உலகத்தில் வாழும் விலங்குகள், பறவைகள், பூச்சிகள், மரம், செடி, கொடி, தாவரங்கள், நீர்நிலைகள், வளர்ப்பு விலங்குகள் மற்றும் மனிதர்கள் உட்பட அனைத்தும் இணைந்தது தான் "பல்லுயிரியம்' என்றழைக்கப்படுகிறது. இதில் நம் வீட்டு சுவற்றில் காணப்படும் குதித்தோடும் சிலந்தி அழிகிறது என்றால், சிலந்தியின் உணவாக கருதப்படும் சிறு பூச்சிகள், கொசுக்கள், ஈக்கள் யாவும் பன்மடங்கு பெருகுவது ஒரு பக்கம் என்றால், சிலந்திகளை உணவாக கொள்ளும் தேன்சிட்டு, தையல் சிட்டு போன்ற மனிதருடன் நெருக்கமாக இருக்கும் பறவை இனங்கள் அழியும் ஆபத்தும் ஏற்படுகிறது. ஒரு உயிரினம் அழிந்தாலும், அதிகளவில் பெருகினாலும் அது ஆபத்து தான். இது, நம் கண்ணெதிரில் காணும் இயற்கை சுழற்சி. இதில் ஒரு கண்ணி அறுபட்டால் ஏற்படும் பாதிப்பு, அதனை சார்ந்து வாழும் மற்ற உயிரினங்களையும் பாதிக்கிறது.

                எந்த ஒரு உயிரியின் அழிவும் வேறொரு தளத்தில் பலமாக எதிரொலிக்கவே செய்யும். இந்த நுணுக்கமான வலைப் பின்னலே இயற்கைச் சுழற்சியின் உணவுச் சங்கிலியாக அமைந்துள்ளது. இதில் பேருயிரான யானை, புலி முதல் சிறு கொசு வரை (மனிதன் உட்பட) அனைத்தும் அடங்கும். பல்லுயிரியத்தின் அடிப்படையே இதனைக் கொண்டு தான் இயங்குகிறது. இயற்கைக்கு எதிராக மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினை உண்டு. இதை மறந்துவிட்டு சுயநலத்தோடும், தான் மட்டுமே ஆகச் சிறந்தவன் என்பதாக செயலாற்றுகிறான், தனக்கான சவக்குழியை தானே தோண்டுவது அறியாமல்....

                அடிமை மனோபாவத்தை வளர்க்கும் நமது கல்விச் சூழலில் சுற்றுச்சூழல், காட்டுயிர்கள் குறித்தான முன்னெடுப்புகள் ஏதும் இல்லாத நிலையில், பசுமை இலக்கியத்தில் இருந்து அது போன்றதொரு முக்கிய நிகழ்வு நடந்தேறியுள்ளது.

                நெருப்புக்குழியில் குருவி, அழியும் பேருயிர்: யானைகள், இயற்கை: செய்திகள் சிந்தனைகள், பாம்பு என்றால்?, வட்ட மிடும் கழுகு போன்ற நூல்களின் வழியே தமிழக வாசகர் பரப்பில் நன்கு அறிமுகம் ஆன இயற்கையியலாளர் ச.முகமது அலி எழுத்தில் வெளிவந்துள்ள அடுத்த முக்கிய நூல் தான் "பல்லுயிரியம்'.

                தமிழில் பிரபலமாகாத கேள்வி - பதில் என்ற இலக்கிய வடிவில் நாம் அறியாத, கேள்விப்படாத பல அறிவியல் பூர்வமான தகவல்களை நம் கவனத்திற்கு நூலாசிரியர் கொண்டு வந்துள்ளார். நமது பல மூட நம்பிக்கைகளை, எண்ணங்களை மாற்றியும் அமைத்துள்ளார். முப்பதாண்டு காலஇயற்கையியல் பணியின் அனுபவம் நூல் முழுதும் வெளிப்பட்டுள்ளது.

