தமிழின் மிகச் சிறந்த காப்பியங்களில் தலையாயதான சிலப்பதிகாரத்தையும், அதனுடைய மீளுருவாக்கமாகப் படைக்கப்பட்ட கொற்றவை என்னும் நாவலையும் ஒப்பிட்டுப் பார்க்க விழைந்ததின் வெளிப்பாடே பின்வரும் கருத்துகள். அவ்வாறு ஒப்பிட்டுப் பார்ப்பதன் நோக்கம் ஜெயமோகன் என்னும் எழுத்தாளர், கொற்றவை என்னும் நாவலைப் படைத்த அரசியல் நோக்கத்தைக் கண்டடைய ஒரு தொடக்கநிலை முயற்சி எனக் கொள்ள வேண்டும்.

பனுவல் மீட்டுருவாக்கம்

பனுவல் மீட்டுருவாக்கம் என்பது ஒரு பழம் பனுவலைத் தான் வாழும் காலத்திற்கேற்ப மீளப் படைத்தல் ஆகும். அவ்வாறும் செய்யும் போது மீளப் படைக்கும் படைப்பாளனின் அரசியல் ஆர்வங்கள் அம்மீட்டுருவாக்கத்தில் தவிர்க்க இயலாத வண்ணம் இடம்பெறும். ஒரு சமூகத்தில் உள்ளிணைந்து வாழும் பல்வேறு குழுமங்களின் வாழ்நிலை சார்ந்து பல்வித நலன்களுக்காக அக்குழுமங்களிடையே இடையறாது நடைபெறும் போராட்டத்தை அரசியல் என்கிறோம். ஒரு குறிப்பிட்ட வெளி, காலம் சார்ந்து அமைவுற்று இயங்கும் சமூக அமைப்பினுள் தம் நலன்களுக்காகப் போராடும் குழுமங்களைக் கொண்ட ஒருவிதமான சமூக-பண்பாட்டு- பொருளாதார- அரசியல் கட்டமைப்பும் தொடர்ந்து இயங்கும்.

இந்தியா என்னும் நாம் வாழும் நாடு பல மொழிக் குழுமங்களைக் கொண்டது. அம்மொழிக் குழுமங்கள் மேலும் கீழுமான படிநிலையில் அடுக்கிக் கொள்ளும் பல சாதிகளைக் கொண்ட சமூக அமைப்பு நிலையில் உள்ளன. இச்சாதி அமைப்பு இந்திய அளவில் படிநிலையைப் பேணுதல் என்னுமளவில் ஒத்தத் தன்மையும், படி நிலையில் இடம்பெறும் குழுக்கள், அவற்றின் படி நிலைத் தன்மை, அவற்றின் இயங்குதளமாக அமையும் வாழ்நிலை, பண்பாடு என்னும் பல விசயங்களில் வட்டாரத் தன்மையும் கொண்டியங்குகிறது. இச்சமூக அமைப்பினுள் ஒரு சிக்கலான வர்க்கச் சமூக அமைப்பும் இயங்குகின்றது. இந்தியாவின் உயர்குடிகள் தம் நலன்களுக்காகப் பல மொழிக் குழுமங்களையும் ஒருசேரப் பிணைக்கும் வகையில் Ôஇந்துÕ என்னும் ஒற்றை மதத்தையும், அதன் அடிப்படையில் இந்திய தேசியம் என்ற ஒற்றைத் தேசியத்தையும் 19ஆம் நூற்றாண்டி லிருந்து கட்டமைத்து, பல வாதவிவாதங்களினூடாக வளர்த்தும் வருகின்றனர். இதற்கு எதிராக மொழி சார்ந்த தேசியம் என்பதையும் பன்மைநிலை பண்பாட்டையும்  பேணும் அரசியல் போக்கு ஒன்றும் காணப்படுகின்றது. இவ்வகையானதே திராவிட, பொதுவுடைமை, தமிழ்த் தேசிய, தலித் இயக்கங்களால் முன்னெடுக்கப்படும் அரசியல் ஆகும். இந்த அரசியல் இயக்கங்கள் ஒன்றுடன் ஒன்று முரண்படுவது மட்டுமில்லாமல், ஊடாடியும், வினை புரிந்தும் ஒன்றையன்று பாதித்துக் கொள் கின்றன.  இந்த அரசியல் போக்குகள் நம் அனைத்து அறிவுத் துறைச் செயல்பாடுகளையும், படைப்புச் செயல்பாடு களையும் பாதித்துள்ளன. இந்தத் தொடக்கக் குறிப்பு களைக் கவனத்தில் கொண்டு சிலப்பதிகாரத்தை, கொற்றவை நாவல் எவ்வாறு மீட்டுருவாக்கம் செய்துள்ளது, அதன் அரசியல் என்ன என்பதை விவாதிப்போம்.

சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம் தமிழில் உள்ள முதல் காப்பியம். தொடர்நிலை செய்யுள் என்று மரபாக அழைக்கப் படுகின்றது. மூன்று காண்டங்களையும் முப்பது காதைகளையும் உடையது. சிலப்பதிகாரம் அச்சுவாகனம் ஏறிய 1872 தொடங்கி இன்று வரை பண்டைய தமிழ்ப் பண்பாட்டை மீளுருவாக்கம் செய்யும் விவாதத்தில் முக்கிய இடம்பெற்றுள்ளது. சமகால அரசியல் இயக்கங்களான இந்தியத் தேசிய, திராவிட, பொது வுடைமை இயக்கங்கள் தங்கள் கருத்துநிலை விளக்க விவாதத்திலும் இக்காப்பியம் முக்கிய இடம் பிடித் துள்ளது. இக்காப்பியத்தை இயற்றியவர் இளங்கோ வடிகள் என்பதில் தொடங்கி, காலம், காப்பியக் கட்டமைப்பு, கதையின் உண்மைத்தன்மை, புனைவுத் தன்மை தொடர்பான விவாதங்கள் முற்றுப் பெற வில்லை. இளங்கோவடிகள் என்னும் ஒருவரே இக் காப்பியத்தை இயற்றினார் என்னும் கருத்து பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது. ஆனால் அறிவுலகில் வஞ்சிக் காண்டம் பிற்சேர்க்கை என்ற கருத்து வலுவாக உள்ளது. இக்காப்பியத்தின் காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 11ஆம் நூற்றாண்டு வரை என சர்ச்சை செய்யப் படுகின்றது. இரட்டை காப்பியம் என்று மணிமேகலை யுடன் இணைத்து இக்காப்பியம் போற்றப்படுகின்றது. ஆனால் இவற்றில் எது முதலில் இயற்றப்பட்டது என்ற சர்ச்சையும் தொடர்கின்றது.  வையாபுரிப் பிள்ளை, மணிமேகலைதான் முதலில் இயற்றப்பட்டது என்று வாதாடுகிறார்.

