடலும் அவனது சகாக்களின் உடலும் மிலன் நகரின் மத்தியில் தலைகீழாக கட்டித் தொங்கவிடப்பட்டது.

இவர்கள் தூக்கிலிட்டதையும் தலைகீழாக பகிரங்கமாக தொங்கவிட்டதையும் பற்றி நாம் கேள்வி எழுப்பலாம்.

ஆனால் எந்த சர்வாதிகாரியும் நிரந்தரமானவன் இல்லை. எந்த சர்வாதிகாரமும் தொடர்ந்து நீடிக்காது. அவர்கள் வீழ்த்தப்பட்டே தீருவார்கள் என்பதற்கு ஒரு அதிர்ச்சிகரமான உதாரணம் அது என்பதை மட்டும் இந்துத்துவா பாசிஸ்டுகளுக்கு நாம் மறுபடியும் நினைவூட்ட வேண்டியுள்ளது.

இந்த நேரத்தில் டெல்லியில் மோடி அலையை ஆம் ஆத்மி கட்சி தற்காலிகமாகத் தடுத்து நிறுத்தியுள்ளது. இதே அரசியல் கட்டமைப்பிற்குள் ஆம் ஆத்மி கட்சி, அவர்கள் சொல்லுகின்ற மாற்றங்களைக் கொண்டுவர முடியுமா என்பதை வருங்காலமே தீர்க்கும். எனினும் தில்லியில் கெஜ்ரிவாலின் வெற்றி ஒரு நல்ல அறிகுறி.

Pin It

வீழ்ந்த தமிழகம் இனி எழுமா? ஆட்சியில் இருப்பவர்களும் இறங்கியவர்களும் கோர்ட், கேசு என மாறி மாறி படியேறிக் கொண்டிருக்கிறார்கள். அம்மா தரிசனத்திற்காக உருள தண்டம் போடும் அமைச்சர் புலிகேசிகளோ, பொங்கல் தின சாராயக் கடை வருவாயை 350 கோடிக்கு உயர்த்தி, கஜானாவைப் பெருக்கி, தமிழகத்தின் ’வளர்ச்சியை’ விரைவுபடுத்தியிருக்கிறார்கள். தாய்மார்களின், குழந்தை குட்டிகளின் வயிறெரிய குடிமகன்களுக்கு ஊற்றிக் கொடுத்துவிட்டு வேட்டி அவிழ்ந்தவர்களிடம் உருவிய பணத்தில் ஆடு, கோழியும், இலவச கிரைண்டர் மிக்சியும் கொடுத்து தாயுள்ளம் கொண்ட ‘அம்மா’ தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்கிறார். ‘இலவச திட்டம்’ என கருணாநிதி சொன்ன ஏமாற்று வித்தையை ’விலையில்லா பொருட்கள்’ என பெயர் மாற்றம் செய்து, மூணு சீட்டு ஆட்டத்தில் 37 எம்.பி. சீட்டையும் வென்றுவிட்டார் ஊழல் ராணி ஜெ.ஜெ. தாங்குமா தமிழகம்?

டாஸ்மாக்கை இழுத்து மூடுவோம்

தன்மான அரசியலை மீட்டெடுப்போம்!

ஊழல்

நாட்டின் பொதுச்சொத்தைக் கொள்ளையிடு வோரின் புகலிடமா தமிழகம்? நாட்டையே பட்டா போட்டு விற்கும் கிரிமினல்கள்தான் இங்கு நடமாடும் பலத் தலைவர்கள்! ஒருத்தன் அமுக்கியதை இன்னொருத்தன் ‘ஊழல், கருப்புப் பணம்’ என கதையளந்து விடுகிறான். கருப்புப் பணத்தை மீட்டு ஆளுக்கு மூன்று இலட்சம் வாய் சவடால் விட்டப் பிரதமரோ இப்போது, ”கருப்பு பணப் பட்டியலில் உள்ள வங்கி கணக்கில் பணமே இல்லை” என்கிறான்.

