எந்த ஒரு விசயத்தையும் உவகை பொங்க சந்தோசித்துப் பேசுகிறவன் நமது செல்லாவாடன் என்கிற செல்லச்சாமி. பூமியில் வந்துதித்து நாற்பது வருடங் களாகியும் இன்னமும் தனக்கொரு இணை தேடி குடும்ப மாகாமல் இளங் காளையாய் (?) துள்ளித்திரியும் இயல்புமிக்க புருஷன். புருஷனெனச் சொல்வது இந்த இடத்தில் இலக்கணப் பிழையாக இருக்கு மேயானால், பொருத்தமான வார்த்தையினை இட்டு நிரப்பிக் கொள்ளவும்.

 ...உத்தியோகம் புருச லட்சண மாமே... அந்த வகையில் செல்லாவாடனுக்கு மற்ற புருஷர்களைக் காட்டிலும் லட்சண விசயத்தில் கொஞ்சம் கூடுதலாகவே மார்க் போடலாம். சாதாரணமாக எல்லா மனிதர்களும் தனக் கேற்றார் போன்ற ஒருவேலையினை உத்யோகத்தைத்தான் தேர்வு செய்து அதன்படி நின்றொழுகு வார்கள். நமது செல்லா... அவர்களையும் தாண்டி உலகத்தில் என்னென்ன தொழில் முறைகள் உண்டோ அத்தனையும் செய்து பார்க்கிற - செய்து கொண்டிருக்கிற வடிவானவன். அவனிடம் "என்னா வேலை தெரியும்' என்று யாரும் கேள்வி கேட்டுவிட முடியாது. "என்ன வேலையிருக்கு' என்றுதான் செல்லா கேட்பான்.

 சைக்கிள் ரிப்பேர், டெய்லரிங், கிரில் ஒர்க்வேலைகள், வெல்டிங், எலக்ட்ரீசியன், பிளம்பர், கொத்தனார், நிமிந்தாள், சித்தாள், கம்பிவெட்டுதல், கூடைமுடைதல், பாய் பின்னுதல், சாக்கு தைத்தல்... ஏவாரம் - ஏவாரமென்றால் பலசரக்கு, பெட்டிக்கடை மட்டுமில்லை, பழைய பொருட்கள் விற்க வாங்க, கஞ்சா, சாராயம் என்று மற்றவர்கள் தொடத்தயங்குகிற விசயங்களைக்கூட எந்த தயக்கமுமின்றி பிசிறில்லாமல் செய்து முடிப்பான். இப்படி அவனைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்தான். இத்தனை பெரிய பீடிகை எதற்கு என்கிறீர்கள்... இதெல்லாம் சாத்தியமா எனவும் கேட்பீர்கள். அதன் பொருட்டே இந்தக்கதை....

 ஒருநாள் இதே ஊரில் கிழக்குத் தெருவில் பூச்சனின் பசுவுக்கு உடம்பு சவுகரியம் இல்லாமல் போனது. அதற்கு ஊசி போட வேண்டும். மாட்டாஸ்பத்திரி ஊருக்கு வெளியே இருந்தது. அங்கே போய் அங்கிருந்த மருத்துவரிடம் இப்படிக்கிப்படி என்று தனது பசுவைப் பற்றியும் தன்னைப் பற்றியும் ஒப்பித்துக் கொண்டிருந்தான் பூச்சன். அந்த மருத்துவரோ பசுவை மருத்துவமனைக்குக் கொண்டுவரச் சொன்னார். பூச்சனோ “தல ஈத்து பசுவுசார்...'' என குழைந்தான். “செனப் பசுவவே ஓட்டிட்டு வாறாக...'' என மருத்துவர் உட்கார்ந்திருந்த சேரை அரைத்தபடி பதிலுரைத்தார். அவரும் கிட்டத்தட்ட "பொதுபொது'வென பசுவினையொத்த உடல்வாகு கொண்டிருந்தார்.

 அந்த நேரம் காம்பவுண்டு சுவர் என சொல்லப்படுகிற மருத்துவமனையின் சுற்றுச் சுவரோரமாய் வளர்ந்து நிற்கிற கொடிக்காப்புளி மரத்தில் தொரட்டிக் கம்பு வைத்து கொடிக் காப்புளிகாய்களை உலுக்கிக் கொண்டிருந்த நமது செல்லாவாடன் எதேச்சையாய் அவர்களுக்கு நடுவில் நுழைய வேண்டி வந்தது.

