makkal viduthalai wrapper 587

guna book 400 copyதமிழீழ விடுதலைப் போராட்டகளத்தில் பங்கேற்ற ஒருவரின் வாழ்வியலை பதிவு செய்கிற நாவலாக அறிமுகமாகிறது நஞ்சுண்டகாடு. படிக்க ஆரம்பித்ததும் அடுத்த தளத்திற்கு நம்மை இட்டுச் செல்கிறது. போராட்டக் களத்திற்காக தயார்படுத்தப்படும் ஆரம்பகட்ட போராளிக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் அவர் எழுதிய ஒரு நாட்குறிப்பாகக் கூட எடுத்துக் கொள்ளலாம்; அந்த அளவிற்கு மிகவும் நுணுக்கமாக பல விசயங்களை விவரிக்கிறார் நாவலாசிரியர் குணா கவியழகன்.

ஒவ்வொரு போராளியின் மனநிலையும், அவர்களது வர்க்கப் பிண்ணனியும், குடும்பச் சூழலையும் அவர்கள் இயக்கத்திற்கு வந்த நிலைப் பாட்டையும் விவரிக்கும்போது இது நாட்குறிப்பு மட்டுமல்ல ஒவ்வொரு சக போராளிகளையும் உளவியலாக புரிந்துகொண்ட மற்றொரு போராளியாகத்தான் நாம் நாவலாசிரியரை பார்க்க முடிகிறது.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க போராட்டக் களத்திற்கு அழைத்து வரப்படும் இளைஞர்கள் சந்திக்கும் சிறு சிறு பிரச்சனைகளான கழிவறை சரியில்லை, தூங்க நேரம் கிடைக்கவில்லை, போர்களத்திற்கு தயாராகும் ஆரம்பகட்ட போராளிகள் சிறு தவறு செய்தால் கூட அனுபவம் வாய்ந்த பொறுப் பாளர்கள் கடுமையாக தண்டனை தருகிறார்கள் என பல சிக்கல்களை ஆங்காங்கே விரிவாக சுட்டிக் காட்டப்படுகிறது. இவ்வாறு எல்லாம் நடந்ததா என யோசிக்க வைத்தாலும் போராட்டக் களத்திற்கு வந்தால் பஞ்சு மெத்தையா கிடைக்கும்? கல்லிலும் முள்ளிலும் படுத்துத்தான் ஆக வேண்டும் என்று நாமே நமது யோசனையை நிறுத்திக் கொள்வோம்.

ஒவ்வொரு போராளியாக குறிப்பிட்டு வரும் பொழுது தன்னுடன் நெருங்கி பழகிய ஒரு போராளியான சுகுமாரைப் பற்றியும் அவரின் குடும்பத்தினரான அக்காவின் நிலையை விவரித்து இருப்பதும் மிகவும் பரிதாபப்பட வைக்கிறது நாவல். இறுதியில் சுகுமார் கரும்புலியாகி போர்களத்தில் இறந்து போகிறார்.

விடுதலைப் புலிகள் என்றால் பிரபாகரன் என்கிற தலைவனைப் பற்றி கடைசி நிலையில் இருக்கும் போராளிக்கும் ஒரு பார்வை இருக்கும். எங்கேயாவது அண்ணனைப் பார்த்தேன், அவர் இப்படி நடந்துகொண்டார் என்று எதாவது பதிவு செய்திருப்பார் என அடுத்த அடுத்த பக்கத்தைப் புரட்டும்போது எதுவும் பெரியதாக இல்லை என்பது சற்றே ஏமாற்றத்திற்குரியதாகும்.

மற்றபடி ஈழத்து வட்டார வழக்கு மொழிநடை தமிழகத்து வாசிப்பாளனுக்கு புது அனுபவத்தை தரும். விடிவிற்கு முந்திய மரணங்கள், இன்னொரு போர் முகம், புதியதோர் உலகம், போன்ற ஈழத்து படைப்புகளுக்கு மத்தியில் நஞ்சுண்டகாடு நாவல் ஒரு முக்கிய படைப்பாகும்.

பொழுது போக்கிற்காக வாசிக்கும் வாசகர்கள் தயவு செய்து போய்விடுங்கள் என்கிறார் நாவலாசிரியர். ஏனெனில் கதையில் பொழுதா போகும். கிடையவே கிடையாது வலித்து வலித்து வாழ்ந்த மாந்தர்களின் கதை என விளக்கம் அளிக்கிறார். ஆனால் பொழுதுபோக்கிற்காக வாசிக்கும் வாசிப்பாளனும் கூட அரசியல் புரிதலுக்கு மாறவும், ஈழ போராளிகளின் வாழ்க்கையை தெரிந்துகொள்ளவும் அனைத்துத் தரப்பினரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய நாவல் நஞ்சுண்ட காடு.