வார்டு கவுன்சிலர் தொடங்கி, கேபினட் அமைச்சர் வரை, ஊழலின் பங்கு தொகையை நிறுவனமயமாக்கியிருக்கிறார்கள். நீர், நிலம், மணல், நிலக்கரி, கிரானைட், தாதுவளம், அலைக்கற்றை என அனைத்து ஆதாரங்களையும் கட்டுப்படுத்தி, பன்னாட்டு நிறுவனங்களோடு பங்கு போடும் சட்டவிரோத, சமூக விரோத கிரிமினல் கூட்டாளிகளாக, அரசியல் கட்சி தலைவர்கள், பொதுத்துறை அரசு அதிகாரிகள், கான்ட்ராக்டர்கள், கிராமப்புற சாதி ஆதிக்கக் சக்திகள் ஆகியோர் இணைந்துள்ளனர்.

இது, மக்களின், கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம் ஆகியவற்றை மோசமான நிலையில் வைத்திருப்பதற்குக் காரணமாக இருப்பதோடு, விரல்விட்டு எண்ணக்கூடிய கொள்ளைக்காரர்களைப் பெரும் முதலாளிகளாக, நாட்டை கட்டுப்படுத்தக்கூடிய சக்திகளாக மாற்றியுள்ளது. இவர்கள், சில்லறைக் காசுகளாக ஓட்டுக்குப் பிச்சை போடுவது போன்று போட்டு, மக்களைக் கேள்வி கேட்கக் கூடாதவர்களாக, நாணயமற்றவர்களாக உணரச் செய்துவிட்டார்கள். ஊழல் பெருச்சாளிகளையே, மக்கள் நாயகர்களாக ஏற்றுக்கொள்ளும் நிலையை உருவாக்கியுள்ளனர். இந்த கயமைத்தனத்தைச் செய்வதில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றி சாதனை படைத்திருக்கிறார்கள்.

அரசியல் கொள்ளையடிக்கும் தொழிலில்லை

கொள்கைவழிபட்ட மக்கள் தொண்டு! ஊழல் பெருச்சாளிகளை அரசியலைவிட்டு விரட்டியடிப்போம்!

கொள்ளைபோகும் இயற்கை வளமும் சூறையாடப்படும் பொருளாதாரமும்

‘வளர்ச்சி, வளர்ச்சி’ என்று வாய் நிறையப் பேசிவிட்டு வயிற்றில் மண் அள்ளிப் போடும் மோடி, லேடி, கேடி கூட்டங்கள். விவசாயத்தையும் விவசாயிகளையும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பிவிட்டார்கள். ‘இந்தியாவில் தயாரியுங்கள்’ என்று அன்னிய முதலீட்டைக் கூவி கூவி அழைத்து, அன்னை பூமியை அறுத்துப் போட்டுவிட்டார்கள். இதில்தான் ஒவ்வொருவருக்கும் போட்டி நடக்கிறது. உள்நாட்டுக் கொள்ளையர்கள் தாது மணலையும், கிரானைட் மலைகளையும் தின்று ஏப்பம்விட்டார்கள். வெளிநாட்டுக்காரனுக்கு காவிரிப் படுகையில் இருக்கும் மீத்தேன் வாயு வேண்டுமாம். அதற்குபின் நிலக்கரியை எடுப்பானாம். இதற்கு ஒப்பந்தம் போட்ட ஓநாய்தான் இப்போது மீத்தேனை எதிர்ப்பதாக ஊளையிடுகிறது. போதாக்குறைக்கு மேற்கே கெயில் குழாய் பதிப்பார்களாம். தேனியில் நியூட்ரினோ திட்டமாம்.

இன்றிலிருந்து 50 ஆவது ஆண்டில் தமிழகம் பூமிப் பந்தில் இருக்குமா? என்ற அச்சமே எழுகிறது. வளர்ச்சி என்றப் பெயரில் வீட்டுக் கதவைத் திறந்து வைக்க கொள்ளைக் கூட்டம் படையெடுத்து வந்தது. படையெடுத்து வந்தவர்களுக்கு இலவசமோ, இலவசமோ! தண்ணீர், மின்சாரம், நிலம், வரி சலுகை இன்னும் எத்தனையோ ஆயிரங்கால சேமிப்பாம் ஆற்று மணலை அள்ளித் தீர்த்தாயிற்று! கடலோரங்களையும் விட்டுவைக்கவில்லை. அணு மின் நிலையம், அனல் மின் நிலையம் என்று நாடெங்கும் நட்டு வைத்து நாசம் செய்துவிட்டு, உள்நாட்டுத் தொழிலுக்கும் மின்வெட்டைப் பரிசளித்து சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நாள் முழுக்க மின்சாரத்தில் மூழ்கடித்தார்கள். பெருநகரங்களைச் சுற்றியிருக்கும் கிராமப்புற மாவட்டங்கள் பலியிடப்பட்டன.