 கம்பவுண்டர் என அழைக்கப்படுகிற உதவியாளர் இல்லாமல் மருத்துவர் வெளியில் எங்கும் நகரமாட்டார். பை தூக்கிவர வேண்டும், பைக்குள்ளிருந்து கிளவ்ஸ் எடுத்துத்தர வேண்டும், உபயோகித்த கிளவ்ûஸ தூர எறிய வேண்டும், ஊசிபோட நீடில் எடுக்க, சிரிஞ்சில் மருந்து ஏற்றிக் கொடுக்க, முக்கியமாய் மாட்டின் குணம் அறிந்து உளவுசொல்ல... இப்படி மருத்துவருக்கு உதவியாளரால் ஏகப்பட்ட அனுகூலங்கள்... அவர் இல்லாமல் மருத்துவ மனையை விட்டு வெளியேறுவதென்பது சாத்தியமே இல்லை.

 தலயீத்து, கலப்பினப் பசு... தரை தொட்டுப் போகும் பெருத்தமடி... வீதியில் அழைத்து வந்தால் ஊர்க்கண்படும். திருஷ்டி பட்டால் பசுவுக்கும் சிரமம்; குடும்பத்துக்கும் சிக்கல், குடும்பமே பாழாகிப்போகும்... இது பூச்சனின் முறையீடு. கெஞ்சல்.

 பிடுங்கிய கொடிக்காய்க்காயில் பழமாகப் பொறுக்கி ஆளுக்கு இரண்டாய் கொடுத்தான். பூச்சன் ஆவலாய் வாங்கி தோலுரித்து கொட்டை நீக்கி வாயில் அதக்கிக் கொண்டான். மருத்துவர் அசூயையாய் பார்த்து டேபிளின் கோடியில் வைக்கச் சொன்னார்.

 “நம்ம ஆஸ்பத்திரிக்காய் சார் தொவக்கவே தொவக்காது, சூப்பரா இனிக்கும் சார்...!'' என்றவன், “வாங்க சார்.. நாங்... கூட வாரே. மாட்டுக்கு ஊசியப் போட்டு வந்திருவம்.. பையக் குடுங்க சார். நான் தூக்கிட்டு வர்ரேன்... பூச்சா, சார ஏத்தீட்டுப் போக ஒரு ஆட்டாவக் கூப்புட்டுவாப்பா...'' என கைகளைத் தட்டித் துடைத்தபடி சொன்னான்.

 மருத்துவர் அசையவில்லை. செல்லாவாடனால் தனக்கு உதவியாளனாக செயல்பட முடியாது என்று பலவிதங்களில் சொல்லிப் பார்த்தார்.

 “சார்... நானெல்லா காட்ல பெரிய ஆனைக்கே பேறுகாலம் பாத்தவெ...! கொசுவுக்கு கடிவாயில ஊசி போட முடியுமா? நான் போடுவேன் சார்... என்னா பூச்சா, சாருக்கு நம்மளப் பத்திச் சொல்லலியா. ரொம்ப இன்சல்ட் பண்றாரே...'' சலாவரிசை ஆடினான் செல்லா. பூச்சன் செல்லாவின் மகாத்மியங்களை தன்னால் இயன்றமட்டும் எடுத்துச் சொன்னான்.

 ஆட்டோவில் தூக்கி உட்கார வைக்காத குறையாகத்தான் மருத்துவரை ஏற்றினார்கள். மருத்துவருக்கும் ஊரைப் பகைத்துக்கொள்ள முடியாத குணவிஷேச த்தால் நடப்பது நாணல் புதர் சாஸ்தாவின் சங்கல்பமே என்று மனசை தேற்றிக் கொண்டார். நல்லவேளை ஆட்டோவில் தனக்குச் சமானமாய் செல்லா பக்கத்தில் உட்காரவில்லை என்பதில் அவருக்குப் பெருத்த ஆறுதல். டிரைவர் இருக்கையில் அவன் பங்குபோட்டு உட்கார்ந்திருந்தான். பூச்சன் தனது பிள்ளையின் இலவச சைக்கிளில் ஆட்டோவுக்கு முன்னால் "விய்யிங் விய்யிங்' என சைக்கிள் செய்ன் கதறக் கதற ஓட்டிச் சென்றான்.

 இந்தக் கதையின் மூலமாக நமது செல்லாவாடனைப் பற்றிய சேதிகளை மட்டுமல்ல பின்னும் பலவிதமான பேர்களின் கூறுகளையும் நாம் காண வேண்டிவரும். எல்லாம் அந்த நாணல் புதர் சாஸ்தாவின் சங்கல்பமே.

