makkal viduthalai wrapper 587

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர் களுக்கு அனைத்தும் இலவசம், இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகம் என்றெல்லாம் புள்ளி விவரங்களை அள்ளி வீசுகிற அரசு இன்னொன்றையும் கூறுகிறது. “நலிவுற்ற வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டீன் கீழ் கடந்த இரண்டு ஆண்டுகளில் 1 இலட்சத்து 39 ஆயிரத்து 805 பேர் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக மாநிலக் கல்வித் துறைச் செயலர் சபீதா கூறினார்.” (தினமணி. நவம்பர் - 14).

students 600‘பேயே இல்லை’ என்ற உண்மைக்கு மாறாக, ஊரில் கருப்புப் பேய் 45ம் வெள்ளைப் பேய் 55-ம் அலைகிறது. என அரசு அளந்துவிட்டால், ‘வெள்ளைப்பேய் என ஒன்று இருக்க முடியாது” என ஒரு சாராரும் ‘ச்சே. ச்சே, கருப்புப் பேய் இருப்பதாக சொல்வது பொய்’ என்று ஒரு சாராரும் விவாதிக்க தொடங்கி விடுவர். அது போல ‘தனியார் மயம்’ வேண்டாம் என ஒலிக்கும் குரலுக்கு மாறாக தனியார் பள்ளிகளில் 25% மாணவர்கள் சேர்க்கை சரியாக நடைபெற்றுள்ளதா எனக் கண்காணிக்கிற பணிக்கு இடதுசாரி மற்றும் சனநாயக மாணவர் - இளைஞர் அமைப்புகளைத் திசை மாற்றி விடுவதில் அரசு வெற்றி கண்டிருக்கிறது. 

அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், தனியார் பள்ளிகளில் 25% நலிவுற்ற பிரிவு மாணவர்களைச் சேர்க்க வேண்டும் எனக் கூறுகிறது. (தனியார் பள்ளி என்றாலே பெரும்பாலும் மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.சி பள்ளிகள் தாம் ! இதில் சி.பி.எஸ்.சி பள்ளிகளுக்கு இச்சட்டம் பொருந்தாது) இந்தப் பிரிவு குறித்து எந்த விவாதமும் - கருத்துக் கேட்பும் இல்லாமல் மத்திய அரசு முடிவெடுத்து சட்டமாக்கியுள்ளது. இச்சட்டத்தின் மூலம் அரசு மூன்று வகைகளில் மக்களுக்குத் துரோகம் செய்கிறது.

முதலாவதாக மக்களின் (நலிவுற்ற பிரிவு மக்களின்) வரிப்பணத்தைத் தனியாருக்குத் திருப்பிவிடுதல், தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை அவர்கள் வழங்குவதில்லை. 75% மாணவர்களிடம் கல்விக்கட்டணம் என்ற பெயரில் கொள்ளையடிக்கிற தனியார் பள்ளிகள் 25% நலிவுற்ற பிரிவுக் குழந்தைகளுக்கு இலவசமாய்க் கல்வி குழந்தைகளுக்கு தருவதாக இருந்தால் ”போய்த் தொலையட்டும்\ என அதை அனுமதிக்கலாம். மாறாக பெரூர், நகரம், மாநகரம் என ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்றவாறு அரசு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டணத்தை முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு அரசே செலுத்த வேண்டும் என “சட்டம்” செயல்படும்.

1 முதல் 5 வகுப்பு வரை உள்ள தனியார் பள்ளி என்றால் ஒன்பதாம் வகுப்பில் 25% சேர்க்கப்பட வேண்டும் என்றும் 6 முதல் 10 அல்லது 12 வகுப்பு வரை உள்ள பள்ளி என்றால் ஆறாம் வகுப்பில் சேர்க்கப்பட வேண்டும் என்றும் சட்டம் சொல்கிறது. தொழிற்துறை சேவைத்துறை காப்பீட்டுத்துறை என அனைத்திலும் தனியாருக்குக் கைக்கட்டி சேவகம் செய்யும் அரசு, கல்வித்துறையிலும் மக்கள் வரிப்பணத்தை அள்ளித் தனியாருக்கு சட்டப்படியே வழங்குகிறது, (அந்தப் பணம் வந்து சேருவதில் சற்றுக் காலதாமதம் ஆவதால் தனியார் பள்ளி முதலாளிகள் மிகவும் கடுப்பில் இருக்கிறார்கள் உயர் கல்வித்துறை அமைச்சர் கவலைப்படாதீர் விரைவில் வழங்கப்படும் என ஆற்றுப்படுத்துகிறார்.)