”இளைஞர்களுக்கு வேலை வேண்டாமா?” என்று இவற்றைத் தட்டிக் கேட்ட எல்லோருடைய வாயையும் அடைத்தார்கள். கொள்ளைக் கூட்டம் கட்டி வைத்த கற்பனைக் கோட்டை சரிந்துகொண்டிருக்கிறது. நோக்கியா ஆலை மூடல், பாஸ்கான் ஆலை மூடல், க்ரீவ்ஸ் காட்டன் ஆலை மூடல், ஐ.டி. நிறுவனங்கள் ஆட்குறைப்பு என்று ஆலை மூடலும் ஆட்குறைப்பும் அன்றாடச் செய்தியாகிவிட்டது. ஒருவன் பாதை போட்டான், இன்னொருவன் வரவேற்றான், மற்றொருவன் மாலை போட்டான். எல்லோரும் சேர்ந்து ’இது தான் வளர்ச்சி, நாங்கள் தான் கொண்டு வந்தோம்’ என்று உரிமை கொண்டாடினார்கள். இன்றோ, வேலை இழந்து வீதியில் நிற்கும் இளைஞர்களுக்கு பதில் சொல்ல அவர்களில் எவரும் முன்வரவில்லை.

பெரு முதலாளிகளுக்குத் தீனிபோடும்

உலகமய வளர்ச்சிக் கொள்கையை முறியடிப்போம்

ஏழை எளிய நடுத்தர மக்களை வாழவைக்கும் தற்சார்புள்ள இயற்கை சார்ந்த நீடித்த வளர்ச்சியை உருவாக்குவோம்

சாதி மதவெறி காவிப் பாசிசம்

சாதி வெறி அரசியலைக் கையிலெடுத்துக் கோட்டைக்குப் போகத் துடிக்கும் பலர். காவி பயங்கரத்தையே அரசியலாய்க் கொண்ட பா.ஜ.க., மத்தியில் ஆட்சியே அமைத்துவிட்டது. சாதி வெறியை ஊட்டி, ஒரு சாதி மக்களை அணிதிரட்டிக் கொண்டு, ஒரு சீட்டுக்கும், இரண்டு சீட்டுக்கும் அவர்களை அடகு வைக்கும் சாதிக் கட்சிகள். கைப் பணத்தைக் களவாடிப் போகிறவர்களைத் தட்டிக் கேட்காமல் சாதி மோதலிலும் சாதிப் பெருமையிலும் மக்கள் மூழ்கடிக்கப்படுவதையே அவர்கள் விரும்புகிறார்கள்.

சாதி வெறிக் கூட்டத்தோடு கைகோர்த்தப்படி மத வெறிக் கட்சியும் தமிழகத்தில் ஊடுருவிக் கொண்டிருக்கிறது. கோட்சேவுக்கு சிலை வைப்பார்களாம், சிறுபான்மை மதத்தினரைக் கட்டாயப்படுத்தி இந்து மதத்திற்கு கொண்டு வருவார்களாம், வரலாற்றைத் திரித்துப் பேசுவார்களாம், பகவத் கீதையைத் தேசிய நூலாக்குவார்களாம்! பாசிசத்தை நோக்கிய படிக்கட்டுகளில் நடைபோடத் தொடங்கிவிட்டது மதவெறி அரசியல்.