     நமது இலக்கிய கர்த்தாக்கள் உருவாக்கி வைத்துள்ள அன்னம் எனும் பறவை பாலில் இருந்து தண்ணீரை தனியே பிரித்தெடுக்கும் என்ற பிம்பத்தை இன்றும் நம்மில் பலர் உண்மை என்று நம்பிக் கொண்டு இருக்கின்றோம். அன்னம் என்ற பறவை நஜ்ஹய் என்ற ஒரு வகை வாத்தை குறிக்கிறது. அன்னம் நம் நாட்டில் இல்லை என்பதுடன், குறைந்த எண்ணிக்கையில் இமயமலை பக்கம் வலசை வரக்கூடியது. இது பாலில் இருந்து தண்ணீரை தனியே பிரிக்கும் என்ப தெல்லாம் வடிகட்டின பொய் என்று குறிப்பிடும் போது அதிலுள்ள உண்மை நமக்கு புரிகிறது.

     பல்லி விழுந்த உணவை சாப்பிட்டால் மயக்கம் வரும், மரணம் என்பதெல்லாம் சுத்த பொய் என்பதையும் சுட்டிக் காட்டுகிறார். நாம் பயப்படுவது போல் பல்லிக்கு விஷம் கிடையாது என்பதுடன், அதன் சில கழிவுப் பொருட்களைத் தான் நமது உடல் ஏற்றுக் கொள்வதில்லை. இதன் காரணமாகவே வாந்தியும், மயக்கமும் ஏற்படுகிறது என்கிறார்.

     ஒட்டகத்தால் பத்து நாட்கள் வரை தண்ணீர் இல்லாமல் இருக்க இயலும்; அதனுடைய தாயகம் தென் அமெரிக்கா, நாம் சாதாரணமாகக் காணும் எறும்புகள் 8,800 வகைகளாக உலகம் முழுக்க பரிணமித்துள்ளன, ஒணான்கள் நிறம் மாறுவதில்லை, பச்சோந்திகளே தமது சூழலுக்கேற்ப, எதிரிகளிடம் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ள பழுப்பு, சிவப்பு, பச்சை நிறங்களில் மாறுகிறது என்பது போன்ற பல அறிவியல் உண்மைகளை நூலின் வழியே அறிய முடிகிறது.

     கருஞ்சிறுத்தை என ஊடகங்களால் கூறப்படுவது, தனி இனமல்ல, சாதாரண சிறுத்தை தான். நிறமிக் கோளாறு காரணமாகவே நூற்றில் ஒரு சிறுத்தை கறுப்பாக இருக்கலாம் என்கிறார். இதுபோலவே புலி, யானைகளிலும் நிறமிக் கோளாறு ஏற்படுவதுண்டு.

                எறும்புகள் சாரை, சாரையாகச் செல்வதற்கு, தான் செல்லுமிடங்களில் எல்லாம் வேதிப் பொருட்களை பீய்ச்சிக் கொண்டு செல்வதால் தான் என்பதையும், உலகிலேயே வேகமாக இயங்குவது ஒரியன்டல் ரேட்ஃபிளீ எனும் தெள்ளுப் பூச்சி தான்; இது ஒரு நிமிட நேரத்திற்கு 600 முறை மேலும் கீழும் குதிப்பதோடு தொடர்ந்து மூன்று நாட்கள் குதித்துக் கொண்டே இருக்கும் என்பதையும், தேனீ தன் உடம்பின் எடையைப் போல 300 மடங்கு எடையை இழுத்துச் செல்லும் திறன் படைத்தது என்பதையும் இந்நூல் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

                நாய்க்கு தான் மோப்ப சக்தி அதிகம் என்பது நாமறிந்த செய்தி. ஆனால் நூலாசிரியர் நியூசிலாந்தில் வாழும் கிவி என்ற பறவைக்கு தான் மோப்ப சக்தி அதிகம் என்று கூறி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார். ஆசியக் கண்டத்தில் 34% நிலப்பகுதியும், ஆப்பிரிக்க கண்டத்தில் 54% நிலப்பகுதியும், குறிப்பாக இந்தியாவில் 55% நிலப்பகுதியும் பாலைவனமாக மாறிக் கொண்டிருப்பதாக எச்சரிக்கை மணியும் அடிக்கிறார். விழித்துக் கொண்டு நமது சூழல் தவறுகளை திருத்திக் கொண்டால் நல்லது.