Pin It

பொலிவியாவில் லாபாஸில் அதிபர் தேர்தல் நடந்த ஞாயிற்றுக் கிழமையில் வெய்யில் கொளுத்தியது. எப்பொழுதும் தெருக்களை வலம் வரும் கார்களும் பேருந்துகளும் செல்வதற்கு அன்று தடை விதிக்கப்பட்டது. ஒருவரே பல இடங்களுக்கு சென்று வாக்களிப்பதைத் தடுப்பதற்கான ஏற்பாடு. இதனால் காற்று புகைமூட்டமின்றித் தெளிவாக இருந்தது. குழந்தைகள் தெருக்களின் திறந்த வெளிகளில் விளையாடினர். மிதிவண்டி ஓட்டுநர்கள் தெருக்களில் சுதந்திரமாக பயணித்தனர். தெருக்கள் குடும்பங்களின் சுற்றுலாத் தளமாகி, அவர்கள் பல்வேறு விளையாட்டுகளில் திளைத்தனர்.

CIDOB 600நடைபாதை வியாபாரிகள் மாட்டு இறைச்சியையும், கோழி இறைச்சியையும் விற்றனர். இந்தத் தேர்தல் நாள் லாபாஸிலுள்ள பெரும்பாலான மக்களுக்கு குடும்பத்துடன் கொண்டாடும் நாளுமாகும். இப்பொழுது நாம் அறிந்தபடி அன்று மக்கள் ஈவா மொராலேஸை 60 விழுக்காடு வாக்குகளுடன் மூன்றாவது முறையாக அதிபராகத் தேர்ந்தெடுக்கச் சென்றனர்.

அன்று நாள் முழுவதும் லாபாஸினைச் சுற்றி நடந்து நகரின் குடியிருப்புகளிலுள்ள மத்திய தர உழைக்கும் வர்க்க வாக்காளர்களை நேரில் சந்தித்து, அவர்கள் ஓட்டளித்த விதத்தையும், அதற்கான காரணங்களையும் கேட்டறிந்தேன். நான் சந்தித்து உரையாடிய பெரும்பாலான மக்கள் மொராலேஸின் நிர்வாகம் குறித்தும், அவரின் சோசலிசத்திற்கான இயக்கம் குறித்தும் ((MAS - MOVEMENT TOWARDS SOCIALISM) மிகுந்த உற்சாகத்துடன் பதில் அளித்தனர். உதாரணமாக மரியா விஸ்காரா என்ற மொழி ஆசிரியர் பின் வருமாறு கூறினார்.

“ஈவா ஒரு அற்புதமான மனிதரென்று நான் நம்புவதால் நான் அவருக்கு வாக்களித்தேன். எங்கள் நாட்டின் வரலாற்றை நான் பலமுறைப் படித்திருக்கிறேன். அதனடிப்படையில் பொருளாதாரம், கல்வி,’வளர்ச்சி உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் அவர்தான் மிகச் சிறந்த அதிபர் என்று என்னால் அறிய முடிகிறது. ஈவாவிற்கு முன்னாளிருந்த ஆட்சியாளர்கள் அனைவரும் செய்தது: நாட்டை கொள்ளையடித்து தங்கள் நலன் களை காப்பாற்றிக் கொண்டது மட்டுமே. ஈவாவின் அரசு அப்படிப்பட்டதல்ல. இந்த அரசு மக்களுக் கானது; பாகு பாடின்றி அனைவரது நலனை யும் உள்ளடக்கிய நாட்டை உருவாக்க அர்ப்பணிப்புடன் செயல்படும் அரசு. இங்கு காலனியத்தின் கொடையாகிய இன வேற்றுமை மிகவும் அழமாக வேரூன்றி இருந்தது. இப்பொழுது நிலமைகள் மாறி யுள்ளன.”

மொராலேசும் அவரது கட்சி உறுப் பினர்களும் தேர்தலில் வெற்றிப் பெற்றதில் வியப்பில்லை. ஈவாவின் நிர்வாகம் மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்து, சமூகத்தின் விளிம்பு நிலையிலுள்ள மக்களுக்கு அதிகாரம் அளித்தது; பள்ளிக் குழந்தைகள் தாய் மார்கள், மூத்த வயதினருக்கும் , புதிய கட்டமைப்பு வசதிகளுக்கும், பொதுப் பணித் திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கியது. இத்தகைய திட்டங்களுக்கான நிதி தேசிய மயமாக்கப் பட்ட தொழிற்சாலைகளிலிருந்தும், வணிகத்துறை களிடமிருந்துமே பெறப்பட்டது.

இனவெறியும் ஒடுக்குமுறையும் கொண்ட வதுசாரி அரசுகள் கடந்த காலத்தில் கடைபிடித்த புதிய தாராளமயக் கொள்கையிலிருந்து விடுபட்ட அரசாக இருப்பதால், அதற்கு மக்கள் தொடர்ந்து ஆதரவளிக்கின்றனர். பொலிவியாவில் பழங்குடியின மக்களின், பெரும்பான்மை ஏழை மக்களின் பிரதிநிதியான மொராலேஸை பெரும்பாலான வாக்காளர்கள் தங்களுக்கான அதிபராகவே பார்க்கின்றனர். (புதிய தாராளமய அதிபரான கொன்சாலோ சான்செஸ்தெ லொசாதா வெறும் 22.5 விழுக்காடு வாக்குகள் பெற்றே 2002 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் வென்றார் என்பதை ஒப்பிடும் போது 60 விழுக்காடு வாக்குகள் பெற்ற மொராலேஸ் மக்களின் பேராதரவைப் பெற்றவர் என்பது விளங்கும்.)