இந்து, இந்தி, இந்தியா என்ற முழக்கத்தோடு இந்நாட்டை இந்துராஷ்டிரமாக ஆக்கிவிட வேண்டும் என்று பாசிசக் கட்சி வேலை செய்து வருகிறது. இந்தப் போக்கு நீடித்தால் தமிழகம் என்ன ஆகுமோ? அமைதி பூங்கா, சுயமரியாதை மண் என்பதெல்லாம் பழைய கதை ஆகிடுமோ?

சாதி மதவெறி காவிப் பாசிச அரசியலுக்கு முடிவு கட்டுவோம்! சனநாயக அரசியல் கட்டமைப்பை வளர்த்தெடுப்போம்.

மாநில உரிமை பறிப்பும் மத்தியில் அதிகாரக் குவிப்பும்!

ஒற்றை ஆட்சி, ஒரு கட்சி, ஒரு தேசியம்..அது கலாச்சார தேசியமாம். உழைக்கும் மக்களின் வயிற்றில் அடிக்கும் உலகமய வளர்ச்சிக் கொள்ளையை ஆழமாகவும் அகலமாகவும் விரிவாக்க, அதிகாரம் குவிக்கப்பட்ட மத்திய அரசு வேண்டுமாம் மாநில அளவிலான கட்சிகளை மயானத்திற்கு அனுப்பிவிட்டு நாடெங்கும் பா.ஜ.க. வின் வளையத்திற்குள் வர வேண்டுமாம். பா.ஜ.க. வுக்கு பல்லக்கு தூக்க உள்ளூர் சாதிக் கட்சிகளை அரவணைத்துக் கொண்டு ”ஒரு கட்சி” ஆட்சியைக் கொண்டு வர வேண்டுமாம். வட்டார, பழங்குடி, தேசிய இன அடையாளங்களை அழித்து, இந்து தேசியத்தை ஒற்றைத் தேசியமாகவும் இராமனை ஒற்றைக் கடவுளாகவும் சமஸ்கிருதத்தை இணைப்பு மொழியாகவும் ஆக்கிவிட்டு இராமனின் வழிவந்தவர்கள் ஆள்வார்களாம். பாசிச ஆட்சிக்கு மக்களை இழுத்துவர சிறுபான்மை மதத்தவரை எதிரியென்றும் அன்னியரென்றும் சொல்லி வெறுப்பின் மீதொரு மைய அரசு கட்டியெழுப்பப் படுகின்றது.

மாநில அரசும் சட்ட சபையும் கார்பரேசன் தொகுதிகளாக காட்சியளிக்க ஒற்றையாட்சிப் பிரதேசமாக இந்திய ஒன்றியம் ஆகப் போகிறது. பிறகென்ன தமிழக அரசு ஒரு ரப்பர் ஸ்டாம்ப் அரசாகிவிடும். மாநில உரிமைகள் புதைக்கப்பட்ட இடத்தில் பாசிசம் கொடி கட்டிப் பறக்க நாலு அரை ட்ரவுசர்கள் ஆட்சி ஆள, நாற்பது பன்னாட்டு கம்பெனிகள் நாட்டைப் பட்டா போட்டிருப்பார்கள். இந்த இழி நிலையில் தவித்தப்படி இலவசங்களுக்கு ஏங்கிக் கொண்டு ஓட்டுக்காக பணம் கொடுப்பாரைக் கும்பிட்டு வணங்கி, போதையில் மயங்கி கிடக்கலாமா பொங்கு தமிழ்நாடு?

 நாட்டை நாசமாக்கும் ஐந்து பெரும் தீமைகளை அடையாளங் காண்போம்! அவற்றுக்கு எதிராய் அரசியல் போர் தொடுக்க ஆயத்தம் ஆவோம்!

தலைமுறை மாற்றத்திற்குத் தயாராவோம்...

அரசியல் அதிகார மாற்றத்தை செய்து காட்டுவோம்!