சபிதா வெளியிட்ட எண்ணிக்கையின்படி 1 மாணவனுக்கு ஓராண்டிற்கு 1000 ரூபாய் கட்டணம் என்று வைத்துக் கொண்டால் தமிழகத்தில் மட்டும் 13 கோடியே 98 இலட்சத்து 5000 ரூபாய் அரசு தனியாருக்கு வழங்குகிறது. 1 மாணவனுக்கு 2000 என்று கணக்கிட்டால் சுமார் 28 கோடியும், 3000 என்று கணக்கிட்டால் 42 கோடியும் என பள்ளிகளின் தகுதி, பகுதிகேற்ப தொகை கூடிக்கொண்டே செல்கிறது வரும் கல்வியாண்டில் இதே அளவு மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படுவார்களேயானால் இந்தத் தொகை இரட்டிப்பாகும், அடுத்த கல்வியாண்டில் மும்மடங்காகும். எட்டாம் வகுப்பு வரை இந்தத் தொகை வழங்க வேண்டும் என சட்டம் கூறுவதால் எட்டாண்டுகளில் எட்டு மடங்கு தொகை தனியாருக்கு அள்ளி வழங்கப்படும் இப்படியே ஆண்டுதோறும் தொடரும்.

இரண்டாவது பாதிப்பு அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள் எண்ணிக்கையைக் குறைத்தல். அரசு கூறும் அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி ஒன்றாம் வகுப்பில் ஆசிரியர் மாணவர் விகிதம் 1:30, ஆறாம் வகுப்பில் 1:35 ஆகும். சபிதா கொடுத்துள்ள எண்ணிக்கையில் பாதி ஒன்றாம் வகுப்பிலும் மீதி ஆறாம் வகுப்பிலும் சேர்க்கப்பட்டதாக வைத்துக் கொள்வோம் அரசுப் பள்ளியில் சேர்ந்திருக்க வேண்டிய இக்குழந்தைகள் தனியார் பள்ளியில் சேர்ந்ததால் ஒன்றாம் வகுப்பு ஆசிரியர்கள் 2330 பேருக்கான வேலைவாய்ப்பு பறிபோகிறது ஆறாம் வகுப்பு ஆசிரியர் பணியிடங்கள் 1997 பறிக்கப்படுகிறது.

ஏற்கனவே 5 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் தனியார் பள்ளியில் சேர்ந்து விடுவதால் ஆறாம் வகுப்பில் மாணவர் எண்ணிக்கை குறையும். அதனால் ஏற்கனவே வேலை பார்த்த ஆசிரியர்கள் கூடுதல் பணியாளர்கள் என்று கணக்கிடப்பட்டு வெளியேற்றப்படுவர், அல்லது மாற்றுப் பணிக்கு அனுப்பப்படுவர், ஆக புதிதாக வேலைக்குச் சேரவேண்டிய சுமார் 4330 இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் வயிற்றிலும் அவர்கள் குடும்பங்களின் வயிற்றிலும் மண்ணடிக்கப்படுகிறது. தமிழகத்தில் இந்நிலை எனில் இந்தியா முழுக்க எத்தனை ஆயிரம் ஆசிரிய பணியிடங்கள் ஒழிக்கப்படும் என எண்ணிப் பாருங்கள்!

மூன்றாவது பாதிப்பு தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் அதிகரித்துக் கொண்டே செல்ல அரசுப் பள்ளிகளில் சேர்க்கை விகிதம் குறைந்து கொண்டே செல்லும் இதையே காரணம் காட்டி அரசுப் பள்ளிகள் சிறிது சிறிதாய் மூடப்பட்டு இறுதியில் முற்றிலும் மூடப்படும்.

பிற துறைகளில் தனியார்மயத்தின் எதிர் விளைவுகள் குறித்து மக்களிடம் உள்ள உணர்வு வேறு; கல்வியில் தனியார்மயம் குறித்து மக்களின் மனநிலை வேறு. உதாரணமாக, ஆயா வேலை பார்க்கும் உன் குழந்தைகளை எங்கு படிக்க வைக்க விரும்புகிறாய்?! எனக்கேட்டால் ‘பணம் இல்லாததால் அரசாங்கப் பள்ளியில் சேர்த்து விட்டிருக்கேன்’ என்று பதில் கூறுவார் இது ஆயாவின் குற்றமல்ல அவரை இப்படி சிந்திக்க வைத்தது இச்சமூகத்தின் எதார்த்தம். பின்வரும் கேள்விகள் குறித்து அரசு ஒரு வெள்ளையறிக்கை வெளியிடுமானால் இந்தச் சிந்தனைக்கான விடை புரியும்.