இருப்பினும் தேர்தலின் போது MAS கட்சிக் குறித்த தீவிர விமர்சனங்கள் வெளிச்சத்துக்கு வந்தன. உதாரணமாக தேர்தலின் இறுதி மாதங்களில் அரசியல் வேட்பாளர்களின் பாலின ரீதியான பேச்சுகளுக்கும், பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைக்கும் எதிராகத் தோன்றிய இயக்கங்கள் வழுவடைந்தன. நிலத்தடியில் உள்ள கனிம வளங்களையும், இயற்கை எரிவாயுவையும் தோண்டி எடுப்பதை ஆதாரமாகக் கொண்ட பொருளாதாரத்தையே MAS கட்சி வலியுறுத்தி வருவதை இடதுசாரிகள் தொடர்ந்து விமர்சிக்கின்றனர். அத்தகைய தொழிற்சாலைகள் அரசுக்கு போதிய நிதியை அளித்தாலும், அவை நிலத்தையும், நீரையும் மாசுபடுத்தியுள்ளன; பழங்குடியின சமூகத்தையும், கிராம மக்களையும் அவர்கள் வாழ்விடங்களிருந்து வெளியேற்றியுள்ளன.

கூடுதலாக மொராலேஸ் அரசு கனிமச் சுரங்கங்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்களை குற்றவியல் நடவடிக்கையென சட்டம் இயற்றியுள்ளது. இச்சட்டம் உள்ளுர் விவசாய சமூகங்களின் தேவையைப் புறக்கணித்து, நீருக்கான அதிக உரிமைகளை சுரங்கத் தொழிற் சாலைகளுக்கே அளித்துள்ளது. விகிஷி கட்சி தன் அரசியல் மேலாண்மையை நிறுவுவதற்காக நாட்டிலுள்ள சமூக இயக்கங்களை பிளவுப் படுத்தியும், தனது கொள்கைக்கு ஏற்ப வளைத்தும், அவற்றின் சுதந்திரமான செயல்பாட்டில் தலையீடு செய்துள்ளது. MAS-ன் இத்தகைய செயல்பாடு குறித்து அடித்தட்டு சமூக செயல்பாட்டாளர்களிடம் விமர்சனம் எழுந்துள்ளது.

MAS-ன் எதிர்ப்பாளர்களிடமும் பலதரப்பட்ட கருத்துகள் நிலவுகின்றன. ஈவான் விய்யா புயர்த்தே என்கிற லாபாஸில் வசிக்கும் நடுத்தர வர்க்க வழக்குரைஞர்தான் ஈவாவின் அரசை எதிர்ப் பதற்கானக் காரணங்களை என்னிடம் கூறினார்:

‘‘ஈவாவின் அரசு பல நல்ல விஷயங்களை மட்டு மல்ல பல மோசமான செயல்களையும் செய்துள்ளது. உதாரணமாக லாபாஸில் வான்வழி மின்கம்பிவட மகிழுந்தை ( Aeriel Cable Car) அமைத்துள்ளதும், ஒரூரா நகரில் புதிய இருவழி நெடுஞ்சாலை அமைத்துள்ளதும் பாராட்டத் தகுந்தவை. ஆனால் தேசிய அளவிலும், பொதுவாகவும் அரசை எதிர்ப் போரை பழிவாங்கும் நடவடிக்கைகள் அதன் மோசமான செயல்பாட்டுக்கு உதாரணமாகும். அரசின் மற்றொரு மோசமான செயல்பாடு - நாட்டின் கிராமப்புற சமூக இயக்கங்களுக்கு ஆதரவளித்து, நகர்புறத்திலுள்ள நடுத்தர வரக்கத்தின் நலனில் போதிய கவனம் செலுத்தாதது. இந்த அரசு நடுத்தர வர்க்கத்திற்கு எந்த உதவியும் செய்யவில்லை.”

MAS- மக்களின் ஆதரவைப் பெறுவதற்கு ஈவா என்ற தனி நபரைச் சார்ந்திருப்பது - இதனை அதிபரே வளர்க்கவும், பரப்பவும் செய்தார் - இயக்கத்தை படுகுழியில் தள்ளிவிடும். இந்த அவலநிலை குறித்து மொராலேஸே சிந்திக்கத் தொடங்கியுள்ளார். ஞாயிறு நடந்த தேர்தலுக்குப் பின் பிபிசி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த நேர்காணலில் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஒரு தொழிற்சங்கத் தலைவர் அவரிடம் கூறிய விமர்சனத்தைக் கூறினார் :

“ஈவா நீங்கள் மிகவும் மோசமானவர் ” என்று என்னிடம் கூறினார். நான் அவரிடம். “என்னை ஏன் மோசமானவர் என்று கூறுகின்றீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர் தந்த விளக்கம் : “ஏனென்றால் நீங்கள் விகிஷி- இயக்கத்தை அழித்து விட்டீர்கள். இங்கு மாசிஸ்டாசுகள் (Masistas) ஒருவரும் இல்லை. ஈவிஸ்டாசுகள் Evistas) மட்டுமே உள்ளனர்.” மொரலேஸ் தொடர்ந்து பிபிசிக்கு கூறியது:” ‘இந்நிலை என்னை கவலைக் கொள்ள வைத்துள்ளது. அமைப்பை ஒருவர்தான் தலைமை ஏற்று வழி நடத்த முடியும் என்பது தெளிவு.