Pin It

இளைய சமுதாயத்திற்கு கல்வி அளிப்பதன் மூலம் தற்போது இருக்கின்ற மனிதவள ஆற்றலை பயன்படுத்திக் கொள்வது தமிழ்நாட்டின் இன்றைய முதன்மையான சவால்களில் ஒன்று. 2011ம் ஆண்டின் மக்கள் தொகை புள்ளி விவரப்படி, தமிழ்நாட்டில் 18 முதல் 23 வயதுள்ளோர் 77.7 லட்சம் பேர் உள்ளனர் என்ற சாதகமான நிலையும், இந்த வயதுப் பிரிவினால் அகில இந்திய அளவில், தமிழகத்தில் 5.5 சதவிகிதம் பேர் உள்ளனர் என்ற நிலையும் உள்ளது. எனினும், மாநிலத்தின் பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகளின் பங்கு வெறும் 8 சதவிகிதமே உள்ளது.

மொத்த பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கையில், 59 பல்கலைக் கழகங்களுடன் அகில இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது. தொழில்நுட்பப் பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கையிலும், 14 பல்கலைக் கழகங்களுடன் தமிழ்நாடு முதலிடம் வகிக்கின்றது. 2001-2011 என்ற பத்தாண்டு கால இடைவெளியில், மாநிலத்தின் மொத்த பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கை இருமடங்காகியுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 9 மடங்கு அதிகரித்துள்ளது.

2001--2011 பத்தாண்டுகளில், தொழில்நுட்பக் கல்வியைப் பொறுத்தமட்டில், கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை மற்றும் மாணவர் சேர்க்கை எண்ணிக்கைகளை நாம் நோக்கும் போது, அதில் மாபெரும் விரிவாக்கத்தை காணமுடிகின்றது. 2011ல் மாநிலத்தின் மொத்த பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 525 ஆக உயர்ந்தது, அவற்றில் கிட்டத்தட்ட 95 சதவிகிதம் சுயநிதி பொறியியற் கல்லூரிகள் ஆகும். 2011ம் ஆண்டு இந்த சுயநிதி பொறியியற் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 1.5 லட்சத்தைத் தாண்டியது. இதற்கு சற்றும் குறையாத அளவுக்கு பாலிடெக்னிக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித் துள்ளது, அதிலும் சுயநிதிப் பாலிடெக்னிக்குகளின் ஆதிக்கத்தின் காரணமாக இந்த எண்ணிக்கை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

ஓர் உலகளாவியப் போக்கை பிரதிபலிக்கும் விதமாக, தனியார் பொறி யியல் கல்வியின் வளர்ச்சி ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவுடன் மகாராஷ்டிரா போன்ற தென்னிந்திய மாநிலங்களில் அபரிமிதமாக ஆக்கப்பட்டுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகள், இனி நாட்டில் தொழில்நுட்பக் கல்வியை விரிவுபடுத்த முடியாது என கண்டுணர்ந்த ஆறாவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில், சில மாநில அரசுகள், குறிப்பாக கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரா போன்ற மாநில அரசுகள், பதிவு செய்யப்பட்ட தனியார் சொசைட்டிகள் சுயநிதி அடிப்படையில், தொழில்நுட்பக்கல்வி நிறுவனங்களைத் தொடங்க அனுமதி வழங்குவது என முடிவு செய்தன.

அப்படி தொடங்கப்பட்ட இந்த எல்லா கல்வி நிறுவனங்களும், அந்தந்த மாநில அரசின் அனுமதியுடனும், அவை சார்ந்த பகுதிகளில் உள்ள பல்கலைக்கழக இணைப்புடனும், மாநில தொழில்நுட்பக்கல்வி இயக்குனரகங்கள் மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் அனுமதியுடனும் தொடங்கப்பட்டன. இதனால், மொத்த பொறியியல் கல்லூரிகளில், 95 சதவிகிதத்தை தனியார் பொறியியல் கல்லூரிகள் ஆக்கிரமித்த காரணத்தால், தமிழ்நாட்டில் பொறியியல் கல்வியில் தனியாரின் ஆதிக்கம் நிலை நாட்டப்பட்டது.