சிலப்பதிகாரம் தொடர்பாக ஆய்வுலகில் எவ்வாறான விவாதங்கள், ஆய்வு முடிவுகளில் கருத்து மோதல்கள் இருந்த போதிலும், 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளில் சிலப்பதிகாரத்தை முன்வைத்து தமிழர் பெருமை என்னும் கருத்துருவம் வலுவாகக் கட்டமைக்கப்பட்டது. அது திராவிட, தமிழ்த் தேசிய அரசியலுக்கு வலு சேர்ப்பதாக அமைந்தது. மறுபுறத்தில் தமிழர் பெருமை கருத்துருவத்தை இவ்வியக்கங்கள் வலுவாக்கின. கனக விசயர் முடித்தலை நெறித்து, கல் சுமக்க வைத்து, கண்ணகிக்குக் கோயில் எடுத்த தமிழ் மன்னர் கதையைச் சிலப்பதிகாரம் கூறுவதாக அண்ணாதுரையும்,

ம.பொ. சிவஞானமும் பெருமிதமடைந்தனர். ஆனால் இப்பெருமையை இந்தியத் தேசியத்திற்கு எதிரானதாக அண்ணாதுரை கட்டமைத்தார். ம.பொ.சிவஞானம் தமிழ் பேசும் நிலத்தின் எல்லையை வரையறை செய்யும் வரலாற்றுச் சான்றாகப் பயன்படுத்தினார். அவர் சிலப்பதிகாரத்தின் தமிழ்ப் பெருமையை இந்து/ இந்தியப் பெருமையுடன், பண்பாட்டுடன் இயைபானதாகப் பேசினார். 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளில் நடை பெற்ற இவ்வாறான விவாதங்களே சிலப்பதிகாரத்திற்கு முக்கியமான பழம் இலக்கியப் பனுவல் என்ற மதிப்பைப் பெற்றுத் தந்தன. அத்துடன் பொதுமக்களிடையே கருத்துநிலை சார்ந்த கதையாடலை முன்னெடுக்கப் பலவாறு எளிமைப்படுத்திப் பதிப்பித்தல், உரை எழுதுதல் என்பவற்றுடன் பனுவல் மீட்டுருவாக்கம் என்னும் மீள்படைப்பாக்கம் செய்தலும் நிகழ்ந்தது.

கொற்றவை

கொற்றவை, ஜெயமோகன் எழுதிய நாவல். ஜெயமோகன் நன்கறியப்பட்ட புனைவு, இல்-புனைவு எழுத்தாளர். இந்நாவல் 2005 ஆம் ஆண்டில் வெளி யானது. ஜுன் 2012 வரை இரண்டு முறை மீளச்சுகள் வெளியாகி உள்ளன. 598 பக்கங்கள் கொண்ட நாவல். இக்காலத்தில் வெளியாகும் நாவல்களைப் போன்று அளவில் சற்றுப் பெரியது. இந்நாவல் கொற்றவை காப்பியம் என்று பதிப்பு விவரப் பக்கத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. ஒருவகையில் இது புதுவகை வசனக் காப்பியம் போன்று உள்ளது. நெடிய வருணனைகள் கொண்ட கவிதை மொழி இப்படைப்பு முழுவதும் வருகின்றது. அக்கவிதை மொழியும் பழஞ் செந்தமிழைத் தழுவிய மொழிநடை. அதனால் இன்றைய வாசகர் வாசிப்பில் ஒருவிதத் தடையைச் சந்தித்தாலும், கல்கியின் வரலாற்று நாவல்களில் அவரது மொழிநடை, எப்படி வாசகரை கற்பனை வரலாற்று வெளிகளில் பயணிக்க வைத்துக் களிப்பைத் தந்ததோ அவ்வாறே கொற்றவை ஒரு புதுவகை வசனக் காப்பியம் என உணர்வை அடைய இம்மொழிநடை உதவுகிறது.

கொற்றவை காப்பியம் ஐந்து பகுதிகளாக அமைந்துள்ளது. நீர், காற்று, நிலம், எரி, வான் என ஐந்து பகுதிகளாக அமைந்துள்ளது. இந்த ஐந்து பகுதிகளின் உள்ளமைப்பு வெவ்வேறு வகையில் அமைந்துள்ளது. நிலம் என்னும் பகுதி மட்டும் நெய்தல், மருதம், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் ஐந்து உள் பகுதிகளாக அமைந்து குலக்கதை சொன்னது, நீலி சொன்னது என்ற இருவகையான தலைப்புகளின் கீழ் கதை சொல்லப்படுகிறது. மற்ற பகுதிகளில் பழம் பாடல் சொன்னது, பாணர் பாடியது, காப்பியம் பாடியது, உரை வகுத்தது என்ற தலைப்புகளின் கீழ் கதை விவரிக்கப் படுகின்றது.  இவ்வாறு தலைப்புகளின் கீழ் கதை சொல்லப் படுவதற்குக் காரணங்கள் என்னவென்று தெரியவில்லை, பொருத்தப்பாடு எதனையும் உய்த்துணரவும் முடிய வில்லை. புதுவகை காப்பியம் என வாசகர் உணர்ந்து கொள்ள இதுவும் ஒருவகை உத்தி போலும். 

