makkal viduthalai oct14

‘பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடிப்பவர்களை, அபகரிப்பாளர்களை நடுரோட்டில் தூக்கிலிட வேண்டும்’ என்று போபர்சு பீரங்கி ஊழல் தொடர்பாக ஒரு பேட்டியின் போது தோழர் விநோத் மிஸ்ரா கோபமாக பேசினார்.

மரண தண்டனையை எதிர்ப்பவர்கள் கூட இத்தகைய சமூக குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என்பதில் மாறுபடமாட்டார்கள்.

உலகத்தின் ஏழைகளில் மூன்றில் ஒருவர் இருக்கும் இந்தியா போன்றதொரு நாட்டில் இப்படி பொதுச் சொத்துகளைக் கொள்ளையடிப்பதைக் கடும்குற்றமாகவே கருதவேண்டும்.

இந்த கோணத்தில் பார்த்தால் செல்வி ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை மிக மிக குறைவே.

ஜெயாவின் சிறைத் தண்டனையைத் தொடர்ந்து அவருக்கு ஆதரவும்,அனுதாபமும் மக்களிடம் கூடியுள்ளது. அவரின் அடிவருடிகள் சாலையெங்கும் ஆக்கிரமித்து நடத்தியப் போராட்டங்களோடு,அவர்களின் சுவர் விளம்பரங்கள் அவர்கள் இந்த கைதை எப்படி புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை தெளிவுபடுத்துகிறது.

‘அம்மாவை உடனே விடுதலை செய்தால் தமிழக முதல்வர், இல்லையேல் அவர் கர்நாடக முதல்வர்’ போன்ற நகைச்சுவை சுவரொட்டிகளுக்கு இடையில் தூக்கலாக இருந்தன மூன்று விசயங்கள்.

முதலாவது...

காவிரித்தாய்க்கு கர்நாடகத்தான் தண்டனை அளிப்பதா? என்று காவிரி பிரச்சனையில் ஜெயலலிதா உறுதியாக நின்று உரிமையை நிலைநாட்டினார்(?) எனவே கர்நாடகத்து நீதிபதி தண்டனை அளித்துள்ளார் என்று ஒரு பிரிவினர்..

இரண்டாவது...

அம்மாவுக்கு தண்டனை அளிக்க சதி செய்த இராசபக்சேவைத் தூக்கிலிடுவோம். இலங்கைப் பிரச்சனையில் அம்மா தமிழர்களுக்காக போராடியதால் இராசபக்சே இங்குள்ளவர் களோடு சேர்ந்து சதி செய்து அம்மாவுக்கு தண்டனை அளித்து விட்டான் என்றொரு பிரிவினர்.

மூன்றாவது...

‘1,76,000 கோடி சுருட்டிய கருணாநிதியே! எங்கள் அம்மாவுக்கு தண்டனை வாங்கித் தர என்ன யோக்கியதை இருக்கு உனக்கு?’ என்று கருணாநிதி தான் இதற்கெல்லாம் காரணம் என்று மற்றொரு பிரிவினர்.

இந்த ஆதரவு முழக்கங்கள் எதுவுமே சுப்பிரமணிய சுவாமியின் கட்சியான பா.ச.க வை விமர்சிக்கவேயில்லை என்றது ஓர் அதிர்ச்சியான உண்மை. இத்தனை ஆதரவு முழக்கங்களுக்கு இடையிலும் சில ஊடகங்களும் பத்திரிக்கைகளும் தொடர்ந்து ஒரு விசயத்தைச் சித்தரிக்க முனைப்போடு செயல்படுகின்றன.

‘ஒரு சிலர் நீதி துறையில் ஊழல் செய்யலாம். ஆனால் இந்திய நீதித்துறை சுதந்திரமாக இயங்குகிறது. எனவே எவ்வளவு பெரியவராக இருந்தாலும் நீதித்துறை சரியான தீர்ப்பு வழங்கும் என்ற ஒரு மாயையை பரப்பி வருகின்றன. இந்த மாயையைக் கொஞ்சமும் வெட்க மின்றி வெளியிட்டுள்ளார் சி.பி.எம்-ன் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்.

‘சட்டத்தின் முன் அனைவரும் சமம். சனநாயகத்தின் அடிப்படை இது தான்’ என்றார் . எந்த அளவுக்கு சி.பி.எம். வர்க்க அரசியலிருந்து விலகி சென்றுவிட்டது என்பதற்கு இதைவிட வேறு சாட்சியம் இருக்க முடியுமா?

லெனின் திரும்ப திரும்ப ஒரு விசயத்தைச் சுட்டிக் காட்டுகிறார். அரசும் அதன் நீதி,நிர்வாகத் துறைகளும் வர்க்கங்களைத் தாண்டி சுதந்திரமாக செயல்படுகின்றன என்ற மாயையைப் பரப்ப ஆளும்வர்க்கங்கள் முயற்சித்து கொண்டே இருக்கும். நாம் இந்த மாயையை தொடர்ந்து அம்பலபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்று லெனின் வலியுறுத்தியது ஜி.ராமகிருஷ்ணனுக்கு நினைவில் இருக்க வாய்ப்பில்லை.

ஜி.ராமகிருஷ்ணன் சொல்வது போல் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால் மோடி இப்போது சிறையில் அல்லவா இருக்க வேண்டும்? ஆனால் அதையும் மீறி இந்த அரசு மற்றும் அதன் நீதிமன்றங்கள் முன் அனைவரும் சமம் என்று அவர் கூறுவது யாரைத் திருப்திப்படுத்த என்பதை அவர்தான் கூற வேண்டும்.