ஆனால் எப்பொழுதும் எது குறித்தும் தனி நபர் சார்ந்தே சிந்திப்பது லத்தீன் அமெரிக்க முறையாக உள்ளது என்று நான் கருதுகிறேன். ஆனால் இதனை விரும்பவில்லை” இந்த தேர்தலில் பிரச்சாரம் செய்த அனைத்து இடங்களிலும்தான் மீண்டும் ஒருறை அதிபராக போட்டியிட போவதில்லை என்று கூறிவந்துள்ளார். ஞாயிற்றுக் கிழமையன்று நான் சந்தித்துப் பேசியவர்களில் பலருக்கும் ஈவாதான் அவர்களின் ஆதரவுக்கான மய்யமாக இருக்கிறார். லாபாஸின் உழைக்கும் மக்கள் வசிக்கும் பகுதியில் நான் சந்தித்த யுலாந்தா வாச்சாரி என்ற நடைபாதை வியாபாரி பின் வருமாறு விளக்கினார்.

“ஈவா அதிக வருடங்களுக்கு பதவியிலிருப்பார் என்று நான் நம்புகிறேன். ஏனெனில் அவர் மக்களுக்கு அளப்பரிய உதவிகளைச் செய்துள்ளார். ஈவாவின் அரசாளும் முறையை ஆதரிக்கிறேன். அவர் இந்த நாட்டிற்காக ஏராளமான நன்மைகளைச் செய்துள்ளார். ஈவா சாதித்ததைப் போல எந்த ஒரு அதிபரும் இதுவரை சாதித்ததில்லை. அவர் எங்களின் அதிபராக இருக்கிறார். என்பது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஏனெனில் இப்பொழுது அதிகமான நெடுஞ்சாலைகள் உள்ளன. நாங்கள் லாபாஸில் வான் வழி கம்பி வட மகிழுந்தையும், பழங்குடியினருக்கான பல்கலைக் கழகங்களையும், பெற்றுள்ளோம். பெரும்பான்மையான ஏழை மக்கள் ஈவாவின் அரசுக்கு ஆதரவளிக்கின்றனர். பொலிவியாவின் ஏழை மக்களை தன் நெஞ்சில் நிறுத்திய ஒரே அதிபர் இவர்தான்.

மொராலேஸ் தனது வெற்றியை அறிவித்தவுடன் லாபாஸிலுள்ள பிளாசா முரில்லோ விழாக்கோலம் பூண்டுள்ளது. இரவு வெகுநேரம் வரையிலும் மக்கள் கிராமிய இசையில் மூழ்கியிருந்தனர். MAS -ன் நீலம், வெள்ளை, கருப்பு ஆகிய நிறங்கள் கொண்ட கொடி களுடன், பல்வேறு பழங்குடி மக்களின் பன்னிற நிறங்களைக் கொண்ட விபாலா கொடிகளும் இணைந்தே பறந்தன. பல்வேறு விவசாய அமைப்பைச் சேர்ந்தவர்களும், தொழிலாளர்களும் MAS -உடன் நெருக்கமாக இணைந்து செயல்படுகிற பழங்குடியின அமைப்பைச் சேர்ந்தவர்களும் ஈவாவின் வெற்றியைக் கொண்டாடக் குழுமியிருந்தனர்.

எல்லா அதிபர்களையும் போல, ஈவா மொரா லேஸும் எதிர்கொள்ள வேண்டிய முரண்பாடுகளும், சவால்களும் ஏராளம். மொராலேஸ் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள லாபாஸ் பகுதியில் புதிதாக அணு உலை கட்டுவதற்கானத் திட்டத்தை அறிவித்து பிரச்சனையைக் கிளப்பியுள்ளார். கருத்தடை இன்றளவும் பொலிவியாவில் சட்டவிரோதமானது. இந்த வருடம் சனவரியிலிருந்து செப்டம்பர் மாதம் வரையில் 157 பெண்கள் படுகொலைச் செய்யப்பட்டுள்ளனர். MASஅரசின் ஆதரவுடன் நாட்டின் கிழக்குப் பகுதிகளில் நிலத்தை நஞ்சாக்கும் சோயா பயிரிடுவது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மேலும் அரசின் திட்டங்களால் பயன் பெற வேண்டிய பழங்குடியின மக்களும், கிராம மக்களுமே சுரங்கத் தொழிற்சாலைகளால் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து நாடெங்கிலும் வெளியேற்றப்படுகிறார்கள்.