 பூச்சனின் வீட்டு முன்னால் ஆட்டோ நின்றது. பூச்சன் ஓட்டி வந்த சைக்கிளை எங்கே நிறுத்தினான் என்பது தெரியாது... ஆட்டோவுக்குப் பின்புறமிருந்து ஓடிவந்தான். அமைச்சர்களின் வாகனத்தோடு தொடர்ந்து ஓட்டம் பிடித்து வருகிற பூனைப்படை காவலரை ஒத்து இருந்தது அவனது அந்தச் செய்கை. கையில் துப்பாக்கியோ வேறு எந்த ஆயுதங்களையோ சத்தியமாய் பூச்சன் வைத்திருக்கவில்லை. சம்பந்தகாரரை வரவேற்பதுபோல இருகரங்களையும் கூப்பி வரவேற்றான்.

 “உள்ளவாங்க சார்...''

 அதற்குள் நமது செல்லாவாடன், மருத்துவர் ஆட்டோவிலிருந்து இறங்கிக் கொள்ள வசதியாக அவர் பக்கமாய் உட்கார்ந்திருந்த மருத்துவப் பெட்டியைத் தூக்கிக்கொண்டான். கொசுறாக பாம்பாய்ச் சுருண்டுகிடந்த ஸ்டெத்தாஸ்கோப்பையும் அள்ளிக் கொண்டான். மருத்துவர் ஆட்டோவிலிருந்து மெதுவாய் இறங்கி ஆட்டோவுக்குள் கிடந்த கால் ரப்பர் பூட்ஸ்சை எடுத்து மாட்டிக் கொண்டார். அந்த ரப்பர் கவசம் அவருக்கு முழங்கால்வரை நீண்டிருந்தது. சகதி, சேறு, சாணி இவைகளிலிருந்து மருத்துவரைக் காக்கக் கூடியது, அது.

 மருத்துவர் எதிர்பார்த்ததைவிட பூச்சனின் கட்டுத்தரை ரொம்பவும் சுத்தமாய் இருந்தது. தரையில் கல் பதிக்கப்பட்டிருந்தது. அதனால் ஈரக் கசகசப்பு இல்லை. காடி அவ்வப்போது கூளம் அள்ளப்பட்டு சுத்தமாய் வைக்கப்பட்டிருந்தது. பசு, பூச்சன் சொன்னதைப் போல பெருத்த சீவாத்தியாகத் தான் இருந்தது. மடி தாராளமாய் தொங்கிக் கொண்டிருந்தது. எப்படியும் வேளைக்கு பதினைந்து லிட்டருக்குக் குறைவிருக்காது.

 “என்ன செய்யிது...?''

 மருத்துவர் வாய்திறந்து கேட்டதுதான் தாமதம், பதிவு செய்யப்பட்ட ரெக்கார்டரைப் போல் மடமடவென ஒப்பிக்கலானான். கிடறிப் பருவத்துக்கு வருவதற்கு முன்பே அதை சிறுகன்றாய் வாங்கியதிலிருந்து... அதற்கு சிறுபுல் கொடுத்துக் கடிக்க விட்டதில் ஆரம்பித்து, அதை சினைக்குப் போட்டதுவரை நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்த்து முந்தாநாள் பெண்கன்று ஈன்றது... அதன் பிறகு இப்போதைக்கு அது செய்கிற சண்டித்தனம் இரை எடுக்காமல் பயமுறுத்துகிற அதன் ஒத்துழையாமை...

 செல்லாவாடன், மருத்துவரின் கைப் பெட்டியைப் பிடித்துகொண்டு ஸ்டைலாக துள்ளிக் கொண்டிருந்த கன்றுக்குட்டியைத் தடவிக்கொடுத்தபடி நின்றிருந்தான். மருத்துவரோ பசுவை எட்டநின்று நோட்டம் விட்டார். இடதுகையால் பசுவின் வாலைப் பிடித்து மெல்லத் தூக்கினார் "பார்வையிட வேண்டும்'. பசு அவருக்கு ஒத்துழைக்க மறுத்து, வாலை இறுக்கிக்கொண்டது. அதன் காரணமாய் மருத்துவர் குனிந்து பார்க்க வேண்டியிருந்தது. அப்படி குனியவிடாமல் அவரது பெருத்தவயிறு அவரைத் தடுத்தது. மருத்துவரின் அந்த அவஸ்தையினை கண்ட செல்லா எழுந்து வந்தான். பசுவின் முதுகைத் தட்டிக் கொடுத்துக் கொண்டே வந்து வாலை படாரெனத் தூக்கினான். “பாருங்க சார்...'' ஆசனவாய் முத்தம் கொடுப்பதைப் போல உதடுகுவித்து விரித்து விரித்துக் காட்டியது. செல்லா சட்டென பசுவின் அரையினுள் கட்டைவிரலும் ஆள்காட்டி விரலையும் விட்டு விரித்துக் காட்டினான். அதில் லேசாய் சீழ் வடிந்த வண்ணம் இருந்தது. அரையினைத் தொட்டதும் பசு கூச்சத்தில் வசம் திரும்பியது. மூஸ்மூùஸன எதிர்ப்புக் காட்டி காலாடியது. மருத்துவர் பதறிப்போனார்.