இந்தியாவின் மிக முக்கியமான மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு தண்டனை கொடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்றால் அவர் போன்ற உள்ளூர் ஆளும் வர்க்கத் தலைமையையும் மீறி ஒரு சக்தி பலமாகச் செயல்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

பிராந்திய கட்சிகள் வளர்வது நாட்டுக்கு நல்லதல்ல என்று மன்மோகன்சிங்கே கூறினார். நாட்டுக்கு நல்லதல்ல என்றால் இந்தியா முழுமையும் தங்கு தடையின்றி கொள்ளையடிக்கும் அம்பானிக்கும், டாட்டாவுக்கும் நல்லதல்ல என்று பொருள். அதைத்தான் மோடி அமுலாக்கி வருகிறார். மாநிலக் கட்சிகள் ஒவ்வொன்றாக தாக்கி அழிக்க வருகிறார். இதற்கு அவர்களின் நெருங்கிய சகாக்கள் சிவ சேனையும் அ.தி.மு.க.வும்கூட விதிவிலக்கில்லை என்பது நிரூபணமாகியுள்ளது. விரைவில் அகாலிதளமும் இந்த பட்டியலில் சேர்ந்துவிடும். அரியானா தேர்தல் பரப்புரையின்போது ‘சிறையில் இருப்பவர்களின் ஆதரவு எங்களுக்குத் தேவையில்லை’ என்று மோடி கூறியது சௌதாலாவையும் லல்லுவையும் மட்டும் குறிக்கவில்லை. ஜெயலலிதாவையும் சேர்த்துத்தான் என்று ஊடகங்கள் ஒப்புக் கொண்டுள்ளன. ஜெயாவின் கைது இந்திய அரசியலில் நடந்துவரும் ஒரு திருப்பத்தை சுட்டிக் காட்டுகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.

அடையாள அரசியலில் ஒன்றாக இருந்த பா.ஜ.க., சிவசேனா, அ.தி.மு.க. ஆகிய அனைத்தும் வர்க்க அரசியல் மென்மேலும் கூர்மையடைய தங்கள் உண்மையான உருவத்தைக் காட்டத் தொடங்கியுள்ளன. இந்த மாநிலம் தழுவிய கட்சிகள் எல்லாம் ஏதோ மக்களுக்காக நின்றன என்பது போன்ற மாயையை முதலில் உடைக்க வேண்டும். மோடியின் ‘சூதாட்ட முதாலிகளின் அரசியலைத்தான் சிவ சேனாவும், அ.தி.மு.க. வும் அந்தந்த மாநிலங்களில் அமுலாக்கிக் கொண்டிருக்கின்றன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. 1980 க்கு பிறகு அசுர வேகத்தில் வளர்ந்த சூதாட்ட முதலாளிகள், அரசியல் அரங்கிலும் தங்களைத் தீர்மான கரமாக நிலைநாட்ட முயல்கின்றனர்.

இந்தியாவெங்கும் ஒரே கட்சி, ஒரே ஆட்சி என்பதை உருவாக்கத் தீவிரமாக முயல்கின்றனர். ஜெர்மனியின் பின்னடைவுக்கு அடிப்படைக் காரணம் பல கட்சிகள் இருப்பதுதான் என்று கூறிய இட்லர் தங்களது கட்சியைத் தவிர பிற கட்சிகள் அனைத்தையும் தடை செய்தான் என்பது வரலாறு. மோடி இதை இந்திய வடிவில் செய்ய நினைக்கிறார்.

இந்து- இந்தி- இந்தியா. ஒரே கட்சி - ஒரே ஆட்சி. வருங்கால அரசியல் என்பது இது நடக்குமா? நடக்காதா? என்பதை ஒட்டியே நடைபெறும்.

நம்மைப் பொறுத்தவரை மோடி வகையறாக்களின் இந்த கொடுங்கனவை அ.தி.மு.க. உள்ளிட்ட பிராந்திய சுரண்டல் சக்திகளின் தலைமையில் எதிர்ப்பதா? அல்லது இடதுசாரி சனநாயக சக்திகளின் துணிச்சலான முன்முயற்சியில் தலைமையை உருவாக்குவதா? என்பதைப் பற்றியே அதிகம் கவனம் செலுத்த வேண்டும். சி.பி.ஐ.யும், சி.பி.ஐ(எம்)மும் முதல் தெரிவைத்தான் மேற்கொள்ளும் என்ற சூழலில் நாம் இரண்டாவது தெரிவை விரும்புகிறோம்.

யுத்தத்தின் கோடுகள் வரையப்பட்டுள்ளன. யுத்தம் தொடர்கிறது.

Pin It

உலகம் முழுவதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்காட்லாந்து தேசத்திற்கான பொது வாக்கெடுப்பு செப்டம்பர் 18 அன்று நடைபெற்று, அம்மக்கள் பிரித்தானியாவோடு இணைந்து இருப்பது என்ற முடிவை எடுத்திருக்கிறார்கள். இப்பொதுவாக்கெடுப்பிற்கு முன்னர் நடைபெற்ற விவாதங்களும் அதன் இறுதி முடிவும் உலகம் முழுவதும் பலத்த அரசியல் கருத்து மோதல்களை உண்டாக்கி மீண்டும் ஒரு முறை தேசங்களின் அரசியல் சுயநிர்ணய உரிமை பல்வேறு முகாம்களுக்கு மத்தியில் விவாதப் பொருளாக மாற்றியுள்ளது.

scotland

 தீவிர வலதுசாரிகள், பன்னாட்டு அதிகார மையங்கள், மூன்றாம் உலக நாடுகளின் அரச பீடங்கள், உலகெங்கும் போராடி வரும் தேசிய விடுதலை ஆற்றல்கள், சோசலிஸ்டுகள் ஆகியோர் தங்கள் நோக்கிலிருந்து இச்சிக்கலின் நடப்பு அரசியல் யதார்த்தம் குறித்தப் பரிசீலனையை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள். இது குறித்த விவாதத்தை இன்றைய சமகால அரசியல் சூழலோடு பொருத்தி நாமும் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