சிலப்பதிகாரத்தின் கதைப்போக்கை கொற்றவையும் தழுவிச் செல்கிறது என்று பொதுவாய் சொல்லி விடலாம். ஆனால் மூன்று முக்கியமான புள்ளிகளில் வேறுபட்டும், கதை நடக்கும் பின்புல வெளிகளில் புதியன புனைந்தும் கொற்றவை வேறுபடுகிறது. சிலப்பதிகாரத்தின் சில மீவியல்புகளை இயல்பாக்கிக் கொண்டு, புதிய மீவியல்புகளைக் கட்டமைக்கிறது. கண்ணகி தன் முலையைத் திருகி எறிந்து மதுரையை எரிக்கும் மீவியல்பு நிகழ்வு கொற்றவை காப்பியத்தில் இயல்பாக்கப்படுகிறது. பாண்டிய அரசின் மீது கோபம் கொண்ட எண்வகை குடிகளைச் சார்ந்த குடிமக்களின் செயல்பாடாக மதுரையை எரித்தல் கொற்றவை நாவலில் சித்தரிக்கப்படுகின்றது. ஆனால் சிலப்பதி காரத்தில் இயல்பு நிலையில் அமையும் கவுந்தி, கொற்றவை காப்பியத்தில் புன்னைக்காட்டு நீலி என்ற தெய்வத்தின் வேறுவடிவாக மீவியல்பு நிலைக்கு மாற்றப்படுகிறார்.

கொற்றவையின் முதல் பகுதியான நீர் என்னும் பகுதியில் பழம் பாடல் சொன்னது என்று ஒவ்வொரு கடவுளின் தோற்றக் கதைகளை மீவியல்பு நோக்கிலும், இயல்பு நோக்கிலும் சொல்லிச் செல்கிறார் ஜெயமோகன். இயல்பு நோக்கு என்பது போலி சமூகஅறிவியல் நோக்கு, இனப்பெருமை நோக்கு ஆகும். குமரிக் கண்டப் பழங்குடிகளிடையே முன்னோர்களின் தோற்றப்பாடு களாக சிவன், கொற்றவை, முருகன், மால், விநாயகன் ஆகிய தெய்வங்கள் தோன்றின என்பது கதையாகச் சொல்கிறது. இவற்றின் மறுபுறமாக மீவியல்பு நோக்கில் வைதீகத் தொன்மப் பின்புலத்தில் இத்தெய்வங்களின் கதை விவரிக்கப்படுகின்றது. இந்தப் பகுதி முழுக்கவும் கடவுள் வாழ்த்து என்பது போல் அமைந்து விடுகிறது.

மூன்று புள்ளிகள்

கொற்றவை காப்பியம் சிலப்பதிகாரக் கதைப் போக்கிலிருந்து மூன்று புள்ளிகளில் வேறுபடுகிறது. கோவலன் மாதவி பிரிவுக்கான காரணம், வழித் துணையான கவுந்தியை நீலியாக்கி விடுதல், மதுரை அழல்படும் நிகழ்வு ஆகிய மூன்று நிகழ்வுகள் சிலப்பதி காரத்திலிருந்து கொற்றவை வேறுபடும் புள்ளிகள் ஆகும். இம்மூன்று நிகழ்வுகளுமே சிலப்பதிகாரக் காப்பியத்தின் உயிர்நிலையான அம்சங்களாக அமைபவை. இவற்றை மாற்றுவதின் மூலம் ஜெயமோகன் எவ்வாறான நோக்கத்தைச் சாத்தியப்படுத்துகிறார் என்பதைக் காண்போம்.

கோவலன் மாதவி பிரிவுக்கான காரணம்

சிலப்பதிகாரத்தில் கோவலன் மாதவி பிரிவு கதைப் போக்கில் ஒரு முக்கியத் திருப்பம் ஆகும். இப்பிரிவே கோவலன் கண்ணகியை மதுரையை நோக்கிப் பயணிக்க வைக்கிறது. மதுரையே கதையின் மைய நிகழ்களன் ஆகும். பொதுவாகச் சிலப்பதிகாரத்தில் எந்தக் கதை மாந்தரும் குற்றமுடையவராகச் சித்தரிக்கப்படவில்லை. ஒருவர் தான் செய்யும் செயலுக்கு ஊழ்வினையே காரணம் ஆதலின், அவர் அச்செய்கைக்கு பொறுப்பாக மாட்டார். இவ்வாறே கோவலன் மாதவி பிரிந்து செல்வதற்கும் ஊழ்வினையே காரணமாகச் சிலப்பதி காரத்தில் சொல்லப்படுகிறது. இந்திர விழா முடிந்து கடலாடச் சென்ற கோவலனும் மாதவியும் கானல் வரி பாடினர். மாதவி பாடிய வரிப் பாடலைத் தவறாகப் பொருள் கொண்டு, மாதவி வேறொருவர் மீது மையல் கொண்டு பாடுகிறாள் என ஊழ்வினை காரணமாகக் கருதி, பிரிந்து செல்கிறான் கோவலன். இதனைச் சிலப்பதிகாரம் பின்வருமாறு சொல்கிறது:

எனக்கேட்டு,

Ôகானல் வரி யான் பாட, தான் ஒன்றின்

                          மேல் மனம் வைத்து,

மாயப் பொய் பல கூட்டும் மாயத்தாள் பாடினாள்  என,

யாழ்-இசை மேல் வைத்து, தன் ஊழ்வினை

                          வந்து உருத்தது ஆகலின்,

உவவு உற்ற திங்கள் முகத்தாளைக்

                     கவவுக் கை ஞெகிழ்ந்தனனாய்,

பொழுது ஈங்குக் கழிந்தது ஆகலின், எழுதும்

                              என்று உடன் எழாது

ஏவலாளர் உடன் சூழ்தர, கோவலன் -

                  தான் போன பின்னர் - (7: 52 - 58)