தொழிற்கல்வி துறையில் தனியாரின் இயல்பு மீறிய பருவவளர்ச்சி, இரு மாதிரியான வெளிப் பாடுகளை ஏற்படுத்தியுள்ளது. முதலாவது, குறுகிய கால அடிப்படையில், அவர்களால் மனிதவள இருப்பை அதிகரிக்க முடிந்தபோதும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப்பின் கல்விக்கான கட்டணங்களை மிக அதிக அளவு உயர்த்தியதன் விளைவாக, அவர்கள் மக்கள் திரளின் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் தொழிற்கல்வியை எட்டாக்கனி ஆக்கினர். இரண்டாவதாக, இந்த திரளான கல்வி நிறுவனங்கள், தாங்கள் வழங்கும் தொழிற்கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கான எந்தவிதமான, பகுதி பகுதியான திட்டமிடல்களை மேற்கொள்ளவேயில்லை.

இதனால், அக்கல்வி நிறுவனங்கள் ஏறக்குறைய வேலைக்கு தகுதியற்ற பட்டதாரிகளையே உருவாக்கும் நிலை ஏற்பட்டது. இது இன்று தமிழ்நாட்டில் மாபெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது, அதாவது, மிகப் பெருந்தொகையை கல்விக்கடன்கள் மூலம் செலுத்தி, அதன்மூலம் படித்து முடித்த மாணவர்கள், அக்கடன்களை திருப்பிச் செலுத்துவதற்காகக் கூட தேவைப்படும் வேலை வாய்ப்புகளை அடையமுடியாத நிலையில் உள்ளனர். ஆக, இந்த விரிவாக்கத்தின் தன்மையைக் காணும்பொழுது, அது நமக்கு உணர்த்துவது - சமுதாயத்தில் தேவை உடைய வகுப்பினரால், தனியார்மயக் கொள்கையின் மீது மிகக்குறைந்த அளவுக்கே தாக்கம் ஏற்படுத்த முடிந்திருக்கின்றது என்பதுதான்.

இன்று மிக வேகமாக அதிகரிக்கத்துள்ள சுயநிதி பொறியியல் கல்லூரிகள், உழைக்கும் வர்க்கத்தினரின் தேவையிலிருந்து ஏற்படுத்தப்படவில்லை, மாறாக இலாபவெறி கொண்ட வர்க்கத்தினரின் தொழில் முனைப்பு நடவடிக்கைகள்தான் அதற்குக் காரணம். இந்த கல்வி நிறுவனங்களில் பெரும்பான்மையானவை, அவ்வப்போது ஆட்சியிலிருக்கும் அரசியல்வாதிகளின் ஆசி பெற்றவையாகவோ (அ) அவர்களால் நேரடியாக நடத்தப்படுபவையாகவோ உள்ளன.

உண்மையில், இந்த தனியார்மயமாக்கப் போக்கு, அரசுத்துறை கல்வி நிறுவனங்களின் மீதுள்ள சுமையைத் தனியார் கல்வி நிறுவனங்கள் குறைக்க உதவிய அதே வேளையில், தனியார் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியானது, வளர்ந்து வரும் தேவையைச் சமாளிக்கக்கூடிய அறிவு ரீதியிலான எதிர்வினையாக அமையவில்லை, மாறாக அது இலாபவெறி கொண்ட உழைக்காமல் சம்பாதிக்கும் பிரிவினருக்கு மூலதனத்தைப் பெருக்கும் ஒரு வாய்ப்பாகவே அமைந்து போனது. இந்த அதிவேக வளர்ச்சியின் சில சிறப்பு கூறுகளை இது விளக்குகின்றது.

ஒரு தனியார் கல்வி நிறுவனம், நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து கொண்டது என அறிவிக்கப்படவில்லை எனில், உண்மையில் இன்றைய சூழலில் அக்கல்லூரி தரும் பட்டமானது, இப்போது இயங்கி வரும் ஏதேனும் ஒரு மாநில பல்கலைக்கழகத்தால்தான் தரப்படுகின்றது. இதன் பயனாக, தனியார் கல்வி நிறுவனங்களில் போதிக்கப்படும் கல்வியில், அப்பல்கலைக்கழக பாடத்திட்டத்தை, போதனை முறையை, தேர்வு முறையைத் தாண்டி, புதிய போதனைமுறைகளைப் புகுத்தவோ, வேறு வகையான தரம் உயர்த்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ தகுந்த சூழல் ஏற்பட வாய்ப்பே இல்லை. அரிதாகவே, இந்த கல்வி நிறுவனங்கள் மெத்த திறன் வாய்ந்த தொழில்முனைவோரை உருவாக்கும் சிந்தனையுடன் இயங்குகின்றன.

வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கம் மற்றும் பரந்துபட்ட உழைக்கும் மக்களின் கல்விக்கான கோரிக்கையே இவற்றுக்குக் காரணம் என்ற எதிர்பார்ப்புகள் உண்மையில்லை.

ஒட்டுமொத்தமாக கல்வித்துறையின் கட்டுப் பாட்டு விதிகள் தளர்த்தப்பட்டதற்கு அழுத்தம் கொடுத்த பிரிவினராக இவர்கள் இல்லை. கட்டுப்பாட்டு விதிகளைத் தளர்த்தியதன் விளைவாக, இன்று உயர்கல்வித் துறையானது, முழுவதும் வணிகமயமாகிவிட்டது. இங்கு ஒருபுறம் தனியார் கல்வித்துறை கட்டுப்பாட்டு ஒழுங்கற்று இயங்குகின்றது, மறுபுறம், அரசு உயர்கல்வித்துறை தனது வருமானப் பற்றாக்குறையின் காரணமாக திணறி வருகின்றது. இத்துடன் தனியார் கல்வி நிறுவனங்கள் அளித்து வரும் கடும் சவால்களின் காரணமாக, பொதுக்கல்வித்துறையால் பெரும் நிதியைத் திரட்ட முடிவதில்லை.

உழைத்து வாழும் வகுப்பினரால் தங்களுடைய நலன்களின் நோக்கில், கல்வியை இது போன்ற முட்டுச்சந்தில் மாட்டிக் கொண்ட நிலையிலிருந்து உடைத்து வெளியே கொண்டுவர இன்னும் உயிர்ப்புடன் செயல்பட ஏன் முடியவில்லை என்பது, (கூட்டு நடவடிக்கை மேற்கொள்வதில் ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்த்து) புரியாத புதிராகவே உள்ளது.

இன்றைய சூழலில், தமிழ் நாட்டு அரசின் கல்விக் கொள்கையை ஒரு பதற்றம் பற்றிக் கொண்டுள்ளது. ஒரு பக்கம், கல்வியானது சமூகப் பெயர்ச்சி மற்றும் அனைவருக்குமான சமவாய்ப்பு ஆகியவற்றை உருவாக்குவதை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. ஆனால், மாநிலக் கல்வி அமைப்பு, இந்த நோக்கங்களைச் சிறப்பாக நிறைவேற்றத் தேவையான சூழலை உருவாக்க வேண்டி, நிதி மற்றும் மற்ற ஏனைய மூலவள ஆதாரங்களை மிகப்பெரிய அளவுக்கு பொறுப்புடன் திரட்டுவது தேவையாய் இருக்கின்றது.

இந்த பொறுப்பை சிறப்பாக நிறைவேற்ற அரசால் முடியாததால், ‘அனைவருக்குமான சமவாய்ப்பு’ என்பதை ஏதோ ஒரு சம்பிரதாயமான வாய்ப்பாடாகப் பார்க்கின்றது. இதனால்தான் இந்த நோக்கம் சம்பந்தமாக முன்னிலும் சிறப்பான (அ) மாற்று முன்வைப்புக்கள் வரும்போது, அவை இந்த நோக்கங்களுக்கு எதிரானதாகப் பார்க்கப்படுகின்றன. இதன் வழியே, மாநில அரசானது, “இங்கு கட்டணங்களில் எந்த கட்டுப்பாடும் கிடையாது” என்றோ, இன்னும் சொல்லப்போனால், “தொழிற்நுட்ப கல்வி நிலையங்களின் பாடத்திட்டங்களில் அளப்பரிய வேறுபாடுகள் இருக்க வேண்டும்” என்றோ வலியுறுத்துவதன் மூலம், தனது இந்த பொறுப்புகளை, தனது கல்வி பொறியமைப்பு மூலம் செய்து விட்டதாகச் சொல்கின்றது. உண்மையில், இன்று பொறியியற் கல்லூரிகளை பிடித்து ஆட்டுகின்ற கல்வித்தரத்தின் நெருக்கடியானது, ஒரு பகுதியளவில், ‘கல்வியானது சுதந்திரமாக்கப்பட வேண்டும், கல்வியானது எல்லோருக்கும் வழங்கப்படவேண்டும்’ என்ற மாயை மீது ஏற்படுத்தப்பட்டுள்ள கருத்தியல் ரீதியிலான பொறுப்புணர்வினால் நீட்டிக்கச் செய்யப்படுகின்றது. மற்ற எவற்றைக் காட்டிலும், உயர்கல்வி என்பது, கல்வியில் சிறப்பான, தரம் உயர்த்தப்பட்ட நிலையை அடைவது தொடர்பானது என்பதால், இது போன்ற அணுகுமுறையானது, கொள்கை ரீதியிலேயே தவறானது ஆகும்.