அழகான ஸ்காட்லாந்து தேசமும் அதன் மக்களும் முன்னூற்றி ஏழு ஆண்டு காலமாக பெரிய பிரித்தானியாவோடு (Great Britain) கொண்டிருந்த இணைப்பு குறித்த மீள்பரிசீலனையை, 21-ஆம் நூற்றாண்டின் மனிதகுல நாகரீக வளர்ச்சியின் உச்சபட்ச நவீன அரசியல் தீர்வு முறையோடு பொருத்தி தங்கள் சிக்கலுக்கு விடைதேட முயன்றிருக்கிறார்கள். ஐக்கிய இராச்சியத்தின் (United Kingdom) அரசியல் அமைப்பில் இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வட அயர்லாந்து ஆகிய நான்கு தேசங்களும் உள்ளடங்கியுள்ளன. இந்த அரசமைப்பின் கொடுங் கோன்மையின் கீழ் ஐரீஷ் மக்கள் வலி மிகுந்த துயரைச் சந்தித்திருக்கிறார்கள். மூன்று நூற்றாண்டின் கடினமான போராட்டத்திற்குப் பிறகு, மத ரீதியாக துண்டாடப்பட்ட சிறிய அயர்லாந்து தேசத்தைத்தான் அவர்களால் பெற்றுக்கொள்ள முடிந்தது. ஆங்கில காலனிய ஆதிக்கத்தின் இரத்த வரலாற்றின் சுவடை உலகம் இன்றும் மறந்துவிடவில்லை. ஸ்காட்லாந்தின் வரலாறும் இதற்கு மாறுபட்டதல்ல. பிரித்தானிய அரசமைப்புக்கு உட்பட்ட போராட்டத்தின் ஊடாக தங்கள் உரிமைகளைக் கோரிக் கொண்டிருந்த ஸ்காட் மக்கள் முட்டி முட்டி மோதி, இப் போது பொது வாக் கெடுப்பிற்கு வந்து நின்றிருக்கிறார்கள். ஸ்காட்லாந்து தனியரசுக்கான கோரிக்கையை ஸ்காட்லாந்தின் தேசியவாதக் கட்சியும், ஸ்காட் சோசலிசக் கட்சியும் ஒருங்கே முன்னெடுத்திருக்கின்றன. இக் கட்சிகளின் தலைவர்கள் தங்களின் பல உரைகளில் குறிப்பிட்டிருப்பதுபோல அவர்களுடைய கோரிக்கை ஒரு வழக்கமான தேசியவாதக் கோரிக்கை அல்ல. மாறாக ஸ்காட் சமூகத் தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் தடையாக உள்ள அரசியல் அமைப்பு முறையில் மாற்றத்தைக் கொண்டுவருவது. நார்டிக் நாடுகளைப் போன்ற வளர்ச்சியடைந்த சனநாயக சமூக ஏற்பாட்டை கண்டடைவதற்கான வழி முறையாகத்தான் தங்களுடைய தனி யரசுக் கோரிக்கையை முன்னெடுத் திருக்கிறார்கள்.

பொதுவாக்கெடுப்புக்கான வாதப் பிரதிவாதங்களில் தனியரசுக் கோரிக் கைக்கான ஆதரவாளர்கள் முன்வைத்த காரணங்கள், முதன்மையாக பிரித் தானிய அரசுடைய சமூக சீர்த் திருத்த நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார சீர்த்திருத்தத்த நடவடிக்கைகளை மையமிட்டு இருந்தன. இதில் ஸ்காட் மக்களின் தேசிய அடையாளமோ அல்லது அது சார்ந்த உணர்ச்சிப் பூர்வமான கருத்துகளின் முன் வைப்போ மங்கலானதாகவே உருவம் கொண்டிருந்தது. அதுவும்கூட ஸ்காட் பெருமைவாத அடிப்படையில் அல்லாமல் இங்கிலாந்தில் வளர்ந்துவரும் ஆங்கிலப் பெருந்தேசியவாதத்திற்கு எதிரானதாகவே அமைந் திருந்தன.

ஸ்காட்லாந்தின் பொருளியல் நிலைமை பிரித் தானியாவின் மற்றையப் பகுதிகளைவிட மிகவும் பின்தங்கியதாகவே உள்ளது. ஏறக்குறைய பதினேழு விழுக்காட்டுக்கும் மேற்பட்ட மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கிறார்கள். மற்றைய ஐரோப்பிய தேசங்களைவிட அதீத வறுமை சூழல் நிலவுவதையே இப்புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. ஸ்காட் லாந்து மக்களின் வாழ்க்கைத் தரம் அங்குள்ள அரசின் சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளைச் சார்ந்தே இருக்கிறது. அரசின் மொத்த வருவாயில் பொதுச் செலவினங்களுக்கு அதிகம் செலவிடுவதன் வாயிலாக ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத்தரம் ஓரளவுக்கு உத்தரவாதப்படுத்தப் படுகிறது. இந்த சமூகக் காப்பு நடவடிக்கையில் இருந்து விலகிக் கொள்வதை மையப்படுத்திய பிரித் தானிய மைய அரசின் அரசியல் பொருளாதார சீர்த்திருத்தங்கள் மக்களை நடுத்தெருவில் நிறுத்தி இருக்கின்றன. ஒருபுறம் ஸ்காட்லாந்து தேசத்தின் வளங்களைச் சூறையாடிக்கொண்டு, உற்பத்தி மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை உத்தரவாதப்படுத்தாத நிலையில், சமூகப் காப்பு நடவடிக்கைகளை விலக்கிக் கொள்ளும் சீர்த்திருத்தங்கள் பிரித்தானிய அரசு மீது கோபத்தையும் எல்லையற்ற சீற்றத்தையும் ஸ்காட்லாந்து மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

அண்மைக் காலமாக இங்கிலாந்தில் வளர்ந்துவரும் வலதுசாரிப் போக்கும் பழமைவாதப் பிடிப்பும் பிற மக்களுக்கு அச்சத்தையும் பாதுகாப்பின்மையையும் அதிகரித்துள்ளது. இன்னொருபுறம் தாட்சர் காலந்தொடங்கி தீவிரமாக அமல்படுத்தப்பட்டுவரும் புதிய தாராளவாதக் கொள்கைகள் சமூகப் பொருளாதார ரீதியாக பாதுகாப்பற்ற சூழலையும் உருவாக்கி உள்ளது. பி.என்.பி (British Nationalist Party) மற்றும் யூகிப் (United Kingdom Independent Party) ஆகிய தீவிர வலது சாரிக் கட்சிகள் பிற மக்கள் மீதான இன வெறுப்பையும் வன்முறை நடவடிக்கைகளையும் தூண்டிவிடுகின்றன. தொழிலாளர் கட்சியும் டோரிக் கட்சியும் வளர்ந்துவரும் பாசிச அரசியல் நிலைமையைக் கண்டு கொள்ளாமலும் மக்கள் விரோதப் பொருளாதார சீர்த்திருத்தங்களை நிறை வேற்றுபவையாகவும் இருக்கின்றன. அடிப்படையில் ஸ்காட்லாந்தின் பெருந்திரளான உழைக்கும் மக்கள், தொழிலாளர் கட்சியின் ஆதரவாளர்களாகவும் தாராளவாத இடதுசாய்வு உள்ளவர்களாகவும் இருப்பவர்கள். இந்நிலைமைதான் தனியரசுக் கோரிக்கையைத் தீவிரப் படுத்தியது.