வரிப்பாடல் பாடி முடித்த பின்னர் கோவலன் உடனே பிரிந்து செல்கிறான். ஆனால் கொற்றவை நாவலில் கானல் வரி பாடி முடித்த பின்னர் பிரிய வில்லை. பிரிவுக்கு கானல் வரி காரணம் ஆகவில்லை. கானல் வரி பாடி முடித்த பின்னர் இருவரும் புறப் பட்டுச் செல்கின்றனர். முன்பே, கடலாடச் செல் வதற்குத் தயாரிப்பில் ஈடுபடும்போதே தன் செல்வம் அனைத்தும் கரைந்து விட்டதைக் கோவலன் உணர் கிறான். பின்பும் தன் கடை இருந்த வேங்கை மரத் தடியில் சென்று பார்க்கிறான். கானல் வரி பாடி முடித்த பின்னரான நிலையை இவ்வாறு ஜெயமோகன் சொல்கிறார். 

இசை நிலைக்கவும் ஒருகணம் தன்னுள் ஆழ்ந்து அமர்ந்து பின்பு எழுந்து Ôஇரவேறி விட்டது. நாம் மீள வேண்டிய நேரமாகி விட்டது போலும்Õ என்று அவன் எழுந்தான். அவளும் அவனும் ஒருவருக்கொருவர் ஒரு சொல்கூடச் சொல்வதற் கில்லையென உணர்ந்த சுமையேறிய கணங் களுக்குப் பின் அவன் முன்நடந்து தன் குறும்புரவி மீதேறி இருளில் தன் தலையின் சுமையைத் தானே தாங்காதவனாக நகருக்குச் சென்றான். நாளங் காடியில் காவற் பந்தங்களின் ஒளியில் தன்னை இழந்து சென்றவன் தன் கடையிருந்த வேங்கை பெருமரத்தடியில் வந்ததும் குறும்புரவி தரை யுதைத்து நின்றதை உணர்ந்தான். தன்னிடம் என்ன மிஞ்சியுள்ளது என்ற வினாவே அக்கணத்தில் அவனிடம் எழுந்தது. (ஜெயமோகன், 2012 :133)

இங்குத் தன் செல்வம் முழுவதையும் இழந்த நிலையைக் கோவலன் உணர்கிறான். அப்பகுதியிலே நான்கு நாட்கள் அலைகிறான். வயந்தமாலை மாதவியின் மடல் கொண்டு வருகிறாள். அதைக் கண்டு மகிழ்வுறும் அதே வேளையில் வெறுப்பும் அடைந்து, மாதவியின் உள்ளத்தை வேண்டுமென்றே காயப்படுத்த எண்ணி பின்வருமாறு சொல்கிறான்:

நாடகக் கணிகை நடிப்புகளை நான் அறிவேன். நான் இப்போது பெருவணிகனல்ல. ஒழிந்த பொற் சீலையும் கழிந்த நற்காலமும் கொண்ட வீணன். அவள் வீட்டுத் தாழைமடல் மஞ்சம் இனி வேறு வணிகர்களைத் தேடட்டும் (மேலது 2012 : 136)

இவ்வாறு சொல்லிவிட்டுப் பிரிந்து செல்கிறான். தன் இல்லத்தை, கண்ணகி இருந்த இல்லத்தை அடை கிறான். கதைப்போக்கில் இது முக்கியமான வேறுபாடாக அமைகிறது. இவ்வேறுபாட்டிற்கான காரணம் என்ன,  ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்னும் சமணக் கொள்கையை மறுப்பதற்காகவா? என்ற கேள்வி இவ்விடத்தில் எழுகின்றது.

கவுந்தியும் நீலியும்

சிலப்பதிகாரக் கதைப்போக்கின் திருப்புமுனையாக கோவலன் மாதவியின் பிரிவு அமைகிறதென்றால், அத் திருப்பத்தைக் கொண்டுசெலுத்துபவர் கவுந்தி அடிகள். மதுரைக்குச் செல்லும் கோவலன் கண்ணகிக்கு கவுந்தி அடிகள் வழித்துணையாய் அமைந்து, இருவரையும் ஆற்றுப்படுத்துகிறார். மதுரைக்குச் செல்லும் பயண வழியில் கவுந்தி ஐயை கூறும் அறவுரைகள் இருவர் மனதையும் பண்படுத்துகிறது.

கவுந்தி அடிகளுக்கு மற்றொரு முக்கியத்துவமும் உண்டு. அவர் மதுரைக்குச் செல்வதற்குக் காரணமாகக் கூறுவது,

மற உரை நீத்த மாசு அறு கேள்வியர்

அற உரை கேட்டு, ஆங்கு அறிவனை ஏத்த,

தென் தமிழ் நல்நாட்டுத் தீது தீர் மதுரைக்கு

ஒன்றிய உள்ளம் உடையேன்      (10 : 56-59) 

மதுரை சென்று சமணப் பெரியோர் உரைகளைக் கேட்டு, அறிவனைப் போற்றுவதற்கு ஆகும். சிலப்பதி காரக் காப்பியத்தில் வரும் வெளிப்படையான சமண சார்பு கதைமாந்தர் கவுந்தி அடிகள் மட்டுமே. இப்படிப் பட்ட முக்கியத்துவமுள்ள கவுந்தி அடிகளை புன்னைக் காட்டு நீலி தெய்வம் மேற்கொள்ளும் ஓர் உருவாக ஜெயமோகன் மீட்டுருவாக்கம் செய்கின்றார். புகார் நகரை விட்டு நீங்கும் போது கோவலன் சாரணரைத் தொழச் செல்கிறார். படித்துரையில் அமர்ந்திருக்கும் கண்ணகியிடம், இடைச்சி உருவம் கொண்டு ஒரு தெய்வம் நீரிலிருந்து வருகிறது.

