தலைமுறை தலைமுறையாக பார்ப்பனர்கள் மாட்டிறைச்சி உண்டு வந்திருக்கின்றனர். அப்படியானால் அவர்கள் ஏன் மாட்டிறைச்சி உண்பதை கைவிட்டனர்? உச்சகட்ட நடவடிக்கையாக அவர்கள் மாமிசத்தை அறவே ஒதுக்கிவிட்டு சைவத்திற்கு மாறியது ஏன்? இரண்டு புரட்சிகளின் சங்கமம் என இதனைக் கூறலாம். பார்ப்பனர்களது தெய்வீக சட்ட வல்லுநரான மநுவின் அறிவுரைகளால் இந்த புரட்சிகர மாற்றம் ஏற்பட்டுவிடவில்லை. அவருடைய ஆணைகளைப் புறக்கணித்தே இந்தப் புரட்சி நடைபெற்றிருக்கிறது. இத்தகைய நடவடிக்கையைப் பார்ப்பனர்கள் ஏன் மேற்கொண்டனர்?...

ambedkar 278ஒரு தந்திரோபாயமாகவே பார்ப்பனர்கள் மாட்டிறைச்சி உண்பதை விடுத்து, பசுவை வழிபடத்தொடங்கினார்கள் என்று என் மனதிற்குப் படுகிறது. பார்ப்பனர்கள் ஏன் திடீரென்று பசுவை வணங்கத் தொடங்கினார்கள் என்ற புதிருக்கான விடையை பவுத்த மதத்திற்கும் பார்ப்பனியத்திற்கும் இடையே நடைபெற்ற போராட்டத்தில் காணலாம். பவுத்த மதத்தின் மீது தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டும் ஒரு சாதனமாகவே பார்ப்பனியம் பசு வழிபாட்டை மேற்கொண்டது எனலாம்; பவுத்தத்திற்கும் பார்ப்பனியத்திற்கும் இடையே நடைபெற்ற போராட்டம் இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனையாகும். இந்த உண்மையைப் புரிந்து கொள்ளாமல், இந்து மதத்தின் சில முக்கிய அம்சங்களை விளக்குவது சாத்தியமில்லை.

கெடுவாய்ப்பாக, இந்திய வரலாற்று மாணவர்கள் இந்தப் போராட்டத்தின் முக்கியத்துவத்தை உணரத் தவறி விட்டனர். இந்தியாவில் பார்ப்பனியம் இருந்து வந்தது அவர்களுக்குத் தெரியும். ஆனால் தத்தமது மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு பார்ப்பனியமும் பவுத்தமும் நடத்தி வந்த போராட்டத்தையும் இந்தியாவின் மதத்திலும் சமூகத்திலும் அரசியலிலும் அழிக்க முடியாத சில முத்திரைகளைப் பதித்ததையும் இவர்கள் முற்றாகக் காணத் தவறிவிட்டார்கள் என்றே கூற வேண்டும்.

பவுத்த மதம் ஒரு காலத்தில் இந்திய மக்களில் பெரும்பான்மை மக்களின் மதமாக இருந்து வந்தது. பல நூற்றாண்டு காலம் அது பரந்த மக்கள் பகுதியினரின் மதமாகத் தொடர்ந்து நீடித்து வந்தது. வேறு எந்த மதமும் இதற்கு முன்னர் செய்யாத வகையில் அது பார்ப்பனியத்தை எல்லா பக்கங்களிலும் தாக்கி வந்தது. பார்ப்பனியம் அச்சமயம் தேய்ந்து வந்தது; அவ்வாறு இறங்குமுகத்தில் இல்லையென்றாலும் தன்னைத் தற்காத்துக்கொள்ள வேண்டிய நிலையில் அது இருந்தது. பவுத்த மதம் வெகுவேகமாகப் பரவி வந்ததன் விளைவாக பார்ப்பனர்கள் அரசவையிலும் தங்கள் அதிகாரத்தையும் செல்வாக்கையும் இழந்து வந்தனர். பவுத்த மதத்திடம் தாங்கள் அடைந்த தோல்வியால் அவர்கள் உள்ளுக்குள் கனன்று கொண்டிருந்தனர்; பொருமிக் கொண்டிருந்தனர்; தாங்கள் இழந்த அதிகாரத்தையும் செல்வாக்கையும் மீட்கத் தங்களாலான எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வந்தனர்.

 பவுத்தம் பரந்துபட்ட மக்கள் பகுதியினரைப் பெரிதும் கவர்ந்திருந்தது; அவர்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இத்தகைய நிலைமையில் பவுத்தர்களின் வழிமுறைகளைக் கைக்கொண்டும் பவுத்த தத்துவத்தை அதன் தீவிர வடிவில் கைப்பற்றியும் பவுத்தர்களை எதிர்த்துப் போராடுவதைத் தவிர, பார்ப்பனர்களுக்கு வேறு வழி ஏதும் இல்லாதிருந்தது. புத்தரின் மறைவுக்குப் பிறகு, அவரைப் பின்பற்றியவர்கள் அவரது சிலைகளை வைப்பதிலும் தூண்களை அமைப்பதிலும் தீவிரமாக ஈடுபட்டனர். பார்ப்பனர்களும் அவர்களைப் பின்பற்றினார்கள். அவர்கள் தங்கள் பங்குக்கு பல கோவில்களைக் கட்டினர்.

அவற்றில் சிவன், விஷ்ணு, ராமன், கிருஷ்ணன் போன்றோரின் சிலைகளை நிறுவி வந்தனர். பார்ப்பனியத்தில் இதற்கு முன்னர் இடம் பெற்றிராத கோவில்களும் விக்கிரகங்களும் இப்படித்தான் இந்து மதத்தில் நுழையத் தொடங்கின. யாக யக்ஞங்களையும் விலங்குகளை குறிப்பாக பசுவை பலியிடுவதையும் கொண்ட பார்ப்பனிய மதக்கோட்பாடுகளை பவுத்தர்கள் நிராகரித்தனர். பசுவதையை பவுத்தர்கள் கண்டித்ததானது மக்களைப் பெரிதும் கவர்ந்தது; அதிலும் குறிப்பாக அவர்கள் விவசாயிகளாக இருந்ததும் பசு மிகவும் பயனுள்ள விலங்காக இருந்ததும் இதற்கு முக்கியமான காரணமாகும்.

– தொடரும்

(டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு - 7, பக்கம்: 344 - 347)