வளர்ச்சியடைந்த சமூக அரசியல் உணர்வுள்ள ஸ்காட்லாந்து மக்களுக்கு மைய நீரோட்டக் கட்சிகள் துரோகம் இழைப்பதாகவும் புதிய வலதுசாரிக் கட்சிகள் அச்சத்தைத் தருபவையாகவும் இருக்கின்றன. இந்நிலையில்தான், வளர்ச்சி அடைந்த நார்டிக் நாடுகளைப் போன்ற மேம்பட்ட கூட்டரசுக்கான அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தையும் ஏகபோக மூலதனம் மற்றும் புதிய தாராளவாத பொருளாதார அமைப்புக்கு மாற்றாக முற் போக்கான பொருளாதார அமைப்பையும் கோருவதன் பின்னணியில் தனியரசுக் கோரிக்கையை முன் வைத்தார்கள்.

பொதுவாக்கெடுப்பும் பிந்தைய நிலவரமும்:

ஸ்காட் மக்கள் மத்தியில் தனியரசுக் கோரிக்கைக்கான ஆதரவு செப்டம்பருக்கு முந்தைய இரண்டு மாதங்களில் பெருமளவு அதிகரித்து வருவதைக் கருத்துக் கணிப்புகள் தொடர்ந்து வெளியிட்டு வந்த நிலையில், வெஸ்ட்மினிஸ்டர் நாடாளுமன்றமும் பக்கிங்காம் அரண்மனை வட்டாரமும் பதற்றம் அடைந்து அலறத் தொடங்கின. இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இரண்டு பிரதானக் கட்சிகளும் ஏகபோக ஊடக அதிகார சக்திகளும் ஸ்காட்லாந்தின் மேட்டுக்குடி வர்க்கமும் தனியரசுக் கோரிக்கைக்கு எதிராக ரசபாசமான பல அனுதாப நாடகங்களை அரங்கேற்றின. ஒருபுறம் ஸ்காட்லாந்து பிரிந்தால் ஐரோப்பிய யூனியனின் சலுகைகளை இழக்க நேரிடும், பெரும் பொருளாதாரக் குழுப்பம் நிகழும், இருக்கின்ற உத்தரவாதமான பணிப் பாதுகாப்பை, சமூகப் பாதுகாப்பை இழக்க நேரிடும் எனப் பயமுறுத்தியும் இன்னொருபுறம் நாமெல்லாம் ஒரு தாய் மக்கள், ஸ்காட்லாந்திற்கு அதிகாரத்தைப் பரவலாக்குவோம், சமமற்ற விவகாரங்களைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம், பொதுவாக்கெடுப்பு அன்று ஸ்காட்டின் தேசியக் கொடியை உடையாக இங்கிலாந்தின் அதிகார வர்க்கமும் அரசியல் நடிகர்களும் அணிவார்கள் என்றெல்லாம் நயமாகப் பேசியும் ஸ்காட்டின் மேட்டுக்குடியும் இங்கிலாந்தின் ஆளும்வர்க்கமும் இணைந்து ஒரு கூட்டு நாடகத்தை அரங்கேற்றினர். ஆனால், ஸ்காட் மக்களும் சோசலிஸ்ட் களும் சனநாயக ஆற்றல்களும் இந்த நாடகத்தைப் புரிந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் மேம்பட்ட வழியில் இணைந்திருப்பது என்ற ஓர் அரசியல் தெரிவை மேற்கொண்டு தங்கள் அரசியல் கோரிக்கைக்கு பின்னுள்ள சமூகப் பொரு ளாதாரக் கோரிக்கைகளுக்கான நியாயத்தையும் அழுத்தத்தையும் அனைத்துலக சமூகத்தின் முன் வலுப்படுத்தி யுள்ளனர். மொத்தம் பதிவான 84.6% வாக்குகளில் 44.7% வாக்குகள் தனியரசுக்கும் 55.3% வாக்குகள் சேர்ந்திருப்பதற்கும் பதிவானது. இந்நேரத்தில் நமக்கு, 'நண்பனை நிதானமாக தேர்வு செய். நண்பனை மாற்றுவதை அதைவிட நிதானமாக செய்!' என்ற ஸ்காட் லாந்தின் புகழ்பெற்ற பழமொழிதான் நினைவுக்கு வருகின்றது.

பொதுவாக்கெடுப்பும் உலகமும்:

ஸ்காட் தனியரசுக் கோரிக்கைக்கு அதரவு பெருகுவதைக் கண்ட அமெரிக்க மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சகங்களும் உலகின் அதிகார மையங்களும் பதற்றத்தை வெளிப்படுத்தின. உலகம் முழுதும் இருக்கும் சோசலிஸ்ட்களும் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களும் ஆங்கிலப் பாட்டாளி வர்க்கத்தின் முன்னணி செயல்வீரர்களும் ஸ்காட் மக்களின் தனியரசுக் கோரிக்கையை உற்சாகத்துடன் ஆதரித்து உலகம் முழுதும் எடுத்துச் சென்றனர்.