இருப்பினும் தேர்தல் நாளன்று கார்கள் இல்லாத சூரியன் சுட்டெரிக்கும் லாபாஸின் தெருக்களில் அரசின் மீது மக்கள் கொண்டுள்ள ஆர்வத்தை அனைவரும் உணர முடிந்தது. அரசின் மீதான விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும், நான் உரையாடிய அரசின் ஆதரவாளர்கள் பலரும் புதிய தாராளமயக் கொள்ளையிலிருந்தும், சுரண்டலி லிருந்தும் நாட்டினை மீட்டெடுக்க அதிக காலம் பிடிக்கும் என்ற கருத்தினை வெளிப்படுத்தினர். இசை ஆசிரியரான ஹொர்ஹே கிஸ்பே பாஸ்தியாஸ் விளக்கியபடி, ‘‘இந்த அரசைத் தொடர்ந்து ஆதரிக்க வேண்டும் என நினைக்கிறேன். ஏனெனில் இந்த மாற்றமும், இந்த நிகழ்முறையையும் சரியான முடிவுகளைத் தர அதிக காலம் தேவைப்படும் என் நம்புகிறேன்.”

பெஞ்சமின் டேங்கில் பத்தாண்டுகளுக்கு மேலாக லத்தீன் அமெரிக்க நாடுகளில் தங்கியிருந்து அந்நாடுகளின் அரசியல், பொருளாதார நிலமைகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். இவர் லத்தீன் அமெரிக்க நாடுகளில் நிகழும் சமகால சமூக அரசியல் போரட்டங்கள் குறித்து சிறந்த கட்டுரை களை வெளியிடும் (Upsidedown World) என்ற இணைய இதழின் ஆசிரியர். உலகமய, தாரள மயக் கொள்கைகளுக்கு எதிரான பொலிவிய மக்களின் போராட்டங்கள் குறித்து ‘Price of Fire’, ‘Dancing with Dynamite’’ முதலான நூல்களை எழுதியுள்ளார். இவரின் ‘Price of Fire என்ற நூல் ‘பொலிவியாவில் புரட்சி’ என்ற தலைப்பில் பேரா.நா. தர்மராஜன் அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு நியூ செஞ்சுரி புத்தக நிலையத்தின் வெளியீடாக 2009 ஆம் ஆண்டு வெளிவந்தது.

Pin It

ஒரு யானைக்கு வயிறு பெருத்துக் கொண்டே போனது, அதைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்குள் அவர்கள் புரிதலுக்கும் அறிவுக்கும் எட்டியவாறு கருத்தைக் காரசாரமாக பேசிக்கொண்டனர். எப்படியும் யானை குட்டிதான் போடும் என்றனர் சிலர். இல்லை இல்லை இந்த யானை முட்டை போட வாய்ப்பிருக்கின்றது என்றனர் மற்ற சிலர். இன்னும் சிலர் நன்கு புரிந்தும் புரியாமலும் வயது பெருத்து முக்கி முனகிக் கொண்டிருக்கும் யானையையும் வாதத்தில் ஈடுபட்டவர்களையும் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர். கடைசியில் யானைக் குட்டியும் போடவில்லை முட்டையையும் போடவில்லை. வெறும் சாணியைத்தான் வெளியே தள்ளியது. வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை காங்கிரஸ் இந்தியாவுக்கு கொண்டுவரும் என்றனர்.

காங்கிரஸ் கட்சிக்காரர்களும் சோனியா மன்மோகன், சிதம்பரம் வகையறாக்களும் ‘இல்லை இல்லை உங்களால் முடியாது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் எல்லா இந்தியக் கருப்பு பணத்தையும் வெளிக்கொண்டு வந்து இந்தியாவை “வளர்ச்சி” பெற வைத்து வல்லரசாக்குவோம் என்றனர் பா.ச.க தரப்பும், மோடி வகையறாக்களும் இவர்கள் இரண்டு தரப்பையும் சாராத மக்களும் ஊடகத்தினரும் அரசியல் நோக்கங்களும் யானையைப் பார்த்தவர்களை போல் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆக கடந்த கால ஆட்சியாளர்கள் உருப்படியாக எதையும் செய்யவில்லை என்பது இப்போது ஓரளவு தெரிந்துவிட்டது. கருப்பு பணத்தைக் கைப்பற்றுவதற்கு சட்டத்தில் வழியில்லையா? இருக்கின்றதா? என்பதைத் தாண்டி, 100 நாளில் பறிமுதல் செய்வேன் என்றார். உண்மையில் அது சாத்தியமா? கொஞ்சம் அரசியலாகவும் சட்ட வாய்ப்புகள் உள்ளதா? என்பதையும் பார்ப்போம். ஏனென்றால், இந்திய மக்களின் உழைப்பால் உருவான செல்வம் அது.