Òநீ யார்Ó என்று கண்ணகி கேட்க Òநான் புகார் நகரத்துப் பெருவாயிலை ஒட்டிய புன்னைச் சோலையில் இருப்பவள். ஆதலால் என் பெயர் புன்னைக்காட்டு நீலி என்பர். என் பெயரும் தோற்றுவாயும் நானே அறியாதவை. எங்கிருந்து வந்தோம், ஏன் அங்கே அமர்ந்தோமென அறியாமல் இந்த நானிலங்களிலும் நாங்கள் பல்லாயிரம் தெய்வப் பெண்டிர் பரந்து வாழ் கிறோம். நாங்கள் இருக்குமிடத்தால், எங்களுக்கு ஊரார் இட்ட பெயரால் அறியப்படுகிறோம். எங்களை ஊரார் கண்ட வடிவை எங்கள் வடி வாகக் கொள்கிறோம். எங்களிடம் கோரு பவற்றை எங்கள் செயலாகக் கொள்கிறோம். குறுங்காட்டில் மேய வந்த கருங்கண் பசு ஒன்று வட்டக் கருங்கல் வடிவில் என்னை முதலில் கண்டுகொண்டது. என் மீது சொரிந்து புரந்தது. பின்பு இடையர் என்னைக் கண்டடைந்தனர். இன்று புகார் நகரில் பாலும் மோரும் விற்க வரும் இடைச்சியர் வணங்கும் தெய்வம் நான்Ó என்றாள் புன்னை நீலி. நீ இருகை கூப்பி என்னை அழைத்தால் நான் இவ்வுருவம் கொண்டு உன்னுடன் வருவேன்...

Òஆனால் என் தலைவர் உன்னை அறியமாட்டாரே?Ó என்றாள் கண்ணகி. Òஅவர் கண்களை நான் வெல்வேன். என்னை அவர் கண்கள் உங்களுக்கு வழித்துணையாக உடன்வந்த கவுந்தியடிகளாகவே காணும். கதைகளும் காப்பியமும்கூட அப்படியே அறியும். வழித்துணையாக வந்த வடிவிலாத் தெய்வமென்பதை நீ மட்டுமே அறிவாய்Ó என்றாள் புன்னை நீலி. (ஜெயமோகன், 2012 : 148)

கண்ணகி கை தொழுது அழைக்கப் புன்னை நீலி வழித்துணையாய் அமைந்து மீவியல்பு செயல்களை நிகழ்த்தி, அதாவது ஐந்து நிலங்களையும் அந்நிலங்களைச் சிறப்பாகப் பார்க்கும் அந்தந்த நிலத்துக்குரிய விலங்கு களின் கண்களை வழங்கி, கண்ணகியை உலகின் காட்சி களைத் தரிசிக்க வைக்கிறார். இதனால் மதுரையை நோக்கிய பயணத்தின் முடிவில் கண்ணகி உலகியல் அறிவைப் பெற்று ஒருவகை முதிர்ச்சியை அடைகிறார். இவ்விடத்திலும் சிலப்பதிகாரத்தில் வரும் மிக முக்கியமான சமணக் கதைமாந்தரை ஏன் ஜெயமோகன் மீவியல்பு கொண்ட தெய்வமாக மாற்றுகிறார்? நீலி சமண சமயத் தெய்வம் என்பதாகச் சொல்லாமல், இடையர் கண்டடைந்த ஆதித் தெய்வம் என்று ஏன் புனைகிறார்? என்ற கேள்விகள் எழுகின்றன.

மதுரை அழல்படுதல்

கோவலன், பாண்டியன் காவலர்களால் கள்வன் என்று கொல்லப்பட்டதற்குப் பின் கண்ணகி கோபம் கொண்டு, பாண்டியனிடம் நீதி கேட்டாள். பாண்டியன் தன் நீதிமுறை பிறழ்ந்து விட்டதை உணர்ந்து உயிர் விட்டான். அவனுடன் கோப்பெருந்தேவியும் உயிர் விட்டாள். இவ்வாறு நடைபெற்றதற்குக் காரணம், பாண்டியன் முறை பிறழ்ந்ததற்குக் காரணம் கோவலனின் முன்வினைப் பயனே.

பாண்டியனும் கோப்பெருந்தேவியும் மாய்ந்த பின் கண்ணகி மதுரைக்கு எரியூட்டிய நிகழ்வைச் சிலப்பதி காரம் பின்வருமாறு கூறுகிறது:

பட்டாங்கு யானும் ஓர் பத்தினியே ஆமாகில்,

ஒட்டேன்; அரசோடு ஒழிப்பேன் மதுரையும் ! என்

பட்டிமையும் காண்குறுவாய் நீ என்னா, விட்டு அகலா -

நான்மாடக் கூடல் மகளிரும் மைந்தரும்,

வானக் கடவுளரும், மாதவரும் கேட்டீமின்:

யான் அமர் காதலன் - தன்னைத் தவறு இழைத்த

கோநகர் சீறினேன்; குற்றமிலேன் யான் என்று,

இடமுலை கையால் திருகி, மதுரை

வலமுறை மும் முறை வாரா, அலமந்து,

மட்டு ஆர் மறுகின் மணி முலையை வட்டித்து,

விட்டாள் எறிந்தாள், விளங்கு இழையாள் - வட்டித்த

நீல நிறத்துத் திரி செக்கர் வார் சடைப்

பால் புரை வெள் எயிற்றுப் பார்ப்பனக் கோலத்து,

மாலை எரி அங்கி வானவன் - தான் தோன்றி,

Ôமா பத்தினி ! நின்னை மாணப் பிழைத்த நாள்

பாய் எரி இந்தப் பதி ஊட்ட, பண்டே ஓர்

ஏவல் உடையேனால்...........

...............................................................

...............................................................