ஸ்பெயினின் ஸ்கேட்டலினா தேச மக்களும் கிழக்கு உக்ரைனின் டொனஸ்கு தேச மக்களும் தங்களின் தேச விடுதலைக் கோரிக்கையை முன்னிறுத்தி ஸ்காட் மக்களை வாழ்த்தி பல்லாயிரக்கணக்கில் ஆதரவுப் பேரணிகளில் பங்கு பெற்றனர். காஷ்மீர், குர்து, பாலஸ்தீன், குயூபக், பாஸ்க், ஈழம் என தேசிய விடுதலைப் போராட்டத்தில் கள முனையில் இருக்கின்ற தேச மக்கள், மீண்டும் ஒருமுறை தேச - அரசு சிக்கலை சமாதானப்பூர்வமாக சனநாயக வழியில் உலக அரங்கில் தீர்த்துக் கொள்ள முடியும் என்ற உற்சாகம் அடைந்தனர். ஆனால் உலகின் அதிகார மையங்களும் மூன்றாம் உலக நாட்டின் நாடாளுமன்ற மன்னர்களும் வலதுசாரி பிற் போக்கு சக்திகளும் இதற்கு எதிர்நிலையில் நின்றன. மக்களின் சுயநிர்ணய உரிமையைத் தோற்கடிப்பது ஏகாதிபத்திய பொருளாதாரவாத எல்லைக்குள் அல்லது பெருந்தேசிய பெருமூலதன அரசமைப்புக்குள் ஒடுக்கப் படும் தேசங்களின் வளங்களை, மக்களின் உழைப்பைச் சூறையாடுவது, வன்முறையின் ஊடாக ஒடுக்கப்படும் தேசங்களை இரத்தக் களரியால் மூழ்கடிப்பது என்ற பழைய சாம்ராஜ்ஜிய காலக் கனவுகளோடு புதிய உலக மயமாக்கலை அமல்படுத்தும் நிலையில் ஸ்காட்லாந்தின் பொதுவாக்கெடுப்பை எதிர்த்து நின்றனர்.

நமது தமிழகத்தின் குறுகிய தேசியவாத ஆய் வாளர்களோ எவ்வித வர்க்கப் பார்வையுமின்றி உலகமய ஒழுங்கமைப்பின் கால வரலாற்றுப் பார்வையுமின்றி ஸ்காட்லாந்தில் பிற இன மக்களின் குடியேற்றமும் விகிதாச்சார அதிகரிப்பும் பொது வாக்கெடுப்பின் முடிவை நிர்ணயித்ததில் முதன்மை பங்கு வகித்தது என்ற மேம்போக்கான இனவாத ஆய்வு முடிவுகளை அறிவியலாக முன் வைக்க முயற் சிக்கிறார்கள். உண்மையில் சொல்லப் போனால், முழு சுதந்திரத்திற்கு பதிலாக இங்கிலாந்து அரசியின் கீழ் தனிநாடாக இருக்கத் தயார் என்ற பிற்போக்கு கோரிக்கையைத் தான் ஸ்காட்லாந்தின் தேசியவாதக் கட்சித் தலைவரும் ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தின் முதல் அமைச்சருமான அலெக்ஸ் அல்மாண்டு முன் வைத்தார் என்ற உண்மையைக் கூட இவர்கள் சொல்ல மறுக்கின்றார்கள். ஆனால் ஸ்காட் சோசலிஸ்ட் கட்சிதான் முழு சுதந்திரத்தையும் அக்கோரிக்கைக்கான சமூகப் பொருளாதார உள்ளடக்கத்தையும் தீவிரமாக எடுத்துச் சென்றது, அதன் பிறகுதான் தனியரசுக்கான ஆதரவு வாக்கு சதவிகிதம் பெருகியது என்பதையும் இந்த நேரத்தில் ஓசையின்றி மறைத்துவிடுகிறார்கள். ஒரு மொழி இன மக்கள் என்பதால் எழுந்த கோரிக்கையாக விளக்கப்படுத்தி, ஸ்காட்லாந்து மக்களின் சுதந்திரக் கோரிக்கைக்கு பின்னுள்ள சமூகப் பொருளாதாரக் காரணிகளை மூடி மறைத்து, ஒரு தேசத்தில் தேசிய மற்றும் மொழிச் சிறுபான்மையினரை எதிர் நிறுத்தி, சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டையே குழி தோண்டிப் புதைத்து விடுகிறார்கள். தேசம், தேச - அரசு, சனநாயகம் போன்ற வளர்ச்சியடைந்த அரசியல் வரையறுப்புகளை இனவாத சேற்றுக்குள் மூழ்கடித்துவிடுகிறார்கள்.

இன்றைய உலகயமாக்கலை, பெருமூலதனக் கொள்ளையை, அதற்கிசைவாக நடத்தப்படும் ஏகாதிபத்திய பண்பாட்டு ஆதிக்கத்தை எதிர்த்த ஒரு போராட்டத்தின் பகுதியாகத்தான் தேசிய சுதந்திரத்தைக் காத்துக் கொள்ள முடியும் என்ற சமகால அரசியல் யதார்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். தேசியப் போராட்டத்திற்கு மொழிவரம்போ இனவாத ஆய்வோ மட்டும் போதுமானதல்ல. அக்குறிப்பிட்ட சமூகத்தின் திட்டவட்டமான அரசியல் பொருளாதார நலன்களைப் புரிந்து கொள்வதும் அதற்கான திட்டவட்டமான கோரிக்கைகளை வளர்த்தெடுப்பதும் இன்றியமையாததாகும். இதை தான் ஸ்காட்லாந்து பொதுவாக்கெடுப்பும் அதன் முடிவும் நமக்கு சுட்டி நிற்கின்றன.

Pin It

அன்புத் தோழரே, வணக்கம்…

கடிதம் வாயிலாக உங்களோடு உறவாட வாய்ப்புக் கிட்டியதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். தமிழக மக்களின், பொருளாதார, அரசியல் மற்றும் பண்பாட்டு பிரச்சனைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். கடிதத்தைப் படித்து முடித்தபின் உங்கள் உணர்வுகளை நீங்களும்கூட என்னிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறேன். நல்லது தோழரே இனி விசயத்திற்கு வருவோம்.