இந்தியாவின் உயர்கல்வித் துறையைத் தொல்லைப் படுத்தக்கூடிய, மிகவும் மோசமான தளர்வு யாதெனில் அதன் ஆட்சி முறையிலுள்ள நெருக்கடி ஆகும். அதன் மிகவும் வெளிப்படையான, தெளிவாகத் தெரியக்கூடிய நெருக்கடி, ஆசிரியர்களின் நெருக்கடி ஆகும். பொதுத்துறை பொதுச் சொத்தின் மீது பரந்த அளவுக்கு பொறுப்புணர்வு கொண்ட ஓர் ஆசிரிய தலைமுறை மிக விரைவில் பணி ஓய்வு பெறும் நிலையில் உள்ளது (அ) ஏற்கனவே பணிஓய்வு பெற்றுவிட்டது. இதனால், ஆழம் தெரியாத ஆட்சி அதிகாரத்திலும், கல்வி நிறுவனங்களிலும் போதுமான அளவுக்கு முன்னர் இருந்த, குறை நிரப்பும் (அ) தவறுகளை மீள நிரப்பும் பண்பும், சாதாரண திறமைகளைக்கூட ஆழத் தோண்டி வலிமையாக்கும் பண்பும் இனி இருப்பதற்கும் மிகக் குறைந்த அளவுக்கே சாத்தியக்கூறுகள் உள்ளன.

ஆக, இதன் பயனாக, நல்லவைகளைத் தீயவைகள் வெளியேற்றுகின்றன. இன்றைக்கு உயர் குழாம் கல்வி நிறுவனங்களில் இருக்கக்கூடிய சூழல், மேலும் மேலும் ஜனநாயக விரோதமாகவும், மாணவர் சேர்க்கை, கல்வி நிறுவனக் கொள்கைகள், கல்வி நிறுவன நிர்வாகம், படிப்புகளின் ஃ பட்ட (அ) பட்டயங்கள் பெறுவதற்கான அமைப்பியல் கட்டமைப்பு மற்றும் நிதி மேலாண்மை ஆகியவற்றில் அதிகரித்திருக்கக் கூடிய அரசியல் ஆதிக்கமும், கட்டுப்பாடும் மிக அதிகமானதாகவும் மாறியிருக்கின்றது.

ஆக கல்வியின் தரம் குறைந்து கொண்டே செல்லும் போதும், பெரும்பான்மையான ஏழை மாணவர்களை புறந்தள்ளி விட்டு அதிகமான வருமானம் தரக்கூடிய வாழ்க்கை தொழில் பாடப்பிரிவுகளில் தனியார் முதலீடுகள் அதிகரிக்கும்போதும், மாணவர்கள் அதிக கட்டணம் கட்டி படிக்கவேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். இது மீண்டும் மீண்டும் அரசாட்சிமுறையின் கடுமையான தளர்வுகளை அதிகப்படுத்துவதுடன், மாநிலத்தின் உயர்கல்வி சார்ந்த வெளிப்படாத, உள்ளார்ந்த பெரும் தேவையை நிறைவேற்றுகின்ற திராணி, இந்த அரசுக்கு உள்ளதா? என்ற சந்தேகங்களையும் அதிகரித்திருக்கின்றது. 

தமிழில் : சுரேஷ்

Pin It