வயலோர நீர்த்தொட்டியின்
நிழலும்
கலங்கிய குளத்து நீரின்
சுவையும்
பாதங்களை கறையாக்கும்
செம்மண் பாதைகளும்
தின்னத் தின்னத் திகட்டாத
பனங்கிழங்கும், பனஞ்சுளையும்
பௌர்ணமி நிலவாய் ஆகிப்போன
கோடை விடுமுறையின்
வெக்கையான பொழுதுகளும்
நட்சத்திரங்கள் வந்து குதித்து
விளையாட ஆசைப்படும்
கண்ணாமூச்சி ஆட்டங்களும்
பத்து பைசா ஆரஞ்சு மிட்டாயின் ருசியில்
பேரின்ப பேரானந்தத்தை
அடைந்துவிடும் ஐம்பொறிகளும்
பணத்தை வைத்து
எவரையும் எடைபோடத் தெரியாத
பளிங்குகளாய் உருளும்
பால்யவெளிப் பயணங்களும்
அனைவரையும் பிள்ளையாராய்
பிடிக்க நினைத்து
குரங்காக்கிய
பள்ளியும், சமூகமும், ஊரும், நாடும்
ஒரு சில பிள்ளையாருக்காக
குரங்கான நாங்களும்....