தமிழகத்தின் முதன்மைப் பிரச்சனைகள்

‘தமிழக மக்களின் முக்கியப் பிரச்சனைகள் என்னென்ன‘ என்று கேட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள், தோழரே? காங்கிரஸ் அரசாங்கம் கடைபிடித்த மக்களுக்கு விரோதமான அதே கொள்கைகளையே பாரதீய ஜனதா அரசாங்கமும் கடைபிடிப்பதால் தமிழ் மக்களின் துயரம் மேலும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.

jayalalitha cartoonதொழிலாளர் நலச் சட்டங்களில் திருத்தம், நெய்வேலி அனல்மின் நிலைய தொழிலாளர்கள் போராட்டம், நோக்கியா ஆலை மூடல் அறிவிப்பு என தொழிலாளர் வர்க்கத்தின் மீது நரேந்திர மோடி அரசாங்கத்தின் தாக்குதல்கள் தொடங்கியிருக்கின்றன.

விளை நிலங்களிலிருந்து, தமிழக விவசாயிகளை அகற்றிவிட்டு, விவசாயத்தை கார்ப்பரேட் கம்பெனிகளிடம் ஒப்படைக்கும் சதித்திட்டத்தை, மோடி அரசாங்கம் தீவிரமாக அமலாக்கி வருகிறது.

மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் மத்திய அரசு வஞ்சிப்பதால், தமிழ்நாட்டின் கிராமப்புற ஏழைகளின் அன்றாட வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கிறது

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள சுமார் 1 கோடி இளைஞர்களுக்கு, வேலை, வெறும் கானல் நீராகவே தெரிகிறது.

காவிரிப்படுகையில் மீத்தேன் திட்டம், அனல் மின் திட்டம், கொங்கு மண்டலத்தில் எரிவாயு குழாய் பதித்தல், கடற்கரைகளில் அணுமின் நிலையங்கள், டாஸ்மாக், மணல் கொள்ளை, திருவண்ணாமலையில் இரும்புத் தாது கொள்ளை என மக்கள் விரோத செயல்கள் தொடர்கின்றன. பெண்கள் மீதான பாலியல் வன்முறை, கருத்தியல் மற்றும் பண்பாட்டுத் தாக்குதல்கள் நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. சாதி ஆதிக்கச் சக்திகள் காவல்துறையின் துணையோடு தலித் மக்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தி வருகின்றன.

கல்வி கடைச்சரக்கானது பழைய கதை, கிடைக்கின்ற கல்வியும்கூட வாழ்க்கை நடத்த உதவவில்லை. அறிவை, பண்பைக் கொடுக்கவில்லை. மனித வாழ்வை மேம்படுத்தவில்லை. மாறாக, தமிழ்ச் சமூகத்தை கருத்தியல் ரீதியாக சீரழிக்கிறது.

அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் அடித்தட்டு மற்றும் மத்தியதர மக்களின் அன்றாட வாழ்வை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

போதும் போதாதென்று சமஸ்கிருத வாரம், இந்தித் திணிப்பு போன்ற தமிழின விரோதப் போக்கும் நீடிக்கிறது.

தோழரே தமிழ்ச் சமூகம் சந்தித்துக்கொண்டிருக்கும் மொத்தப் பிரச்சனைகளும் இவ்வளவுதான் என்று கூறவில்லை. சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் மத்திய ஆட்சியாளர்களின் மக்கள் விரோதக் கொள்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். யாரும் பாக்கி இல்லை என்பதைக் காட்டவே இந்தப் பட்டியல்.

பட்டியலிட்டுள்ள பிரச்சனைகளைக் கணக்கில் கொண்டு பார்த்தால் தமிழ்நாடு ஒரு போராட்ட பூமியாகத் திகழ வேண்டும். அதுதானே சரி? ஆமாம், தற்போது அப்படித்தானே உள்ளது? உண்மைதான் சுமார் பத்து நாட்களுக்கும் மேலாக (செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 7வரை) தொடர்ந்து போராட்டங்கள்தான். அவை மக்கள் பிரச்சனைகளுக்காக அதிமுகவால் நடத்தப்பட்டு இருந்தால் பாராட்டுவோரில் நாம்தான் முதலில் இருப்போம். ஆனால் அதிமுக நடத்திய போராட்டங்கள் பல்வேறு அவதாரங்கள் எடுத்ததற்கான காரணத்தை நாடு நன்கறியும்.

193 பேர் மரணம், அனுதாபம் தேடும் முயற்சிதானே விளைவைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

இரத்தத்தின் இரத்தங்களே

இரத்தத்தின் இரத்தங்களிடம் கேட்க வேண்டிய கேள்வி இதுதான். ‘ஒரு ரூபாய் மட்டுமே மாதச் சம்பளமாக பெற்றுவந்த ஜெயலலிதா 66 கோடி ரூபாய் அளவுக்குச் சட்ட விரோதமாய் சொத்து சேர்த்த குற்றம் நிரூபணமாகியதால் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுள்ளார். வாக்களித்த மக்களின் நம்பிக்கைக்குத் துரோகம் இழைக்கும் வண்ணம், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, சட்டத்திற்குப் புறம்பாக, ஊழல் செய்தது தவறு இல்லையா?‘ என்று கேளுங்கள். ‘ஊழல் குற்றம் நிரூபிக்கப்பட்டு, தண்டனை பெற்ற ஒரு குற்றவாளியை ஆதரித்து, மக்களின் இயல்பு வாழ்க்கையைக் கெடுக்கும் வகையில் சட்டவிரோத, வன்முறைகளை நிகழ்த்துவது எப்படி நியாயம்?‘ என்று வினவுங்கள்.