கருப்பு பணம் கசிந்து வளர்ந்த கதை:

1990களுக்கு முன்பு கருப்பு பணம் வைத்திருப் பவர்களின் பெயரும் ஒரு சில கோடிகளும் எப்போதாவது வெளி வந்தாலே பெரிய சர்ச்சை கிளம்பியது. 1985-ல் ராஜீவ் காந்தி தனது மகன் இராகுல் காந்தி பெயரிலும் (மைனர் அக்கவுண்ட்) சோனியா காந்தி பெயரிலும் 2.5 பில்லியன் தொகையை சுவிஸ் வங்கியில் டெபாஸிட் செய்துள்ளார் என்றும் அந்த தொகை போபர்ஸ் ஊழல் போன்ற பல்வேறு ஊழல் பணம்தான் என்றும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் சுப்ரமணிய சுவாமி 1991ல் தெரிவித்தார் இதற்கான ஆதாரத்தை அப்போதைய சோவியத் யூனியனின் உளவுத்துறையான ((KGP) கே.ஜி.பி குறிப்புகளை ஆதாரமாக வெளியிட்டார்.

அதே போல் மறைந்த எம்.ஜி.ஆர் சுவிஸ் வங்கியில் நிறைய தொகையை ரகசிய கணக்கில் வைத்துள்ளார் என்ற தகவலும் பெரிதாக வெடித்துக் கிளம்பியது. எம்.ஜி.ஆர் தந்த பெயரில் டெப்பாஸிட் செய்யாமல் அமைச்சரவை சகா பன்ருட்டி இராமச்சந்திரன் தனது பெயரில் போட்டுக் கொண்டார் என்றும், இது எம்.ஜி ஆருக்கு தெரிந்து மிரட்டிய பிறகு மாற்றிப் போடச் செய்தார் என்ற செய்திகள் 1990களுக்கு முன்பே வந்தன என்பதை நம்மில் பெரும்பாலும் மறந்து விட்டோம்.

1991-ல் நரசிம்மராவ் அமைச்சரவையில் நிதி அமைச்சராக மன்மோகன்சிங் பதவியேற்ற போது பல சர்ச்சை எழுந்தது. யார் இவர் எப்படி திடீர் என்று நிதி அமைச்சரானார், என்ன செய்யப் போகிறார் என அனைவரும் உற்று நோக்கினர். சிறந்த பொருளாதார நிபுணர். உலகளாவிய பல வங்கிகளில் வேலைபார்த்தவர். நமது ரிசர்வ் வங்கியில் சிறப்பாக பணியாற்றியவர் ஊழல் குற்றச்சாட்டு இல்லாதவர் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவார். வறுமையை ஒழிப்பார். ஏழ்மை குறைந்து இந்தியா கடன் அற்ற, உபரி நிறைந்த வளர்ந்த நாடாக மாறும் என்று காங்கிரஸ் கும்பலாலும் உலகமய ஆதரவாளர்களாலும் பீற்றிக் கொள்ளப்பட்டவர்.

1992-ல் நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்த போது மன்மோகன் சொன்னது என்னவென்றால் அன்றைய நிலையில் இந்தியாவின் மொத்த வெளிக்கடன் 80,000 கோடி. பதுக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை மீட்டு வந்தாலே இந்தியாவின் மொத்த கடனும் தீர்ந்து போகும் நரசிம்மராவ்- மன் மோகன் அரசு செய்ய வேண்டும் என்று அப்போது தினமணி நாளிதழ் ஒரு கட்டுரையை வெளியிட்டது. ஆனால் நடந்தது என்ன? மன்மோகன் நிதி அமைச்சராகவும் பல ஆண்டுகள் பிரதமராகவும் பதவியில் இருந்தார். கருப்பு பணம் வந்தபாடில்லை. அதற்கு மாறாக, 80,000 கோடியாக இருந்த கருப்பு பணத்தின் அளவு, 2012ல் 70 இலட்சம் கோடியாக அதிகரித்து என்பதுதான் உணமை 1991க்கு பிறகு தான் கருப்பு பணத்தின் பதுக்கல் பலமடங்கு அதிகரித்தது அது எப்படி? நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அந்த பணம் மொத்தத்தையும் பறிமுதல் செய்வோம் என்றனர் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் அவர்களால் ஏன் முடியவில்லை?   

2012-ம் ஆண்டு வரையிலான கணக்கின்படி இந்தியாவில் 609 பேர் 10 மில்லியனுக்கு அதிகமான சொத்துக்களை வைத்துள்ளனர். இந்திய சனாதிபதியின் ஒரு நாள் செலவு 8 கோடி சனாதிபதி மாளிகையில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு 350 பங்களா குடியிருப்புகள் உள்ளன. இந்திய நாடாளுமன்றம் இயங்க ஒரு நாளைக்கு 9 கோடி செலவாகிறது. பிரிட்டன் இந்தியாவில் 250 ஆண்டுகளில் 350 லட்சம் கோடியை திருடிச் சென்றுள்ளது. அதே காலத்தில் இந்தியப் பணக்காரர்கள் சுருட்டிய தொகை 330 கோடியாகும், சுவிஸ் வங்கியில் மட்டும் 70 இலட்சம் கோடி இந்திய பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. 84000 பேர் சேர்த்துள்ளனர். இந்தியாவில் 450 பில்லியன் டாலர் நிலக்கரியும், 170 பில்லியன் டாலர் இரும்புத் தாதுவும் இருப்பில் உள்ளது. இதில் 1 இலட்சம் இடங்களில் சட்ட விரோதமாக சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

2003 முதல் 2010 ஆண்டு வரையிலான காலத்தில் மட்டும் 5635 ஐஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் உள்ளிட்ட இந்திய அதிகார வர்க்கத்தினர் அதற்கு வங்கிகள்: இல் 1500பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளனர். தனியார் தொழில் நிறுவனங்களிலும் முதலீடு செய்துள்ளனர்.