1980 முதல் 2014 வரை பள்ளிக் கல்வியை மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.சி யில் முடித்தவர்கள் எத்தனை பேர்? அவர்களில் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் நிறுவனங்களில் படிக்க வாய்ப்பும் பெற்றவர்கள் எத்தனை பேர்? ஐ.ஏ.எஸ். ஐ.சி.எஸ் தேர்வில் வெற்றி பெற்று உயர் பதவியடைந்தவர்கள் எத்தனை பேர்? மருத்துவர் ,பொறியாளர் மற்றும் A - Grade பதவிகளில் பணியில் சேர்ந்தவர்கள் எத்தனைப் பேர்? அவர்களின் சதவீதம் என்ன? அதேபோல் பள்ளிக் கல்வியை +2 - வரை அரசுப் பள்ளிகளில் படித்து வெளியில் வந்தவர்களில் எத்தனைப் பேர் மேற்கூறிய பதவிகளில், பணிகளில் சேர்ந்துள்ளனர்? அவர்களின் சதவீதம் என்ன? அரசு அறிக்கைத் தருமா? தராது. ஆனால் விடை வெளிப்படையானது அடித்தட்டு மக்கள் தனியார் பள்ளிகளில் தம் பிள்ளைகளை சேர்க்க முடியாவிட்டாலும் அதற்கான ஏக்கம் ஆழ்மனதில் இருக்கவே செய்கிறது.

ஆக, அரசு மக்களில் ஒரு தரப்பினரை கத்திகளாகவும், மற்றொரு தரப்பினரைக் கேடயங்களாகவும் எதிரெதிரே நிறுத்துகிறது. தனியார் பள்ளிகளின் தரத்திற்கு இணையாக அரசுப் பள்ளிகளை மாற்றுவதற்குப் பதிலாக அரசுப் பள்ளிகளுக்கு மூடு விழா நடத்திவிட்டு தனியார் பள்ளிகளுக்கு உரம் போடுகிறது. சரி அரசு பள்ளிகளில் என்னதான் நடக்கிறது?  

தொடரும்

Pin It

catholic 350இயற்கையின் விதிகளை மனித சமூகம் அறிய முனைந்த வரலாற்றின் தொடக்க காலத்தில் தங்களால் அறிய முடியாதவைகளை, குறிப்பாக இயற்கைச் சீற்றங்களினால் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டதால் தங்களுக்கு அப்பாற்பட்ட சில சக்திகள் இயற்கையைக் கட்டுப்படுத்தி வைத்திருப்பதாக நம்பினர்.

சமூகம் இயங்கும் விதிகளும் கூட இயற்கையை மீறிய சக்திதான் கட்டுப்படுத்தி வைத்திருப்பதாகச் சொல்லி அனைத்தும் மத நம்பிக்கைகளாக மாற்றப்பட்டன.

சமூக வளர்ச்சியின் ஊடாக அறிஞர்கள் சிலர் இயற்கையின் இயங்கு விதியை கண்டுபிடிக்க கண்டுபிடிக்க அந்த கருத்துகள் மக்களிடம் போய்சேர விடாமல் மத நிறுவனங்கள் தடுத்தன. உதாரணமாக புவி மையமாக நிலையாக இருக்க சூரியன் உட்பட இதரக் கோள்கள் புவியைச் சுற்றிவருவதாக முதலில் நம்பப்பட்டது. மதங்களும் இதனை வலியுறுத்தி வந்தன.

பின்னர் சூரியனைச் சுற்றியே பூமி உட்பட சூரியக் குடும்பத்தின் கோள்கள் இயங்குவதும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அறிவியலாளர்கள் அவ்வளவு எளிமையாக மக்களிடம் கொண்டுசெல்ல மத நிறுவனங்கள் விடவில்லை.

கலிலியோ இதை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தால் கத்தோலிக்க கிறித்தவ மத நிறுவனத்தால் கடும் விமர்சனத்திற்கு ஆளாகி வாழ்நாள் முழுவதும் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். இதுதான் 17 ஆம் நூற்றாண்டில் கிறித்தவ மதத்தின் நிலைமை.

நவீன அறிவியல் தொழில்நுட்பத்தால் 19 மற்றும் 20ஆம் நூற்றாண்டின் வளர்ச்சி என்பது முந்தைய பல நூற்றாண்டுகளின் வளர்ச்சியைவிட பல மடங்காக இருந்தது. இதற்கு அறிவியலாளர்களின் ஆராய்ச்சியும், தொழிலாளர்களின் வியர்வையும் குருதியும் முக்கிய காரணமாகும். 20ஆம் நூற்றாண்டின் இறுதியில் தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட பெரிய மாற்றம் உலகம் முழுவதுமுள்ள மக்களை அருகே இணைத்துள்ளது, அதனால் அறிவியலின் புதிய கண்டுபிடிப்புகள் நொடிப்பொழுதில் அனைவருக்கும் அறிய கிடைக்கின்றன. இந்தச் சூழல் உண்மையில் மதங்களுக்கு சிக்கலான தருணமே...