............................................................. புகை அழல் மண்டிற்றே -

நல் தேரான் கூடல் நகர்.         (21 : 36 -57)

இந்த விவரணை மீவியல்பானது என்பது மிகத் தெளிவு. இடமுலையைத் திருகி, வலமுறை மும்முறை வந்து, வட்டித்து எறிந்து, அக்னி தெய்வம் தோன்றி, கண்ணகியின் கட்டளை பெற்று மதுரையை எரித்தது. இவ்வாறு மதுரை எரிந்த பின் மதுராபதி தெய்வம் கண்ணகி பின்னே செல்கிறது. நடந்தவை குறித்த ஒரு விளக்கத்தை மதுராபதி தெய்வம் உரைக்கிறது.

மாதராய் ! ஈது ஒன்று கேள், உன் கணவற்குத்

தீதுற வந்த வினை. காதின்

மறை நா ஓசை அல்லது , யாவதும்

மணி நா ஓசை கேட்டதும் இலனே ;

அடி தொழுது இறைஞ்சா மன்னர் அல்லது,

குடி பழி தூற்றும் கோலனும் அல்லன்  (23 : 29 - 34)

என்று மதுரை எரிந்த பிறகு கண்ணகி முன் தோன்றி கட்டுரை செய்யும் கூடல் மாநகர் தெய்வம் மதுராபதி, பாண்டியர் குல முறை வழுவாமையைக் கூறி, கோவலன் முன்பிறவியில் சங்கமன் என்பவனுக்கு இழைத்த அநீதியே இப்பிறவியில் வினையாக முடிந்தது என்றும் கூறுகிறது.

உம்மை வினை வந்து உருத்த காலை,

செம்மையிலோர்க்குச் செய் தவம் உதவாது

(23 : 171-172)

என்று மதுராபதி தெய்வம் வினையின் வலிமையைக் கண்ணகிக்கு வலியுறுத்துகிறது. சிலப்பதிகாரம் ஊழ் வினைப் பயனை வலியுறுத்த மதுரை அழல்படு நிகழ்வைப் பயன்படுத்திக் கொண்டது. இந்த மீவியல்பு தன்மையை ஜெயமோகன் நீக்கிவிடுகிறார்.

கொற்றவை நாவலில் பாண்டியன் அரசியல் திறனற்றவனாகச் சித்தரிக்கப்படுகிறான். தன் ஆட்சியை வலுப்படுத்தும் நோக்கத்துடன் மதுரை மாநகருக்கு ஆட்சி யுரிமையுடைய பழங்குடியான மறவர் குடியிலிருந்து பாண்டியன் பெண் எடுக்கிறான். அதனாலே மறவர் குடி பிற குடிகளின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது, வலிந்து பொருள்களைப் பறித்து வருகின்றது. இதனால் வந்த வழக்குகளைப் பாண்டியன் தீர்த்து வைக்காமல், இவ்வழக்குகளுக்குக் காரணமான மறவர் குலத் தலைவன் பழையன் குட்டுவனிடமே வழக்குகளைத் தீர்த்துக் கொள்ளுமாறு அக்குடிகளிடம் கூறிவிட்டு, பொழுதுபோக்குகளில் ஈடுபடுகிறான் (ஜெயமோகன் 2012 : 348).

கோப்பெருந்தேவி அதிகார மமதை பிடித்த வராகவும், நகைகள் மீது பித்துப் பிடித்தவராகவும் சித்தரிக்கப்படுகிறார் (மேலது 2012 : 356, 358-62). 

மறவர்களுக்கும் மள்ளர், வணிகர் உள்ளிட்ட எண்வகை குடிகளுக்கும் உரிமைப்பூசல் தலை விரித்தாடுகிறது. பூசல்களுக்குக் காரணமான பழையன் குட்டுவன் பூசலிடுவது தம் மரபு என்று உரிமை கொண்டாடுகிறான். அந்த உரிமையைத் தந்தது தன் மகள் காலில் உள்ள கன்னியின் சிலம்பு என்கிறான்.

Òஆம். என் மகள்தான் பாண்டியன் பெருந்தேவி. இம்மதுரை மாநகரின் மணிமுடியை அவளே சூடியிருக்கிறாள். மீன்விழிக்குப் பின் இந்நகரின் உரிமை என் மகளுக்குத்தான். ஏன் பாண்டியன் வந்து என் வாயிலில் நின்று பெண் கேட்டான்? ஏன் என் மகளே தன் தேவியாக வேண்டு மென்றான்? ஏன் இந்த நாட்டின் பிற எட்டுக் குடிகளிலும் பெண் கொள்ளவில்லை?Ó சொல் லிழந்து அமைந்தனர் எண்வகை மன்றத்தார்.

Òஎன் குடியில் இருக்கிறது கன்னியின் வலச் சிலம்பு. கருங்கண் கொற்றவையின் அருள். இந்தத் தமிழ்நிலம் எங்கும் பரவி ஆளும் உரிமையை எங்களுக்கு அளித்துள்ளது தென்கடலை ஆளும் பேரன்னையின் ஆணை. இதை இங்கு எவர் மறுக்க இயலும்?Ó என எழுந்து நின்று வேல் தூக்கிக் கூவினார் பழையன். (மேலது 2012 : 352)

இவ்வாறு முனைந்து நிற்கும் பழையன் குட்டு வனுக்கும் மறவர் குடிக்கும் எதிராகப் பிற குடிகள் கலகம் செய்யத் தயாரிப்பில் ஈடுபடுகின்றன. இதை அறிந்த குட்டுவன் எண்குடியினரின் குடிமன்றாளும் தலைவர் களைக் கொல்ல எண்ணுகிறார். அதற்கு முன் தன் மகள் அணிந்திருக்கும் கன்னித் தெய்வத்தின் சிலம்பை அன்னையின் காலடியில் வைத்து ஏழு நாட்கள் பூசனை செய்ய விரும்புகிறார் (மேலது 2012 : 361). அதன் மூலம் மறவர்களைத் திரட்டவும் மற்ற குடிகளுக்குத் தம் வலிமையைக் காட்டவும் எண்ணுகிறார். அப் பூசனை நடைபெறும் முன் சிலம்பு களவு போகிறது. தலைப் பொற்கொல்லர் மீது சந்தேகம் ஏற்படுகிறது. அந்நேரத்தில் தன் சிலம்பை அரண்மனை தலைப் பொற் கொல்லரிடம் அடகுவைத்து கைமுதல் பெறச் சென்ற கோவலனை, அப்பொற்கொல்லர் கள்வன் எனக் காட்டிக் கொடுக்க, மறவர் வீரர் கோவலனைக் கொன்று சிலம்பைக் கொண்டு செல்கின்றனர் (மேலது 2012 : 390-393).