உலகின் பல்வேறு நாடுகளில் சுரண்டப்படும் கருப்பு பணமானது 11 நாடுகளில் உள்ள பன்னாட்டு வளங்களில் டெபாஸிட் செய்யப்படுகின்றன. இதற்கு 1 சதவீதம் மட்டுமே இந்த வங்கிகள் மூலம் கொள்ளையடிக்கப்பட்ட நாடுகளுக்கே மீண்டும் பன்னாட்டு வங்கிகளால் கடனாகக் கொடுக்கப்படுகின்றன என்பதுதான் கொடுமை. இந்தக் கடனை அடைக்க ஏற்கனவே கருப்புப் பணம் சுருட்டிய அரசியல்வாதிகள் அதிகாரிகள் முதலாளிகள் பங்கு சந்தை தரகர்கள் அனைவரும் கூட்டாக நடத்தும் அரசாங்கம் மூலம் மக்கள் மீது வரி மேல் வரியை விதித்து கல்வி சுகாதாரம் ரேசன் உள்ளிட்ட அனைத்து அடிப்படைத் தேவைகளையும் ரத்து செய்து அரசு கஜானாவை நிரப்புகின்றனர். அதில் அவர்கள் எடுத்தது போக கொஞ்சத்தை கடனை அடைப்பதாகக் கூறி கடன் கொடுத்த பன்னாட்டு வங்கிகளுக்கே தொடர்ந்து வட்டியை மட்டும் செலுத்துகின்றனர்.

பழைய கடன் முதிர்வுகாலம் வந்தவுடன் மீண்டும் பெரியத்தொகையைக் கடனாக வாங்குகின்றனர் இதற்கு முன்பை விட அதிக வரி வசூல் மானியம் மக்களிடமிருந்து பிக்பாக்கெட் பேர் வழியைப் போல் பிடுங்குகின்றது. வரி வருவாயும் அரசின் கடன் தொகையும் புதிய தொழில் வளர்ச்சியும் முன்பை விட கருப்புப் பணத்தைச் சுருட்ட வழியை அமைத்துக் கொடுக்கின்றன. அரசு கஜானா முன்பை விட மோசமாக கழுதைத் தேய்ந்து கட்டெறும்பாகிறது. போன கருப்பு பணம் அரசின் மூலம் கடனாகவும் தொழில் துறை பங்கு சந்தை ரியல் எஸ்டேட் சுற்றுலா போன்ற பெயரிலும் தொழில் என்ற பெயரிலும் வெள்ளையாக மாற்றப்படுகிறது. ஒரு பொருளாதார நிதி மூலதன் சுழற்சியாக மாற்றப்படுகிறது.

இந்திய நிலப்பரப்பில் யார் ஒருவர் அசையும் அல்லது அசையா சொத்தை விற்றாலும் வாங்கி னாலும் பத்திர பதிவு, கம்பெனி மாற்றம் உள்ளிட்ட வழிகளை மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு நடந்த விற்றல் - வாங்கலின் தரத்திற்கும் மதிப்பிற்கும் உகந்த வரியைச் செலுத்த வேண்டும். அதுபோல் உள்நாட்டு வெளிநாட்டு வணிகத்திற்கும் அதற்குரிய வணிக வரி விற்பனை வரி போன்றவற்றை செலுத்த வேண்டும் இதில் நடக்கும் மூலதன பரிவர்த்தனை, உறபத்தி போன்ற அனைத்தும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP)) சேர்க்கப்படும்.

இதிலிருந்து தான் நாட்டின் வளர்ச்சி கணக்கிடப்படும். இதன் மூலம் கிடைக்கும் வருவாயின் மூலம் மக்களிடம் பெறப்படும் நேரடி மற்றும் மறைமுக வரியின் மூலம் தான் அரசு ஒவ்வொரு ஆண்டும் நிதி நிலை அறிக்கையைத் தயாரித்து வரவு- செலவுகளை கையாள்கிறது. கருப்பு பணம் என்பது என்ன என்பதுதான் முக்கியமான கேள்வி. இரண்டு உதாரணங்களை பார்ப்போம் ஹட்ச் (HUTCH)) என்ற செல்லிடப் பேசி நிறுவனம் தனது சொத்துகளையும் உரிமத்தையும் வோடபோன் (Vodafone) என்ற நிறுவனத்திற்கு விற்றது.