அறிவியல் கல்வி

அமெரிக்காவில் குடியரசுத் தலைவர் ரீகன் காலத்தில் கிறித்தவ மத அடிப்படைவாதிகள் சார்லஸ் டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை அறிவியல் பாடத்தில் சேர்க்கக்கூடாது என்று போர்க்கொடி உயர்த்தினார்கள். அதற்கு எதிராகப் பள்ளி ஆசிரியர்கள் அது மத நம்பிக்கை, இது அறிவியல் என போராடித்தான் பள்ளிகளில் இதைப் பாடமாக சேர்த்த வரலாறு அங்கிருக்கிறது.

இப்போதைய தகவல் தொழில்நுட்பக் காலத்தில் மக்களிடமிருந்து மேலும் அன்னியப்படாமல் இருக்க கத்தோலிக்க கிறித்தவ மதத் தலைவர் போப் ஆண்டவர் பிரான்சிஸ் பெருவெடிப்பு கோட்பாடும், பரிணாமவியல் கோட்பாடும் உண்மைதான், கடவுள் ஒரு சாகசக்காரர் அல்ல என்று கூறியுள்ளார். இப்படி நவீன காலத்திற்காகத் தன்னை தகவமைக்க வேண்டிய தேவை மத நிறுவனத்திற்கு உள்ளது என அவர் யோசித்திருக்கக்கூடும்.

மோடியின் வியக்க வைக்கும் அறிவியல் பார்வை!

இந்தியாவில் இதற்கு நேர்மாறாக நடக்கிறது... இந்துமத அடிப்படைவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.-இல் பயிற்சிபெற்று அதன் வெகுமக்கள் கட்சியான பா.ச.க. மூலம் இந்திய நாட்டின் தலைமை அமைச்சர் ஆகியுள்ள திருவாளர் நரேந்திர மோடி சில சிந்திக்க வைக்கக்கூடிய கேள்விகளை எழுப்பியுள்ளார்.

modi 400"கர்ணன் தன் தாயின் கருப்பையிலிருந்து தோன்ற வில்லை என மகாபாரதத்தில் சொல்லப் பட்டுள்ளது. இதன்பொருள் உயிர் அணு அறிவியல் அந்தக் காலத்தில் வளர்ந்திருந்தது என்பது தானே..?

பிள்ளையார் யானைத் தலையுடன் பிறந்தார் எனில் அந்தக் காலத்திலேயே ப்ளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் இருந்தார்கள் என்பதுதானே..?"

இதை ரிலையன்ஸ் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பேசியுள்ள ‘‘மின்னனு இந்தியா” மோடி, ஏதோ திடீரென இப்படி பேசிவிட்டார் என நினைக்க வேண்டாம்.

ஏற்கனவே குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த போது ஆர்.எஸ்.எஸ். வழிவந்த தினாநாத் பத்ரா என்பவரின் புத்தகங்களை 42,000 பள்ளிகளின் பாடத் திட்டத்தில் சேர்த்துள்ளார் மோடி, அதில் குந்தி மற்றும் கவுரவர்கள் காலத்திலேயே உயிர் அணு ஆராய்ச்சி இருந்தது என்றும்,மகாபாரதக் காலக்கட்டத்திலேயே தொலைக்காட்சி கண்டுபிடிக்கப்பட்டது என்றும், வேத காலத்திலேயே மோட்டார் வாகனம் இருந்தது என்றும் கூறப்பட்டுள்ளது. இதுதான் மோடியின் பார்வையும்.

விரைவில் இந்த ஆராய்ச்சி(?) முடிவுகள் இந்திய பொது பாடத்திட்டத்திலும் சேர்க்கப்படலாம். மெல்ல இந்நாட்டின் வரலாறு திரிக்கப்பட்டு பொய்ப் புரட்டும் அறிவியலுக்கு ஒவ்வாத கருத்துகளும் திணிக்கப்பட்டு கல்வி காவிமயமாக்கப்படும்.

சீனாக்காரர், சப்பான்காரர், இந்தியாக்காரர் சந்தித்த கதைகள் சிலகாலத்திற்கு முன்பு அதிக பிரபலம். அதில் மற்றவர்கள் தங்கள் பெருமை யைப் பேசியபின் இந்தியாக்காரன் கடைசியாக பேசுவது நகைச்சுவையாக இருக்கும், அது போலத்தான் ”வளர்ச்சி” என்ற மாயையின் நாயகன் மோடி பேசியதும் உள்ளது.