பாண்டியனிடம் மறவர்களின் உரிமைப்பூசல் குறித்து முறையிட வந்து மதுரையில் தங்கியிருந்தனர் எண்வகை குடிகளைச் சேர்ந்த மக்கள். அவ்வாறு வந்த பெரும் மக்கள் திரள் பட்டினியால் வாடியது. கோவலன் அநீதியாகக் கொல்லப்பட்டதைக் கேட்டு, கண்ணகி யுடன் திரளாகச் சென்று பாண்டியனிடம் நீதி கேட் கின்றனர். பாண்டியன் பிழை புரிந்துவிட்டதை உணர்ந்து உயிர் விடுகிறான். கோப்பெருந்தேவியும் இறந்துவிடுகிறாள். வெறி கொண்ட பெருங்கூட்டம் மதுரைக்குத் தீ வைத்து அழிவில் ஈடுபடுகிறது (மேலது 2012 : 410- 414).

மேற்கண்டவாறு மதுரை அழல்படும் நிகழ்வி லிருந்த எல்லா மீவியல்பு நிகழ்வுகளையும் ஜெயமோகன் நீக்கி, குடி உரிமைப் பூசல்களின் விளைவாகவும், அப்பூசலின் நடுவே கண்ணகி வழக்குரைத்தாள், அவளுடன் சென்ற இரவலர் மதுரையை தீ வைத்து அழித்தனர் என்று புனைகிறார். ஜெயமோகன் விவரிக்கும் உரிமைப்பூசல் ஒருவகை சாதிப்பூசல் போன்று உள்ளது. மேற்கண்ட மூன்று நிகழ்வுகளிலும் மீவியல்பை விலக்கும் ஜெயமோகன் Ôஇந்துÕ கருத்து நிலையின் பாற்பட்ட இயல்பைக் கொற்றவையில் புனைகிறார்.

தமிழர் பெருமையும்

இந்துப் பெருமையும் இணைவாக்கல்

ஜெயமோகன் வருணிக்கும் தெய்வ வருணனைகள் வழியாக தமிழர் பெருமிதத்தைக் கட்டமைப்பதாகச் சிலர் வாதிடலாம். தமிழர் தொல்நிலமாகக் குமரிக் கண்டத்தைப் புனைதல், சிவன், கொற்றவை, மால் என அனைத்து தெய்வங்களுக்கும் தமிழ்த் தோற்று வாய்களைப் புனைதல் ஆகியவை தமிழர் பெருமிதத்தை ஜெயமோகன் கட்டமைக்கிறார் என்பதற்குச் சான்றுகள் ஆகும். ஆனால் இவை அனைத்தையும் சமகாலப் பண் பாட்டு உரையாடல்களுடன் இணைத்து நோக்கினால், இந்துப் பெருமையோடு அவர் இயைபுபடுத்துகிறார் என்பது விளங்குகிறது. சிலப்பதிகாரக் கதை நடக்கும் பண்டைக் காலத்திலேயே ஆனைமுகன் கோட்டம் இருப்பதாகப் புனைகிறார் (மேலது 2012 : 384). இக்காலத்தில் உள்ளூர் மரபுகளை இந்துமயமாக்கு வதற்கு தமிழகத்தில் இந்து இயக்கங்கள் செய்யும் ஒரே வேலை பிள்ளையார் கோவிலை / சிலையை நிறுவுவது ஆகும். கணபதி/பிள்ளையார் ஆதி காலத்தில் அவைதீக மரபு, இனக்குழு தெய்வம்தான் எனினும் இன்று இந்துமயமாக்கலின் அடையாளமாக மாறிவிட்டது. ஜெயமோகன் வரலாற்றின் முன் சென்று ஆனைமுகன் நிறுவும் வேலையைச் செய்கிறார்.

பண்டைக் காலத்தில் சாத்தனாக இருந்து, இப்போது இந்து தெய்வமாக ஆக்கப்பட்டு, திருமால், சிவன் ஆகியோருக்குப் பிறந்த பிள்ளையாகப் புராணம் கூறும் ஐயப்பனே இளங்கோ என்றும், ஜெயமோகன் புனைகிறார். ஐயைக்கும் அப்பனுக்கும் பிள்ளை, ஆதலால் ஐயப்பன் என்று புனைகிறார் (மேலது 2012 : 472-476). இந்துமயமாக்கலுக்கு இப்புனைவு ஒரு சிறந்த உதாரணம் ஆகும். தமிழ்ப் பெருமையை இந்துப் பெருமைக்குள் வைத்து ஜெயமோகன் புனைகிறார் என்பது மேற்கண்ட உதாரணங்களால் விளங்கும்.

நாவலின் இறுதிப் பகுதியில் ஜெயமோகன் அனைத்து பெண் /கன்னி/ அன்னை தெய்வங்கள் ஒரே பேரன்னையின் வடிவம் என்று வாதிக்கிறார்.