ஹட்சின் 67 சதவிகித சொத்தை வோடபோன் என்ற பன்னாட்டு நிறுவனம் 2007 ஆம் ஆண்டு வாங்கியது. இதன் சொத்து மதிப்பு 52300 கோடியாகும் இதற்கு மூலதன ஆதாய வரியாக 11000 கோடியைச் செலுத்துமாறு வோடபோன் நிறுவனத்திற்கு அரசு உத்தரவை அனுப்பியது உடனே வோடபோன் நிறுவனம் இந்திய அரசின் எல்லைக்கு வெளியில் நடந்த கம்பெனி விற்பனைக்காக இந்திய அரசுக்கு நாங்கள் வரி செலுத்த வேண்டியதில்லை என்றது வோட.போன் நிறுவனம்.இந்திய அரசு இந்தியாவில் உள்ள சொத்துக்களைத்தான் தாங்கள் வாங்கியுள்ளீர்கள் எனவே இந்திய அரசிற்கும் 11000 கோடி வரியைச் செலுத்த வேண்டும் என்று அரசு தரப்பும் வோடபோன் தரப்பும் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இங்குதான் பிரச்சனை அதாவது ஹட்ச் மற்றும் வோடபோன் இரண்டு நிறுவனங்களும் கேமேன் தீவில் பதிவு செய்யப்பட்ட பன்னாட்டு நிறுவனமாகும். மொரிசியஸ், கேமேன், சைப்ரஸ் பிரிட்டனின் வர்ஜின் தீவுகள் அனைத்தின் மக்கள் தொகையைக் கூட்டினாலும் கூட 1 கோடிக்கு மேல் போகாது. அதுபோல் எந்த தொழில் வளர்ச்சியும் இல்லாத வேளாண்மை பெரிதாக இல்லாத நாடுகள் ஆனால், செல்வ செழிப்பும் இயற்கை வளமும் மனித உழைப்பும் தன்னகத்தே செறிவாகக் கொண்டுள்ள இந்தியா போன்ற நாடுகளுக்கு இந்த உப்புக்கும் சப்புக்கும் லாயக்கற்ற நாடுகள் மூலதன ஏற்று மதியாளர்களாக உள்ளனர்.

அது எப்படி? இந்த நாடுகளில் யார் வேண்டு மானாலும் கம்பெனிகளையும் தொழில் நிறுவனங் களையும் பதிவு செய்து கொள்ளலாம். இங்கிருந்து கொண்டு உலகின் எந்த நாட்டிலும் சொத்தை வாங்கலாம் விற்கலாம் நிதி முதலீடு செய்யலாம் அதற்காக் அந்த நாட்டிற்கு வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. இந்தக் கருப்பு பண முதலாளிகளின் கூடாரமாகவும் அவர்களால் நடத்தப்படும் கம்பெனி களின் இருப்பிடமாகவும் இந்தத் தீவுகள் செயல் படுகின்றன.

ஆக, இந்தத் தீவுகளின் மூலமாக வரும் பணத்தைத் தான் நமது அந்நிய மூலதனம் அல்லது தொழில் மூல தனம் அல்லது வளர்ச்சிக்கான வரவு என்கிறது. அந்த நாடு களுடன் இந்த தீவுகளும் குட்டி நாடுகளும் இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் (Double taxation avoidance treaty) போடப்பட்டுள்ளன. அதுபோல் கேமேன் தீவுக்கும் இந்தியாவிற்கும் ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது.

மேற்படி ஒப்பந்தத்தின்படி கேமேன் நாட்டில் நடந்த ஹட்ச் - வோடபோன் கம்பெனி விற்பனைக்காக இந்தியாவில் வரி கட்ட வேண்டிய அவசியம் இல்லை. எங்கள் கம்பெனி கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு இந்தியாவிற்கு வரி கட்ட வேண்டிய அவசியம் இல்லை எங்கள் கம்பெனி கையகப்படுத்தும் நடவடிக்கை இந்தியாவிற்கு வெளியில் நடந்தது எனவே எங்களிடமிருந்து 11000 கோடி வரியைப் பெற இந்திய அரசிற்கு தார்மீக உரிமை இல்லை என்றது மும்பை உயர்நீதிமன்றத்தில் வோடபோன் நிறுவனம்.

ஆனால் மும்பை உயர்நீதிமன்றத்தில் நீங்கள் இந்திய எல்லைக்குள் உள்ள சொத்தைத் தான் 52,300 கோடி மதிப்பில் வாங்கியுள்ளீர்கள் எனவே அரசிற்கு உரிய வரியை கட்ட வேண்டும். என்று செப்-2010ல் தீர்ப்பு அளித்தது மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றது வோடபோன் நிறுவனம்.

வோடபோன் கார்டில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிசேக்,மனு சிங்வி, அரிஸ்கால்வே போன்ற கார்பரேட் நிறுவனங்களின் பெரும் பட்டாளம் டெல்லியில் முகாமிட்டது. அரசு தரப்பு வோடபோன் தரப்பு வாதங்களுக்கு பிறகு சனவரி-20 2012 ல் தலைமை நீதிபதி தலைமையிலான 3 நீதிபதிகளை கொண்ட முழு அமர்வு மும்பை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்வதாக தீர்ப்பை அளித்தது!

Pin It