 “அதயெல்லா எதுக்குத்தொடுற...?''

 “அந்த பாக்ஸக் கொண்டா... அதுலருந்து டார்ச்ச எடு'' - கையை நீட்டினார். பெட்டிக்குள் கைவிட்டு கறுப்பு நிறத்திலிருந்த டார்ச்சை எடுத்துத்தந்தான் செல்லா. பசுவின் கண்களில் ஒளி பாய்ச்சினார் மருத்துவர். பசு கண்களை நன்றாக முழித்துக் காட்டியது. ஒரு கண்ணில் நீர் கோர்த்து நின்றது. வாயினில் ரப்பர்ப் பாலாய் எச்சில் ஒழுகிக் கொண்டிருந்தது.

 “இஞ்சக்சன் போடணும்...!''

 எந்த இடத்தில் போடுவது என பசுவின் உடம்பில் கண்களை ஓட்டி அதன் மேனியை அளந்தார். அப்பவும் மருத்துவர் பசுவைத் தொட்டுப் பார்க்கவில்லை. பசுவின் தாக்கும் குணம் - திறன் அறியாமல் களத்தில் இறங்க முடியாது.

 “எந்த எடத்தில சார் ஊசி போடணும்...?'' பயமறியாமல் மருத்துவரருகில் வந்து நின்றான் செல்லா...

 “சப்பைலதான்...!''

 “பின்னத்தங்கால் சப்பையா முன் பக்கச் சப்பையா சார்...'' ஏதோ தானே வைத்தியம் செய்யப்போவது போல பெருத்த ஆர்வத்துடன் கேட்டான்.

 “ஃபிளக்ஸ்சிபிலா இருக்கற எடத்தில தான்... போட முடியும்...'' சொன்னபடியே பசுவின் பின்பக்கத்துச் சப்பையினைத் தொட்டு அமுக்கிப் பார்த்தார்.

 “அப்படின்னா முன்னத்திச் சப்பதான் சார் கொழைவா இருக்கும். ஊசி அங்கனதான் சரக்...குன்னு எறங்கும்... முன்னத்தங் கால்லயே ஊசியப் போட்ருவம்...'' என்றவன், மருத்துவர் வாய்திறக்குமுன், “பூச்சா... பசுவ நல்லா இழுத்து ஒட்டக் கட்டிப்போடு... கழுத்துக் கயற சுருக்கு...! கழுத்த திருப்பிறக்கூடாது...'' என்று பூச்சனுக்கு ஆணை பிறப்பித்தான் செல்லா...

 ஆனாலும் மருத்துவர் பசுவுக்குப் பக்கமாய் வரவில்லை. கல்தளம், உடல் பெருத்தபசு, முதல்பிரசவம்... கூச்சத்தில் தடாபுடாவென மிரண்டு உழலவாய்ப்பு உண்டு. வழுக்கியோ அல்லது உடனிருப் பவர்களைத் தள்ளியோ விடலாம். மருத்துவமனை எனில், கம்பிக் கூண்டு போட்டு பூட்டி நிறுத்துகிறபோது எத்தனை பெரிய முரட்டுக் காளையானாலும் பிசுங்க முடியாது. கைகூசாமல் மனச்சலனம் இல்லாமல் மூக்கணாங்கயிறைக்கூட உருவிப் பார்க்கலாம்... இதன் பொருட்டே "ஹவுஸ் விசிட்' செல்ல பெருமளவு ஒத்துக் கொள்வதில்லை.

 பூச்சன், செல்லாவாடனின் ஆணைக் கிணங்க பசுவின் கழுத்துக் கயிறைக் காடியில் இழுத்துக் கட்டினான். பசுவின் பார்வைக்கு மருத்துவர் சிக்காதபடிக்கு பார்த்துக் கொண்டான். பூச்சன் மட்டுமல்ல அவன் வீட்டாளுகள் எல்லாருமே வைத்தியத்திற்கு டாக்டரிடம் ஊசி போடப் போகிறபோது இதைப்போலத்தான் முகத்தைத் திருப்பிக் கொள்வார்கள். கண்களை இறுக மூடிக் கொள்வார்கள். ஆனால் பசுங்கன்று எல்லாவற்றையும் முழிமுழியென முழித்துப் பார்த்துக் கொண்டிருந்தது.