தோழரே, இரத்தத்தின் இரத்தங்கள் என்போர் வேறு யாரோ அல்ல, அவர்கள் அத்தனைபேரும் நம் அன்புக்குரிய உழைக்கும் மக்கள் தான் என்பதை அவர்களுக்கு உணர்த்தத்தானே வேண்டும். நமக்கு வேறு வழியும் இல்லையே--- உரிமையோடு அவர்களிடம் ஒரு உண்மையைச் சொல்ல வேண்டும் உரக்கச்சொல்ல வேண்டும். அன்பரே ஊழல் செய்ததன் மூலம் 5 ஆண்டுகளில் ஜெயலலிதா சேர்த்த ஊழல் சொத்தின் மதிப்பே 60 கோடி ரூபாய் அப்படியானால் அந்த ஆட்சி காலத்தில், ஜெயலலிதா மூலம் வெளிநாட்டு, உள்நாட்டு முதலாளிகள் கொள்ளையடித்த பணத்தின் மதிப்பு எவ்வளவு இருக்கும் என்பதைக் கணக்குப் போட்டுப் பார்த்திடச் சொல்லுங்கள். நேர்மையான ஆட்சி அமைந்திருக்கும் பட்சத்தில் இந்த ஊழல் நடத்திருக்க வாய்ப்பில்லையே இந்த ஊழலால் யாருக்கு நட்டம்? மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசாங்கம் இருக்கும் நிலையில், ஒரு சில முதலாளிகளின் கைகளுக்குச் சென்ற அதே பெரும் பணம், நாட்டு மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்கப் பயன்பட்டிருக்கும். தமிழ்ச் சமூகம் வளர அது உதவி இருக்கும். அதாவது, சாலை போட, வீடு கட்ட, பள்ளி கல்லூரி, குடிநீர், விவசாயக் கடன், தொழிற்கடன், முதியோர், கணவனை இழந்தோர், திருமண உதவித் தொகைகள், மருத்துவ வசதி இன்னும் இதுபோன்ற பல்வேறு அடிப்படை உரிமைகளை நம் மக்கள் பெற்றிருப்பார்கள் இல்லையா? ஆக இவையெல்லாம் இன்னும் மாபெரும் மக்கள் கூட்டத்திற்கு கிடைக்காமல் போனதற்கு நடந்த ஊழல்தானே காரணம்? கோடிக்கணக்கான மக்களுக்குப் போய்ச் சேர வேண்டிய பணத்தை, விரல்விட்டு எண்ணக்கூடிய முதலாளிகளுக்கு ஜெயலலிதா தாரை வார்த்துக் கொடுத்தது துரோகம்தானே? அதனால்தான், ஜெயலலிதாவுக்கு சிறைத்தண்டனை ஏழரை கோடி தமிழக மக்களின் நல வாழ்வுக்கு மிகப்பெரும் இழப்பை ஏற்படுத்திய ஜெயலலிதா இனியும் தமிழகத் தலைவர் எனில், அது தமிழர்களுக்கு தலைக்குனிவு இல்லையா? இரத்தத்தின் இரத்தங்கள் சிந்திக்கட்டும்.

‘சரி, தோழரே இரத்தத்தின் இரத்தங்களுக்கு வேறு சில கேள்விகள் எழுவது இயல்புதானே? ஊழல் செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டதன் காரணமாக ஜெயலலிதாவுக்கு தண்டனை கொடுக்கப்பட்டுவிட்டது. ஒத்துக் கொள்கிறோம். மேற்படி ஊழலின் பின்னணியில் இருந்துகொண்டு, இந்த 66 கோடியைப்போல் 100மடங்கு ஆதாயம் அடைந்த வெளிநாட்டு, உள்நாட்டு முதலாளிகள் என்ன ஆனார்கள்? அவர்கள் மீது ஏன் வழக்குத் தொடரப்படவில்லை. அதுபற்றி ஏன் யாரும் கேள்வி எழுப்பவில்லை? பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நண்பர்களும் ஏன் இதனைக் கண்டு கொள்ளவில்லை? விடை காணப்படாத இந்த கேள்விகளுக்கு மேல், நமக்கும் ஒரு கேள்வி எழுகிறது, தோழரே மற்றவர்கள் இருக்கட்டும், ஜெயலலிதாவாவது தான் யார், யாரிடம் பணம் பெற்றுக்கொண்டு, என்ன வகையான ஆதாயங்களை அவர்களுக்குச் செய்து கொடுத்தேன், என்று சொல்லலாமே? ஏன் முடியவில்லை? அது அவ்வளவு எளிதானது அல்ல என்பது உங்களுக்குத் தெரியும். ஆம், தனது முதலாளிக்கு எதிராக, எந்த வேலைக்காரரும் செயல்பட முடியாது. மீறிச் செயல்பட்டால், அவர் அந்தப் பணியில் தொடர முடியாது. இதுதான், நிலவும் முதலாளித்துவ சமுதாய அமைப்பின் விதி தன் நலனுக்கும், இலாபத்திற்கும் வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் எவரையும், அரசாங்கம் நடத்த முதலாளி வர்க்கம் அனுமதிக்காது. அந்த விதியின் நடைமுறையைத்தான் தமிழகத்தில் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

இந்திய ஆளும் வர்க்கம் மக்கள் நம்பிக்கையை இழந்த காங்கிரசை மத்திய ஆட்சிப் பொறுப்பிலிருந்து அகற்றிட விரும்பியது. மாற்றாக, பாரதீய ஜனதாவை அமர்த்திக்கொண்டது. கூட்டணி ஆட்சி தன் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள தடையாய் இருப்பதாய் ஆளும் வர்க்கம் உணர்ந்ததும்கூட பாரதீய ஜனதா என்ற ஒற்றைக் கட்சியை ஆட்சியில் அமர்த்த காரணமாய் அமைந்தது. அதேபோல், பலம் வாய்ந்த மாநிலக் கட்சிகள், மாநிலங்களை ஆள்வதால், மத்திய அரசாங்கத்தை மட்டும் வைத்துக்கொண்டு, இந்தியப் பெரு முதலாளிவர்க்கம், தான் விரும்பியபடி அந்த மாநிலங்களின் வளங்களைக்கொள்ளை அடிக்க முடியவில்லை. சரியாகச் சொல்லப்போனால், மோடி ஆட்சியைப் பயன்படுத்தி குஜராத்தில் கொள்ளையடித்தவர்கள், மத்திய ஆட்சி மட்டுமின்றி, ஒவ்வொரு மாநிலத்தையும், பிஜேபி ஆட்சியை அமைத்துக்கொள்ளை அடிக்கவேண்டும் என்று முடிவு செய்துவிட்டார்கள். அதன் விளைவாகவே, தற்போதைய நாடகம் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இந்த உண்மையை இரத்தத்தின் இரத்தங்களான நம் உழைக்கும் மக்களுக்கு ‘மனதைத் தொட்டுச் சொல்லவேண்டும். தமிழ்நாட்டு வளங்கள் ஏற்கனவே, கொள்ளையிடப்பட்டு வருவதை நாமறிவோம். ஆனால், சின்னஞ்சிறிய தடைகளைக் கூட முதலாளித்துவ வர்க்கம் அகற்றிவிட்டது. இனி, அசுர வேகத்தில் தமிழக வளங்கள் சூறையாடப்படும், தடுக்கவேண்டிய தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் என்னதான் செய்கின்றன?