ஒரு காலத்தில் பாம்பு பிடிக்கும் காட்டுமிராண்டிகள் என இந்தியர்களைச் சொன்னார்கள், இப்போது நாங்கள் “மௌசை”(mouse)) பிடிப்பவர்களாகிவிட்டோம் என்று அமெரிக்காவில் மோடி முழங்கினார், ஆனால் உயிரணு, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை என ”நாங்க அந்த காலத்திலேயே அந்த மாதிரி” என்று பேசி காட்டுமிராண்டி காலத்தில் தான் இருக்கிறோம் என்று நம்மை அடையாளப்படுத்தும் வேலையைத்தான் செய்கிறார். இப்படியான அபத்தங்கள் முடிவுக்கு வர மக்கள் அறிவியலையும், அதிகாரத்தையும் கையிலெடுப்பதை நோக்கி முன்னேற வேண்டும்.

கல்வி காவிமயமாக்கப் படாமல் தடுக்க வேண்டியது நமது உடனடி கடமையாக இருக்கிறது.

Pin It

2015-ஆம் ஆண்டு, புதிய, புதிய போராட்டங்களைக் காணும் ஆண்டாக அமையட்டும். “போராட்டமே வாழ்க்கை” எனும் கம்யூனிஸ்டுகளின் புரிதல், முற்றிலும் சரியே என மெய்ப்பித்துச் சென்றுள்ளது 2014-ஆம் ஆண்டு! ஆம்; திசையெட்டும் பற்றி எரிந்தன மக்கள் போராட்டங்கள்! பொருளாதார சமூக நிலைமைகளில் ஏற்பட்டு வருகின்ற அதிவேக மாற்றங்கள் அரசியல் தளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தவே செய்யும்.

ஆனால், அதற்காக, காலம் கனியும் வரையில் கைகட்டி வேடிக்கை பார்க்க முடியாது. மாற்றத்தின் வேகத்தைத் துரிதப்படுத்துவதன் மூலமே மக்கள் விடுதலை சாத்தியப்படும். இல்லையெனில், வாய்ப்பை மீண்டும் பிற்போக்கு சக்திகள் கைப்பற்றிவிடுவர். நாம் கடந்தகால அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். நம்பிக்கை மட்டும் நமக்குப் போதுமானதில்லை. அனைத்தையும் அறிவின் ஆராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டும்.

தோழரே! எந்தவொரு பிரச்சனையையும் நாம் அணுகும்போது, மார்க்சிய கண்ணோட்டத்துடன்தான் பார்க்க வேண்டும். ஏனெனில், அதுவே, கம்யூனிஸ்டுகளின் பார்வை. அதாவது, கம்யூனிஸ்ட் கட்சி என்பது தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் கட்சி. எனவே, தொழிலாளர் வர்க்கத்தின் நலன்களை அடிப்படையாகக் கொண்டே கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாடு இருக்கும். அரசியல் மாற்றங்களை நம் ஆய்வுக்கு உட்படுத்தும்போது, இந்தப் புரிதலில் நின்று கொண்டு ஆய்வை மேற்கொள்ள வேண்டும். இப்போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்போவது, டெல்லியில் அதிகாரத்தைக் கைப்பற்றி இருக்கும் நரேந்திரமோடியின் ஆட்சியைப் பற்றித்தான்!

நோய்நாடி, நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்

என்கிறார் வள்ளுவர். இந்த அடிப்படையில், பாரதிய ஜனதாவின் 6 மாத கால ஆட்சியின் செயல்பாட்டில் ஒரு சிலவற்றை மட்டும் நாம் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டால் காங்கிரஸ் கொள்கைகளுக்கும், பாரதிய ஜனதா ஆட்சிக்கும் உள்ள உறவை நாம் உணர முடியும். அதன் மோடி யார் பக்கம்? என்ற உண்மை தெரிய வரும். சரி, தோழரே! இப்போது நாம் ஆய்விற்கு உள்ளே செல்வோம்.

கடந்த 10 ஆண்டுகளாக, வல்லரசு நாடுகளின் முதலாளிகளுக்காவும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்காவும் இந்தியப் பெருமுதலாளிகளுக்காவுமே, காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடந்தது. விளைவாக, நாட்டில் உள்ள அனைத்துப் பிரிவு மக்களும் கடும் துன்பங்களை அனுபவித்தனர். விளைவாக, காங்கிரஸ் கட்சியை, ஆட்சியிலிருந்து மக்கள் இறக்கினர். அப்போது, அவர்களின் மனதில் இருந்த உணர்வு என்ன? அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைய வேண்டும். உயிர்வாழ ஒரு வேலை வேண்டும் அந்த வேலை நிரந்தரமாக நிலைக்க வேண்டும். பொருட்களின் விலை நிலைமைகளுக்கேற்ப சம்பளம் வேண்டும். கட்டணமில்லா கல்வி வேண்டும்; மருத்துவம் வேண்டும்.