                பறவைகளின் கூடுகள் என்றால், குச்சிகள், புற்கள், இலை, தழைகள் இருக்கும் என்பதை நாம் கேள்விப் பட்டிருக்கிறோம். இங்கிலாந்தின் சிறிய ஊரில், சிறிய தொழிற்சாலைக்கு பக்கத்தில் அமைந்திருந்த புறாக் கூடு, இரும்புக் கம்பிகளால் கட்டப்பட்டிருந்தது என்றால் ஆச்சர்யம் மேலிடுகிறதா? மேலும் அந்தக் கூட்டில் ஆணிகள், ஸ்குரூகள், ஊசிகள் போன்றவையும் இருந்தன எனும் போது உங்களது புருவங்கள் உயருகிறதா? சூழல் மாறுபாட்டிற்கு இதுவே சிறந்த எடுத்துக் காட்டு எனலாம். மிக வேகமான பறவையாக ஊசிவால் தகைவிலான குருவியையும், தரைவாழ் பாலூட்டியான சிவிங்கிப் புலியை வேகமான விலங்காகவும் நமக்கு நூலாசிரியர் அறிமுகப்படுத்துகிறார்.

                போர்த்துகீசியர்கள் மொரிஷீயஸ் தீவில் முதன் முதலாக காலடி வைத்த போது காணப்பட்ட டோடோ பறவைகள் பறக்க இயலாமல் மனிதர்கள் கைகளில் வெகு சுலபமாக சிக்கியது. போர்த்துகீசியர்கள் கணக்கு வழக்கின்றி கொன்று குவிக்க, 1681-இல் டோடோ பறவை முழுவதுமாக அழிந்து போக, பல பத்தாண்டுகளுக்கு பிறகு கல்வாரியா மரங்கள் அழிவுக்குள்ளானதை தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. கல்வாரியா மரங்களின் விதைகளை முளைவிட தகுதியானதாக தனது கழிவுகள் மூலம் காடுகள் முழுக்க பரப்பி வந்த டோடோ பறவை (டோடோ என்றால் போர்த்துகீசிய மொழியில் முட்டாள் என்று அர்த்தம்) அழிய, அதனுடன் கல்வாரியா மரங்களும் அழிந்தன என ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டு நிரூபிக்கப்பட்டது. இதன் மூலம் உயிரினங்கள் ஒன்றை ஒன்று சார்ந்து வாழ்வதுடன், மனிதனும் இதில் ஒரு அங்கம் என்பது உறுதி செய்யப்பட்டது.

                நமது தமிழகத்தின் பரந்த புல்வெளி களில் பரவலாக காணப்பட்ட அரிய பறவை இனங்களான வரகுக் கோழியும், கான மயிலும் இன்று நம்மிடையே இல்லை. பரந்து விரிந்திருந்த புல்வெளிகள் அழிக்கப்பட, புல்வெளிகளை வாழிடமாகக் கொண்டிருந்த அரிய, அழகிய பறவைகள் நம்மை விட்டு விலகிச் சென்றன. 

                உலகிலேயே மிகக் குறைவான மீன்களை உண்பவர்கள் இந்தியர்கள், அதிகமாக மீன் உண்பவர்கள் சப்பானியர் என்ற தகவலையும் கூறிச் செல்கிறார். வாழ் நாள் காலம் ஒரு வாரம் தான் என்றாலும் (அதற்குள் இனப்பெருக்கம் நடைபெறுகிறது) அதற்காக 17 ஆண்டுகள் முட்டையில் காத்திருக்கும் ஒரு வகை சில் வண்டுகள் பற்றி கூறும் ஆசிரியர் அதனுடைய பெயர், எந்த நாட்டில் வாழ்கிறது போன்ற தகவல்களையும் கொடுத்திருந்தால் நிறைவாக இருந்திருக்கும்.