 “பாக்ஸக் கொண்டா...!'' பெட்டிக் குள்ளிருந்து பலவிதமான சாமான்களை எடுத்து கடைபரப்பினார் மருத்துவர்.

 “சுடுதண்ணி கொதிக்கவச்சு கொண்டு வா பூச்சா...!'' செல்லாவாடன் மருத்துவரின் சார்பாகக் குரல் கொடுத்தான்.

 பசுவின் முகத்தோடு முகம் வைத்துக் கொண்டிருந்த பூச்சன் பதில் சொல்வதற்குள் மருத்துவர் “அதெல்லாம் தேவையில்ல...!'' என்றார். மேலும், “ஸ்டெரிலைஸ் பண்ணுன நீடில்தான். யூஸ் அன் த்ரோ சிஸ்டம்'' என செல்லாவாடனை மட்டுப்படுத்தினார். அத்துடன், “கொஞ்சம் ஒதுங்கி நின்னுக்க, நீடில் அப்ளை பண்ணப்போறேன். ஊசி எறிஞ்சி அது குத்தின சமயம் வலியில மாடு மிரளும்'' என மேலும் செல்லாவை ஓரங்கட்ட நினைத்தார். செல்லா மருத்துவருக்குப் பக்கமாய் வந்து நின்று கொண்டான். உதவியாளன் அல்லவா...!

 கவரை உடைத்து நீடிலை வெளியில் எடுத்த மருத்துவர், தலையைச் சாய்த்துக் கொண்டு பசுவின் முன்னத்தங்கால் சப்பையைக் குறிவைத்து எறிந்தார். இரண்டு முறையும் நீடில் கால்சதையில் குத்தி நிற்காமல் பசுவின் கால்குளம்பினடியில் உருண்டு விழுந்தது. செல்லா ஓடிஓடிப் போய் எடுத்து வந்தான். அவனது வருகை பசுவினை மிரளச் செய்தது. தலையைக் குலுக்கி பூச்சனின் பிடியிலிருந்து விடுபட முயற்சித்தது. கையால் மூடியிருந்த கண்ணை விடுவித்து கொட்டத்தைப் பூராவும் சுற்றிப்பார்த்தது. மருத்துவர்... செல்லா வாடன்... கன்று... என கண்களால் ஆலா வட்டம் சுற்றி வந்தது. அதனைக் கண்டு கொண்ட கன்று கழுத்தை நீட்டி கத்த ஆரம்பித்தது.

 மருத்துவர் அந்த நேரம் மிரண்டு போனார். தனது அடுத்த ஆயுதத்தை எடுக்கலானார். அதில் நீடிலைப் பொருத்தினார்.

 “என்ன சார் துப்பாக்கிய எடுக்கறீக...!'' செல்லா அந்த "கன்'னை அதிசயமாய் பார்த்துக் கேட்க, பூச்சன் பயந்து போனான்.

 “அடங்காத அனிமல்ஸ்...'', என்று ஏதோ சொல்ல வந்த மருத்துவர், “இந்த மாதிரி மாடுகளுக்குன்னு ஸ்பெசலா தயாரிச்சது'' என்றார்.

 “இல்ல சார்... முந்தி இருந்த தொப்பி போட்ட டாக்டர் இப்பிடி இப்பிடி தொடையில் தட்டுவார் சார்... தட்டிக்கிட்டே அப்பிடியே ச்சக்குன்னு ஊசிய இப்பிடி எறக்கீருவார் சார்...!''

 சொல்லிக் கொண்டே நமது செல்லாவாடன் பசுவின் முன்னத்தங்கால் சப்பையில் அவன் கைவசம் வைத்திருந்த நீடிலை இறக்கிவிட்டான்...

 பசு, உடம்பில் ஊசி இறங்கிய வலியில் உடம்பை உதறியது. பூச்சனின் கைப்பிடி நழுவியது. வாலால் தன்முதுகில் அடித்தபடி இடமும் வலமுமாய் கல்தளத்தை அதகளப்படுத்தியது. நல்ல வேளையாய் மருத்துவர் ஒதுங்கிக் கொண்டார். செல்லா பசுவை ஓங்கிச் சத்தமிட்டு அதட்டி அடக்கினான்.

 அன்றிலிருந்து செல்லாவாடனின் துணையில்லாமல் அந்த மருத்துவர் இந்த ஊரில் இருக்கிறவரை "ஹவுஸ் விசிட்' செல்வதில்லை என்பது ஊரறிந்த ரகசியமாயிற்று.    

Pin It