Òஅக்கன்னி யார்?Ó என்று சேரன் கேட்டான். மெல்ல நகைத்த சாத்தன் Òவேந்தே! இந்த நீர் சூழ் உலகின் அத்தனை அறிவோரும் ஒருங்கே கூடிப் பல்லாயிரம் வருடம் ஆய்ந்தாலும் அறிய வொண்ணாதது இவ்வினா என்றறிக. இந்த நாவலந்தீவெங்கும் மண்ணிலும் மலைகளிலும் எங்கும் கோடிகோடி அன்னையரும் கன்னியரும் பதிட்டை செய்யப்பட்டுப் பலிகொண்டு பூகொண்டு அருள் செய்து வருகின்றனர். அவர்கள் ஒரு விதையில் இருந்து முளைத்துப் பரந்த பெருங்காடு போன்றவர்கள். அக்கன்னி எவள் என்பதைச் சொல்லும் மொழியும் மரபும் ஏதும் நம்மிடம் இல்லை... ...Ó (மேலது 2012 : 462)

ஒரு பேரன்னை என்பதை, வைதீக அத்வைதத்தின் ஒருமைவாதப் பார்வையிலிருந்து உருவாக்குகிறார். தாய்த் தெய்வச் சடங்குகளை மூலமாகக் கொண்ட சாங்கியம் பிராகிருதியின், மூலப்பொருளின் பரிணாமத்தைப் பன்மைநிலையாகக் கொள்கிறது. பிராகிருதியை அறியக் கூடிய ஒன்றாக, அப்பிராகிருதியை அறிவதன் மூலம் மட்டுமே உயிர் நிறைபேறு அடைய இயலும் என சாங்கியம் வாதிக்கிறது. ஆனால் சாங்கியத்தைப் பிரதான எதிரியாகப் பாவித்த அத்வைதம் அனைத்து பரிணாமங் களையும் ஒரு விதையில், பிரமத்தில் கண்டது, அந்தப் பிரமத்தையும் அறிய முடியாத ஒன்று என்று வாதிட்டது. ஜெயமோகன் கன்னித் தெய்வத்தை விவரிக்கும் போது இவ்வாறான ஒருமைவாத நிலையில் வாதிக்கிறார் என்பதை மேலே கண்ட கூற்றின் மூலம் அறிய முடியும்.  

இந்திய மரபில் சாங்கியத்தைப் போன்று, ஆனால் சாங்கியத்தை விடவும் உறுதியாகப் பன்மைவாதத்தை / அநேகந்தவாதத்தை, நயக் கொள்கையைப் போற்றிய ஒரு மரபு சமணம். அம்மரபைச் சார்ந்த இளங்கோவடி களால் தமிழின் முதல் காப்பியமான சிலப்பதிகாரம் இயற்றப்பட்டது. இதனைக் கடந்த நூற்றாண்டில் சைவர்களாலும், ஏன் தமிழ்ப் பெருமை பேசிய சிலராலும்கூடச் சகித்துக் கொள்ளமுடியவில்லை. சைவர்கள் இளங்கோவை சைவர் எனவே வாதிட்டனர். பிறர் வைணவர், சாக்கியர், வைதீகர், சமயமற்றவர் என தத்தம் நிலைக்கேற்ப காட்டினர். ஜெயமோகனும் தன் பங்குக்கு இப்படி புனைகிறார் :

(இளங்கோ அடிகள் சொல்கிறார்) Òநான் நடந்து வருகையில் மதுரை நெடுந்தெருவில் பித்தன் ஒருவன் எவரையோ நோக்கிச் சொன்னான். தெற்கே செல்வனவெல்லாம் அன்னைக்கு என. அச்சொல்லை எனக்கிடப்பட்ட ஓர் ஆணை யாகவே கொள்கிறேன். தெற்கு செல்வன வெல்லாம் அன்னைக்கு. பிறப்பனவெல்லாமே தெற்கு செல்கின்றன. நான் தென்முனை அன்னையைக் காண விழைகிறேன்.Ó

நாகநந்தி அடிகள் வியந்த விழிகளுடன் நோக்கிச் சொன்னார், Òநம் அறநெறி அன்னையை வணங்குகிறது. ஆயின் அவளை முழுமுற்றாகக் கொள்வதில்லை. அறிவனடி பணிந்து அறிவில மர்ந்தலையே சொல்கிறது...Ó

இளங்கோ Òஆம். அறிவேன்Ó என்றார். Òநான் என்னை சமணனாகவோ சாக்கியனாகவோ சைவனாகவோ விண்ணவத்தானாகவோ எண்ண வில்லை. நான் பசித்த வயிற்றுடன் அன்னைமடி தேடிச் செல்லும் ஒரு மகவு மட்டுமேÓ என்றார் (மேலது 2012 : 525 - 526).

ஜெயமோகன் பேரன்னையைக் காட்டி இளங் கோவை அத்வைதத்திற்குள் மூழ்கடிக்கிறார். இளங்கோ தன் வாயினாலே தான் சமணன் இல்லை என்று ஒப்புதல் தர வைத்துவிடுகிறார். ஜெயமோகன் Ôஇந்துÕ அத்வைத நோக்கிலிருந்து சிலப்பதிகாரத்தை மட்டுமல்ல, இளங்கோவையும் மீட்டுருவாக்கம் செய்துவிட்டார்.

உதவிய நூல்கள்

1) அருணாசலம், ப., 1985, சிலப்பதிகாரச் சிந்தனை, சென்னை : பாரி புத்தகப் பண்ணை.

2) பஞ்சாங்கம், க., 1993, சிலப்பதிகாரத் திறனாய்வுகள் - ஒரு பார்வை, சிவகங்கை : அன்னம் (பி) லிட்.

3) பதிப்பு-ஆசிரியக் குழுவினர், 1957, சிலப்பதிகாரம், சென்னை : எஸ்.ராஜம்.

4) ராஜதுரை, எஸ்.வி., 2014, இந்து-இந்தி-இந்தியா, புத்தாநத்தம்: அடையாளம்.

5) வையாபுரிப்பிள்ளை, எஸ்., 1991, காவியக் காலம் (நூற்களஞ்சியம் தொகுதி 3), சென்னை: எஸ். வையாபுரிப் பிள்ளை நினைவுமன்றம்.      

6) ஜெயமோகன், 2012, கொற்றவை, சென்னை : தமிழினி.

Pin It