குடிநீர், பாசன நீர், சாலை போன்றவற்றிற்காக போராடும் நிலை ஏற்படக்கூடாது. இன்னும் இதுபோன்ற பல விருப்பங்கள், எதிர்பார்ப்புகள் இருந்தன. ஏனெனில், மன்மோகன்சிங் ஆட்சியின் 10 ஆண்டுகள் மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்து, ஒரு அமைதியான வாழ்வை உறுதி செய்யவில்லை. இதுவெல்லாம், உங்களுக்குத் தெரிந்ததுதான், தோழரே! மோடி யார் பக்கம்? என்பதை மக்கள் தெரிந்து கொள்வதற்காக தொகுத்துக் கொள்கிறோம். அவ்வளவுதான்!

உழைப்பை விற்று உயிர் வாழ்பவரெல்லாம் தொழிலாளர் வர்க்கமே! உழைக்கும் மக்கள் கூட்டத்தையே நாம், மக்கள் என்றோ அல்லது தொழிலாளர் என்றோ அழைக்கிறோம். காங்கிரஸ் ஆட்சி, தொழிலாளர் பக்கம் இல்லை என்பதை பெரும்பான்மையோர் உணர்ந்ததாலேயே அதன் ஆட்சிக்கு முடிவு கட்டினர். ஆனால், இப்போது அமைந்துள்ள மோடி ஆட்சி யார் பக்கம் என்பதைப் பார்ப்போம்.

இந்த நிதியாண்டில் மட்டும் ஒரு இலட்சம் கோடி ரூபாய்களுக்கு மேல், பெருமுதலாளிகளுக்கு வரிச்சலுகை- வங்கிகளில் வாங்கிய கடனை, திருப்பி அடைக்கின்ற அளவுக்கு, தம் பொருளாதார நிலை இருந்தும், பெருமுதலாளிகள் செலுத்தாத வாராக்கடன் சுமார் 2 இலட்சம் கோடி ரூபாய்- மோடியின் நெருங்கிய கூட்டாளி குஜராத்தைச் சேர்ந்த அதானி என்ற பெருமுதலாளிக்கு, ஆஸ்திரேலியாவில் நிலக்கரிச் சுரங்கம் தோண்ட ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வழங்கவுள்ள கடன் ரூ.6,200 கோடி- மிகப்பெரிய இந்திய முதலாளிகளுடைய வாரிசுகளின் சொத்து மதிப்பு மட்டும் 17 ஆயிரம் கோடி ரூபாய் (குடிமனைகூட சொந்தமில்லாத குடிமக்களின் எண்ணிக்கையை மோடி வெளியிடுவாரா?)

தேர்தலில் கொடுத்த வாக்குறுதிப்படி ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் மோடி அரசாங்கம் மீட்டுவரத் தவறிய, வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டிருக்கும் பணத்தின் மதிப்பு சுமார் 33 இலட்சம் கோடி ரூபாய்கள். (இவை அனைத்தும் நம் உழைப்பால் விளைந்தவை, நமக்கே சொந்தம்! உள்நாட்டில், சட்டத்திற்குப் புறம்பாக, வரி ஏய்ப்பு, ஊழல் போன்றவற்றால் கணக்கில் காட்டப்படாத கருப்புப் பணத்தின் மதிப்பு எவ்வளவோ?)-

சூப்பர் ரிச் என அழைக்கப்படுகின்ற 65 இந்திய கோடீஸ்வரர்களுக்கு மட்டும் ரூ.1.5 சொத்துவரி விதித்தால் 9 கோடி மக்களின் வறுமையை ஒழித்துவிடமுடியும் (நரேந்திர மோடி தயாரா?)

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் காலாண்டு வருவாய் ரூ.14,888 கோடி. இதில் இலாபம் மட்டும் ரூ.2,709 கோடி. (நம்மூர் கந்துவட்டியைவிடவும் மோசமான பகல் கொள்ளை என்பது கணக்குப் போட்டுப் பார்த்தால் தெரியும்) நகரத்தில் ரூ.33.33 சம்பாதிப்போரும், கிராமத்தில் ரூ.27.20 ஈட்டு வோரும் ஏழைகள் இல்லை என்கிறது அரசாங்கம்! மேற்படி வங்கியின் ஒரு நாள் இலாபம் 30 கோடியே 10 லட்சம் ரூபாய்! இது என்ன நியாயம், மோடி சார்?