ஆம், தோழரே தமிழ்நாட்டை ஆளும் அதிமுக நடத்திக்கொண்டிருக்கும் போராட்டங்கள் மக்களுக்காக அல்ல ஊழல் குற்றவாளிக்காக இன்னும், சொல்லப்போனால், அவர்கள் அதை உணர்வுப்பூர்வமாக செய்கிறார்கள் என்றுகூட சொல்ல முடியாது. அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள், பல்வேறு அணிகளின் செயலாளர்கள் இடையே நடைபெறும் போட்டியின் விளைவே இப்போராட்டங்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவோ, வளங்களைக் காப்பதற்காகவோ அல்ல அதையும் அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும்.

திமுகவும் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள கட்சி என்பது நாம் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை. காங்கிரஸ் பற்றிச்சொல்லவே வேண்டியதில்லை. அதை நூற்றாண்டுக்கும் மேலாக, இந்தியாவை ஆண்டு ஊழலில் உளுத்துப்போன கட்சி, பாரதீய ஜனதாவும் ஊழலுக்கு விதிவிலக்கல்ல ஏனெனில் மேற்படி 4 கட்சிகளுமே, ஏகாதிபத்திய தாராளமயம் என்ற கொள்ளையைத் தீவிரமாக நடைமுறைப்படுத்துகிறார்கள். எனவே, இவர்கள் யாரும் ஊழலுக்கு எதிராகப் போராடும் தார்மீக உரிமை அற்றவர்கள்.

தேமுதிக, பாட்டாளி மக்கள் கட்சி, மதிமுக, விடுதலைச்சிறுத்தைகள், புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, நாம் தமிழர் போன்றவை ஏதோ ஒருவகையில் மேற்படி ஊழல் சக்திகளோடு கூட்டணி கண்டவர்கள் என்பதை எல்லோரும் அறிவர். அதேபோல், இருபெரம் கம்யூனிஸ்ட் கட்சிகளும்கூட தேர்தலைக் காரணம்காட்டி திமுக அல்லது அதிமுகவுடன் அணி சேர்ந்துள்ளன. ஒரு அய்ந்து ஆண்டில், நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி என மூன்று பொதுத் தேர்தல்களை சந்தித்து வருகிறோம். மட்டுமின்றி, இந்த மூன்று அமைப்புகளுக்கும் இடைத் தேர்தல்களும் நடக்கின்றன. ஆக அவர்களுக்கு அரசியல் என்பது தேர்தல் என்பதாகச் சுருங்கிப் போய்விட்டது.

ஊழலை ஒழிக்க என்னதான் வழி?

தோழரே ஊழலை ஒழிக்க தனி வழி ஏதும் உள்ளதா என்றால் நிச்சயமாக இல்லை. ஊழல் ஒழிப்பு என்பதும் சமுதாய மாற்றத்தில் ஒரு பகுதிதானே? அப்படியெனில் அரசியல் போராட்டத்தின் மூலம் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும். நிச்சயமாக, உபதேசங்களின் மூலமாக சாத்தியமில்லை. அல்லது ஊழல் பேர்வழிகள் தானே வருந்தி திருந்துவர் என நம்புவதும் அறியாமையே. எனவே திமுக, அதிமுக, காங்கிரஸ், பாரதீய ஜனதா ஆகிய 4 ஊழல் கட்சிகளையும், மக்களிடம் அம்பலப்படுத்தி, அரசியல் அரங்கில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் . ஒரு வாக்கியத்தில், கடிதத்தில் எழுதிவிட்டது போலவே, அது அவ்வளவு எளிய செயலல்ல என்பது உண்மைதான், தோழரே ஆனாலும், மாற்றுக்கு அதுவே வழி இதனை எப்படிச் சொல்வது?

மேற்படி நான்கு கட்சிகளும் மேலோட்டமாகப் பார்த்தால் தனித்தனி கட்சிகள்தான். உண்மையில் இவை, ஏகாதிபத்திய, இந்திய பெரு முதலாளிகளின் கட்சிகள், எனவே, இவற்றை வீழ்த்துகிறோம் என்றால், தமிழக உழைக்கும் மக்களுக்கு விடுதலை, சமூக மாற்றம், அரசியல் மாற்றம் என்று பொருள். ஆளும் வர்க்கம் அவ்வளவு எளிதாக அதிகாரத்தை விட்டுவிட மாட்டார்கள். ஏதோ ஒரு கட்சி மட்டுமே போராடி இப்பெரும் செயலை செய்து முடித்திட இயலாது. ஆக, ஒத்த புரிதல் உள்ள சக்திகள் எல்லாம் ஓரணியாய்த் திரள வேண்டும். குறிப்பாக இந்த மாற்றணிக்கு கம்யூனிஸ்டுகள் கருவாக இருக்க வேண்டும். மொத்தத்தில் கம்யூனிஸ்டுகள், மதச்சிறு பான்மையினர், தலித்துகள், பெண்கள், இளைஞர்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தமிழ் தேசிய உணர்வாளர்கள், பகுத்தறிவாளர்கள் என அனைத்து இடது மற்றும் ஜனநாயக சக்திகளும் ஒரு அய்க்கிய முன்னணியாய் உருப்பெற வேண்டும். அதுவே, தமிழக மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் மாபெரும் சக்தியாய் அமையும். அந்தச் சக்தியே, விஷ விருட்சமாய் வளர்ந்து நிற்கும் ஊழல் சக்திகளை வீழ்த்தும். இதுவே, ஊழலை ஒழிக்க வழி.

சமூகத்தை மாற்றி அமைப்பதற்கான போராட்ட அணியே தமிழகத்தின் உடனடி தேவை. சாதி ஒழிந்த, தன்னாட்சி கொண்ட, சமத்துவ தமிழகம் காண போராடுவோம்.

- விடுதலைக் குமரன்

Pin It