                அண்டார்டிகா என்ற சொல்லுக்கு "கரடி கூட வாழ முடியாத இடம்', தண்ணீர் குடிக்காத விலங்கு "கோலா', கங்காரு என்பதற்கு பழங்குடியினத்தில் "எனக்குத் தெரியாது' என்று பொருள் என பல்வேறு அரிய செய்திகளையும் நூலின் வழியே அறியலாம்.

                நாகரிக அறிவியல் உலகில் மனிதர்களால் கட்ட இயலாத அழகிய வடிவமைப்புடன் கூடிய வீட்டைக் கட்டும் தூக்கணாங்குருவிகள், தையல் கலைஞர் களுக்கு இணையாக, இலைகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து தனக்கான இருப்பிடத்தை கட்டும் தையல் சிட்டுகள் உள்பட பலவித கூடுகளை கட்டும் பறவைகளை பார்த்திருக்கிறோம். வட, தென் அமெரிக்க நாடுகளில் வாழும் தரைச் சிலந்தி, தான் வசிக்கும் வீட்டிற்கு, தன்னுடைய வலைத் திரவத்தை மணலுடன் சேர்த்து குழப்பி வட்ட வடிவத்தில் கதவை பொருத்துகிறது எனும் போது ஆச்சரியம் மேலிடுகிறது. அதன் அருகில் ஏதாவது பூச்சிகள் சென்றால் உணரும் சிலந்தி, கதவை திறந்து இரையை பிடித்து, உள்ளே செல்லும் போது கதவு தானே மூடிக் கொள்கிறது. மழையில் கரையாத, சிதையாத மீள்விசை தன்மை கொண்டுள்ளன இக்கதவுகள்.

                அது போலவே கூடு கட்டும் மீன்களும் நம்முடன் வாழ்கின்றன. எண்ஹய்ற் எர்ன்ழ்ஹம்ண் என்ற மீன்கள் தண்ணீரிலுள்ள தாவரங்களில் புற்கள், இலைகளைக் கொண்டு கூடமைக்கின்றன. கூடுகளில் முட்டை பொரிந்தவுடன் குஞ்சுகளுக்கு உணவை ஊட்டி வளர்க்கின்றன, பறவைகளைப் போல. இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளில் இவ்வகை மீன்கள் வாழ்கின்றன. இது போன்ற பல அரிய தகவல்களை தன்னகத்தே கொண்டுள்ளது "பல்லுயிரியம்'.

                மிக வேகமாக பறக்கும் குருவி (ஊசி) வால் தகைவிலான குருவிகள் மணிக்கு 171 கி.மீ. பறக்கும் என்றும், உலகின் மூன்றாவது மிக வேகப் பறவை என முள்வால் தகைவிலான குருவி என்றும், அதனுடைய வேகமும் மணிக்கு 171 கி.மீ. என்று குறிப்பிடும் போது குழப்பமே மிஞ்சுகிறது. இரண்டும் ஒரே வேகத்தில் பறந்தால் எது வேகமாக பறக்கும் பறவை? முதலாவது வேகமான பறவை என்று வல்லூறை குறிப்பிடும் போது அதனுடைய பறக்கும் வேகம் எவ்வளவு என்றும் குறிப்பிடவில்லை.

                உலகில் வாழும் உயிரினங்களில் பூச்சி இனங்கள் 85% என்று முதலில் கூறும் நூலாசிரியர், பிறகு 70% பூச்சியினங்கள் இருப்பதாக குறிப்பிடுகிறார். சுற்றுச் சூழலில் முப்பதாண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த ஆசிரியர் இது போன்ற சிறு சிறு குழப்பங்களை தவிர்ப்பது நல்லது.