இவையெல்லாம், நரேந்திர மோடி ஆட்சியின் ஒரு பக்கம் இன்னொரு பக்கத்தையும், பார்க்கலாமா தோழரே? அதாவது கால காலமாக உழைப்பதையே வாழ்வாகக்கொண்டு தம் உழைப்பின் மூலம் இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு அஸ்திவாரமாய் மறைந்து கிடக்கும் தொழிலாளர் வர்க்கத்தின் பால், மோடியார் அணுகுமுறை என்னவாக இருக்கிறது? என்று பார்ப்போம். பெட்ரோல், டீசல் உற்பத்தி வரியை உயர்த்தியன் மூலம் மக்களிடமிருந்து, அரசாங்கமே சுரண்டிய தொகை சுமார் 20,000 கோடி ரூபாய்!-

ஏற்றுமதி செய்யும் அளவுக்கு சர்க்கரை உற்பத்தி இருந்தும் கூட, சுமார் 40 இலட்சம் டன் பிரேசிலிலிருந்து இறக்குமதி செய்ததன் மூலம் சுமார் 600 ஆலைகள் இந்தியாவில் மூடப்படும் நிலை! இங்கு பணிபுரியும் தொழிலாளர்களின் எதிர்காலம்?- நாட்டுப்புறப் பட்டாளிகளின் உழைப்பால் உற்பத்தியான உணவுதானியங்கள், பொறுப்பற்ற ஆட்சியாளர்களால் 40 சதவீதம் வீணடிக்கப்படுகிறது. இதன் மூலம் கடந்த நிதியாண்டில் மட்டும் பாழாவது சுமார் 750 கோடி டாலர்! (ஒரு டாலருக்கு, இந்திய மதிப்பு 63 ரூபாய்) மொத்த மக்கள் தொகையில் சரிபாதிக்கும் மேலான மக்கள் 3 வேளை உணவுக்கு உத்தரவாதமற்றவர்கள்! அரசாங்கம் நடத்தி வருகின்ற ஏர்- இந்தியா என்ற விமானப் போக்குவரத்து நிறுவனமும் விரைவில் தனியார் முதலாளிகளுக்குத் தாரை வார்க்கப்படும் என்று அறிவிப்பு!

அம்பானியின் ஒரேயொரு பெட்ரோல் கிணறை மட்டும் வாங்குவதற்கு மோடி அரசு துணியுமா?

சுமார் 14 இலட்சம் கோடி பட்ஜெட்டில், சுமார் 10ல் ஒரு பங்கு இராணுவத்திற்கு ஒதுக்கீடு! 3-ல் ஒரு பங்காக உள்ள கிராமப்புற ஏழைகளுக்கு- 100 நாள் வேலை திட்டத்திற்கு - வெறும் 33 ஆயிரம் கோடி மட்டும்!

தகவல் தொழில் நுட்பத் துறையில் இந்தியாவில் முதலிடத்தில் உள்ள, டாடா-வினுடைய டிசிஎஸ் நிறுவனத்திலிருந்து சுமார் 25 ஆயிரம்பேர் வெளியேற்றம்! இது புதிதல் ஆண்டுதோறும் நடக்கும் வழமையான நடவடிக்கையே என்கிறது நிறுவனம்.- நரேந்திரமோடி தலைமையில் பாரதீய ஜனதா ஆட்சி அமைந்தால், மீனவர்களைக் கைது செய்யும், இலங்கையின் போக்கிற்கு முடிவு கட்டப்படும் என்றார் சுஷ்மா சுவராஜ். ஆனால் 6 மாத ஆட்சியில் பல நூற்றுக்கணக்கான மீனவர்கள் இராஜபட்சேயின் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர் (வாக்குறுதி காற்றில் கரைந்து போயிற்றோ?)-

நெய்வேலி அனல்மின் நிலையத்தில் பணிபுரிந்து வரும் 13,000 ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய நீதிமன்றமே உத்தரவிட்ட பின்னரும், மோடி ஆட்சி நிரந்தரம் செய்யவில்லை(கேட்டால் சட்டத்தின் ஆட்சி; சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று கதைப்பார்கள்)-

கட்டுமானத் தொழிலாளர்களிடமிருந்து, கடந்த நிதியாண்டில் மட்டும் வசூலித்த, வருங்கால வைப்பு நிதி ரூ.27,448 கோடி பயன்படுத்தப்படாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. (நலவாரியத்தில் ஒரு பணப் பயனைப் பெற நாம் நாயாய் அலைய வேண்டியிருக்கிறது)-

நாடு முழுவதும் உள்ள நகராட்சி மற்றும் மருத்துவ மனைகளில் நிரந்தரமாக உள்ள இலட்சக்கணக்கான துப்புரவுப் பணிகள், கான்டிராக்டாக, தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன. (வரி வசூல், இராணுவம் மற்றும் காவல்துறையை மட்டும் தனியாருக்கு விடமாட்டார்கள்)-

சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் நோக்கியா செல்போன் தொழிற்சாலை கடந்த திமுக ஆட்சியின்போது தொடங்கிய வேளையில் பத்திரப் பதிவுக்கு அவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. 200 ஏக்கர் நிலம் (4.5 இலட்சம் ரூபாய் வீதம்) 99 ஆண்டுக்கு குத்தகை 10 ஆண்டுகளுக்கு விற்பனை வரி மற்றும் வணிக வரி கிடையாது. அந்த முதல் பத்து ஆண்டுகளில் செல்போன் விற்பனை மூலம் அவர்களுக்கு கிடைத்த வருவாய் ஒன்றரை இலட்சம் கோடி ரூபாய்! அதன் பின், அவர்கள் 21 ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. இவர்களுக்காக தமிழக அரசு வாட் வரியையும் தள்ளுபடி செய்துள்ளது. (நாட்டின் குடிமக்கள் மின் கட்டணம் செலுத்தத் தாமதமானால் இணைப்பைத் துண்டித்து விடுகிறார்கள்.)

வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்று காரணம் காட்டியே ஆட்சியாளர்கள் அந்நிய நாட்டு நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம்போட்டு, சலுகைகளை வாரி வழங்கி அனுமதிக்கின்றனர் நம் கண் முன்னேயே நோக்கியா தொழிற்சாலையில் பணியாற்றிய சுமார் 25 ஆயிரம் தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களது குடும்பங்கள் நடுத்தெருவில்! நரேந்திரமோடி வாய்மூடி மௌனியாக இருக்கிறார்!

சென்னை அருகே ஃபாக்ஸ்கான், க்ரிவ்ஸ் காட்டன் ஆலைகள் மூடப்பட்டு விட்டதால் அதன் தொழிலாளர் குடும்பங்களின் வாழ்வை இருள் சூழ்ந்துள்ளது-

இராட்சச இயந்திரங்கள் மூலம் சட்டத்திற்குப் புறம்பாக மணல் கொள்ளை அடித்துவரும் எந்தவொரு முதலாளியும் இதுவரை கைது செய்யப்படவில்லை. ஆனால், கடலூர் தொடங்கி நாடு முழுவதும் மாட்டு வண்டிகளில் காலங்காலமாக மணல் எடுத்துவரும் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு, வண்டியும் பறிமுதல் செய்யப்படுகிறது-. பீடி, ஆட்டோ, பட்டாசு போன்ற துறைகளில் பணியாற்றிவரும் தொழிலாளர்கள் அன்றாடம் வாழ்வோடு போராடிக் கொண்டிருக்கின்றனர். போதும் போதாதென்று மோடி அரசு மத்திய அரசின் காலிப்பணியிடங்களுக்கு ஆள் எடுப்பதை நிறுத்தி வைத்துள்ளதாக வெளிப்படையாகவே துணிந்து அறிவித்திருக்கிறது-. அனைத்திற்கும் மேலாக, பாரதீய ஜனதாவின் பெரும்பான்மை ஆட்சி, இந்தியாவுக்கு அதிர்ஷ்டம் என்கிறார் முகே; அம்பானி! அவருக்குத்தான் அதிர்ஷ்டம்! அப்படி எனில், தொழிலாளருக்கு?.... கடன்தான்!

சரி! இப்போது சொல்லுங்கள் தோழரே! மோடி யார் பக்கம்? உள்ளங்கை நெல்லிக்கனி போன்று தெளிவாகத் தெரிகிறது! மோடி மன்மோகன் சிங்கின் வழித்தோன்றல்தான் என்று! இல்லையா? இந்த உண்மையான முகத்தை மறைத்துக் கொள்ள, முதலாளித்துவ சேவகர்கள் பயன்படுத்தும் முகமூடிதான் இந்துத்வா செயல்பாடுகள்! எதிர்க் கட்சிகள் பெரும்பாலும் இந்த நிழலோடுதான் இப்போது யுத்தம் செய்து கொண்டிருக்கின்றனர். நாம் தொழிலாளர் வர்க்கத்தை, தம் உரிமைக்காக, பாதுகாப்புக்காக, வாழ்வுக்காகப் போராட, படையாய்த் திரட்ட வேண்டும். மதம், சாதி, கட்சிகளால் பிளவு படுத்தப்பட்டிருக்கும் தொழிலாளர் வர்க்கத்தை ஒற்றுமைப்படுத்தி சங்கமாக்க வேண்டும். அனைத்து பேதங்களுக்கும் அப்பால், தொழிற்சங்கங்களின் ஒற்றுமைக்காகப் போராட வேண்டும். இதோ அந்த வரலாற்றுக் கடமையை செய்து முடிக்க, சுரண்டல் பேர்வழிகளுக்கு எதிராகப் போராட நமது சங்கத்தைத் தயார்படுத்தும் நோக்கோடுதான், ஜனநாயக தொழிற்சங்க மய்யம் புதுக்கோட்டையில் ஜனவரி 9-அன்று கூடுகிறது. சிந்தித்துச் செயல்பட, சந்திப்போம்! வாருங்கள் தோழரே!

Pin It