                பாம்புகளைப் பற்றியும், வெளவால்கள் குறித்தும், பூனை குறுக்கே சென்றால் அபசகுனம் என்பது போன்ற எண்ணிலடங்காமல் நமது சமூகத்தில் புரையோடி இருக்கும் மூடநம்பிக்கைகளை தனது அறிவியல் பூர்வமான வாதத்தினாலும், அரிய பல தகவல்களாலும் தகர்த் தெறிந்துள்ளார் ச.முகமது அலி.

                காட்டுயிர் என்பதற்கு நூலாசிரியரின் விளக்கம் - கானுறை விலங்கினம், புள்ளினம், மானுடம், பயிரிடாப் பயிரினம் என அறிவியல் ரீதியான புதிய புரிதலை ஏற்படுத்துகிறார். மனம் மயங்கக் கூடிய அனுபவத்தையும், வியப்பையும், ஆச்சரியப் படுத்தும் செய்திகளையும் உள்ளடக்கி யுள்ளது "பல்லுயிரியம்' என்ற சூழல் குறித்தான அறிவியல் பூர்வமான நூல். ஆசிரியரின் கடின உழைப்பு நூல் நெடுக தெரிகிறது.

                அட்டை வடிவமைப்பு சிறப்புடன் அமைந்திருப்பதுடன், நூலில் இடம் பெற்றுள்ள அழகிய கோட்டோவியங்கள் கருத்துக்களை எளிதில் புரிந்து கொள்வதற்கும் உதவியாக உள்ளன.

                நூல் வாசிப்பில், இன்றைய தமிழர்கள் உணர, சிந்திக்கக் கூடியதாக இரண்டு செய்திகள் எனக்குப்பட்டது. முதலாவது, பிரான்க்லின் ரூஸ்வெல்ட்டின் கூற்று.

                “ஒரு நாட்டின் மண் வளம் அழிந்தது என்றால் அந்த நாடே அழிகிறது என்று பொருள்”.

                இன்றைய தமிழகத்தில், ஆற்றை சாகடித்து நடத்தப்படும் மணல் கொள்ளையுடன் இணைத்து சிந்தித்து பாருங்கள்; வேதனை புரியும்.

                இரண்டாவது, நஸ்ரீட்ர்ர்ப் ச்ர்ழ் ஊண்ங்ப்க் நற்ன்க்ண்ங்ள் (நஊந) என்ற அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தின் தத்துவம்.

                “மழைக்காடுகள் மைக்ராஸ் கோப்புக்குள் தெரியாது. ஒட்டகச் சிவிங்கி சோதனைக் குழாயில் மேயாது”.

                இதை இன்றைய தமிழகத்தின் கல்விச் சூழலுடன் பொருத்திப் பாருங்கள்! வேதனையின் வலி தெரியும்.

                தமிழகத்தின் பள்ளிகளில் சூழல் குறித்து அக்கறையுடன் பேசும் "பல்லுயிரியம்' போன்ற நூல்களை பாடமாக வைப்பதுடன், மாதம் ஒருமுறை அருகில் உள்ள காடுகளுக்கு நேர்முக பயிற்சிக்கு அழைத்துச் செல்லுதல் அவசியமாகும்.

                காட்டுயிர்கள் உடனான உறவை சிறப்புற பேணிக் காத்தவர்கள் சங்க காலத் தமிழர்கள். இன்றைய தமிழர்கள் காட்டுயிர் களுடனான உறவு முற்றிலும் அறுந்த நிலையில் இருப்பவர்கள். தமிழர்களுக்கும், காட்டுயிர்களுக்குமான உறவை ஏற்படுத்த "பல்லுயிரியம்' போன்ற அறிவார்ந்த நூல்களால் மட்டுமே இயலும்.

 ***

வெளியீடு: வாசல் பதிப்பகம்

40ஈ-3, முதல்தெரு, வசந்த நகர்,

மதுரை - 625 003

பேச : 9842102133

விலை : ரூ.120-

Pin It